|
Spirituality & the Tamil Nation
உ
கணபதி துணை
தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின்
சைவ வினா விடை
கடவுள் இயல்
புண்ணிய பாவ இயல்
விபூதி இயல்-1
சிவ மூலமந்திர இயல்
சிவாலய தரிசன இயல்
தமிழ் வேத இயல்
பதி இயல்
விபூதி இயல்-2
உருத்திராக்ஷவியல்
சிவலிங்கவியல்
பஞ்சாக்ஷரவியல்
நித்திய கரும இயல்
[see also
comment by
Sivaram Arumugam, 25 December 2004]
1. கடவுள் இயல்
1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?
சிவபெருமான்.
2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?
என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம்
வல்லவர்.
3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் யாவை?
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.
4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார்?
தமது சத்தியைக் கொண்டு செய்வார்.
5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது?
வல்லமை.
6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்?
உமாதேவியார்.
7. சிவபெருமானுடைய திருகுமாரர்கள் யாவர்?
விநாயகக் கடவுள், வைரவக் கடவுள், வீரபத்திரக் கடவுள், சுப்பிரமணியக்
கடவுள் என்னும் நால்வர்.
8. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டு உமாதேவியாரோடும்
எழுந்தருளி இருக்கும் முக்கிய ஸ்தானம் யாது?
திருகைலாச மலை
9. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு எவ்விடங்களிலே நின்று அருள் செய்வார்?
சிவலிங்கம் முதலாகிய திருமேனிகளிடத்திலும், சைவாசாரியர் இடத்திலும்,
சிவனடியார் இடத்திலும் நின்று அருள் செய்வார்.
திருசிற்றம்பலம்
2. புண்ணிய பாவ இயல்
1. சிவபெருமான் ஆன்மாகளுக்காக அருளிச் செய்த முதனூல்கள் எவை?
வேதம், சிவாகமம் இரண்டுமாம்.
2. வேத சிவாகமங்களில் விதிக்கப்பட்டவைகள் எவைகள்?
புண்ணியங்கள்.
3. புண்ணியங்கள் ஆவன யாவை?
கடவுளை வழிபடுதல், தாய் தகப்பன், உபாத்தியாயர், குரு முதலாகிய
பெரியோர்களை வணங்குதல், உயிர்களுக்கு இரங்குதல், உண்மை பேசுதல்,
செய்ந்நன்றி அறிதல் முதலானவைகள்.
4. புண்ணியங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
மேல் உலகங்களாகிய புண்ணிய லோகங்களிலே போய், இன்பத்தை அனுபவிப்பர்.
5. வேத சிவாகமங்களிலே விலக்கப்பட்டவைகள் எவைகள்?
பாவங்கள்.
6. பாவங்கள் ஆவன யாவை?
கொலை, களவு, கள்ளுக் குடித்தல், மாமிசம் புசித்தல், பொய் பேசுதல்,
வியபிசாரம், சூதாடுதல் முதலானவைகள்.
7. பாவங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
நரகங்களிலே விழுந்து, துன்பத்தை அநுபவிப்பர்.
திருசிற்றம்பலம்
3. விபூதி இயல்-1
1. சிவபெருமானை வழிபடுஞ் சமயத்துக்குப் பெயர் யாது?
சைவசமயம்.
2. சைவசமயிகள் சரீரத்திலே ஆவசியமாகத் தரிக்க வேண்டிய அடையாளம் யாது?
விபூதி.
3. விபூதி ஆவது யாது?
பசுவின் சாணத்தை அக்கினியாலே சுடுதலால் உண்டாக்கிய திருநீறு.
4. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?
வெள்ளை நிற விபூதி.
5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?
பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல்
வேண்டும்.
6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?
வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல்
வேண்டும்.
7. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?
நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின்
நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும்.
8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?
சிந்திய விபூதியை எடுத்துவிட்டு, அந்த இடத்தைச் சுத்தம் செய்தல்
வேண்டும்.
9. நடந்து கொண்டாயினும், கிடந்துகொண்டாயினும் விபூதி தரிக்கலாமா?
தரிக்கல் ஆகாது.
10. எக்காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்?
நித்திரை செய்யப் புகும் போதும், நித்திரை விட்டெழுந்த உடனும், தந்த
சுத்தம் செய்த உடனும், சூரியன் உதிக்கும் போதும், அத்தமிக்கும் போதும்,
ஸ்நானஞ் செய்த உடனும், போசனத்துக்குப் போம் போதும், போசனஞ் செய்த
பின்னும் விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்.
11. ஆசாரியர் ஆயினும், சிவனடியார் ஆயினும் விபூதி தந்தால், எப்படி
வாங்கல் வேண்டும்?
மூன்று தரம் ஆயினும், ஐந்து தரம் ஆயினும் நமஸ்கரித்து, எழுந்து
கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கல் வேண்டும்.
12. விபூதி வாங்கித் தரித்துக் கொண்ட பின் யாது செய்தல் வேண்டும்?
முன் போல் மீண்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.
13. சுவாமி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி
நின்று விபூதி தரித்தல் வேண்டும்?
முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.
14. விபூதி தாரணம் எத்தனை வகைப்படும்?
உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.
( உத்தூளனம் = நீர் கலவாது, திரிபுண்டரம் =மூன்று குறி)
15. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?
சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள்
இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம்
இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.
இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும்
கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப்
பன்னிர்ண்டு தானங் கொள்வதும் உண்டு.
16. திரிபுண்டரந் தரிக்கும் இடத்து, நெற்றியில் எவ்வளவு நீளந் தரித்தல்
வேண்டும்?
இரண்டு கடைப்புருவ எல்லைவரையுந் தரித்தல் வேண்டும், அதிற் கூடினாலுங்
குறைந்தாலுங் குற்றமாம்.
17. மார்பிலும் புயங்களிலும் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?
அவ்வாறங்குல நீளந் தரித்தல் வேண்டும்.
(அங்குலம் = 2.5 செ.மீ)
18. மற்றைத் தானங்களில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்.
ஒவ்வோர் அங்குல நீளந் தரித்தல் வேண்டும்.
19. மூன்று குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?
ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டல்
ஆகாது.
திருசிற்றம்பலம்
4. சிவ மூலமந்திர இயல்
1. சைவசமயிகள் நியமமாகக் செபிக்க வேண்டிய சிவமூலமந்திரம் யாது?
ஸ்ரீபஞ்சாக்ஷரம்.(திருவைந்தெழுத்து).
2. ஸ்ரீபஞ்சாக்ஷர செபஞ் செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?
மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய், சிவதீ¨க்ஷ
பெற்றவராய் உள்ளவர்.
3. ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே எத்தனை உரு நியமமாகச் செபித்தல் வேண்டும்?
நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல்
வேண்டும்.
4. எந்த திக்குமுகமாக இருந்து செபித்தல் வேண்டும்?
கிழக்கு முகமாகவேனும், வடக்கு முகமாகவேணும் இருந்து செபித்தல்
வேண்டும்.
5. எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?
முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே
வலபுறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த,
நிமிர்ந்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.
6. எப்படி இருந்து செபிக்கல் ஆகாது?
சட்டை இட்டுக்கொண்டும், தலையிலே வேட்டி கட்டிக் கொண்டும்,
போர்த்துக்கொண்டுஞ் செபிக்கல் ஆகாது.
7. செபஞ் செய்யும் பொழுது மனம் எங்கே அழுந்திக் கிடத்தல் வேண்டும்?
சிவபெருமான் இடத்திலே அழுந்திக் கிடத்தல் வேண்டும்.
8. நிற்கும் பொழுதும், நடக்கும்பொழுதும், இருக்கும் பொழுதும்,
கிடக்கும் பொழுதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் பொழுதும் மனசை எதிலே
பதித்தல் வேண்டும்?
உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளிலேயே மனசைப் பதித்தல்
வேண்டும்.
9. மரிக்கும் பொழுது எப்படி மரித்தல் வேண்டும்?
வேறு ஒன்றிலும் பற்று வையாது, சிவபெருமான் இடத்திலே பற்று வைத்து,
தமிழ் வேதத்தைக் கேட்டுக் கொண்டும் ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக்
கொண்டும் மரித்தல் வேண்டும்.
திருசிற்றம்பலம்
5. சிவாலய தரிசன இயல்
1. சிவபெருமானை வழிபடுதற்கு உரிய முக்கிய ஸ்தானம் யாது?
திருக்கோயில்.
2. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?
ஸ்தானஞ் செய்து தோய்த்துலர்ந்த வஸ்திரந்தரித்து, விபூதி இட்டுக்கொண்டு,
போதல் வேண்டும்.
3. திருக்கோயிலுக்குச் சமீபித்த உடனே யாது செய்தல் வேண்டும்?
தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையுஞ் சிரசிலே
குவித்து, சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு, உள்ளே போதல் வேண்டும்.
4. திருக்கோயிலின் உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?
பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
5. கிழக்கு நோக்கிய சந்நிதானத்திலும், மேற்கு நோக்கிய
சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நம்ஸ்காரம் பண்ணல்
வேண்டும்?
வடக்கே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
6. தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும்,
எந்தத் திக்கிலே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
கிழக்கே தலை வைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
7. எந்த திக்குக்களிலே கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது?
கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது.
8. ஆடவர்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
அட்டாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
9. அட்டாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு
அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.
10. பெண்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
11. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து அவயவமும் நிலத்திலே
பொருந்தும்படி வணங்குதல்.
12. நமஸ்காரம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?
மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது
தரமாயினும் பண்ணல் வேண்டும். ஒருதரம், இருதரம் பண்ணுதல் குற்றம்.
13. நமஸ்காரம் பண்ணியபின் யாது செய்தல் வேண்டும்?
பிரதக்ஷ¢ணம்(வலம் வருதல்) பண்ணல் வேண்டும்.
14. எப்படி பிரதக்ஷ¢ணம் பன்னல் வேண்டும்?
இரண்டு கைகளையும் சிரசிலேனும் மார்பிலேனுங் குவித்து சிவநாமங்களை
உச்சரித்துக்கொண்டு, கால்களை மெல்ல வைத்துப் பிரதக்ஷ¢ணம் பண்ணல்
வேண்டும்.
15. பிரதக்ஷ¢ணம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?
மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது
தரமாயினும் பண்ணல் வேண்டும்.
16. சுவாமி சந்நிதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ் செய்தல் வேண்டும்?
முன் விக்கினேசுரரைத் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும்
உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும்
உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு,
அதன் பின் சபாபதி, தக்ஷ¢ணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர்,
சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளைத் தரிசனஞ் செய்தல் வேண்டும்.
17. விக்னேசுரரைத் தரிசிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?
முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை
குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக்
கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து, கும்பிடல் வேண்டும்.
18. சந்நிதானங்களிலே தரிசனம் பண்ணும் பொழுதெல்லாம் யாது செய்தல்
வேண்டும்?
இரண்டு கைகளையுஞ் சிரசில் ஆயினும் மார்ப்பில் ஆயினும்
குவித்துக்கொண்டு, மனங் கசித்துருகத் தோத்திரஞ் செய்தல் வேண்டும்.
19. எந்தக் காலத்தில் சுவாமி தரிசனஞ் செய்யல் ஆகாது?
அபிஷேகம், நிவேதனம் முதலியவை நடக்கும் பொழுது தரிசனஞ் செய்யல் ஆகாது.
20. அபிஷேக காலத்தில் பிரதக்ஷ¢ண நமஸ்காரங்களும் பண்ணல் ஆகாதா?
அப்பொழுது உட்பிரகாரத்திலே பண்ணல் ஆகாது.
21. தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
சண்டேசுரர் சந்நிதியை அடைந்து கும்பிட்டு, மூன்று முறை கை கொட்டி,
சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்தல் வேண்டும்.
22. சண்டேசுர தரிசனத்தின் பின் யாது செய்தல் வேண்டும்?
சிவசந்நிதானத்தை அடைந்து, நமஸ்காரம் பண்ணி, இருந்து,
ஸ்ரீபஞ்சாக்ஷரத்தில் இயன்ற உருச்செபித்துக் கொண்டு, எழுந்து,
வீட்டுக்குப் போதல் வேண்டும்.
23. நித்தியமும் நியமமாக ஆலய தரிசனஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல்
வேண்டும்?
சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணிமை, அமாவாசை,
திருவாதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திர கிரகணம்,
சிவராத்திரி, நவராத்திரி முதலிய புண்ணிய காலங்களிலாயினும் தரிசனஞ்
செய்தல் வேண்டும்.
24. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை?
ஆசாரம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங்
கழித்தல், மூக்குநீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், சயனித்தல், காலை
நீட்டிக் கொண்டு இருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், பாக்கு
வெற்றிலை உண்டல், சிரசிலே வஸ்திரந் தரித்துக்கொள்ளுதல், தோளிலே
உத்திரீயம் இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல்,
விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் (பூசித்துக் கழித்த பொருள்)
கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம் பலிபீடம்
விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண் வார்த்தை பேசல்,
சிரித்தல், சண்டை இடுதல் விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்குங்
குறுக்கே போதல் முதலியவைகளாம்.
திருச்சிற்றம்பலம்
6. தமிழ் வேத இயல்
1. சைவசமயிகள் ஓத வேண்டிய தமிழ் வேதங்கள் எவை?
தேவாரம், திருவாசகம் என்னும் இரண்டுமாம்.
2. தேவாரஞ் செய்தருளினவர் யாவர்?
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார்,
சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.
3. திருவாசகஞ் செய்தருளினவர் யாவர்?
மாணிக்கவாசக சுவாமிகள்.
4. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?
சோழநாட்டில் உள்ள சீர்காழியிலே வைதிகப் பிராமண குலத்திலே திருவவதாரஞ்
செய்தருளினார்.
5. திருநாவுக்கரசு நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?
திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரிலே வேளாளர் குலத்திலே
திருவவதாரஞ் செய்தருளினார்.
6. சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?
திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரிலே சிவப்பிராமண குலத்திலே
திருவவதாரஞ் செய்தருளினார்.
7. மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?
பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரிலே அமாத்தியப் பிராமண குலத்திலே
திருவவதாரஞ் செய்தருளினார்.
8. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய நால்வரும் எவ்வாறு பெயர்
பெறுவார்கள்?
சைவ சமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.
9. யாது காரணத்தினால் இவர்கள் சைவசமய குரவர்கள் எனப் பெயர்
பெறுவார்கள்?
பல அற்புதங்களைக் கொண்டு சைவசமயமே மெய்ச்சமயம் என்று தாபித்தபடியினாலே
சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.
10. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள்
யாவை?
(1) மூன்றாம் வயசிலே உமாதேவியார் கறந்து பொற் கிண்ணத்தில் ஊட்டிய
திருமுலைப்பாலை உண்டது.
(2) சிவபெருமானிடத்திலே பொற்றாளமும், முத்துப் பல்லக்கும், முத்துச்
சின்னமும், முத்துக் குடையும், முத்துப் பந்தளும், உலவாக்கிழியும்,
படிக்காசும் பெற்றது.
(3) வேதாரணியத்திலே வேதங்களினாலே பூட்டப் பட்டுத் திருநாவுக்கரசு
நாயனாருடைய திருப்பதிகத்தினாலே திறக்கப்பட்ட திருக்கதவு
அடைக்கப்பாடினது.
(4) பாலை நிலத்தை நெய்தல் நிலம் ஆகும்படி பாடினது.
(5) பாண்டியனுக்குக் கூனையுஞ் சுரத்தையும் போக்கினது.
(6) சமணர்கள் எதிரே தேவாரத் திருவேட்டை அக்கினியிலே போட்டுப் பச்சையாக
எடுத்தது.
(7) வைகையாற்றிலே திருவேட்டைப் போட்டு எதிர் ஏறும்படி செய்தது.
(8) புத்த நந்தியுடைய தலையிலே இடி இடிக்கச் செய்தது.
(9) ஆற்றிலே தாமும் அடியார்களும் ஏறிய ஓடத்தைத் திருப்பதிகத்தினாலே கரை
சேர்த்தது.
(10)ஆண் பனைகளைப் பெண் பனைகள் ஆக்கினது.
(11) விஷத்தினால் இறந்த செட்டியை உயிர்ப்பித்தது.
(12) விஷத்தினால் இறந்த பெண்ணினுடைய எலும்பைப் பெண் ஆக்கினது.
(13) தமது திருக்கல்யாணம் தரிசிக்க வந்தவர்கள் எல்லாரையுந் தம்மோடு
அக்கினியிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.
11. திருநாவுக்கரசு நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) சமணர்கள் ஏழு நாள் சுண்ணாம்பறையிலே பூட்டப்பட்டு இருந்தும் வேவாது
பிழைத்தது.
(2) சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டுஞ் சாவாது
பிழைத்தது.
(3) சமணர்கள் விடுத்த யானையினால் வலஞ் செய்து வணங்கப்பட்டது.
(4) சமணர்கள் கல்லிலே சேர்த்துக் கட்டிச் சமுத்திரத்திலே இடவும்
அக்கல்லே தோணியாகக் கரை ஏறினது.
(5) சிவபெருமானிடத்திலே படிக்காசு பெற்றது.
(6) வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப்
பாடினது.
(7) விஷத்தினாலே இறந்த பிராமணப் பிள்ளையை உயிர்ப்பித்தது.
(8) காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித் திருவையாற்றில்
ஒரு வாவின் மேலே தோன்றி கரை ஏறினது.
12. சுந்தரமூர்த்தி நாயனாரிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.
(2) சிவபெருமான் கொடுத்தருளிய பன்னிராயிரம் பொன்னை விருத்தாசலத்தில்
உள்ள ஆற்றில் போட்டுத் திருவாரூரில் உள்ள குளத்திலே எடுத்தது.
(3) காவேரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
(4) முதலை விழுங்கிய பிராமணப் பிள்ளையை அம்முதலை வாயினின்றும்
அழைத்துக் கொடுத்தது.
(5) வெள்ளை யானையில் ஏறிக்கொண்டு திருக்கைலாசத்துக்கு எழுந்தருளியது.
13. மாணிக்கவாசக சுவாமிகளிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) சிவபெருமானே நரியைக் குதிரை ஆக்கிக்கொண்டு வரும்படிக்கும், மண்
சுமந்து அடி படும்படிக்கும் பெற்றுக் கொண்டது.
(2) புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமைகள் ஆக்கிப் பின் ஊமை
தீர்த்துச் சைவர்கள் ஆக்கியது.
(3) பிறவி தொடுத்து ஊமையாய் இருந்த ஒரு பெண்ணை ஊமை தீர்த்துப்
புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்தது.
(4) தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே
எழுந்தருளி வந்து எழுதும்படி பெற்றுக்கொண்டது.
(5) எல்லாருங் காணக் கனகசபையின் உள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.
14. இந்த அற்புதங்களினாலே யாது விளங்குகின்றது?
சைவசமயமே மெய்ச்சமயம் என்பது நன்றாக விளங்குகின்றது.
15. தமிழ் வேதம் ஓதுதற்கு யோக்கியர் யாவர்?
மதுபானமும் மாமிச போசனமும் இல்லாதவராய் ஆசாரம் உடையவராய், சிவதீ¨க்ஷ
பெற்றவராய் உள்ளவர்.
16. தமிழ் வேதத்தை எப்படி ஓதல் வேண்டும்?
சுத்தி செய்யப்பட்ட இடத்தில் பீடத்தின் மேலே தமிழ் வேத புத்தகத்தை
வைத்து, அருச்சித்து, நமஸ்காரஞ் செய்து, இருந்துகொண்டு, அன்புடனே
ஓதுதல் வேண்டும், புத்தகத்தை நிலத்திலேனும், ஆசனத்திலேனும்,
படுக்கையிலேனும், மடியிலேனும், வைக்கல் ஆகாது.
17. தமிழ் வேதத்தை அன்புடனே நியமமாக ஓதினவர் யாது பெறுவர்?
சிவபெருமானுடைய திருவடிக் கீழ்ப் பேரின்பத்தைத் அநுபவிப்பர்.
திருச்சிற்றம்பலம்
7. பதி இயல்
1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?
சிவபெருமான்.
2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?
நித்தியரும், சருவவியாபகரும், அநாதிமலமுத்தரும், சருவஞ்ஞரும்,
சருவகர்த்தாவும், நித்தியானந்தரும், சுவதந்திரருமாய் உள்ளவர்.
3. நித்தியர் என்பது முதலிய சொற்களுக்குப் பொருள் என்ன?
நித்தியர் = என்றும் உள்ளவர்; சருவவியாபகர் = எங்கும் நிறைந்தவர்;
அநாதிமலமுத்தர் = இயல்பாகவே பாசங்களின் நீங்கினவர்: சருவஞ்ஞர் =
எல்லாம் அறிபவர்; சருவகர்த்தா =எல்லாம் செய்பவர்; நித்தியானந்தர் =
என்றும் மகிழ்ச்சியுடையவர்; சுவதந்திரர்=தம்வயமுடையவர்.
4. சிவபெருமான் செய்யும் தொழில்கள் எவை?
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துமாம்.
5. இவ்வைந்தொழிலுஞ் சிவபெருமான் செய்வது தம் பொருட்டோ பிறர் பொருட்டோ?
தம்பொருட்டன்று; ஆன்மாக்களாகிய பிறர் பொருட்டே. [ஆன்மா, பசு, புற்கலன்
என்பவை ஒரு பொருட் சொற்கள்.]
6. படைத்தலாவது யாது?
ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும்
தோற்றுவித்தல்.
7. காத்தலாவது யாது?
தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன் போகங்களை நிறுத்தல்.
8. அழித்தலாவது யாது?
தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தில் ஒடுக்குதல்
9. மறைத்தலாவது யாது?
ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்துதல்.
10. அருளலாவது யாது?
ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதல்.
11. தனு கரண புவன் போகம் என்றது என்னை?
தனு = உடம்பு; கரணம் = மன முதலிய கருவி; புவனம் = உடம்புக்கு ஆதாரமாகிய
உலகம். போகம் = அநுபவிக்கப்படும் பொருள்.
12. ஒரு காரியத்திற்கு காரணம் எத்தனை?
முதற் காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என மூன்றாம். குடமாகிய
காரியத்துக்கு முதற் காரணம் மண், துணைக் காரணம் திரிகை, நிமித்த காரணம்
குயவன். திரிகை - சக்கரம்.
13. தனு கரண புவன் போகம் எனப்படும் பிரபஞ்சமாகிய காரியத்திற்கு
முதற்காரணம் துணைக்காரணம் நிமித்த காரணம் எவை?
முதற் காரணம் சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி என மூன்று.
துணைக்காரணம் சிவசக்தி; நிமித்த காரணம் சிவபெருமான்.
14. சிவசத்தியாவது யாது?
அக்கினியோடு சூடு போலச் சிவத்தோடு பிரிவின்றி உள்ளதாகிய வல்லமை.
15. சிவபெருமானுக்கு உரிய வடிவம் எவை?
அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம்.
16. சிவபெருமான் இம்மூவகைத் திருமேனியையுடைய பொழுது எவ்வெப் பெயர்
பெறுவர்?
அருவத் திருமேனியையுடைய பொழுது சிவன் எனவும், அருவுருவத்
திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், உருவத் திருமேனியையுடைய
பொழுது மகேசுவரன் எனவும் பெயர் பெறுவர்.
17. சிவபெருமானுடைய உருவம் ஆன்மாக்களாகிய நம் போலிகளுடைய உருவம்
போன்றதா?
ஆன்மாக்களுடைய உருவம் இருவினைக்கு ஈடாகித் தோல், எலும்பு முதலிய
தாதுக்களால் உண்டாகிய உருவம்; சிவபெருமானுடைய உருவம், ஆன்மாக்கள்
செய்யுந் தியானம், பூசை முதலியவைகளின் பொருட்டுச் சிவசத்தியாகிய
திருவருட் குணங்களுள் இன்னது இன்னது, இன்ன இன்ன அவயவம் என்று
பாவிக்கப்படும் உருவம்.
18. சிவபெருமான் ஐந்தொழிலுந் தாமே செய்வாரா?
சுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்துந் தாமே செய்வார்; அசுத்தமாயையிற்
கிருத்தியம் ஐந்தும் அனந்தேசுரரை அதிட்டித்து நின்று செய்வார்;
பிரகிருதியின் கீழ் உள்ள கிருத்தியம் ஐந்தும் அவ்வனந்தேசுரர் வாயிலாக
ஸ்ரீகண்டருத்திரரை அதிட்டித்து நின்று செய்வார். ஸ்ரீகண்டருத்திரர்
பிரமாவை அதிட்டித்து நின்று படைத்தலும், விட்ணுவை அதிட்டித்து நின்று
காத்தலும், காலருத்திரரை அதிட்டித்து நின்று அழித்தலுஞ் செய்வார்.
[அதிட்டித்தல்=நிலைக்களமாகக் கொண்டு செலுத்துதல்]
19. ஸ்ரீகண்டருத்திரர் இன்னும் எப்படிபட்டவர்?
சைவாகமங்களை அறிவிக்கும் ஆசாரியர்; பிரமா, விட்டுணு முதலிய
தேவர்களுக்கும் இருடிகளுக்கும் அறுபத்துமூவர் முதலாயினோர்களுக்கும்
நிக்கிரக அநுக்கிரகங்களைச் செய்யுங் கருத்தா; சைவத்திற் புகுந்து
சமயதீ¨க்ஷ பெற்றவர்கள் வழிபடும் மூர்த்தி.
20. பிரமா, விட்டுணு, உருத்திரன், மகேசுரன் சதாசிவன் என்னும் ஐவருடைய
சத்திகளுக்குப் பெயர் என்ன?
பிரமாவினுடைய சத்தி சரஸ்வதி; விட்டுணுவினுடைய சத்தி இலக்குமி;
உருத்திரனுடைய சத்தி உமை; மகேசுரனுடைய சத்தி மகேஸ்வரி; சதாசவினுடைய
சத்தி மனோன்மணி.
21. ஆன்மாக்களாலே பூசித்து வழிபடப்படுஞ் சதாசிவ வடிவம் யாது?
பீடமும் இலிங்கமுமாகிய கன்மசாதாக்கிய வடிவமாம். பீடஞ் சிவசக்தி,
இலிங்கஞ் சிவம்.
22. இலிங்கம் என்பதற்குப் பொருள் என்னை?
படைத்தல், காத்தல் முதலியவைகளினால் உலகத்தைச் சித்திரிப்பது
[லிங்க=சித்திரித்தல்]
23. மகேசுர வடிவம் எத்தனை?
சந்திரசேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர்,
பிக்ஷ¡டனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங்காரி,
வீரபத்திரர், ஹரியத்தர், அர்த்தநாரீசுரர், கிராதர், கங்காளர்,
சண்டேசாநுக்கிரகர், நீலகண்டர், சக்கரப்பிரதர், கசமுகாநுக்கிரகர்,
சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தக்ஷ¢ணாமூர்த்தி, லிங்கோற்பவர்
என்னும் இருபத்தைந்துமாம்.
திருசிற்றம்பலம்
8. விபூதி இயல்-2
1. சைவசமயிகள் ஆவசியமாகச் சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள்
யாது?
விபூதி, உத்திராக்ஷம் என்னும் இரண்டுமாம்.
2. விபூதியாவது யாது?
பசுவின் சாணத்தை அக்கினியாலே தகித்தலால் உண்டாகிய திருநீறு, விபூதியின்
பெயர்: பசிதம், பசுமம், க்ஷ¡ரம், இர¨க்ஷ.
3. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?
வெண் |