|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > மகாவித்வான் ரா. இராகவையங்காரின் கவிச்சக்ரவர்த்தி கம்பர் > Kamba Ramayanam - கம்பராமாயணம்

கவிச்சக்ரவர்த்தி கம்பர்
மகாவித்வான் ரா. இராகவையங்கார்
(சேது சமஸ்தான வித்வான் & அண்ணாமலைப் பல்கலைக்கழக
முன்னாள் தலைமைத் தமிழாராய்ச்சியாளர்)
kaviccakravarti kampar
by R. Raghava Iyengar
[also in
tscii and
pdf ]
Acknowledgements:Our Sincere thanks go to Prof. R. Vijayaraghavan and family (grandson of Mahavidwan Raghava Iyengar) for giving us permission to reproduce the electronic version of this work as part of Project Madurai collections. Our thanks also go to Ms. Deepta Thattai of Columbia, SC, USA for the preparation of etext of this work © Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the websitehttp://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கவிச்சக்ரவர்த்தி கம்பர்
'கல்வியிற் பெரியர்' என்றும், 'கவிச்சக்ரவர்த்தி' என்றும் நல்லியற்புலவரெல்லாம் மனமொத்து வாயாரப் புகழும் பெருமாண்புடைய அருமைக் கம்பரின் பெருமைச் சிறப்பு முழுதும், இத்தமிழுலகம் நன்றறிந்து நாளும் பாராட்டுவதேயாம். இக்கவியரசர் வரலாறு, காலம் முதலியன இக்காலத்து, ஒன்றோடொன்றொவ்வாப் பல்வேறு வகையால் வழங்கப்படுகின்றன.சிறிது பழைய தமிழ் நூல்களையே பெருங்கருவியாகக் கொண்டு நோக்கின், அவற்றதுண்மை இன்னதென்று துணியலாகும். இவ்வாராய்ச்சிக்குப் பெருண்துணையாகக் காண்பன:- தமிழ் நாவலர் சரிதை, தொண்டைமண்டல சதகம், சோழமண்டல சதகம், பாண்டிமண்டல சதகம் என்பனவும், பிறவுமாம். இவற்றுள் கண்ட சில பாடல்களையும் அடிகளையும் ஈண்டு எடுத்தோதி விளக்குதலானே, இத்தெய்வப்புலவரது வரலாறு ஒருவாறு நண்குணரலாகும். இவற்றில் சில கற்பனை வரலாறுகளும் இருக்க வாய்ப்பு உண்டு.
இவர் ஊர்
திருவழுந்தூர்த் தாதியை, சோழன், எந்த ஊர் என்று கேட்ட போது பாடியது,
கம்பன் பிறந்தவூர் காவேரி தங்குமூர்
கும்பமுனி சாயங் குலைந்தவூர் - செம்பதுமத்
தாதகத்து நான்முகனுந் தாதையுந்தே டிக்காணா
வோ தகத்தார் வாழுமழுந் தூர்.
(தமிழ் நாவலர் சரிதை)
இவர் குலம்
நாரணன் விளையாட் டெல்லா நாரத முனிவன் சொல்ல
வாரணக் கவிதைசெய்தா னறிந்துவான் மீகியென்பான்
சீரணி சோழநாட்டுத் திருவழுந் தூருவச்சன்(1)
(2)காரணி கொடையான் கம்பன் றமிழினாற் கவிதை செய்தான்.
(இராமாவதாரப் பாயிரம்.)
இப்பாட்டில் 'உவச்சன்' என்பதற்கியைய, வாணியன் தாதன் என்பான் இக்கம்பரைப் பாடிய வசைப்பாட்டின்கண், "கைம்மணிச் சீரன்றிச் சீரறி யாக்கம்ப நாடன்" (தமிழ் நாவலர் சரிதை) என வருதல் காண்க. கைம்மணிச் சீர் - கையின் மணியோசை. உவச்சர் என்பார் காளிகோயில் முதலியவற்றிற் பூசைபுரியும் வகுப்பினராதலால், அவர்க்குக் கையால் மணியொலிப்பித்தலுந் தொழிலாம்.
இவர் வளர்ந்து கல்வி பயின்று சிறந்தவாறு
பெற்றுவளர்த்தும் வித்தைதனைப் பேணிக்கொடுத்தும் பெயா கொடுத்தும்
பற்றவரும்பா லமுதளித்தும் பகைத்தவறுமைப் பயந் தீர்ந்துங்
கற்றமுதனூற் றிருவழுந்தூர்க் கம்பன்றழையக் கருணை செய்தோர்
மற்றும்புலவோ ரையும்வாழ வைத்தார் சோழ மண்டலமே.
(சோழமண்டல சதகம்.)
இங்ஙனம் கம்பரை வளர்த்துச் சிறப்பித்தவன் வெண்ணெய் நல்லூர்ச் சடையன் என்பான். இதனை மேல்வருஞ் செய்யுளானும் உணர்க.
கம்பர், தெய்வ வரத்தினாற் கவி சொல்லிய நாளிற் பாடிய வெண்பா:
மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணெயே - நாட்டி
லடையா நெடுங்கதவு மஞ்சலென்ற சொல்லு
முடையான் சரராமனூர் (தமிழ் நாவலர் சரிதை)
சரராமன் என்பது வெண்ணெய்நல்லூர்ச் சடையற்க்கு ஒரு பெயர். "மழையென், றாசங்கை கொண்ட கொடை மீளியண்ணல் சரராமன் வெண்ணெய்," (நாகபாசப் படலம்) என இவர் இராமாவதாரத்து வழங்குதலானுமுணர்க.
இவர் ஏரெழுபது பாடி அரங்கேற்றியது
குணங்கொள் சடையன் புதுச்சேரிக் கொடையன் சேதிராயன் முதற்
கணங்கொள் பெரியோர் பலர்கூடிக் கம்பநாடன் களிகூற
விணங்கும்பரிசி லீந்துபுலி யேழும்புகழே ரெழுபதெனு
மணங்கொள் பெருங்காப் பியப்பனுவல் வகித்தார் சோழ மண்டலமே
(சோழமண்டல சதகம்.)
சடையனாகிய புதுச்சேரிக் கொடையன் என்க, சேதிராயனும் புதுவை ஊராதல் பற்றிப் புதுச்சேரிக் கொடையனாகிய சேதிராயன் எனினுமமையும், சடையன், சேதிராயன் முதலிய பெரியோர் நிறைந்த அவையியற்றான் இவர் ஏரெழுபது அரங்கேற்றியது.
இப்பாட்டின்கண் 'குணங்கொள் சடையன்' எனப்பட்ட மேற்கூறிய வெண்ணெய்ச் சரராமனாவன். புதுவை, புதுச்சேரி என்று வழங்குகின்ற ஊரும் இவனதாதல் பற்றி இவனையே 'புதுச்சேரிக் கொடையன்' எனவும், 'புதுவைச் சடையன்' எனவும் வழங்குபவர் எனத் தெரிகின்றது. இவனைப் 'புதுவைத் திரிகர்த்தன்' 'வெண்ணெய்த் திரிகர்த்தன்' என வழங்குதலுமுண்டு. இவன், மூவேந்தர்க்கும் அவர் பரிசனங்கட்கும் ஒருகாற் பெருவிருந்தளித்து, அவரால் திரிகர்த்தராயன் எனச் சிறப்புப் பெயர் சூட்டப்பெற்றான் என்பர். இவர் சோணாட்டில் மிகப்பெரிய காணிவளமுடையனாயிருந்தனனெனவும், நாளும் பல்லாயிரவர்க்குப் பாலுஞ்சோறும் பரிந்தளித்தனனெனவும், சிங்களமாண்ட பரராசசிங்கப் பெருமான் என்னுமரசன், ஈழநாடு பஞ்சம் பட்டபோது இவ்வள்ளலைப் பாட, இவன் ஆயிரங்கப்பலில் நெல்நிறைத்துக் கொண்டுபோய்க் கொடுத்து அவன் நாடு முற்றும் பாதுகாத்துச் சிறந்தனனெனவும் சொல்லுவர்.இவன் சங்கரன் என்பவர்க்குப் புதல்வனென்பதும், இணையாரமார்பன் என்பவனைத் தம்பியாக உடையவனென்பதும், பெரும்பாலும் திருவெண்ணெய் நல்லூரையே தனது பெருங்குடிக் கிருக்கையாகக் கொண்டவனென்பதும், கல்வியில் சிறந்தானென்பதும் தெரிகின்றன. சிறுபான்மை, இவனைப் புதுவைச் சடையன் என வழங்குவது, அதன்கண் இவன் தந்தையாகிய சங்கரன் வதிந்த சிறப்புப் பற்றியும், அவ்வூர் இவனுக்குச் சிறந்த கடற்றுறைப் பட்டினமாதல் பற்றியும் ஆகும். இவன் வியலூர் என்னும்மிடத்துமிருந்தனனென்ப. புதுவையும் வெண்ணெயும் வியலூரும் தூரவூர்களல்லாமை உணர்ந்து கொள்க. இவன் தந்தையாகிய சங்கரனுக்கு ஒட்டக்கூத்தர் முதலில் உதவித்தொழில் புரிந்து கொண்டிருந்தனரெனவும், அவரை, அப்புதுவைக்கணிருந்த காங்கேயன் என்னும் உபகாரியொருவன் கல்விபயிலுவித்து நல்லறிஞராக்கிக் கவிராக்ஷசன் எனவும், கெளடப் புலவன் எனவும், பெயர் சிறப்பித்து உயரச் செய்தானெனவும், அந்நன்றி பாராட்டி அக்கூத்தர் காங்கேயன் மேல் 'நாலாயிரக் கோவை'யொன்று பாடினாரெனவும் அறியலாவன, "கெளடம்" என்பது ஒருவகைக் கவிமார்க்கம்.
அது, பொருள் புலப்படத் தொடுப்பதிலும் சொல்வளம்படத் தொடுப்பதே சிறப்பெனக் கருதுவோம். 'இடுக்கட்புண்படு' 'பத்துக் கொண்டன' 'விக்காவுக்கு' என்பது முதலாக வரும் இக்கூத்தர் பாடல்கள், அக்கெளட நெறியே என்றதாதலுணர்க. ஒட்டக்கூத்தர், சடையன்றந்தையாகிய சங்கரனுக்கு உதவித்தொழில் புரிந்துகொண்டிருந்தனரெனவும், கம்பர் அச்சடையனால் வளர்த்துச் சிறப்பிக்கப்பட்டனரெனவும் தெரிதலால் கம்பர் கூத்தருக்கு இளையராவரென உய்த்துணரப்படுகின்றது. மற்றுமிச் சடையனைப் பற்றியன ஆங்காங்குக் கூறப்படும். பின்னர்க் கண்டுகொள்க.
இனி, புதுவைச் சடையனும், வெண்ணெய்ச்சடையனும் வேறு வேறாவரெனக் கூறின், இருவரும் 'திரிகர்த்தன்' எனச் சிறப்புப் பெயர் புனையப் பெற்றனரெனவும், இருவரும் நாளும் பல்லாயிரவர்க்குப் பசியாற்றும் வண்மையும் வளப்பமுமுடையராயிருந்தனரெனவும், இவ்விருவரும் கல்வியிற் பெரிய கம்பரைப் போற்றினரெனவும், "புதுவைச் சடையனிருந்த வியலூர்" என்று பாடப்பெற்ற வியலூர், வெண்ணெய்நல்லூர்க்கு மிக அணித்தாதலால், அவ்விருவரும் நெருங்கி வதிந்தனரெனவும் கொள்ள நேரும். அங்ஙனம் திரிகர்த்தனென்னும் பட்டம் அக்காலத்து இருவர்க்குச் சூட்டியமை அறியப்படாமையாலும், புதுவையானொருவனே திரிகர்த்தனே பட்டம் பெற்றானாக வெண்ணெய்த்திரிகர்த்தன் எனவும் வழங்குதலறியப்படுதலாலும், திரிகர்த்தனென்னுஞ் சிறப்புடையானொருவனே வெண்ணெயும் புதுவையுமுடையனாயினான் எனக் கருதுதலே இயைபுடைத்தாமென்பது உணரத்தக்கது. அன்றியும், ஊரன்றி மற்றைவளமுங் குணமும் வண்மையும் பெயரும், கம்பரால் புகழப்படுஞ் சீருஞ்சிறப்புமென்னுமிவற்றில் எவ்வகை வேற்றுமையும் அறியப்படாமை காண்க. இவற்றுக்கெல்லாம் செய்யுள் வருமாறு; --
சோழமண்டல சதகப் பாடல்கள்
அளிக்கும்படைமூ வேந்தருங்கொண் டாடும்விருந்தா லதிசயமாய்த்
திளிக்குந் திரிகர்த் தராயனெனச் செப்பும்வரிசைத் திறஞ்சேர்ந்தோன்
விளைக்குமரிசி மாற்றியநீர் வெள்ளங்கிழக்கு விளையுமென
வளைக்குப் பெருமைப் புதுவையர்கோன் வளஞ்சேர் சோழமண்டலமே.
(சோழமண்டல சதகம்.)
[மேற்கோள்]
புரந்தர தாரு புதுவைச் சடையன்
னிருந்தவிய லூர்தெற்கு மேற்கு - பரந்த பொன்னி
யாற்றுநீ ரால்விளையு மப்பாற் கிழக்கரிசி
மாற்றுநீ ரால்விளையு மாம்.
யாமார் புகழ வியற்கம்ப நாட னிராமரொடும்
பாமாலை சூட்டுங் குலமுடை யானைப் படிபுரக்கக்
கோமாற னிட்டபொற்சிங்கா தனம் பெற்ற கொற்றவனைத்
தேமாலை யச்சந் தவிர்ப்பான் வெண்ணெய்த்திரிகர்த்தனையே.
தண்ணார் கமலச் சதுமுகத் தோனையும் தப்புவதோ
பண்ணா மணித்தலைக் கட்செவி யானது பாரிலுள்ளே
கண்ணாக வாழும் வெண்ணெய்த்திரி கர்த்தன் கலைத்தமிழ்கேட்
டெண்ணா முடியசைத் தாலுல கேழுமிறக்கு மன்றே.
எட்டுத் திசையும் பரந்த நிலா வெறிக்குங்கீர்த்தியேருழவர்
சட்டப்படுஞ்சீர் வெண்ணெய்நல்லூர்ச் சடையன் கெடிலன் சரிதமெலா
மொட்டிப்புகழ வாயிநா வுடையார்க்கன்றி யொருநாவின்
மட்டுப்படுமோ வவன்காணி வளஞ்சேர் சோழ மண்டலமே.
தேனார்தொடையார் பரராச சிங்கப்பெருமான் செழுந்தமிழ்க்குக்
கானார்நெல்லின் மலைகோடி கண்டிநாடு கரைசேரக்
கூனார்கப்ப லாயிரத்திற் கொடுபோயளித்த கொடைத் தடக்கை
மானாகரன் சங்கரன் சடையன் வளஞ்சேர் சோழ மண்டலமே.
[மேற்கோள்]
இரவுநண்பக லாகிலென்பக லிருளறாவிர வாகிலெ
னிரவியெண்டிசை மாறிலென்கட லேழுமேறிலென் வற்றிலென்
மரபுதங்கிய முறைமைபேணிய மன்னர்போகிலெனாகிலென்
வளமையின்புறு சோழமண்டல வாழ்க்கை காரணமாகவே
கருதுசெம்பொனி னம்யலத்திலோர் கடவுணின்று நடிக்குமே
காவிரித்திரு நதியிலேயொரு கருணைமாமுகி றுயிலுமே
தருவுயர்ந்திடு புதுவையம்பதி தங்குமன்னிய சேகரன்
சங்கரன்றரு சடையனென்றொரு தருமதேவதை வாழவே.
இது பரராசசிங்கப்பெருமான் சடையனுக்கு எழுதி விடுத்த செய்யுளாயினுமாம்.
கம்பர் காவிரி எச்சிற்படப் பாடிய வெண்பா
மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர்
கைகழுவ நீர்போதுங் காவிரியே பொய்கழுவும்
போர்வேள் சடையன் புதுவையான் றன்புகழை
யார்போற்ற வல்லா ரறிந்து. (தமிழ் நாவலர் சரிதை)
விருந்துநுகர்வோர் கைகழுவ விளங்கும்புனற்கா விரியென்றார்
தருந்தாயனைய புகழ்ப்பதுவைச் சடையன்கொடையார் சாற்றவல்லார்
பரிந்தாரெவர்க்கு மெப்போதும் பாலுஞ்சோறும் பசிதீர
வருந்தாதளிக்க வல்லதன்றோ வளஞ்சேர்சோழ மண்டலமே.
இவற்றால் இவன் நாளும் பல்லாயிரவர்க்குணவளித்தது உணரப்படும்.
கோலாகலமன் னரிலவன்போற் கொடுத்தேபுகழுங் கொண்டாரார்
மேலார்கவுடப் புலவனெனும் விழுப்பேர்க்கூத்தன் முழுப்பேரா
னாலாயிரக்கோ வையம்புனைய நவில்கென்றிசைத்து நாட்டுபுகழ்
மாலாமெனுங்காங் கயன்வாழ்வு வளஞ்சேர்சோழ மண்டலமே. (சோழமண்டல சதகம்.)
[மேற்கோள்]
புதுவைச் சடையன் பொருந்து சங்கரனுக்
குதவித் தொழில்புரி யொட்டக் கூத்தனைக்
கவிக்களி றுகைக்குங் கவிராட்சதனெனப்
புவிக்குயர் கவுடப் புலவனு மாக்கி
வேறுமங் கலநாள் வியந்துகாங் கயன்மேற்
கூறுநாலாயிரக்கோவைகொண் டுயர்ந்தோன்.
இனிச் சேதிராயனென்பான் புதுவையின்கணிருந்த ஓர் உபகாரி. இவன் 'கம்பர் வேளாளரைச் சிறப்பித்துப்பாடிய ஏரெழுபது' என்னும் நூலைச் சடையனுடனிருந்து கேட்டவன். கம்பர் ஏரெழுபது அரங்கேற்றும்போது இச்சேதிராயனை விடந்தீண்டிற்றாகவும் அதனாலரங்கேற்றம் இடையறவு படலாகாது என்னுங்கருத்தாற் சேதிராயன் தனக்கு நிகழ்ந்ததனைப் பிறர்க்குறையாது மறைத்து அவையத்திருந்து நூல்கேட்க, விடந்தலைக்கேறுதலால் மயங்கி வீழ்ந்தனன். அவ்வளவில் ஆங்குக்கூடிய பெரியார் பலரும் உடற்குறியால் விடமென்று கண்டு வருந்தாநிற்கையிற் கம்பர் தமதருமைத் தெய்வவாக்கினாற் சிலவெண்பாக்கள் பாடி விடத்தையேறியபண்பே யிறக்கி அவனை உயிர்ப்பித்தார் என்ப. இச்சேதிராயனுக்குத் தொண்டைநாட்டிலுங் காணிவளமுண்டு. இவற்றிர்குச் செய்யுள்:
அழுவதுங் கொண்டு புலம்பாது நஞ்சுண் டதுமறைத்தே
ரெழுபதுங் கொண்டு புகழ்க்கம்ப வாணனெழுப்பவிசை
முழுவதுங் கொண்டொரு சொற்பேச நெய்யின் முழுகிக்கையின்
மழுவதுங் கொண்டு புகழ்கொண்ட தாற்றொண்டை மண்டலமே.
(தொண்டைமண்டல சதகம்.)
"..............................பாவலர்தா
மேரெழுப தோதியரங் கேற்றுங் களரியிலே
காரிவிட நாகங் கடிக்குங்கை." (திருக்கைவழக்கம்)
கம்பர் ஏரெழுபது பாடி அரங்கேற்றும்போது
புதுவைச் சேதிராயனை
விடந்தீண்டத் தீர்த்த வெண்பா
ஆழியான் பள்ளி யணையே யவன்கடைந்த
வாழி வரையின் மணித்தாம்பே - பூழியான்
பூணே புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற
நாணே யகல நட.
மங்கை யொருபாகர் மார்பிலணி யாரமே
பொங்கு கடல்கடைந்த பொற்கயிறே - திங்களையுஞ்
சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே
யேறிய பண்பேயிறங்கு. (தமிழ் நாவலர் சரிதை)
இவர் வல்லியை விழைந்தது
இவர் ஒருகால் தொண்டைநாட்டுள்ள திருவொற்றியூருக்குச் சென்றபோது, அங்குச் சதுரானன பண்டிதன் மடத்திருந்த வல்லி எனப்பெயரிய கணிகையொருத்தியை விழைந்து, பலகாலம் அவளுடன் அங்கே தங்கி மகிழ்ந்து அவளுக்கு எருமைகள் வாங்கி வரப் புழற்கோட்டம்புக்குக் காளிம்பன் என்னும் நிரைமேய்ப்பானொருவனைக் கண்டு பாட, அவன் ஈன்ற எருமைகள் ஆயிரம் (பல) கொடுக்கப் பெற்று, அவற்றையெல்லாம் வல்லிபாலுய்த்துப், பின் அவளுக்கு அணி பலவியற்றித் தருதற்குத் திருமயிலைபோய் ஆண்டுத்திருவாலி என்னும் தட்டான் ஒருவனைப்பாடி அணியெல்லாம் இயற்றுவித்துக்கொண்டு மீண்டு அவளுக்கு அணிவித்து, இன்னவாறு அவளுக்கு வேண்டுவன பலவும் உதவிவந்தனர். அவள் இவர்பாற் பாராட்டிய பேரன்பினாற் பின் அவளைப் பிரியலாற்றாது உடன்கொண்டு சோணாடுபுக்கு ஆங்கும் அவளுடன் இனிது களித்தனர் என்ப. அக்காலத்து ஆங்கு வல்லியிருந்தவீட்டினை மழையால் நனையாமற், கம்பருக்கு ஆருயிர்த் துணைவனான சடையவள்ளல் ஓரிரவிற்குள் நெற்கதிராலே வேய்ந்து இனிது புரிந்தனன் என்ப. இவற்றிர்குச் செய்யுள் வருமாறு:
திருவொற்றியூர் வல்லியைக் கண்டு சொல்லியது
இல்லென்பார் தாமவரை யாமவர்தம் பேரறியோம்
பல்லென்று செவ்வாம்பன் முல்லையையும் பாரித்துக்
கொல்லென்று காமனையுங் கண்காட்டிக் கோபுரக்கீழ்
நில்லேன்று போனாரென் னெஞ்சைவிட்டுப் போகாரே.
(தமிழ் நாவலர் சரிதை)
நடக்கிலன்னமா நிற்கினல் வஞ்சியாங்
கிடக்கி லோவியப் பாவை கிடந்ததாந்
தடக்கை யான்சது ரானன பண்டிதன்
மடத்து ளாளென் மனத்துறை வல்லியே. (க்ஷெ)
கம்பருக்குக் காளிம்பன் ஈன்ற எருமை
ஆயிரம் கொடுத்த வெண்பா
புக்கு விடைதழுவிக் கோடுழுத புண்ணெல்லாந்
திக்கிலுயர் காளிம்பன் றென்புழன்மா - னக்கணமே
தோள்வேது கொண்டிலனேற் சுந்தரப்பொற் றோன்றலுக்கு
வாழ்வேது கண்டிலமே மற்று. (தமிழ் நாவலர் சரிதை)
கம்பர் திருவாலிமேற் பாடிய வெண்பா
அண்ணறிரு வாலி யணிமயிலை யத்தனையும்
வெண்ணிலவின் சோதி விரித்ததே - நண்ணுந்
தடந்துப்பு விற்பாணந் தன்முகத்தே கொண்டு
நடந்துப்பு விற்பா ணகை. (க்ஷெ)
தனதானியத்தி லுயர்ந்தோர்க டாமேயென்னுந் தருக்கேயோ
வினவாதிரவி னெற்கதிரான் வேய்ந்தாரவல்லி வீடதல்லாற்
கனிசேர்தமிழ்க்குப் பன்னிரண்டு கடகயானைக் காடளித்த
மனைவாழ்வுடையான் வெண்ணெய்நல்லூர் வாழ்வான் சோழமண்டலமே.
(சோழமண்டல சதகம்.)
[மேற்கோள்]
பொதுமாதர் வீட்டைப் புகழ்பெற வேனெற்
கதிரானே வேய்ந்தருளுங் கங்கைப் - பதிநேர்
வருவெண்ணெய் நாடன் வருநா வலர்க்குத்
தருவா னவன்சடையன் றான்.
கம்பர் குரும்பை என்னுந் தாதிபாற்
சொல்லிய கலித்துறை
சொல்லியைச் சொல்லி னமுதான செல்லியைச் சொற்கரும்பு
வில்லியை மோக விடாய்தவிர்ப் பாளை விழியம்பினாற்
கொல்லியைக் கொல்லியம் பாவையொப் பாளைக் குளிரொற்றியூர்
வல்லியைப்புல்லியகைக்கோ விவர்வந்து வாய்த்ததுவே.
(தமிழ் நாவலர் சரிதை)
இப்பாட்டினால் இவர் வல்லியைப் பிரிந்த காலத்துக் குரும்பை என்பாளைத் தழுவி மனம் பொருந்தாமையால் வெறுத்தனர் எனத் தெரிகின்றது. இவர் வல்லியைப் பிரிகின்றபோது பாடியதாக "வடிப்பாளை வீசுந் திருவொற்றியூர்வல்லி" என்னும் முதலையுடைய பாட்டொன்றும் வழங்குகின்றது.
இவர்களையன்றிக் களந்தைப் பதியிலொருத்தியையும் இவர் விழைந்தனரென "வில்லிகளந்தை மின்னை" (தமிழ் நாவலர் சரிதை) என்னும் முதலையுடைய செய்யுளான் விளங்குகின்றது. இப்புலமைக்கரசரது அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்தையும் இவ்வாறு அலைக்கவல்ல காமனே யாரினும் பெருவலியுடையன் என்பது ஒருதலை.
'எவர்க்கும் வேள்கணை தீர்திறமின்று' என்பரன்றோ? இவ்விழைவெலாமுட்கொண்டு போலும் இப்புலவர் பெருந்தகையார் "கற்றனர் ஞான மின்றேற் காமத்தைக் கடக்கலாமோ" (மாரீசன்வதை) எனப்பாடினாராவர்.
இவர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது
அரும்பெறன்மணியும் பெரும்பெயரமிழ்துமே நிறையப் பெற்ற பாற்கடல்போலப் பரந்துவிளங்குகின்ற இராமாயணமென்னுந் தெய்வான்பனுவலை இவர் பாடியருளியதற்குக் காரணம், இவரது சீராமபத்தியேயன்றி வேறில்லையென்பது, இவர், "ஆசைபற்றியறையலுற் றேன்மற்றிவ், வேசில் கொற்றத் திராமன் கதையரோ." எனவும், "ஆங்கவன் புகழ்ந்த நாட்டை யன்பெனு நறவமாந்தி, மூங்கையான் பேச லுற்றா னென்னயான் மொழியலுற்றேன்" எனவும் இராமாவதாரத்துரைத்துப் புகுந்தவாற்றால் நன்கறியத்தக்கது. இவர் "பத்தர் சொன்னவும் பன்னப்பெறுபவோ" என்றதூஉம் இக்கருத்தையே வலியுறுத்தும். இவர் வளர்ந்து சிறத்தற்க்குக் காரணமான சடையவள்ளல் குடிக்கும் இச்சீராமபத்தி உண்டென்பது, அவ்வள்ளற்க்குச் சரராமன் எனப்பெயரிட்டு வழங்கியவாற்றால் ஊகிக்கப்படும். அக்குடிப் பரிசயம் இவரது பத்திக்கு ஒரு காரணமாயினும் ஆம். அன்றியும் வான்மீகி முனிவர் திருவாய் மலர்ந்தருளிய சீராமாயணத்தின் திட்பநுட்ப ஒட்பன்களே இவர்காலத்து யாண்டும் பரந்து விளங்கிமேம்பட்டன என்பதும், அக்காலத்தறிஞரெல்லாம் சீராம கதையை அம்ழ்தினும் அதிகமாகமதித்துவந்தனரென்பதும்,
"வைய மென்னை யிகழவு மாசெனக்
கெய்த வும்மி தியம்புவ தியாதெனிற்
பொய்யில் கேள்விப் புலமையி னோர்புகழ்
தெயவ மாக்கதை மாட்சி தெரிக்கவே." (பாயிரம்)
"நொய்தினொய்யசொன் னூற்கலுற் றேனெனை
வைத வைவின் மராமர மேழ்துளை
யெய்த வெய்தவற் கெய்திய மாக்கதை
செய்த செய்தவன் சொன்னின்ற தேயத்தே." (க்ஷெ)
"வாங்கரும் பாத நான்கும் வகுத்தவான் மீகியென்பான்
றீங்கவி செவிகளாரத் தேவரும் வருகச் செய்தான்." (நாட்டுப்படலம்)
3"எறிகடலுலகந் தன்னு ளின் றமிழ்ப் புலவர்க் கெல்லா
முறுவலுக் குரியதாக மொழிந்தனன் மொழிந்த வென்சொற்
சிறுமையுஞ் சிலையி ராமன் கதைவழிச் செறித றன்னா
லறிவுடை மாந்தர்க் கெல்லா மமிழ்தமொத் திருக்குமன்றே." (பாயிரம்)
என இவர் இராமாவதாரத்து வழங்கியவாற்றால் உய்த்துணரப்படும். இவ்வாறு அறிஞரெல்லாம் ஒருங்குபாராட்டும் சீராம காதையின் தெய்வமாட்சி, இப்பெரும்புலவரது அறிவுடை நெஞ்சினையும் நன்கு கவர்ந்ததாதலின், அதனையே தமது 'செவ்விய மதுரஞ்சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய' தமிழ்ப்பாக்களாற் பாடிப் புகழ் நிறுத்துதற்கு ஆசைப்பட்டனர் எனினும் அமையும்.
இவர் இராமாயணத்தைப் பெரும்பான்மை வெண்ணெய்நல்லூரிலும், சிறுபான்மை ஒற்றியூரிலும் இருந்துபாடினரெனவும், ஒற்றியூரில் இவரிருந்தபோது இந்நூலை இரவிலே பாடினரெனவும், அக்காலத்து மாணாக்கர் பலர் பிந்தாமலெழுதுவதற்கு அவ்வூர்க் காளியைத் தீப்பந்தம் பிடிக்கப் பாடினரெனவும்,
'தொடை நிரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல் லூர்வயிற் றந்ததே'
(இராமாவதாரப் பாயிரம்.)
கம்பர் காளியைப்
பந்தம்பிடியென்று பாடியது
ஒற்றியூர் காக்க வுறைகின்ற காளியே
வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை - பற்றியே
நந்தா தெழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர்
பிந்தாமற் பந்தம் பிடி. (தமிழ் நாவலர் சரிதை)
என வருவனவற்றால் அறியப்படுகின்றன. இவர் தாம் பாடிய சீராம கதைக்கு இட்டபெயர் இராமாவதாரம் என்பது, (இது பின்னர் விளக்கப்படும்.)
"நடையி னின்றுயிர் நாயகன் றோற்றத்தி
னிடைநி கழ்ந்த விராமாவ தாரப்பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை."
(இராமாவதாரப் பாயிரம்.)
4"இத்த லத்து மிராமாவ தாரமே
பத்தி செய்து பரிவுடன் கேட்பவர்
புத்தி மிக்கரும் புண்ணிய முந்தரு
மெத்த லத்து மவனடி யெய்துவார்." (க்ஷெ)
என வருவனவற்றாலும், புறத்திரட்டுடையார் இந்நூலை, இராமாவதாரம் என்னும் பெயரே கொண்டாளுதலாலும் தெரிகின்றது. இவர் பாடியது பாலகாண்டமுதல் யுத்த காண்ட மீறாகவுள்ள ஆறுகாண்டங்களே என்பதும், பின் உத்தரகாண்டத்தை ஒட்டக்கூத்தர் பாடினாரென்பதும், அவ்வுத்தரகாண்டம் சோழனதவைக்களத்தே அரங்கேற்றப்பட்டதென்பதும்,
"பூணிலாவுங் கம்பனலம் பொலியுந்தமிழாற் புகழெய்திக்
காணுமாறு காண்டமுறுங் கதையிற்பெரிய கதையென்னுந்
தாணிலாவுங் கழலபயன் சபையிற்பயிலுத் தரகாண்டம்
வாணிதாச னரங்கேற்ற வைத்தார்சோழ மண்டலமே."
(சோழமண்டல சதகம்.)
என்னும் பாடலாற் றெரிகின்றன. ஈண்டு அபயன் என்பது சோழன் என்னும் பொருளில் வந்தது. ஒட்டக்கூத்தர் சரசுவதி தம்பலங் கொடுக்க அதனாற் கவித்திறம் எய்தினவராதலால் அவரை 'வாணி தாசன்' எனப் பெயர் சிறப்பித்து வழங்குவரெனத் தெரியலாகும். இங்ஙனம் கம்பர் பாடியன ஆறுகாண்டங்களேயாம் என்பதற்குப் பெரிதும் இயையவே, அரசகேசரியார் தாமியற்றிய இரகுவம்மிசம் என்னுஞ் செந்தமிழ் நூலிற் சீராமமூர்த்தியின் திருவவதாரமேயுரைத்து "மற்றிவ்விராமகதையின் பூருவபாகம் முழுவதையுங் கடலிற்பெரிய தமிழ்க்கல்வியினையுடைய கம்பநாடர் நிகழ்ந்தவாறு உரைத்தாராதலால் அதனை யீண்டு ஓதினேனில்லை; அவருரையாத அக்கதையின் உத்தரபாகமே யானினியோதப்புக்கேன்" என்னுங்கருத்தினை வெளிப்படுத்த,
பொற்றா மரைமா னொழியாது பொலியு மார்ப
வெற்றாங்கு மேனி ரகுராம சரிதை யாவுங்
கற்றார் கலியிற் பெரிதாந் தமிழ்க் கம்பநாட
னுற்றாங் குரைத்தானுரையாத வோது கிற்பாம்.
என ஒரு பாடலைக்கூறி அதன்பின்னே சீதை வனம்புகுதல், இலவணன்வதை, சம்புகன்வதை, இராமாவதார நீங்குதல் முதலாகிய உத்தரகாண்டக் கதைகளையே பல படலங்களாற் பாடியதனையும் ஈண்டைக்கு ஆராய்ந்து கொள்க. இவ்விரகுவம்மிசச் செய்யுளாற் கம்பர் உத்தர காண்டம் பாடினாரில்லையென்பது நன்கு தெளியப்படும். இனிச் சில இராமாயண ஏடுகளில்,
கரைபொரு காண்டமேழு 5கதைகளாயிரத்தெண்ணூறு
பரவிய பாடைபத்து படலநூற் றைம்பத்தாறு
ளுரைதரு விருத்தம்பன்னீ ராயிரத் தொருபத்தாறு
வரமிகு கம்பன்சொன்ன வண்ணமு மெண்பத்தேழே.
என ஓர் செய்யுள் உள்ளது. மேற்காட்டிய பிரபலமான பிரமாணங்களோடு பகைத்தலால் பண்டை வழக்கறியாதார் ஒருவர் பிற்காலத்து இயற்றியதாகுமெனக் கொள்ளத்தகும். 'கரைபொருகாண்டமாறு' என்னும் முதலோடு, அதற்குப் பொருந்திய படலமுதலியவற்றின் வரையறையையுமுடைய பழைய பாட்டொன்றைப் பிற்காலத்தார் ஏழுகாண்டங்கட்கும் ஒருவாறு இயையத்திரித்து இவ்வாறு வழங்கினரென ஊகித்தலுமாம். இச்செய்யுளிற் கணக்கிட்ட ஏழுகாண்டச் செய்யுட்டொகையினின்று உத்தரகாண்டச் செய்யுட்டொகையாகிய 1500ஐக் கழித்து நோக்கின் மற்ற ஆறுகாண்டங்கட்கும் உரிய செய்யுட்டொகை 10516 ஆகும். இக்காலத்து முதல் ஆறுகாண்டங்கட்கும் உள்ள செய்யுட்டொகை அச்சுப் பிரதிகளில் 10587ஆகவும் ஏட்டுப் பிரதிகளில் 10825; 10685 ஆகவும் பல வேறுவகைப்படுவது, ஆறுகாண்டங்கட்கும் உள்ள படலத்தொகையும் இங்ஙனமே 113, 115, 128, 137 எனப்பலவாறாகக் காணப்படுகின்றது. உத்தரகாண்டச் செய்யுட்டொகை, 1500 என்பதிற் பெரும்பான்மை வேறுபாடு காணாவிடினும் அதன் படலத்தொகை 18, 23, என வேறு வேறு காணப்படுகிறது. இவ்வளவு மாறுபாடுற்ற இக்காலத்துப் பிரதிகளைக் கொண்டு இச்செய்யுளில் கண்ட வரையறைகட்குப் பொருந்தவுரைப்பது அரிதாமென்க. அன்றியும் புறத்திரட்டுடையார் இராமாவதாரமெனப் பெயரிட்டாண்ட,
எய்தவின்னல் வந்த போழ்தி யாவரேனும் யாவையுஞ்
செய்ய வல்ல ரென்ப தோர்க சென்னெறிக்க ணேகிட
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல வாய மற்றிவன்
கைக ளின்று பன்ன சாலை கட்ட வல்ல வாயவே
(இடுக்கணழியாமை - 15)
என்னுஞ் செய்யுளுக்கு வேறாக இக்காலத்து
மேவு கான மிதிலையர் கோன்மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தாவி லெம்பிகை சாலை சமைத்தன
யாவை யாது மிலார்க்கியை யாதவே.
(அயோத்திய காண்டம். சித்திரகூடப்படலம்)
என ஒரு செய்யுள் காணப்படுதலாற் கம்பர் பாடிய பாடல்கள் சில பிற்காலத்து விடப்பட்டும் பிறர் பாடியன சில இடையிடையே மடுக்கப்பட்டும் இப்போதைப் பிரதிகளுள்ளனவென்று தெளியப்படும்.
6பரிபாடலிலும் சிந்தாமணியிலும் பிற்காலத்துக் கந்தியார் என்பாரொருவர் தன்சொற்களையுஞ் செய்யுள்களையும் இடைமடுத்தாற்போல இவ்விராமவதாரத்திலும் பிற்காலத்து வெள்ளியம்பலத் தம்பிரான் என்பாரொருவர் தன் செய்யுள்கள் சிலவற்றை இடைமடுத்துப் போயினரென்பர். இவற்றை வெள்ளிபாடல் என்னும் பெயரான் வழங்குவர். இப்பிறழ்ச்சியேயன்றி எழுதினர் பிழைப்பாலும் பாடகர் பிழைப்பாலும் இவ்வேடுகளெய்திய மாறுபாட்டிற்கும் அளவேயில்லை. ஆதலால் இந்நிலையில் கம்பர் ஆறு காண்டங்கட்கும் வகுத்த படலங்கள் இத்துணையெனவும், பாடிய பாடல்கள் இத்துணையெனவும், அப்படலங்களும் பாடல்களும் இவை இவை எனவும் வரையறுத்துணர்த்தல் இயலாதென்றுணர்க. மேற்குறித்த மாறுபாடுகளொன்றும் எய்தாதனவும், புறத்திரட்டில் இராமவதாரம் என்று பெயரிட்டு எடுத்தாளப்பட்ட செய்யுள்களெல்லாம் தம்பாலுள்ளனவும் ஆகிய மிகப்பழைய ஏடுகள் சில கிடைத்தனவாயின் இவ்வரையறைகளின் உண்மை நன்கு புலனாகும் என்று கொள்க.
இனி கம்பர் தாம் பாடியருளிய இராமாவதாரத்துள் சடைய வள்ளலது பெருநன்றி பாராட்டி அவ்வள்ளலை ஆங்காங்கு ஒருபது கவிகளால் புகழ்ந்துள்ளனரென்பது,
எண்ணத்தகும்பா ருள்ளளவு மிரவிமதிய மெழுமளவும்
கண்ணிற்கினிய சயராம் கதையிலொருபான் கவிமுழுதுங்
வெண்ணெய்ச்சடையன் சடையனென விறலார்கம்பன் விளங்கவைத்த
வண்ணத்துரைவே ளான்பெருமான் வளஞ்சேர் சோழ மண்டலமே.
(சோழமண்டல சதகம்.)
என்னுஞ் செய்யுளாற் றெரிகின்றது. அப்பத்துப் பாடல்களாவன :-
நடையி னின்றுயர் நாயகன் தோற்றத்தின்
இடைநி கழ்ந்த விராமாவ தாரப்பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயிற் றந்ததே. (பாயிரம்.)
விண்ணவர் போயபின்றை விரிந்தபூ மழையினாலே
தண்ணெனும் கானநீங்கித் தாங்கருந் தவத்தின் மிக்கோன்
மண்ணவர் வறுமைநோய்க்கு மருந்தன சடையள் வெண்ணை
யண்ணறன் சொல்லேயன்ன படைக்கல மருளினானே.
(பாலகாண்டம், வேள்விப்படலம்)
அரம டந்தையர் கற்பக நவநிதி யமிழ்தஞ்
சுரபி வாம்பரி மதமலை முதலியதொடக்கற்
றொருபெ ரும்பொருளின்றியே யுவரிபுக் கொளிப்ப
வெருவி யோடின வெண்ணைவாழ் கண்ணன்மேவாரின்
(க்ஷெ அகலிடைப்படலம் 18)
வண்ண மாலைக் கைபரப்பி யுலகை வளைந்த விருளெல்லா
முண்ண வெண்ணித் தண்மதியத் துதயத்தெழுந்த நிலாக் கற்றை
விண்ணு மண்ணுந் திசையனைத்தும் விழுங்கிக் கொண்ட விரிநன்னீர்ப்
பண்ணை வெண்ணைச் சடையன்றன் புகழ்போலெங்கும் பரந்துளதால்.
(க்ஷெ மிதிலைகாண்படலம். 74.)
மஞ்செனத் திகழ்தரு மலையை மாருதி
யெஞ்சலிற் கடிதெடுத் தெறிய வேநளன்
விஞ்சையிற் றாங்கினன் சடையன்வெண்ணையிற்
றஞ்சமென் றார்களைத் தாங்குந் தன்மைபோல்.
(யுத்தகாண்டம், சேதுபந்தனப்படலம்.)
வாசங்கலந்த மரைநாளநூலின் வகையென்ப தென்னை மழையென்
றாசங்கைகொண்ட கொடைமீளியண்ணல் சரராமன் வெண்ணை யணுகுந்
தேசங்கலந்த மறைவாணர் செஞ்சொ லறிவாள ரென்றிம் முதலோர்
பாசங்கலந்த பசிபோலகன்ற பதகன்றுரந்த வுரகம்.
(க்ஷெ நாகபாசப்படலம். 263)
வன்னிநாட் டியபொன் மொளலி வானவன் மலரின் மேலான்
கன்னிநாட் டிருவைச் சேர்ந்த கண்ணனுமாளுங் காணிச்
சென்னிநாட் டெரியல் வீரன் றியாகமா விநோதன் தெய்வப்
பொன்னிநாட் டுவமைப்பைப் புலன்கொள நோக்கிப் போனான்.
(க்ஷெ மருத்துமலைப்படலம். 58)
7அந்தணர் வணிகர் வேளாண் மரபின ராலி நாட்டுச்
சந்தணி புயத்து வள்ளல் சடையனே யனைய சான்றோர்
ருய்ந்தன மடிய மென்னு முவகைய ருவரி நாண
வந்தன ரிராமன் கோயின் மங்கலத் துரிமை மாக்கள்.
'சங்கரனைய சான்றோர்' எனவும் பிரதிபேதமுண்டு
(க்ஷெ திருவபிடேகப்படலம்.)
அரியணை யநுமன் தாங்க அங்கத னுடைவாள் வாங்கப்
பரதன்வெண் கவிகை யேந்த விருவருங் கவரி பற்ற
விரைசெறி குழலி லோங்க வெண்ணைமன் சடையன் வண்மை
மரபுளோர் கொடுப்ப வாங்கி வசிட்டனே புனைந்தான் மொளலி.
(க்ஷெ க்ஷெ. 38)
'விரதமா தவர்களேத்த வெண்ணையூர்ச் சடையன் முந்தை' எனவும், 'விரிகடலுலகங்காக்கும் வெண்ணைமன் சடையன் வண்மை' எனவும், 'உரிமையி னயோத்தியுள்ளாருரைசெய் வெண்காடன் வந்த மரபினோர்' எனவும் பிரதிபேதங்கள் உள்ளன.
8மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூன்
முறைசெயு மரசர் திங்கண் மும்மழை வாழி மெய்ம்மை
யிறையவ னிராமன் வாழி யிக்கதை கேட்போர்வாழி
யறைபுகழ்ச் சடையன் வாழி யரும்புக ழநுமன் வாழி.
(க்ஷெ விடை கொடுத்த படலம் வாழ்த்து)
இவற்றுள் 'வெண்ணைவாழ் கண்ணன்' எனவும் 'கன்னிநாட்டிருவை சேர்ந்த கண்ணன்' எனவும் வருவனவற்றாற் சடையற்குக் கண்ணன் என்பதும் 9புலவர் கொடுத்த குணப்பெயராமெனத் தெரிகின்றது. பலர்க்குக் கண்போன்றவன் ஆதலால் அவ்வாறு வழங்கினராவர். இக்கருத்துக்கியையவே 10தண்ணார் கமலச்சதுமுகத் தோனை, என்னும் பாட்டில் "பாரிலுள்ளோர் கண்ணாக வாழும் வெண்ணைத் திரிகர்த்தன்" என வந்ததுங் காண்க. இராமகதையில் ஒரு பான் கவியாற் புகழப்பட்டவன் சடையனே என்பது "சயராமகதையிலொரு பான்கவிமுழுதும், வெண்ணைச் சடையன் சடையனென விறலார் கம்பன் விளங்க வைத்த, வண்ணத்துரைவேளாண் பெருமான்" என்று கூறுதலானும் அறியப்படும். இதற்குப் பொருந்தவே பாண்டிமண்டல சதகமுடையாரும்
தேனேறு மின்சொலி ராமாயணத்துத் திருவழுந்தூ
ரானே றனைய தமிழ்க்கம்ப நாட னமைத் துவைத்த
தானேரில் கீர்த்திசெய் வெண்ணெய்நல் லூரிற் சடையனைப் போல்
வானேறு சீர்த்திகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே
எனக்கூறினார். இனி 'அந்தணர் வணிகர்' என்னுஞ் செய்யுளிற் 'சங்கரனனையசான்றோர்' எனவும் 'அரியணையநுமன்' என்னுஞ் செய்யுளில் 'உரிமையி னயோத்தியுள்ளாரைசெய்வெண் காடன்வந்த மரபினோர்' எனவும் வந்த பாடங்களையே கொண்டு நோக்கிற் கம்பர் சடையனையல்லாமல் அவன் குலத்தவரையும் பாடினாரெனெ எண்ணலாகும். சங்கரன் என்பான் சடையன் தந்தை என்பது முன்னரே கூறப்பட்டது. வெண்காடன் என்பவன் சடையனுக்கு இன்னவுறவினன் என்பது தெளியப்படவில்லையாயினும் நெருங்கிய சுற்றத்தவன் என்பது மட்டிலூகித்தலாகும். இச்சடைய வள்ளலது குலத்துப் பெண் வழியினரென்று சொல்லப்படுகின்ற மெய்கண்டதேவர்க்குச் ச்வேதவனப் பெருமாள் என ஒரு பெயருளதாதல் பற்றி ஈண்டை வெண்காடன் என்பது அவர் பெயராக வைத்து அவர்க்குப் பிற்காலத்து ஒருவர் இப்பாடத்தை இடைமடுத்தனரோ என ஐயுறுதற்கு மிடனுண்டாதலால் இப்பாடபேதங்களிலுண்மை இப்போது அறிதலறிதாகின்றது.
ஒருசாரார் கண்ணன், சரராமன் என்னுமிருவரும் சடையனுக்குத் தம்பியர் எனவும் கூறுவர். இவ்வாறு பகுத்தறிதற்கு ஏற்ற மேற்கோளொன்றும் யான் காண்கிலேன். அன்றியும் கம்பர், பாண்டியன் முன்னே இணையாரமார்பன் என்பானொருவனை இன்னவன் என்றுரைத்தவிடத்துச் சரராமனுக்கிளையான் எனவே கூறியுள்ளார். சரராமன் சடையனின் வேறாய் அவனுக்கு இளையனேயாயின் இயல்பாகவே மூத்தோனும் எல்லாரினுஞ் சிறந்து புகழ் பெற்றோனும் பல்லோரானும் நன்கறியப்பட்டோ னும் ஆகிய சடையனுக்கிளையான் எனக்கூறுவல்லரது அவ்வாறு கூறார்; பின்னர்ச் சரராமனை இன்னவன் எனத் தெரிவித்தற்குச் சடையன்றம்பி எனவே கூறவேண்டும்.
இவையல்லாமற் கம்பர் தெய்வவரத்தினாற் கவி சொல்லிய நாளில் முதன்முதற் பாடிய 'மோட்டெருமை வாவிபுக' என்னும் வெண்பாவில் வெண்ணெய்நல்லூரைச் சரராமனூர் எனப்பாடுதலால் சடையனினும் முற்படச் சரராமனது நன்றியே பாராட்டினார் எனக் கருதற்கும் இடனாகும். சோழமண்டல சதமுகமுடையார், ஒருபான் கவிமுழுதும் வெண்ணைச்சடையன் புகழப்பட்டுள்ளான் எனக் கருதியதும் தவறாகும். கம்பர் தம்மால் நன்றி பாராட்டிப் புகழப்பட்டார் பலராகவும், நூல் இறுதியிற் சடையன் ஒருவனையே வாழ்த்தலும் தாம் சாகும்போதும் அச்சடையனது நன்றியே நினைந்துருகுதலும் 11பொருந்தாவாம். இவற்றால் அவ்வொருசாரார் கூற்றுப் பெரிதும் ஐயப்படுதலுடைத்து. மழையென்றா சங்கை கொண்ட கொடைமீளியண்ணலும், மண்ணவர் வறுமைநோய்க்கு மருந்தானவனும், பாரிலுள்ளோர் பலர்க்குக் கண்போன்றவனும், திரிகர்த்தன் எனப் பட்டம் பெற்றவனுமாகிய வெண்ணைச் சடையனொருவனே சரராமன், கண்ணன் என்னும் பெயர்களானும் விளங்கினோன் எனக்கருதுதற்கண் மேற்காட்டிய இடையீடொன்றும் எய்தாமையும் பலவற்றுக்கும் பொருந்தியதாலும் ஆராய்ந்து கொள்க. இவர்,
"புவிபுகழ் சென்னிபோ ரமலன் றோழ்புகழ்
கவிகடம் மனையெனக் கனக ராசியுஞ்
சவிபுடைத் தூசுமென் சாந்தும் மாலையு
மவிரிழைக் குப்பையு மளவி லாதது"
(கிட்கிந்தாகாண்டம், பிலநீங்குபடலம்.)
"சென்னிநாட் டெரியல் வீரன்றியாகமா விநோதன் தெய்வப்
பொன்னிநாட் டுவமை வைப்பைப் பலன்கொள் நோக்கிப்போனான்."
(யுத்தகாண்டம், மருத்துமலைப் படலம்)
எனப்பாடுதலான் இவரைச் சிறப்பித்துயர்த்திய சோழனும் இவரால் நன்றி பாராட்டப்பட்டுள்ளான் என்பது அறியலாகும். இனி இவர் இராமாவதாரம் அரங்கேற்றியது திருவரங்கப் பெரியகோயிற்கண்ணே யென்பதும் அந்நாள் பங்குனி உத்திரமாம் என்பதும்,
திண்மையேறுங் கம்பனிடஞ் செய்யத்தகும்பல் சிறப்பயர்ந்து
நண்மையேறு மிராமகதை நற்பேர்புவியிற் றழைத்தேற
வுண்மையேறுந் திருவரங்கத் தொருவன்சபையி லுத்தரநாள்
வண்மையேற வரங்கேற்றி வைத்தார்சோழ மண்டலமே.
(மேற்கோள்)
"பண்ணிய விராமகாதை பங்குனி யுத்தரத்திற்
கண்ணிய வரங்கர் முன்னே கவியரங் கேற்றினானே".
என்பனவற்றானறியப்படும். பங்குனியுத்தரநாள் சீராமமூர்த்தியின் திருக்கல்யாண தினமாதலால் அதனையே தாம்பாடிய இராமாவதாரம் அரங்கேற்றுதற்கு உரிய மங்கலநாளாகக் கொண்டனராவர்;
பங்குனி யுத்தர மான பகற்போ
தங்க ணிருக்கினி லாயி நாமச்
சிங்க மணத்தொழில் செய்த திறத்தான்
மங்கள வங்கி வசிட்டன் வகுத்தான் (கடிமணப்படலம்)
எனக் கூறியதனையும் நோக்கிக்கொள்ளுக. 'பங்குனி யுத்த நாளில்' என்னும் பிரதிபேதமுமுண்டு. அது சோழ மண்டல சதகத்துக் கூறப்பட்டதனோடு மாறுபடுதலையும் பங்குனி யுத்தரம் போலச் சிறவாமமையும் தேர்ந்துகொள்க. இவர் சோழனது அவையிலரங்கேற்றாமற் பெரியகோயிலையே அதற்கேற்ற நல்லவையாகக் கருதியதனானே, இவர் அரசவையிலும் அறிவுடையந்தணரது நல்லவையையே பெரிதும் மதித்தனரென்பதும், ஒருவரான் வேண்டப்படாமற் றாமே தமது சீராமபத்தி முதிற்ச்சியாற் பாடிய பெருநூலாகலின் அதனை அப்பெரிய கோயிற் கடைத்தலை பற்றி வாழும் பரமபத்தர்களான அரியபெரியார்கள் திருச்செவிகளில் ஏற்பிக்கவே உள்ளமுவந்தனரென்பதும் நன்குணரலாகும்.
இவர் இராமாவதாரம் அரங்கேற்றுதற்காகத் திருவரங்கப் பெரியகோயிலையெய்தி ஆண்டைப் பிரணவாகார விமானத்து அறிதுயிலமர்ந்த கருணைமாமுகிலைச் சேவித்து நின்றபோது அவ்விறைவன், இவரது பத்திக்குவந்து இவரைத் தன்னடியார்க்கு ஆட்படுத்தக்கருதி 12"நஞ்சட கோபனைப் பாடினையோ" என்று அருச்சகர் முகனாய்த் திருவுளம்பற்றித் தமிழ்மகளின் தவப்பேறனைய சடகோபரது பரமஞானபத்தியதிசயத்தை இவர் நெஞ்சிற்றேற்றுவித் தருளினான். அப்போதே இவர் அவ்வாழ்வாரது திருக்கோயின் முன்றிலிற் புக்குப் பணிந்து கிடந்தார்க்கு ஆழ்வாரது திருவருணோக்கம் உண்டாயிற்று. அந்நிலையிலெழுந்து ஆழ்வாரைப்போற்றி, 'வேதத்தின் முன்செல்க' என்றெடுத்துத் தேனெனப் பாலெனச் சில்லமிழ் தூற்றென ஒருநூறு செய்யுள் அந்தாதியாகப் பாடி ஆழ்வார்க்கடியராய்ச் சிறந்தனர். இதன்பின்னேதா னிராமாவதார வரங்கேற்றம் சிறப்பாக நிறைவேறியடென்ப. இவர் சடகோபரந்தாதிக்கண்,
"பாவைத் திருவாய் மொழிப்பழத் தைப் பசுங் கற்பகத்தின்
பூவைப் பொருகடற் போதா மமுதைப் பொருள் சுரக்குங்
கோவைப் பணித்தவெங் கோவையல் லாவென்னைக் குற்றங்கண்டென்
நாவைப் பறிப்பினு நல்லோரன் றோமற்றை நாவலரே."
எனப்பாடுதலால் இவர் இராமாவதாரம் அரங்கேற்றப் புக்கபோது திருவரங்கத்துள்ள பெருநாவலர்கள் இவர்க்கு ஆழ்வார் சம்பந்தமில்லாமை பற்றி இவர்பாற் பலகுற்றங் காணத் தலைப்பட்டனரெனவும் ஆழ்வாரைப்பாடியடியராயபின்னே தான் இவர் அவர்களால் அபிமானிக்கப்பட்டனரெனவும் கொள்ளத்தகும். இவர் ஆழ்வாரால் அருளப்பட்டனரென்பது,
இழைத்தா ரொருவரு மில்லா மறைகளை யின்றமிழாற்
குழைத்தார் குருகையிற் கூட்டங்கொண் டார்கும ரித்துறைவர்
மழைத்தார் தடக்கைக ளாலென்னை வானின்வரம் பிடைநின்
றழைத்தா ரறிவுந்தந் தாரங்கும் போயவர்க் காட்செய்வனே.
நாய்போற் பிறர்கடை தோறு நுழைந்தவ ரெச்சினச்சிப்
பேய்போற் றிரியும் பிறவியி னேனைப் பிறவியென்னும்
நோய்போ மருந்தென்னு நுன்றிருவாய்மொழி நோக்குவித்துத்
தாய்போ லுதவிசெய் தாய்க்கடி யேன்பண்டென் சாதித்ததே.
என இவர் பாடுதலான் நன்கறியலாகும். இவர் ஆழ்வாரது திருவாய்மொழியினை எவ்வளவாக மதித்தனரென்பது
பண்ணுந் தமிழுந் தவஞ்செய் தனபழ நான்மறையு
மண்ணும் விசும்புந் தவஞ்செய் தனமகிழ் மாறன்செய்யு
ளெண்ணுந் தகைமைக் குரியமெய் யோகியர் ஞானமென்னுங்
கண்ணும் மனமுஞ் செவியுந் தவஞ்செய்த காலத்திலே.
13உரிக்கின்ற கோடலி னுந்துகந் தம்மென வொன்றுமின்றி
விரிக்குந் தொறுவெறும் பாழாய் விடும்பிறர் புன்கவிமெய்
தெரிக்கின்ற கோச்சட கோபன்றன் றெய்வக் கவிபுவியிற்
சுரிக்கின்ற நுண்மணலூற்றொக்குந் தோண்டச் சுரத்தவினே.
என்னும் இவர் பாடல்களான் உணரப்படும்.
(இவ்வுவமை இராமாவதாரத்தும் வந்தது கண்டு கொள்க.)
தேவிற் சிறந்த திருமாற்குத் தக்கதெய் வக்கவிஞன்
பாவிற் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே
நாவிற் சிறந்தநம் மாறற்குத் தக்கநந் நாவலவன்
பூவிற் சிறந்தவாழ் வான்கம்ப நாட்டுப் புலமையனே.
என்னுஞ் சடகோபரந்தாதிப் பாயிரத்தான் அத்திருவரங்கத்துள்ள பெரியாரெல்லாம் இவரை நம்பெருமாளுக்கு உரியராகிய நம்மாழ்வார்போல, நம்மாழ்வார்க்குரியராகிய நந்நாவலரென்று 14உரிமையினுயர்த்தி அன்பு பாராட்டினாரென்பது தேறப்படும். நன்னாவலவன் என்றும் பாடமோதுவாருமுளர்.
இனிச் சில இராமாயண ஏடுகளில் விடைகொடுத்த படலத்ஹ்டின்பின் சில அரிய செய்யுட்கள் வரையப்பட்டுள்ளன. அவையாவன:
நாராயணாய நமவென்னு நன்னெஞ்சர்
பாராளும் பாதம் பணிந்தேத்து மாறறியேன்
காராரு மேனிக் கருணா கரமூர்த்திக்
காரா தனையென் னறியாமை யொன்றுமே.
பராவரு மிராமன் மாதோ டிளவல்பின் படரக்கான் போய்
விராதனைக் கரனை மானைக் கவந்தனை வென்றி கொண்டு
மராமரம் வாலி மார்பு துளைத்தணை வகுத்துப் பின்ன
ரிராவணன் குலனும் யொன்ற வெய்துட னயோத்தி வந்தான்.
வாள்வளஞ் சுரக்க நீதி மதுநெறி முறையெந் நாளுந்
தான்வளர்ந் திடுக நல்லோர் தங்கிளை தழைத்துவாழ்க
தேன்வளர்ந் தறாத மாலைத் தெசரத ராமன்செய்கை
யானளந் தறிந்த பாட லிடையறா தொளிர்க வெங்கும்.
ஆவின் கொடைச்சசர ராயிரத்து நூறொழித்துத்
தேவன் றிருவழுந்தூர் நன்னாட்டு-மூவலூர்ச்
சீரார் குணாதித்தன் சேயமையப் பாடினான்
காரார்கா குத்தன கதை.
தராதலத்தி னுள்ள தமிழ்க்குற்ற மெல்லா
மராவு மரமாயிற் றன்றே-யிராவணனை
யம்பினால் வீழ்த்தா னடிபணியு மாதித்தன்
கம்பனா டாள்வான் கவி.
ஆதவன் புதல்வன் முத்தி யறிவினை யளிக்கு மண்ணல்
போதவ னிராமகாதை புகன்றருள் புனிதன் மண்மேற்
கோதவஞ் சிறிது மில்லான் கொண்டன்மா றன்ளை யொப்பான்
மாதவன் கம்பன் செம்பொன் மலரடி தொழுது வாழ்வாம்
இம்பரு மும்பர் தாமுமேத்திய விராமகாதை
தம்பமா முத்தி சேர்தல் சத்தியஞ் சத்தியம்மே
யம்பரந் தன்னின் மேவு மாதித்தன் புதல்வன் ஞானக்
கம்பன்செங் கமல பாதங் கருத்துற விருத்துவாமே.
இவற்றுள்; முதன்மூன்றும் கம்பர் பாடியவாமெனத் தோற்றுகின்றது. மற்றை நான்கும் பிறர்பிறர் கூறியனவாகும்.
இறுதிச் செய்யுளில் 'ஆதித்தன் புதல்வன்' எனவருதலானும், அவ்வாதித்தன் என்னும் பெயரே மற்றையிரண்டு வெண்பாக்களிலும் பயிறலானும் கம்பர் தந்தையார்க்கு ஆதித்தன் என்பது தெரிகின்றது. இது பற்றியே "தராதலத்திலுள்ள" என்னும் பாட்டில் 'ஆதித்தன் கம்பன்' என வழங்கினர் என்று அறியப்படுகின்றது. இது சங்கரன் புதல்வனான சடையனைச் 'சங்கரன் சடையன்' என வழங்கியது போல்வது.
ஆதவன் என்பது ஆதித்தனென்பதற்குப் பிரதிநாமமாதலால், இவரை, "ஆதவன் புதல்வன்" எனவும் வழங்கினராவர்.15 'ஆவின்கொடை' என்னுஞ் செய்யுளில் "திருவழுந்தூர் நன்னாட்டு மூவலூர்ச் சீரார் குணாதித்தன்சேய்" என வருதலால், இவருடைய தந்தையார் திருவழுந்தூர் நாட்டு மூவலூரில் வசித்தவரெனத் தோன்றுவது. கம்பர் பிறந்தவூர் திருவழுந்தூர் என்பது நன்கு தெளியப்பட்டதாதலின் அவ்விரண்டூர்களிலும் இவர் தந்தையார் இருந்தனராவரெனக் கருதப்படுகின்றது. திருவழுந்தூரும், மூவலூரும் மிகவும் அண்மை ஊர்களென்பதும் உணர்க. மேற்காட்டிய வெண்பாக்களிரண்டும், இவர் இராமாவதாரமரங்கேற்றிய காலத்து ஆண்டிருந்து கேட்டோ ர் பாடியவாமெனக் கொள்ளத்தகும்.
இவர் சோழனுடன் கோபித்துக் கொண்டது.
கம்பர் சோழனுடன் கோபித்துக் கொண்டு மதுரைக்குப் போகும்போது சொல்லியது.
காத மிருபத்து நான்கொழியக் காசினியை
யோதக் கடல்கொண் டொளித்ததோ--மாதவா
கொல்லி மலையுடைய கொற்றவா நீமுனிந்தா
வில்லையோ எங்கட்கிடம். (தமிழ்நாவலர் சரிதை)
இச்செய்யுளானும் இதன்றலைக் குறிப்பானும் கம்பர் சோழனுடன் கோபித்துக் கொண்டமை உணரப்படும். இதன்கட் கம்பர் சோழனை நோக்கி "நீ முனிந்தால்" எனக் கூறுதலால், அவன் இவரை முதற்கண் முனிந்தனனென்பது அறியப்படுகின்றது. இவரைச் சோழன் முனிதற்குக்காரணம், இவர், பெருஞ்செல்வத்தினும், பெருங்கொடையினும், புலவரெல்லாம் ஒருங்குபாராட்டுஞ் சிறப்பினும் சோழனாற் பெரிதும் அழுக்காறு கொள்ளப்பட்ட வெண்ணைச் சடைய வள்ளலையே மீப்படமதித்து இராமாவதாரத்துப் புகழ்ந்து பாடியதேயாகும்.
சடையன், முடியுடையரசரும் அழுக்காறு கொள்ளும் வளப்பமும் வண்மையும் உடையனாயினான் என்பதற்குப் பல கதைகள் வழங்குவன. அவற்றுட் சிலவற்றை ஈண்டைக்கேற்றவாறு சுருக்கியுணர்த்துவேன். முன்னர் இவர் சோழனால் பெரிதும் பாராட்டப் பெற்றவராவர். (செந்தமிழ் தொகுதி 3 பக்கம் 8 பார்க்க.)
ஒருநாள் சடையவள்ளல் சோழனதவைக்களத்தே போந்து சிறக்கவீற்றிருந்தபோது, பெருங்குடி வணிகனொருவன், கடலிற்பட்ட அருவிலையுடைய பெருகொளிப்பருமுத்துகள் பலவற்றைக் கொணர்ந்து சோழன் திருமுன்னர் வைத்து, 'இவை முடியுடை வேந்தர்க்குத் தக்கன' என்று கூறாநிற்ப, அரசன் அவற்றைக் கண்டு மகிழ்ந்து புகழ்ந்தானாக, அதுகண்ட சடையவள்ளல் கழனிபடு வளத்தையே மேம்படுத்தேத்தி, அக்கழனிபடுமுத்தைக் போல இவை பெரியனவும் ஒள்ளியனவுமாகா' என்று சோழற்கு மாறுரைத்தனன்.
அதுகேட்ட சோழன் கழனியில் முத்துப்படுவது கேட்டறிவதன்றி யாம் கண்டறிவதில்லை என்ன, சடையவள்ளல் அது நுமக்கரிதாவதன்றி எமக்கன்று; நுமக்கு யான் அதுகாட்டுவேன் என்று, தமது கழனியிற் கமுகுபோலப் பருத்துவளர்ந்துள்ள கரும்புகளில் ஒரு சிலவற்றைக்கொணருவித்து, அவற்றுட் கோணிக் குறுகியதொரு கரும்பினை எடுத்து அதனொரு கண்ணை முறித்தனன். அதினின்று பல முத்துகள் தெறித்து வீழ்ந்து, அரசனது முடிமணியொளியினும் பேரொளி பரப்பின.
அப்போது சடையவள்ளல் தன் கழனிகளிலொன்றில் ஆயிரக்கணக்கான கரும்புகளில் ஒரு சிலவற்றானாயதொரு சிறுகட்டின்கணிருந்தவற்றில் ஒரு கோணற் சிறுகரும்பின் ஒரு கண்ணிலிருந்தன இவை என்றும், இங்ஙனமே தன்கழனிதோறும் உள்ளனவற்றையெண்ணிற் கணக்கிலவாமென்றும் அரசற்கு எடுத்துக் கூறினன். அதுகேட்டு, அரசவையிலிருந்த சான்றோரெல்லாம் 'சடையன் கழனிபடுவ கடல்படா' என்று புகழ்ந்தனர். கரும்பினின்று தெறித்த முத்துகளெல்லாம் ஒளியானும் பருமையானும், வணிகன் கொணர்ந்த கடல்படு முத்துகளையும் வென்று சிறத்தலை அரசன் கண்ணாரக்கண்டு, முகத்தான் வியந்து, அகத்தாற் சடையனது செல்வத்தில் அழுக்காறு கொண்டனன் என்ப.
இவ்வரியகதையே மேல் இணையார மார்பனைப் பாண்டியன் இவன் ஆரென்னும்போது கம்பர் பாடும் வெண்பாவிற் "கன்னன்மதயானைக் கண்டன்மகந்முன்னங் கணையாழி முத்துதிர்க்கும்" என்பதனாற் குறிக்கப்படுவதாகும். மதயானைக் கண்டன்மகன் முன்னங் கன்னலினின்று கணையாழி முத்தினை உதிர்க்கும் என உரைக்க. கணையாழிமுத்து-திரட்சியையுடைய கடல்முத்து.
பின், ஒருநாள் வடநாட்டு வணிகன் மற்றொருவன், முடிவேந்தர்க்கேற்ற நுண்ணிய தொழில் பலவியற்றிய பெருவிலைப் பட்டொன்று கொண்டு சோழன்பால் எய்திய போது, சோழன் அவ்வழகிய பட்டாடையைக் கண்டு அதனைப்பெறுதற்கு மனமுவந்து அதற்குரியவிலையை அவ்வணிகன் பால் வினாயினான். அதற்கு வணிகன் கூறிய விலைப் பொன்னளவு, தனது பெருநிதியறைக்கணுள்ள பொன்னளவினும் பன்மடங்கு அதிகமானது கண்டு, அரசன் அவ்வழகிய பட்டினைக் கொள்ளவியலாமல் மனம்வாடி, அவ்வணிகனைச் செலவிடுத்தனன், பின்பு, அவ்வணிகன், அரசனினும் சடையவள்ளலையே பெருஞ்செல்வனாக நாடுமுழுதும் புகழ்தலைக் கேட்டு வெண்ணெய்நல்லூரெய்தி அவ்வள்ளல் பால் அப்பெருவிலைப்பட்டைக் காட்டி நிகழ்ந்ததுரைக்க, அவ்வள்ளல் மகிழ்ந்து அதனைக் கொள்ளுதல் கருதி விலையினைச் சொல்லக்கேட்டு, இப்பட்டின் மென்மையையும் நுண்டொழிலையும் கருதுமிடத்து இவ்விலை மிகவுஞ் சிறியதேயாமென்று நினைந்து, தனது பெருநிதியறைக்கணிருந்து அதன் பெருவிலையை எளிதினல்கி அப்பட்டினை வாங்கிக்கொண்டு வணிகனைச் செலவிடுத்தனன். இதன் மேற் சோழன் ஒருநாள் சடையவள்ளலைக் கண்டு அளவளாவவேண்டித் தூதரை விடுத்தானுக்கு, அவ்வள்ளல் தனக்குத் துடையிற் புண்ணுண்டாயிருந்ததலால் இவ்வமயம் அரசவையெய்தற்கு இயலாதென்றும், அதுதீர்ந்து சிறிது குணப்பட்டவாறே ஆண்டுதான் எய்தலாகுமென்றும் ஓலை போக்கி, சின்னாளில் அப்புண் சிறிது தீர்ந்தவாறே, முன் வணிகன்பால் வாங்கிய பெருவிலைப்பட்டினை உடுத்துக் கொண்டு சோழன்பால் எய்தினான். சோழன், தன்னாலுங் கொள்ளற்கியலாத அப்பட்டைச் சடையனதரையிற்கண்டு வியப்பும் அழுக்காறும் மிக்கு முகத்தான் அளவளாவுதற்கிடையே 'துடையிற் புண் தீர்ந்து முழுதும் குணப்பட்டதில்லையே: இப்போது எவ்வளவிலுள்ளது; அதனையாள் காணவிரும்புவல்' என அன்புடன் மொழிந்தனனாக, அப்போது சடையன், உடுத்த ஆடையைத் திரைந்து நீக்கித் துடையைக் காட்டுதல் அரசர் மரியாதைக்குப் பொருந்தாதென்று கருதுத், தான் பெருவிலை கொடுத்துப் பெற்ற அப்பட்டாடையைப் புண்ணுள்ள இடத்துக்கு நேரே கையாற் கிழித்து அப்புண்ணளவிற் கட்டினான். அது கண்டு அரசன், எமக்கரியதாய்த் தன் செல்வமிகுதி தோன்றற்குக் காரணமான இப்பட்டாடையையும் இவன் ஒரு பொருளாகக் கருதினானில்லை; இவன் செல்வநிலையும் மனநிலையும் இருந்தவாறென்னே! என்று முன்னினும் அதிகமாக இவன்பால் அழுக்காறுகொண்டனன் என்பர். இவ்வரிய கதையே,
"... ... ... ஆறாத்
துடையிலெழுசிலந்தி தோற்றுவிக்கப்பட்டின்
புடைவை கிழித்த பெருங்கை"
எனத் திருக்கை வழக்கத்தினும்,
"விளைவாஞ் சிலந்தியை ஆடையைக் கீறி வெளியிலிட்டும்
வளமான கீர்த்திகொள் வேளாளர்"
எனப் பாண்டிமண்டல சதகத்திலும் பாராட்டப்பட்டிருத்தல் காண்க. தன்னால் விலைகொடுத்துக் கொள்ளற்கியலாததொன்றை இவன் கொண்டதனைத் தனக்கறிவிக்கவே, இவன் இப்பட்டுடுத்திப் போந்தானென்றும், தான் அதிகமாக மதித்துள்ள இவ்வரிய பட்டாடையையும் இவன் ஒரு பொருளாக மதியாமையைத் தனக்குணர்த்தவே இவ்வாறு கிழித்தனன் என்றும் சோழன் கருதிச் சடையன்பாற் செற்றங்கொண்டனனாவன். அன்றியும்,
"மரபுதங்கிய முறைமை பேணிய மன்னர்போகிலெனாகிலென்
.................................................
சங்கரன் றரு சடையனென்றொரு தருமதேவதை வாழவே"
எனச் சங்கரன் பாடல்பெறுதலாலும் இவன்பால் அரசன் அழுக்காறு கொண்டனனாவன். இது முற்காலத்துப் பாரியென்னும் வள்ளற்றலைவன்பால் தமிழ் மூவேந்தரும் அழுக்காறு கொண்டதனோடு ஒக்கும்.
இனி, வேறொரு வணிகன், பெரும்பொருள் செலவு செய்து நெடுங்காலஞ் சென்றாலும் தனது தூய்மையினும் நறுமணத்தினும் குறைவுறாத மேலான கலவைச்சாந்தை மிகுதியாக இயற்றி அதனை ஒரு வண்டியிலுய்த்துச் சோழன் பாலெய்தினானுக்கு, தக்க பொருள் கொடுத்து அந்நறுஞ் சாந்தினைப் பெறுதற்கியலாமல் அவ்வணிகனை அரசன் செலவிடுக்க, அவன் சடையன் பாற்சென்று நிகழ்ந்தது தெரிவிக்க, இவ்வாறு முடியுடையரசரும் பெறுதற்கியலாத இத்தகைப் பொருள்களெல்லாம் தன்பாலெய்தற்கு இவ்வளம்பெறு கழனியே காரணமென்றும், அஃதே இவற்றை அனுபவித்தற்குரியதென்றுங் கருதி, அச்சாந்து முழுதையும் சில கழன்களில் உழுதொளியுடன் கலக்கி அச்சாந்துக்குரிய விலைப் பொருளை அது கொணர்ந்த வணிகற்கு ஈந்து விடுத்தனன் எனவும், அதுகேட்டுச் சோழன் சடையன்பால் அழுக்காறுஞ்செற்றமுங் கொண்டனனெனவுஞ்சொல்லுவர்16.
பின்னொரு காலத்து, புலவர் பலர் பரிசில் பெறுதற்கு வெண்ணெய் நல்லூரையெய்திச் சடையனது வளமனைக்கண் வீற்றிருந்தாராக, அவ்வமயம் கழனிவெளியிற் சென்றிருந்த சடையவள்ளல் தம் மனைமுற்றத்தைச் சார்ந்த வளவில் ஆண்டு நெல் மிகுதியாகச் சிதறுண்டு கிடத்தலைக் கண்டு, மக்கட்கு உயிர்போலச் சிறந்த இந்நல்லுணவு இவ்வாறு பலர் காலிற்பட்டுப் போவதாகாதே என்னுங் கருத்துக் கொண்டு அவற்றைப் பொறுக்கி ஒருங்கு சேர்க்கத் தலைப்பட்டனன். ஆண்டுக் குழுமிய புலவரெல்லாரும் அவ்வள்ளலது திருவுளத்தினைத் தேறாமல், இவ்வாறு ஒவ்வொரு நெல்லையும் விடாமற் பொறுக்கிச் சேர்ப்போன் நமக்கெவ்வாறு பொருள் வழங்க வல்லான்! என்று தம்முள்ளே கூறியிழிந்தனர். அதனைக் குறிப்பானுணர்ந்த சடையவள்ளல் சிதறிய நெல்முழுதையும் பொறுக்கிச் சேர்த்துவிட்டுக் கூடிய புலவர்க்கெல்லாம் நல்வரவு கூறி அவர்கட்குணவளித்தர்கு விரைந்து அவர்களனைவரையும் வரிசைப்பட அமர்த்தி வைத்து உண்கலனமைத்தனன்.
பொன்னையே அமுதும் பொரிக்கறியுமாகப் படைத்து அவற்றை உண்டு பசிதீருமாறு வேண்ட, அவரெல்லாம் ஒன்றும் அறியாராய்த் திகைத்திருந்தவளவில், பொற்கறியும் பொன்னமுதும் உண்டற்காகாவாதலால் இவற்றையெடுத்து வெளியே எறிந்து விட்டு வேறுண்கலம்பரப்பி நெற்சோறளிக்க என ஆவினான். உடனே தொழிற்குரியார் அவ்வாறே புரியப், புலவர்கள், வயிறாரவுண்டு கைகழுவி வாய் பூசி வெளியிற் குப்பையிலெறியப்பட்ட பொன்களைத் தாம்தாம் விரைந்து பொறுக்கிக் கொள்ளப் புக்குழி, அவர்கள் ஒருவரோடொருவர் கலகம்பட்டுப் பூசன்மிகுத்து நின்றார்கள். அப்போது சடையவள்ளல் அங்கேபோந்து 'எச்சிற்கலத்துக்குப் பெரும்புலவர்கள் இவ்வாறு கலகமிடலாகாதே' என்று கூறி அவர்கட்கு வேண்டுவன நல்கி விடுத்தனன் என்ப. இவ்வரிய கதையினொருபகுதியே,
"பொன்னா லமுதும் பொரிக்கறியுந் தான்கொணர்ர்ந்து
நன்னா வலர்க்களித்த காணயக்கை"
எனத் திருக்கைவழக்கத்திற் பாராட்டப்பட்டிருப்பதாகும்.
இவ்வாறு முடியுடை வேந்தரும் அழுக்காறுகொள்ளும் வளப்பமும் வண்மையும் சடையவள்ளல் உடையனாய்ச் சிறந்தனனென்பதற்கு இயையக் கேட்கப்படுங் கதைகள் பலவாம். இத்துணையுங் கூறியவற்றாற், சோழன் சடையன்பால் அழுக்காறு கொண்டிருந்தனனென்பது ஒருதலையாம். அவ்வழுக்காறடியாகச் சடையற்க்குயிர்த் துணையாய்ச் சிறந்த கம்பர்பாலும் சோழற்கு வெறுப்புண்டாயிற்றென்பது பொருந்திற்றேயாம். பல்லாற்றானும் தன்னால் அழுக்காறு கொள்ளப்பட்ட சடையனுக்கே கம்பர் உயிர்த்துணையாய்ச் சிறந்து அவனையே மீப்படப்பாராட்டியதும், தமக்கு அரசர்க்கொத்த வரிசை பலவளித்துத் தம்மை மிகவுமுயர்த்திய தன்னை அவ்வாறு பாராட்டாமையுமே சோழன் இவரை முனிதற்குக் காரணமென்பது உணர்ந்து கொள்க. இஃதன்றி வேறு வேறு கூறுவாருமுளர். பின்னர் பாண்டிய மன்னரால் பெரிதும் ஆதரிக்கப் பெற்று மீண்டும் சோழ நாடு திரும்பினார்.
கம்பர் பின்னொருகாற் சோழனுடனேகோபித்துக் கொண்டபோது சொன்ன வெண்பா
மன்னவனு நீயெயோ மண்ணுலகு மிவ்வளவோ
வுன்னையோ யான்புகழ்த்திங் கோதுவ தென்னை
விருந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ சோழா
குரங்கேற்றுக் கொள்ளாதோ கொம்பு.
(தமிழ் நாவலர் சரிதை)
எனவரிதலானறியப்படுகின்றது. இவர் சோழனுடன் திரும்பவும் இவ்வாறு கோபித்துக்கொள்ளுதற்குக் காரணம் என்னையெனிற் கேறுவேன். கம்பருக்கு அம்பிகாபதி என்னும் பெயரிலோர் திருமகனாரிருந்தனர். அவரும் புலமையாற் சிறந்து அரசவையேத்த வாழ்கின்ற காலத்துச் சோழன்றிருமகள் அவரைக் காமிக்க அவரும் அவளை விழைந்து களவினொழுகுதலைச் சோழன் தெரிந்துகொண்டு அவரை ஒறுத்தற்க்குக் காலம் பார்த்திருந்தனன். அக்காலத்து அம்பிகாபதி பாடுவனவெல்லாம் சிற்றின்பம் பற்றியே வரிதலை அரசன் தேர்ந்து ஒருநாள் அவன் அவரை நோக்கி "நீவிர் இப்போதே ஒருநூறு செய்யுள் சிற்றின்பம்பற்றாது பேரின்பமே பற்றிப் பாட வல்லீரோ?" என வினாவ அவரும் "அங்ங்னம் பாட வல்லேன்" என்ன, அரசன் அந்நூறிலொன்றேனுஞ் சிற்றின்பங் கலந்ததாயின் தலையை வெட்டிவிடுவேனென அவரும் ஒட்டிய முறைதவறின் அவ்வாறே புரிக என்றுடன்பட்டுப் பாடிக்கொண்டிருந்தனர். இச்செய்தியைக் கேள்வியுற்ற சோழன்மகள் தன் ஆசைநாயகருக்கு ஏதேனும் இடையூறு நேருமோ என்று கவன்றிருந்தவள் சில்போது கழிந்தவாறே அம்பிகாபதியாரைக் காண்டல் வேட்கை மீதூர்ந்து மாளிகையின் மேனிலையினோர்புறத்தே மறைந்து நின்று தலையை மட்டும் வெளிக் கொண்டு அவரிருந்த அரசவையை நோக்குவாளாயினாள். அந்நிலையில் அம்பிகாபதியார் தொண்ணூற்றொன்பது கவியும் பேரின்பமாகப் பாடியவர் ஊழ்வினை சூழ்தலான் அம்மறைந்து நோக்கிய சோழன்மகள் தலையினைத் தாம் முற்படக்கண்டு மயங்கி நூறாஞ் செய்யுளொன்றைச் 'சற்றே பருத்த தனமே குலுங்க' என்றெடுத்துச் சிற்றின்பமாகப் பாடி முடித்தனர். அப்போதே சோழன் ஒட்டியநெறி பிழைத்தீரென்று அம்பிகாபதியார்க்கு உரைத்து அவர் தலையினை வாளாலெறிந்தனன். இந்நிகழ்ந்தவெலாம் கம்பர் கேட்டு விரைந்து போந்து வெட்டுண்டு கிடக்கும் மகனுடலைக் கண்டு ஆறாத்துயருடையராய்,
மட்டுப் படாக்கொங்கை மானார் கலவி மயக்கத்திலே
கட்டுப்பட்டாயென்ன காதல்பெற் றாய்மதன்கையம்பினாற்
பட்டுப்பட்டாயினுந் தேறுவையோவென்று பார்த்திருந்தேன்
வெட்டுப்பட் டாய்மக னேதலை நாளின் விதிபடியே.
என்னுஞ் செய்யுளைக் கூறித் தம்மகனார்க்குச் செய்வன செய்திருந்தனர் என்ப. இங்ஙனந் தம்மருமை மகனாரை அரசன் கொன்றதே கம்பர் திரும்பவும் அவனுடன் கோபித்தற்குத் தலையாய காரணமாகும்.
இனி, கம்பர் வம்மிசத்தினர்க்குள் ஓர் அரிய கதை வழங்குகின்றது. அஃதாவது; - கம்பருக்குக் காவேரி என்னும் பெயரில் ஓர் அழகுடைத் திருமகள் இருந்தனள். அவளைச் சோழன்மகன் முறை தவறி விரும்பி அவளைத் தான் எய்தற்குப் பல்லாற்றானும் முயன்றனன். இது தெரிந்த அத்திருமகள் உயிரினும் பன்மடங்கு சிறந்த கற்பினையழித்துப் பழிமலைந்து வாழ்தலினும், அவ்வுயிரையிழந்து புகழெய்தலே சீரிதாமெனத் தேர்ந்து, கம்பர் திருமனையின்முற்றத்தொருபுறத்துக் கம்புநிறையப் பெய்திட்ட மிகவும் ஆழமான பெரியதோர் கம்பங்குழி நடுவில் ஒருநள்ளிரவில் தனியே இறங்கி மூழ்கிமாய்ந்தனள். [கம்பு என்னுந்தானியத்தை ஒரு பெருங்குழி நிறையப் பெய்து அதன்மேல் ஓர் திண்னியபொருளையிட்டால் அக்கம்பு எளிதிலிடம் விட்டுக் கொடுத்தலால், அப்பொருள் விரைந்து உள்ளே புக்கு மூழ்கலுறும்] இங்ஙனம் தம்மருமைமகள் மாய்ந்தவகையினைக் கம்பர் ஆராய்ந்தறிந்து ஆற்றொணா இடரில் மூழ்கினவராகி, 'இஃது அரசன் முறை தவறியதனானே எய்தியது' என்று தெரிந்தபோது அரசனை முனிந்தனர் என்பதேயாம். இப்போதும் இவர் வம்மிசத்தினர் மேற்காட்டிய காவேரி என்னுங் கற்புடையாட்டியைத் தங்கள்வீட்டுத் தெய்வமாகக் கொண்டு அவளது திருவுருவத்தை வழிபட்டு வருகின்றனர். இதுவும் கபர் சோழனை முனிதற்குத் தக்க பெருங்காரணமாம். இக்கதைகளில் உண்மை எவ்வளவோ! எனினும் கவிநயம் கருதி எழுதப் பெற்றது.
கம்பர் குறித்த தமிழ்ப்பெருமை
இக்காலத்துத் தமிழாராய்வாருட் சிலர் தமிழை வடமொழியினின்று திரிந்த மரூஉ மொழியெனவும் சிலர் அவ்வாறு திரியாத் தனிமொழியெனவும் க்க்றுவர். வேறுசிலர் தமிழ் என்னும் பெயரே திரமிளம் என்பதன்றிரிபு எனவுரைப்பர். பின்னர் சிலர் அப்பெயர் தமி என்பதனடியாய்ப் பிறந்ததென்பர்; சிலர் தமிழ் என்பது இனிமையென்னும் பொருட்டாதலின் அதுபற்றி அப்பெயர் எய்திற்றென்பர்.சிலர் தமிழ்மொழி சிவபிரான் பாற்றோன்றியதெனவுரைப்பர்; சிலர் தமிழ்மொழி என்றுமுள்ளதெனவுரைத்து அதனிலக்கணமே சிவபிரானரிளினர் என்பர்; சிலர் அகத்தியர் அவலோகிதன்பாற்றமிழ் கேட்டார் என்பர்; சிலர் சிவபிரான்பால் கேட்டனர் என்பர். சிலர் அகத்தியர் தமிழிலக்கணமே செய்திலர் என்பர். சிலர் தமிழ் வடவெல்லையாகிய வேங்கடத்தைக் குமரக்கடவுள் வரைப்பு என்பர். சிலர் அதனை நிலங்கடந்த நெடுமுடியண்ணலதென்பர். சிலர் பாண்டிய நாட்டைச் செந்தமிழ்நாடென்பர். சிலர் சோணாட்டை அங்ஙனம் கூறுவர்.
சிலர் செந்தமிழ்ப் புலவர் பலர் ஒருங்கு குழுமி ஆராய்ந்த சங்கமென்பது முன்னில்லையென்பர். இவ்வாறு தமிழின் பெருமை வரலாறு முதலியன பற்றிக் கேட்கப்படுவன வேறு வேறு மிகப் பலவாம். இன்னோரன்ன பலவற்றைப்பற்றி இற்ற