தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamils - a Trans State Nation > Culture & the Tamil Contribution to World Civilisation >  Spirituality & the Tamil Nation > Saiva Mystics > The Twelve Thirumurai  > Mannikkavasagar's Thiruvasagam & tirukkOvaiyAr >1. சிவபுராணம் > 2. கீர்த்தித் திரு அகவல் > 3. திருவண்டப் பகுதி > 4. போற்றித் திருஅகவல் > 5. திருச்சதகம் > 6. நீத்தல் விண்ணப்பம் > 7. திருவெம்பாவை > 8. திரு அம்மானை > 9. திருப்பொற் சுண்ணம் > 10. திருக்கோத்தும்பி > Hymns 11-51 > திருக்கோவையார்

Mannikkavasagar's tirukkOvaiyAr
(aka as tirucciRRampalakkOvaiyAr)

மாணிக்க வாசகர் அருளிய திருக்கோவையார்
(திருச்சிற்றம்பலக் கோவையார்) கட்டளைக் கலித்துறை யாப்பு

[also in pdf  - see also On Line Tamil Explanation]


Etext Preparation (input, proof-reading): K. Kalyanasundaram, Lausanne, Switzerland Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai 1999-2000 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


விநாயகர் வணக்கம்
எண்ணிறைந்த திங்கள் எழுகோ புரந்திகழக்
கண்ணிறைந்து நின்றருளும்/கற்பகமே - நண்ணியசீர்த்
தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற
நானூறும் என்மனத்தே நல்கு 1

நூற்சிறப்பு
ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின்
காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்;
ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்;
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே. 2

களவியல் (1 முதல் 18 அதிகாரங்கள்)

முதல் அதிகாரம்
1. இயற்கைப் புணர்ச்சி

1. காட்சி
திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண்டு ஓங்குதெய்வ
மருவளர் மாலையர் வல்லியின் ஒல்கி அனநடை வாய்ந்து
உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்று ஒளிர்கின்றதே. .. 1
கொளு
மதிவாணுதல் வளர்வஞ்சியைக்
கதிர் வேலவன் கண்ணுற்றது

2. ஐயம்
போதா விசும்போ புனலோ பணிக ளதுபதியோ
யாதோ அறிகுவ(து) ஏதும் அரிதி யமன்விடுத்த
தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோஎன நின்றவர் வாழ்பதியே. .. 2
கொளு
தெரியஅரியதோர் தெய்வமன்ன
அருவரைநாடன் ஐயுற்றது.

3. தெளிதல்
பாயும் விடையரன் தில்லையன் னாள்படைக் கண்ணிமைக்கும்
தோயும் நிலத்தடி தூமலர் வாடும் துயரமெய்தி
ஆயும் மனனே அணங்கல்லள் அம்மா முலைசுமந்து
தேயும் மருங்குல் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே. .. 3
கொளு
அணங்கல்லள்என்(று) அயில்வேலவன்
குணங்களை நோக்கிக் குறித்துரைத்தது.

4. நயப்பு
அகல்கின்ற அல்குல் தடமது கொங்கை அவைஅலம்நீ
புகல்கின்ற(து) என்னைநெஞ்(சு) உண்டே இடைஅடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லில்செற் றோன்தில்லை ஈசன்எம் மான்எதிர்த்த
பகல்குன்றப் பல்உகுத் தோன்பழ னம்அன்ன பல்வளைக்கே. .. 4
கொளு
வண்டமர் புரிகுழல் ஒண்டொடி மடந்தையை
நயந்த அண்ணல் வியந்துள் ளியது.

5. உட்கோள்
அணியும் அமிழ்தும்என் ஆவியம் ஆயவன் தில்லைச்சிந்தா
மணிஉம்ப ரார்அறி யாமறை யோன்அடி வாழ்த்தலரின்
பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குல்பெருந் தோளி படைக்கண்களே. .. 5
கொளு
இறைதிருக் கரத்து மறிமான் நோக்கி
உள்ளக்கருத்து வள்ளல் அறிந்தது.

6. தெய்வத்தை மகிழ்தல்
வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கிஇக் கொண்டைஅங் கண்ணியைக் கொண்டுதந்த
விளைவயல் வால்விய வேன்நய வேன்தெய்வம் மிக்கனவே. .. 6
கொளு
அன்ன மென்னடை அரிவையைத் தந்த
மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்து ரைத்தது.

7. புணர்ச்சி துணிதல்
ஏழுடை யான்பொழில் எட்டுடை யான்புயம் என்னைமுன்ஆள்
ஊழுடை யான்புலி யூர்அன்ன பொன்இவ் உயிர்பொழில் ஆகச்
சூழுடை ஆயத்தை நீக்கும் விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணம் காண்அணங்(கு) ஆய்வந்(து) அகப்பட்டதே. .. 7
கொளு
கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைப் பேதையைத்
தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது.

8. கல்வியுரைத்தல்
சொற்பால் அழுதிவள் யான்சுவை என்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று நானிவ ளாம்பகுதிப்
பொற்பார் அறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பில்
கற்பா வியவரை வாய்க்கடி(து) ஓட்ட களவகத்தே. .. 8
கொளு
கொலைவேலவன் கொடியிடையடு
கலவியன்பம் கட்டுரைத்தது

9. இருவயின் ஒத்தல்
உணர்ந்தார்க்(கு) உணர்வரி யோன்தில்லைச் சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தால் புணரும் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாள் அல்குல் போல வளர்கின்றதே. . . 9
கொளு
ஆராஇன்பத்து அன்புமீதூர
வாரார்முல்லை மகிழ்ந்துரைத்தது.

10. கிளவி வேட்டல்
அளவியை யார்க்கும் அறி(வு )அரி யோன்தில்லை அம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாள்தடங் கண்நுதல் மாமதியின்
பிள(வு)இயல் மின்இடை பேரமை தோளிது பெற்றியென்றால்
கிளவியை யென்றோ இனிக்கிள்ளை யார்வாயிற் கேட்கின்றதே. .. 10
கொளு
அன்னம்அன்னவள் அவயவம் கண்டு
மென்மொழி கேட்க விருப்புற்றது.

11. நலம் புனைந்துரைத்தல்
கூம்பலங் கைத்தலத்து அன்பர்என்(பு) ஊடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்தில்லை அம்பலம் பாடலரின்
தேம்பலம் சிற்றிடை ஈங்கிவள் தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி காள்நும் அகன்பணையே. .. 11
கொளு
பொங்கிழையைப் புனைநலம் புகழ்ந்(து)
அங்கதிர்வேலோன் அயர்வுநீங்கியது.

12. பிரிவுணர்த்தல்
சிந்தா மணிதெள் கடல்அமிர் தம்தில்லை யான்அருளால்
வந்தால் இகழப் படுமே மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை யான் அகன்(று) ஆற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோஎன்னை வாட்டம் திருத்துவதே. .. 12
கொளு
பணிவரல்அல்குலைப் பயிர்ப்புறுத்திப்
பிணிமலர்த் தாரோன் பிரிவுணர்த்தியது.

13. பருவரல் அறிதல்
கோங்கின் பொலிஅரும்(பு) ஏய்கொங்கை பங்கன் குறுகலர்ஊர்
தீங்கில் புகச்செற்ற கொற்றவன் சிற்றம் பலம் அனையாள்
நீங்கின் புணர்(வு)அரி(து) என்றோ நெடி(து)இங்ங னேயிருந்தால்
ஆங்குஇற் பழியாம் எனவோ அறியேன் அயர்கின்றதே. .. 13
கொளு
பிரிவுணர்ந்த பெண்கொடி தன்
பருவரலின் பரிசு நினைந்தது.

14. அருட்குணம் உரைத்தல்
தேவரில் பெற்றநம் செல்வக் கடிவடி வால்திருவே
யாவரின் பெற்றினி யார்சிதைப் பார்இமை யாதமுக்கண்
மூவரின் பெற்றவர் சிற்றம் பலம்அணி மொய்பொழில்வாய்ப்
பூஅரில் பெற்ற குழலிஎன் வாடிப் புலம்புவதே. .. 14
கொளு
கூட்டிய தெய்வத் தின்அ ருட்குணம்
வாட்டம் இன்மை வள்ளல் உரைத்தது.

15. இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல்
வருங்குன்றம் ஒன்றுரித் தோன்தில்லை அம்பல வன்மலயத்(து)
இருங்குன்ற வாணர் இளங்கொடி யேஇடர் எய்தல்எம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் களங்குழையே. .. 15
கொளு
மடவரலை வற்புறுத்தி
இடமணித்துஎன்று அவன்இயம்பியது.

16. ஆடு இடத்து உய்த்தல்
தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தம், திங்களின்வாய்ந்(து)
அளிவளர் வல்லிஅன் னாய் முன்னி யாடுபின் யான்அளவா
ஒளிவளர் தில்லை ஒருவன் கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரல் கரந்துங்ங னேவந்து தோன்றுவனே. .. 16
கொளு
வன்புறையின் வற்புறுத்தி
அன்புறு மொழியை அருகு அகன்றது.

17. அருமை அறிதல்
புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல் லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ(து) அணிசூழல் ஏழைதன் நீர்மைஇந் நீர்மையென்றால்
புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே. .. 17
கொளு
கற்றமும் இடனும் சூழலும் நோக்கி
மற்றவன் அருமை மன்னன் அறிந்தது.

18. பாங்கியை அறிதல்
உயிரொன்(று) உளமும்ஒன்(று) ஒன்றே சிறப்(பு)இவட்(கு) என்னோடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிர்ஒன்று முப்புரம் செற்றவன் தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்தன் அருளென லாகும் பணிமொழிக்கே. .. 18
கொளு
கடல்புரை ஆயத்துக் காதல் தோழியை
மடவரல் காட்ட மன்னன் அறிந்தது.

இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று
-------

இரண்டாம் அதிகாரம்
2. பாற்கற் கூட்டம்

1. பாங்கனை நினைதல்
பூங்கனை யார்புனல் தென்புலி யூர்புரிந்(து) அம்பலத்துள்
ஆங்கெனை யாண்டுகொண் டாடும் பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யான்அன்ன பண்பனைக் கண்(டு)இப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை எய்துதற்கே. 19
கொளு
எய்துதற்(கு) அருமை ஏழையில் தோன்றப்
பையுள் உற்றவன் பாங்கனை நினைந்தது.

2. பாங்கன் வினாதல்
சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளம்
உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந்(து) எய்தியதே. 20
கொளு
கலிகெழு திரள்தோள் மெலிவது கண்ட
இன்னுயிர்ப் பாங்கன் மன்னனை வினாயது.

3. உற்றது உரைத்தல்
கோம்பிக்(கு) ஒதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரம் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்(து) ஆங்(கு)அப் பணைமுலைக்கே
தேம்பல் துடியிடை மான்மட நோக்கிதில் லைச் சிவன்தாள்
ஆம்பொன் தடமலர் சூடும்என் ஆற்றல் அகற்றியதே. .. 21
கொளு
மற்றவன் வினவ, உற்றது உரைத்தது.

4. கழறியுரைத்தல்
உளமாம் வகைநம்மை உய்யவந்(து) ஆண்டுசென்(று) உம்பர்உய்யக்
களமாம் விடம்அமிர்(து) ஆக்கிய தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றோர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம் அண்ணல் இரங்கியதே. .. 22
கொளு
வெற்பனத்தன் மெய்ப்பதங்கன்
கற்பனையில் கழறியது.

5. கழற்றெதிர் மறுத்தல்
சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் தில்லைச்சிற்றம் பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை ஒவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை மென்தோள் கரும்பினையே. .. 23
கொளு
ஆங்குயி ரன்ன பாங்கன் கழற
வளந்தரு வெற்பன் உளந்தளர்ந்து உரைத்தது.

6 கவன்றுரைத்தல்
விலங்கலைக் கால்கொண்டு மேன்மேல் இடவிண்ணும் மண்ணும் முந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுகலங் காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற்றம்பலத் தான்அருள் இல்லவர்போல்
தலங்கலைச் சென்றிதென் னோவள்ளல் உள்ளம் துயர்கின்றதே. .. 24
கொளு
கொலைகளிற் றண்ணல் குறைநயந்(து) உரைப்பக்
கலக்கங்செய் பாங்கன் கவன்(று) உரைத்தது.

7. வலியழிவுரைத்தல்
தலைப்படு சால்பினுக் கும்தள ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வார்இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யால்அழி வுற்று மயங்கினனே. .. 25
கொளு
நிறைபொறை தேற்றம் நீதியடு சால்பு
மறியறு நோக்கிற்கு வாடினேன் என்றது.

8. விதியடு வெறுத்தல்
நல்வினை யும்நயம் தந்தின்று வந்து நடுங்குமின்மேல்
கொல்வினை வல்லன கோங்கரும் பாம்என்று பாங்கன் சொல்ல
வல்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கித்
தொல்வினை யால்துய ரும்என(து) ஆருயிர் துப்புறவே. .. 26
கொளு
கல்விமிகு பாங்கன் கழற வெள்கிச்
செல்வமிகு சிலம்பன் தெரிந்து செப்பியது.

9. பாங்கன் நொந்துரைத்தல்
ஆலத்தி னால்அமிர்(து) ஆக்கிய கோன்தில்லை அம்பலம்போல்
கோலத்தி னாள்பொருட் டாக அமிர்தம் குணங்கெடினும்
காலத்தி னால்மழை மாறினும் மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா(து) ஒழிவதென் தீவினையே. .. 27
கொளு
இன்னுயிர்ப் பாங்கன் ஏழையைச் சுட்டி
நின்னது நன்மை நினைந்திலை என்றது.

10. இயல் இடங்கேட்டல்
நின்னுடை நீர்மையும் நீயும்இவ் வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி(து) என்னென்ப தேதில்லை யேர்கொள்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல ரோவிகம் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே. .. 28
கொளு
கழுமலம் எய்திய காதல் தோழன்
செழுமலை நாடனைத் தெரிந்து வினாயது.

11. இயலிடங் கூறல்
விழியால் பிணையாம் விளங்கிய லான்மயி லாம்மிழற்று
மொழியால் கிளியாம் முதுவா னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழல்தில்லைக் கூத்தன் கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்(கு)எழி லாம்எங் குலதெய்வமே. .. 29
கொளு
அழுங்கல் எய்திய ஆருயிர்ப் பாங்கற்குச்
செழுங்கதிர் வேலோன் தெரிந்து செப்பியது.

12. வற்புறுத்தல்
குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பில்பைம் பூம்புனம் காக்கும் கருங்கண்செவ்வாய்
மயிலைச் சிலம்புகண்(டு) யான்போய் வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பனிக்கறையே. .. 34
கொளு
பெயர்ந்துரைத்த பெருவரை நாடனை
வயங்கெழு புகழோன் வற்புறுத்தியது.

13. குறிவழிச் சேறல்
கொடுங்கால் குலவரை ஏழ்ஏழ் பொழில்எழில் குன்றும்அன்றும்
நடுங்கா தவனை நடுங்க நுடங்கு நடுவுடைய
விடங்கால் அயிற்கண்ணி மேவுங்கொ லாம்தில்லை ஈசன் வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில் நீழலம் தண்புனத்தே. . 35
கொளு
அறைகழல் அண்ணல் அருளின வழியே
நிறையுடைப் பாங்கன் நினைவொடு சென்றது.

14. குறிவழிக்காண்டல்
வடிக்கண் இவைவஞ்சி அஞ்சும் இடைஇது வாய்பவளம்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி சேயான் தொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமலர் அண்ணல்விண் ணோர்வணங்(கு) அம்பலம்போல்
படிச்சந் தமும்இது வேஇவ ளேஅப் பணிமொழியே. .. 36
கொளு
குளிர்வரை நாடன் குறிவழிச் சென்று
தளிர்புரை மெல்லடித் தையாலக் கண்டது.

15. தலைவனை வியந்துரைத்தல்
குவளைக்களத்(து)அம் பலவன் குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்(று) ஆண்ட அவயவத்தின்
இவளைக்கண்(டு) இங்குநின்(று) அங்குவந்(து) அத்துனை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி யான்இக் கடலிடத்தே. .. 37
கொளு
நயந்த உருவம் நலனும் கண்டு
வியந்த வனையே மிகுத்துரைத்தது.

16 கண்டமை கூறல்
பணந்தாழ் அரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங்(கு) அகன்ற பொருகரி யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேல்கண் டேன்ஒன்று நின்றதுவே. .. 38
கொளு
பிடிமிசை வைத்துப் பேதையது நிலைமை
அடுதிறல் அண்ணற்கு அறிய உரைத்தது.

17. செவ்வி செப்பல்
கயலுள வேகம லத்தவர் மீது கனிபவளத்(து)
அயலுள வேமுத்தம் ஒத்த நிரைஅரன் அம்பலத்தின்
இயலுள வேபிணைச் செப்புவெற் பாநின(து) ஈர்ங்கொடிமேல்
புயலுள வேமலர் சூழ்ந்திருள் தூங்கிப் புரள்வனவே. .. 37
கொளு
அற்புதன் கைலை மற்பொலி சிலம்பற்கு
அவ்வுரு கண்டவன் செவ்வி செப்பியது.

18. அவ்விடத்து ஏகல்
எயிற்குலம் முன்(று)இரும் தீஎய்த எய்தவன் தில்லையத்துக்
குயிற்குலம் கொண்டுதொண் டைக்கனி வாய்க்குளிர் முத்தம்நிரைத்(து)
அயிற்குல வேல்கம லத்திற் கிடத்தி அனம்நடக்கும்
மயிற்குலம் கண்டதுண் டேல்அது என்னுடை மன்னுயிரே. .. 36
கொளு
அரிவையது நிலைமை அறிந்தவன் உரைப்ப
எரிகதிர் வேலோன் ஏகியது

19. மின்னிடை மெலிதல்
ஆவியன் னாய்கவ லேல்அக லேம்என்(று) அளித்தொளித்த
ஆவியன் னார்மிக் கவாயின ராய்க்கெழு மற்(கு)அழிவுற்(று)
ஆவியன் னார்மன்னி ஆடிடம் சேர்வர்கொல் அம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி லாயத்(து) அருவரையே. .. 37
கொளு
மன்னனை நினைந்து மின்னிடை மெலிந்தது.

20. பொழில்கண்டு மகிழ்தல்
காம்பிணை யால்களி மாமயி லால்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி ஒல்குத லான்மன்னும் அம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமும்
தேம்பிணை வார்குழ லாளெனத் தோன்றும்என் சிந்தனைக்கே. .. 38
கொளு
மணங்கமழ் பொழிலின் வடிவுகண்(டு)
அணங்கென நினைந்(து) அயர்வு நீங்கியது.

21. உயிரென வியத்தல்
நேயத்த தாய்நென்னல் என்னைப் புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
ஆயத்த தாய் அமிழ் தாய்அணங் காய்அரன் அம்பலம்போல்
தேயத்த தாய்என்றன் சிந்தைய தாய்த்தெரி யிற்பெரிது
மாயத்த தாகி இதோவந்து நின்ற(து)என் மன்னுயிரே. .. 39
கொளு
வெறியறு பொழிலின் வியன்பொ தும்பரின்
நெறியறு குழலி நிலைமை கண்டது.

22. தளர்வு அகன்று உரைத்தல்
தாதிவர் போதுகொய் யார்தைய லார்அங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந்(து) அடியார் கனைப்புனல் ஆடல்செய்யார்
போதிவர் கற்பக நாடுபுல் வென்னத்தம் பொன்அடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத் தான்மலை எய்துதற்கே. .. 40
கொளு
பனிமதி நுதலியைப் பைம்பொ ழிலிடைத்
தனிநிலை கண்டு தளர்வகன்(று) உரைத்தது.

23. மொழிபெற வருந்தல்
காவிநின்(று) ஏர்தரு கண்டர்வண் தில்லைக்கண் ணார்கமலத்
தேவிஎன் றேஐயம் சென்ற(து)அன் றேஅறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடின்என்
ஆவியன் றேஅமிழ் தேஅணங் கேஇன்(று) அழிகின்றதே. .. 41
கொளு
கூடற்(கு) அரிதென வாடி யுரைத்தது.

24. நாணிக் கண் புதைத்தல்
அகலிடம் தாவிய வானோன் அறிந்திறைஞ்(சு) அம்பலத்தின்
இகலிடம் தாவிடை ஈசன் தொழாரின்இன் னற்கிடமாய்
உகலிடம் தான்சென்(று) எனதுயிர் நையா வகையதுங்கப்
புகலிடம் தாபொழில் வாய்எழில் வாய்தரு பூங்கொடியே. .. 42
கொளு
ஆயிடைத் தனிநின்(று) ஆற்றா(து) அழிந்து
வேயுடைத் தோளியோர் மென்கொடி மறைந்தது.

25. கண் புதைக்க வருந்தல்
தாழச்செய் தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தான்அம் பலங்கை தொழாரின்உள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண் புதைத்துப்பொன் னேஎன்னைநீ
வாழச்செய் தாய்கற்று முற்றும் புதைநின்னை வாணுதலே. .. 43
கொளு
வேல்தருங் கண்ணினை மிளிர்வன அன்றுநின்
கூற்றரு மேனியே கூற்றெனக்(கு) என்றது.

26. நாண்விட வருந்தல்
குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன்(று)
ஒருநாள் பிரியா(து) உயிரின் பழகி யுடன்வளர்ந்த
அருநாண் அளிய அழல்சேர் மெழுகொத்(து) அழிகின்றதே. .. 44
கொளு
ஆங்ங னம்கண்(டு) ஆற்றா ளாகி
நீங்கன நாணொடு நேரிழை நின்றது.

27. மருங்கணைதல்
கோலத் தனிக்கொம்பர் உம்பர்புக்(கு) அ·தே குறைப்பவர்தம்
சீலத் தன்கொங்கை தேற்றகி லேம்சிவன் தில்லையன்னாள்
நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண் தேன்நசையால்
சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே. .. 45
கொளு
ஒளிதிகழ் வார்குழல் அளிகுலம் விலக்கிக்
கருங்களிற் றண்ணல் மருங்க ணைந்தது.

28. இன்றியமையாமை கூறல்
நீங்கரும் பொற்கழல் சிற்றம் பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமும் எய்தினும் யான்மறவேன்
தீங்ரும் பும்அமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்துசெப்பும்
கோங்கரும் பும்தொலைத்(து) என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே. 46
கொளு
வென்றி வேலவன் மெல்லி யல்தனக்(கு)
இன்றியமை யாமை எடுத்து ரைத்தது.

29. ஆயத்து உய்த்தல்
சூளா மணியும்பர்க்(கு) ஆயவன் சூழ்பொழில் தில்லையன்னாய்க்(கு)
ஆளா ஒழிந்ததென் ஆருயிர் ஆரமிழ் தேஅணங்கே
தோளா மணியே பிணையே பலசொல்லி என்னைதுன்னும்
நாளார் மலர்பொழில் வாய்எழில் ஆயம் நணுகுகவே. .. 47
கொளு
தேங்கமழ் சிலம்பன் பாங்கிற் கூட்டியது. 29

30. நின்று வருந்தல்
பொய்யுடை யார்க்(கு)அரன் போல்அக லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப் பூண்முலை வாணுதல்வான்
பையுரை வாளர வத்(து) அல்குல் காக்கும்பைம் பூம்புனமே. 48
கொளு
பாங்கிற் கூட்டிப் பதிவயின் பெயர்வோன்
நீங்கற்(கு) அருமை நின் று நினைந்தது.
------------

மூன்றாம் அதிகாரம்
3. இடந்தலைப் பாடு

நூற்பா
பொழிலிடைச் சேறல் இடந்தலை சொன்ன
வழியடு கூட்டி வருந்திசி னோரே.

1. பொழிலிடைச் சேறல்
என்னறி வால்வந்த(து) அன்றிது முன்னும்இன் னும் முயன்றால்
மன்னெறி தந்த(து) இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே
மின்எறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்தோய் பொழிலிடத்தே. .. 49
கொளு
ஐயரிக் கண்ணியை ஆடிடத் தேசென்(று)
எய்துவன் எனநினைந்(து) ஏந்தல் சென்றது.
-----------

நான்காம் அதிகாரம்
4. மதியுடம்படுத்தல்

பேரின்பக் கிளவி
மதியுடன் படுத்தல் வரும்ஈ ரைந்தும்
குருஅறி வித்த திருவருள் அதனைச்
சிவத்துடன் கலந்து தெரிசனம் புரிதல்.

1. பாங்கிடைச் சேறல்
எளிதன்(று) இனிக்கனி வாய்வல்லி புல்லல் எழில்மதிக்கீற்(று)
ஒளிசென்ற செஞ்சடைக் கூத்தப் பிரானைஉன் னாரின்என்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த செல்லல்எல் லாம்தெளிவித்து
அளிசென்ற பூங்குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே. .. 50
கொளு
கரந்துறை கிளவியின் காதல் தோழியை
இரந்துகுறை உறுவல்என்(று) ஏந்தல் சென்றது. 1

2. குறையுறத் துணிதல்
குவளைக் கருங்கண் கொடியேர் இடையிக் கொடிக்கடைக்கண்
உவளைத் தனதுயிர் என்றது தன்னோ(டு) உவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தான் அருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின் னேயினிச் சொல்லுவனே. .. 51
கொளு
ஓரிடத்தவரை ஒருங்கு கண்டுதன்
பேரிடர் பெருந்தகை பேசத் துணிந்தது.

3. வேழம் வினாதல்
இருங்களி யாய்இன்(று) யான்சிறு மாப்பஇன் பம்பணிவோர்
மருங்(கு)அளி யாஅனல் ஆடவல் லோன்தில்லை யான்மலையீங்(கு)
ஒருங்(கு)அளி யார்ப்ப உமிழ்மும் மதத்(து)இரு கோட்(டு)ஒருநீள்
கருக்களி யார்மத யானையுண் டோவரக் கண்டதுவே. .. 52
கொளு
ஏழையர் இருவரும் இருந்த செவ்வியுள்
வேழம் வினாஅய் வெற்பன் சென்றது.

4. கலைமான் வினாதல்
கருங்கண் ணனையறி யாமைநின் றோன்தில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கள் நனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர்
இருங்கண் அனைய கணைபொரு புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் அனையதுண் டோவந்த(து) ஈங்கொரு வான்கலையே. .. 53
கொளு
சிலைமான் அண்ணல் கலைமான் வினாயது.

5. வழி வினாதல்
சிலம்பணி கொண்டசேர் சீறடி பங்கன்தன் சீரடியார்
குலம்பணி கொள்ள எனைக்கொடுத் தோன்கொண்டு தான்அணியும்
கலம்பணி கொண்டிடம் அம்பலம் கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும் சீறூர்க்(கு) உரைமின்கள் செல்நெறியே. .. 54
கொளு
கலைமான் வினாய கருத்து வேறறிய
மலைமான் அண்ணல் வழிவி னாயது.

6. பதி வினாதல்
ஒருங்(கு)அட மூவெயில் ஒற்றைக் கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க் கரியுரித் தோன்கயிலை
இரும்கடம் மூடும் பொழில்எழில் கொம்பர்அன் னீர்களின்னே
வருங்கள்தம் ஊர்பகர்ந் தால்பழி யோஇங்கு வாழ்பவர்க்கு. .. 55
கொளு
பதியடு பிறவினாய் மொழிபல மொழிந்து
மதியுடம் படுக்க மன்னன் வலித்தது.

7. பெயர் வினாதல்
தாரென்ன வோங்கும் சடைமுடி மேல்தனித் திங்கள்வைத்த
காரென்ன ஆரும் கறைமிடற்(று) அம்பல வன்கயிலை
ஊரென்ன என்னவும் வாய்திற வீர்ஒழி வீர்பழியேல்
பேரென்ன வோஉரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே. .. 56
கொளு
பேரமைத் தோளியர் பேர்வி னாயது.

8. மொழி பெறாது கூறல்
இரதம் உடைய நடம்ஆட்(டு) உடையவர் எம்முடையர்
வரதம் உடைய அணிதில்லை அன்னவர் இப்புனத்தார்
விரதம் உடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேல்
சரத முடையர் மணிவாய் திறக்கில் சலக்கென்பவே. .. 57
கொளு
தேமொ ழியவர் வாய்மொழி பெறாது
மட்டவிழ் தாரோன் கட்டு ரைத்தது.

9. கருத்தறிவித்தல்
வின்னிற வாணுதல் வேல்நிறக் கண்மெல் லியலைமல்லல்
தன்னிறம் ஒன்றில் இருத்திநின் றோன்தன(து) அம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில் வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற அல்குலுக்(கு) ஆமோ மணிநிறப் பூந்தழையே. .. 58
கொளு
உரைத்தது உரையாது கருத்தறி வித்தது.

10. இடை வினாதல்
கலைக்கீழ் அகல்அல்குல் பாரம(து) ஆரம்கண் ஆர்ந்(து)இலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றல்முற் றா(து)அன்(று) இலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம் பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர் எதுநுங்கள் சிற்றிடையே. .. 59
கொளு
வழிபதி பிறவினாய் மொழிபல மொழிந்தது.
---------------

ஐந்தாம் அதிகாரம்
5. இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்

நூற்பா
ஐய நாடல் ஆங்கவை இரண்டும்
மையறு தோழி அவன்வர வுணர்தல்.

பேரின்பக் கிளவி
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல்
துறையோர் இரண்டும் சிவம்உயிர் விரவியது
அருளே உணர்ந்திடல் ஆகும் என்ப.

1. ஐயறுதல்
பல்இல னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல்
எல்இலன் நாகத்தோ(டு) ஏனம் வினாஇவன் யாவன்கொலாம்
வில்இலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டம்மெய்ஓர்
சொல்இலன் ஆகற்ற வாகட வான்இச் சுனைப் புனமே. .. 60
கொளு
அடற்கதிர் வேலோன் தொடர்ச்சி நோக்கித்
தையல் பாங்கி ஐயம் உற்றது.

2. அறிவு நாடல்
ஆழமன் னோஉடைத்(து) இவ்வையர் வார்த்தை அனங்கன்நைந்து
வீழமுன் நோக்கிய அம்பலத் தான்வெற்பின் இப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்தழையாய்
மாழைமெல் நோக்கி யிடையாய்க் கழிந்தது வந்துவந்தே. .. 61
கொளு
வெற்பன் வினாய சொற்பதம் நோக்கி
நெறிகுழற் பாங்கி அறிவு நாடியது.
-------------------

ஆறாம் அதிகாரம்
6. முன்னுற வுணர்தல்

நூற்பா
வாட்டம் வினாதீல் முன்னுற வுணர்தல்
கூட்டி உணரும் குறிப்புரை யாகும்.

பேரின்பக் கிளவி
முன்னுற உணர்தல் எனஇ·து ஒன்றும்
சிவம்உயிர் கூடல் அருள்வினா வியது.

1. வாட்டம் வினாதல்
நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர்குடுமித்
திருத்தம் பயிலும் கனைகுடைந்(து) ஆடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே. .. 62
கொளு
மின்னிடை மடந்தை தன்னியல் நோக்கி
வீங்கு மென்முலைப் பாங்கி பகர்ந்தது.
--------------------

ஏழாம் அதிகாரம்
7. குறையுற வுணர்தல்

நூற்பா
குறையற்று நிற்றல் அவன்குறிப்பு அறிதல்
அவள் குறிப்(பு) அறிதலோ(டு) அவர்நினை(வ) எண்ணல்
கூறிய நான்கும் குறையுற உணர்வெனத்
தேறிய பொருளிற் தெளிந்திசி னோரே.

பேரின்பக் கிளவி
குறையுற உணர்தல் துறைஒரு நான்கும்
உயிர்சிவத்(து) இடைசென்(று) ஒருப்படுந் தன்மை
பணியாற் கண்டு பரிவால் வினாயது.

1. குறையுற்று நிற்றல்
மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றில்
கொடுக்கோ வளைமற்று நும்ஐயர்க்(கு) ஆயகுற் றேவல் செய்கோ
தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நும் கரிகுழற்கே. .. 63
கொளு
கறையற்ற வேலவன் குறையுற்றது.

2. அவன் குறிப்பறிதல்
அளியமன் னும்மொன்று உடைத்(து) அண்ணல் எண்ணரன் தில்லையன்னாள்
கிளிமைமன்னுங்கடியச் செல்ல நிற்பின் கிளர்அளகத்(து)
அளியமர்ந்(து) ஏறின் வறிதே யிருப்பின் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றுறொன்று தோன்றும் ஒளிமுகத்தே. .. 64
கொளு
பொற்றொடித் தோளிதன் சிற்றிடைப் பாங்கி
வெறிப்பூஞ் சிலம்பன் குறிப்ப றிந்தது.

3. அவள் குறிப்பறிதல்
பிழைகொண்(டு) ஒருவிக் கெடா(து)அன்பு செய்யின் பிறவியென்னும்
முழைகொண்(டு) ஒருவன்செல் லாமைநின்(று) அம்பலத்(து) ஆடுமுன்னோன்
உழைகொண்(டு) ஒருங்(கு)இரு நோக்கம் பயின்றஎம் ஒண்ணுதல்மாந்
தழைகொண்(டு) ஒருவன்என் னாமுன்னம் உள்ளம் தழைத்திடுமே. .. 65
கொளு
ஆங்கவள் குறிப்புப் பாங்கி பகர்ந்தது.

4. இருவர் நினைவும் ஒருவழி உணர்தல்
மெய்யே இவற்(கு)இல்லை வேட்டையின் மேல்மனம் மீட்(டு) இவளும்
பொய்யே புனத்தினை காப்பது இறைபுலி யூர்அனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம் வாழும்செந் தாமரைவாய்
எய்யேம் எனினும் குடைந்தின்பத் தேனுண்(டு) எழில்தருமே. .. 66
கொளு
அன்புறு நோக்(கு) ஆங்கறிந்(து)
இன்புறு தோழி எண்ணியது.
-------------------

எட்டாம் அதிகாரம்
8. நாண நாட்டம்

பேரின்பக் கிளவி
நாண நாட்டத் துறையோர் ஐந்து
மருள சிவத்தை அதிசயத்(து) உயிரின்
பக்குவந் தன்னைப் பலவும் வியந்தது.

1. பிறை தொழுகென்றல்
மைவார் கருங்கண்ணி செங்கரம் கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை மேல(து)ஒத்துச்
செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே. .. 67
கொளு
பிறைதொழு கென்று பேதை மாதரை
நறுநுதற் பாங்கி நாண நாட்டியது 1

2. வேறுபடுத்துக் கூறல்
அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத்து
இக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற ஆ(று)அமர்ந்(து) ஆடச்சென் றாள்அங்கம் அவ்அவையே
ஒக்கின்ற ஆரணங் கேஇணங் காகும் உனக்கவளே. .. 68
கொளு
வேய்வளைத் தோளியை வேறு பாடுகண்(டு)
ஆய்வளைத் தோழி அணங்கென்றது.

3. கனையாடல் கூறி நகைத்தல்
செந்நிற மேனிவெண் ணீறணி வோன்தில்லை அம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையில் அங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையும் தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானும் குடைவன் இருஞ்சுனையே. .. 69
கொளு
மாண நாட்டிய வார்குழல் பேதையை
நாண நாட்டி நகைசெய்தது.

4. புணர்ச்சி உரைத்தல்
பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதல்தில்லை அம்பலத் தோன்தட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பகண் ணார்அளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற் றோமற்றவ் வான்கனையே. .. 70
கொளு
மணக்குறி நோக்கிப் புணர்ச்சி உரைத்தது.

5. மதியுடம் படுதல்
காகத்(து) இருகண் ணிற்(கு) ஒன்றே மணிகலந் தாங்(கு)இருவர்
ஆகத்து ளோர்உயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்
ஏகத்தொருவன் இரும்பொழில் அம்பல வன்மலையில்
தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும்இன்பத் துன்பங்களே. .. 71
கொளு
அயில்வே கண்ணியடு ஆடவன் தனக்கு உயிர் ஒன்றென
மயிலியல் தோழி மதியுடம் பட்டது.
----------------

ஒன்பதாம் அதிகாரம்
9. நடுங்க நாட்டம்

1.
ஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின் முன்னித்
தீவாய் உழுவை கிழித்த(து)அந் தோசிறி தேபிழைப்பித்(து)
ஆவா மணிவேல் பணிகொண்ட வாறின்றோர் ஆண்டகையே. .. 72
கொளு
நுடங்கிடைப்பாங்கி நடுங்க நாடியது.
--------------------

பத்தாம் அதிகாரம்
10. மடல் திறம்

பேரின்பக் கிளவி
மடல்துறை ஒன்பதும் சிவத்தினுட் மோக
முற்ற உயிரருள் பற்றி உரைத்தது.

1. ஆற்றாது உரைத்தல்
பொருளா எனைப்புகுந்(து) ஆண்டு புரந்தரன் மாலயன்பால்
இருளாய் இருக்கும் ஒளிநின்ற சிற்றம் பலமெனலாம்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர்
அருளா(து) ஒழியின் ஒழியா(து) அழியும்என் ஆருயிரே. .. 73
கொளு
மல்லல்திரள் வரைத்தோளவன் சொல்லற்றாது சொல்லியது.

2. உலகின்மேல் வைத்துரைத்தல்
காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தோர் கிழ்¢பிடித்துப்
பாய்ச்சின மாவென ஏறுவர் சீறூர்ப் பனைமடலே. .. 74

3. தன் துணிபு உரைத்தல்
விண்ணை மடங்க விரிநீர் பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வரும்ஒரு காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்கல் அதள்அம் பலவன் அருளிலர்போல்
பெண்ணை மடன்மிசை யான்வரப் பண்ணிற்றோர் பெண்கொடியே. .. 75
கொளு
மான வேலவன் மடம்மாமிசை
யானும் ஏறுவன் என்ன உரைத்தது.

4. மடலேறும் வகையரைத்தல்
கழிகின்ற என்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும் யான்
கிழியன்ற நாடி எழுதிக்கைக் கொண்டென் பிறவிகெட்டின்(று)
அழிகின்ற(து) ஆக்கிய தாள்அம் பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நும் சீறூர்த் தெருவிடைப் போதுவனே. .. 76
கொளு
அடல்வேலன் அழிவுற்று
மடலேறும் வகையுரைத்தது.

5. அருளால் அரிதென விலக்கல்
நடனாம் வணங்கும்தொல் லோன்எல்லை நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத்(து) அரன்தில்லை மல்லற் கண் ணார்ந்த பெண்ணை
உடனாம் பெடைய(டு)ஆண் சேவலும் முட்டையும் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே. ... 77
கொளு
அடல்வேல் அண்ணல் அருளுடை மையின்
மடல் ஏற்றுனக்(கு) அரிதென்றது.

6. மொழிநடை எழுதல் அரிதென விலக்கல்
அடிச்சந்தம் மால்கண் டிலாதன காட்டிவந்(து) ஆண்டுகொண்டென்
முடிச்சந்த மாமலர் ஆக்குமுன் னோன்புலி யூர்புரையும்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக் கன்னி அனநடைக்குப்
படிச்சந்தம் ஆக்கும் படம்உள வோநும் பரிசகத்தே. .. 78
கொளு
அவயவம் அரிதின் அண்ணல் தீட்டினும்
இவையிவை தீட்டல் இயலா(து) என்றது.

7. அவயவம் எழுதல் அரிதென விலக்கல்
யாழும் எழுதி எழில்முத்(து) எழுதி இருளின்மென்பூச்
சூழும் எழுதியர் தொண்டையும் தீட்டியென் தொல்பிறவி
ஏழும் எழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம்
போழும் எழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே. .. 79
கொளு
அவயவம் ஆனவை இவைஇவை என்றது.

8. உடம்படாது விலக்கல்
ஊர்வாய் ஒழிவாய் உயர்பெண்ணைத் திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசாதில்லைக்
கார்வாய் குழலிக்குன்ஆதர(வு) ஒதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரின்அறி வார்பின்னைச் செய்க அறிந்தனவே. .. 80
கொளு
அடுபடை அண்ணல் அழிதுயர் ஒழிகென
மடநடைத் தோழி மடல்வி லக்கியது.

9. உடம்பட்டு விலக்கல்
பைந்நாண் அரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்தபொன்இம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான் அழுந்தினும் என்னின்முன்னும்
இந்நாள் இதுமது வார்குழ லாட்(கு)என்கண் இன்னருளே. ... 81
கொளு
அரவரு நுண்ணிடை குரவரு கூந்தல் என்
உள்ளக் கருத்து விள்ளாள் என்றது.
-----------------------------

பதினொன்றாம் அதிகாரம்
11. குறை நயப்புக் கூறல்

பேரின்பக் கிளவி
குறைநயப் புத்துறை அவை இரு நான்கும்
சிவந்தோ(டு) உயிரைச் சேர்க்க வேண்டி
உயிர்ப்பரிவு எடுத்தெடுத்(து) உரைத்(து)அறி உறுத்தல்.

1. குறிப்பறிதல்
தாதேய் மலர்க்குஞ்சி அஞ்சிறை வண்டுதன் தேன்பருகித்
தேதே எனும்தில்லை யோன்சேய் எனச்சின் வேல்ஒருவர்
மாதே புனத்திடை வாளா மருவர்வந்(து) யாதும்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது வார்குழல் ஏந்தியே. .. 82
கொளு
நறைவளர் கோதையைக் குறைநயப் பித்தற்(கு)
உள்ளறி குற்ற ஒள்ளிழை யுரைத்தது.

2. மென்மொழியால் கூறல்
வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கோலோ
எரிசேர் தளிரென்ன மேனியென் ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொலென்னத்
தெரியேம் உரையன் பிரியான் ஒருவன்இத் தேம்புனமே. .. 83
கொளு
ஒளிருறு வேலவன் தளர்வறு கின்றமை
இன்மொழி யவட்கு மென்மொழி மொழிந்தது.

3. விரவிக் கூறல்
நீகண் டணையெனின் வாழலை நேரிழை அம்பலத்தான்
சேய்கண் டனை யன்சென் றாங்கோர் அலவன்தன் சீர்ப்பெடையின்
வாய்கண் டனையதோர் நாவற் கனிநனி நல்கக்கண்டு
பேய்கண்(டு) அனையதொன் றாகிநின் றான்அப் பெருந்தகையே. .. 84
கொளு
வன்மொழியன்மனம் மெலிவ(து) அஞ்சி
மென்மொழி விரவி மிகுந்து ரைத்தது.

4. அறியாள் போறல்
சங்கம் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகழிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே. .. 85
கொளு
அறியாள் போன்று குறியாள் கூறியது.

5. வஞ்சித்து உரைத்தல்
புரங்கடந் தான்அடி காண்பான் புவிவிண்டு புக்கறியா(து)
இரங்கி(டு)எந் தாய்என்(று) இரப்பத்தன் ஈரடிக்(கு) என்இரண்டு
கரங்கள்தந் தான் ஒன்று காட்டமற்(று) ஆங்கதும் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை அம்பல முன்றில் அம் மாயவனே. .. 86
கொளு
நெஞ்சம் நெகிழ்வகை வஞ்சித்(து) இவையிவை
செஞ்சடை யோன்புகழ் வஞ்சிக்(கு) உரைத்தது.

6. புலந்து கூறல்
உள்ளப் படுவன வுள்ளி உரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி யேல்இது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க்(கு) அருளா அரன்தில்லை காணலர்போல்
கொள்ளப் படாது மறப்ப(து) அறிவிலென் கூற்றுக்களே. .. 87
கொளு
திருந்திய சொல்லில் செவ்வி பெறாது
வருந்திய சொல்லின் வகுத்து ரைத்தது.

7. வன்மொழியாற் கூறல்
மேவிஅம் தோல் உடுக் கும்தில்லை யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியம் தோன்றும் கிழிநின் எழில்என்(று) உரையுளதால்
தூவியம் தோகையன் னாய்என்ன பாவம்சொல் ஆடல்செய்யான்
பாவிஅந் தோபனை மாமடல் ஏறக்கொல் பாவித்ததே. .. 88
கொளு
கடல்உல(கு) அறியக் கமழலந் துறைவன்
மடலே றும்என வன்மொழி மொழிந்தது.

8. மனத்தொடு நேர்தல்
பொன்னார் சடையோன் புலியூர் புகழார் எனப்புரிநோய்
என்னால் அறிவில்லை யானொன்று உரைக்கிலன் வந்தயலார்
சொன்னார் எனும்இத் துரிகதுன் னாமைத் துணைமனனே
என்ஆழ் துயர்வல்லை யேற்சொல்லு நீர்மை இனியவர்க்கே. .. 89
கொளு
அடல்வேலவன் ஆற்றானெனக்
கடல்அமிழ் தன்னவன் காணல் உற்றது.
-----------------------

பன்னிரண்டாம் அதிகாரம்
12. சேட்படை

பேரின்பக் கிளவி
சேட்படை இருபத் தாறு துறையும்
கிடையா இன்பம் கிடைத்தலால் உயிரை
அருமை காட்டி அறியாள் போலப்
பலபல அருமை பற்றி உரைத்த
அருளே சிவத்தோ(டு) ஆக்க அருளல்.

1. தழைகொண்டு சேறல்
தேமென் கிளவிதன் பங்கத்(து) இறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையும்அம் போதும்கொள் ளீர்தமி யேன்புலம்ப
ஆமென்(று) அருங்கோடும் பாடுகள் செய்துநும் கண்மலராம்
காமன் கணைகொண்(டு) அலைகொள்ள வோமுற்றக் கற்றதுவே. .. 90
கொளு
கொய்ம் மலர்க் குழலி குறைந யந்தபின்
கையுறை யோடு காளை சென்றது.

2. சந்தனத் தழை தகாதென்று மறுத்தல்
ஆரத் தழையராப் பூண்(டு)அம் பலத்(து)அன லாடிஅன்பர்க்(கு)
ஆரத் தழையன்(பு) அருளிநின் றோன்சென்ற மாமலயத்(து)
ஆரத் தழையண்ணல் தந்தால் இவைஅவள் அல்குல்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தார் எனவரும் ஐயுறவே. .. 91
கொளு
பிறை நுதற் பே¨¡தயைக் குறைநயப் பித்தது
உள்ளறி குற்றம் ஒள்ளிழை யுரைத்தது.

3. நிலத்தின்மை கூறிமறுத்தல்
முன்தகர்த்(து) எல்லா இமையோரை யும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்(று)அகத்(து) இல்லா வகைசினத்த தோன்திருந்(து) அம்பலவன்
குன்றகத்(து) இல்லாத் தழைஅண் ணல்தந்தால் கொடிச்சியருக்(கு)
இன்(று)அகத்(து) இல்லாப் பழிவந்து மூடும்என்(று) எள்குதுமே. .. 92
கொளு
கொங்கலர் தாரோய் கொணர்ந்த கொய்தழை
எங்குலத் தாருக்(கு) ஏலாது என்றது.

4. நினைவறிவு கூறி மறுத்தல்
யாழார் மொழிமங்கை பங்கத்(து) இறைவன் எறிதிரைநீர்
ஏழாய் எழுமொழி லாய்இருந் தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழல்எழில் தொண்டைச்செவ் வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா(து) எதிர்வந்து கோடும் சிலம்ப தரும்தழையே. ... 93
கொளு
மைதழைக் கண்ணி மனமறிந்(து) அல்லது
கொய்தழை தந்தால் கொள்ளேம் என்றது.

5. படைத்து மொழியான் மறுத்தல்
எழில்வாய் இளவஞ்சி யும்விரும் பும்மற்று இறைகுறையுண்டு
அழல்வாய் அவிரொளி அம்பலத்து ஆடும்அம் சோதி அம்தீம்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல(து) இல்லைஇப் பூந்தழையே. ... 94
கொளு
அருந்தழை மேன்மேல் பெருந்தகை கொணரப்
படைத்துமொழி கிளவியில் தடுத்தவள் மொழிந்தது.

6. நாணுரைத்து மறுத்தல்
உறுங்கள்நி வந்த கணையுர வோன்பொடி யாய் ஒடுங்கத்
தெறுங்கண்நி வந்தசிற்றம்பல வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணும்என் வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேயந்திள மந்திகள் நாணும்இக் குன்றிடத்தே. .. 95
கொளு
வாணுதற் பேதையை நாணுதல் உரைத்தது

7. இசையாமை கூறி மறுத்தல்
நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை எனநனி அஞ்சும்அஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொடு அணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை அதள்அம் பலவன் நெடுவ ரையே. .. 96
கொளு
வசைநீர் குலத்திற்(கு) இசையா(து) என்றது.

8. செவ்வியிலள் என்று மறுத்தல்
சுற்றில கண்டன்னம் மென்னடை கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப் பெறாகிள்ளை பிள்ளையின்றொன்(று)
உற்றிபள் உற்ற(து) அறிந்திலள் ஆகத்(து) ஒளிமிளுரும்
புற்றில வாளர வன்புலி யூரன்ன பூங்கொடியே. ... 97
கொளு
நவ்வி நோக்கி செவ்வியிலள் என்றது.

9. காப்புடைத்தென்று மறுத்தல்
முனிதரும் அன்னையும் என்ஐயர் சாலவும் மூர்க்கர்இன்னே
தனிதரும் இந்நிலத் தன்(று)ஐய குன்றமும் தாழ்சடைமேல்
பனிதரு திங்கள் அணிஅம் பலவர் பகைசெகுக்கும்
குனிதரு திண்சிலைக் கோடுசென் றான்சுடர்க் கொற்றவனே. .. 98
கொளு
காப்புடைத் தென்று சேட்ப டுத்தது.

10. நீயே கூறென்று மறுத்தல்
அந்தியின் வாயெழில் அம்பலத்(து) எம்பரன் அம்பொன்வெற்பின்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னொடும்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத்(து) ஓம்பும் சிலம்ப மனம்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே மொழிசென்றம் மொய்குழற்கே. .. 99
கொளு
அஞ்சுதும் பெரும பஞ்சின்மெல் லடியைக்
கூறுவ நீயே கூறு கென்றது.

11. குலமுறை கூறி மறுத்தல்
தெங்கம் பழம்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத்(து) ஒளிர்குளிர் நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றில் குன்றன்ன மாபதைப்பச்
சிங்கம் திரிதரு சீறூர்ச் சிறுமிஎம் தேமொழியே. .. 100
கொளு
தொழுகுலத்தீர் சொற்காகேம்
இழிகுலத்தேம் என்வுரைத்தது.

12. நகையாடி மறுத்தல்
சிலையன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை
மலையன்று மாமுகத்(து) எம்ஐயர் எய்கணை மண்குளிக்கும்
கலையன்று வெங்கணை யோடு கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையென்று திண்ணிய வா(று)ஐயர் கையிற் கொடுஞ்சிலையே. .. 101
கொளு
வாள்தழை எதிராது சேட்படுத் தற்கு
மென்னகைத் தோழி இன்னகை செய்தது.

13. இரக்கத்தோடு மறுத்தல்
மைத்தழை யாநின்ற மாமிடற்(று) அம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா வினாய்க் கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ரால்என்ன பாவம் பெரியவரே. .. 102
கொளு
கையுறை எதிராது காதல் தோழி ஐய நீபெரி(து) அயர்த்தனை என்றது.

14. சிறப்பின்மை கூறி மறுத்தல்
அக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற் றம்பலமே
ஓக்கும் இவள(து) ஒளிர்உரு அஞ்சி மஞ் சார்சிலம்பா
கொக்கும் சுனையும் குளிர்தளி ரும்கொழும் போதுகளும்
இக்குன்றில் என்றும் மலர்ந்தறி யாத இயல்பினவே. .. 103
கொளு
மாந்தளிரும் மலர்நீலமும் ஏந்தல் இம்மலை இல்லை என்றது.

15. இளமை கூறி மறுத்தல்
உருகு தலைச்சென்ற உள்ளத்தும் அம்பலத் தும்ஒளியே
பெருகு தலைச்சென்று நின்றோன் பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக் கென் னோஐய ஓதுவதே. .. 104
கொளு
முளைஎயிற்(று) அரிவை விளைவிலள் என்றது.

16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்
பண்(டு)ஆல் இயலும் இலைவளர் பாலகன் பார்கிழித்துத்
தொண்டால் இயலும் சுடர்க்கழ லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டால் இயலும் வளர்புந் துறைவ மறைக்கின்என்னைக்
கண்டால் இயலும் கடனில்லை கொல்லோ கருதியதே. .. 105
கொளு
என்னை மறைத்தபின் எண்ணியது அரிதென
நன்னுதல் தோழி நகைசெய்தது.

17. நகை கண்டு மகிழ்தல்
மத்தகம் சேர்தனி நோக்கினன் வாக்கிறந்(து) ஊறமுதே
ஒத்தகம் சேர்ந்தென்னை உய்யநின் றோன்தில்லை ஒத்திலங்கு
முத்தகம் சேர்மென் னகைப் பெருந் தோளி முகமதியின்
வித்தகம் சேர்மெல்லென் நோக்கமன்றோஎன் விழுத்துணையே. .. 106
கொளு
இன்னகைத் தோழி மென்னகை கண்டு
வண்ணக் கதிர்வேல் அண்ணல் உரைத்தது.

18. அறியாள் போன்று நினைவு கேட்டல்
விண்இறந் தார்நிலம் விண்டலர் என்றுமிக் கார்இருவர்
கண்இறந் தார்தில்லை அம்பலத் தார்கழுக் குன்றினின்று
தண்நறுந் தா(து)இவர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார்
எண்இறந் தார்அவர் யார்கண்ண தோமன்ன நின்னருளே. .. 107
கொளு
வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை
வெறியார் கோதை யறியேன் என்றது.

19. அவயவம் கூறல்
குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின வாள்நகை வெண்முத்தம் கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில் சிற்றம்பலம் அனையாட்(கு)
உவவின நாள்மதி போன்றொளிர் கின்ற(து) ஒளிமுகமே. .. 108
கொளு
அவயவம் அவளுக்(கு) இவைஇவை என்றது

20. கண் நயந்து உரைத்தல்
ஈசற்(கு) யான்வைத்த அன்பின் அகன்றவன் வாங்கியஎன்
பாசத்தின் காரென்(று) அவன்தில்லை யின்ஒளி போன்றவன்தோள்
பூ(க)அத் திருநீ(று) எனவெளுத்(து) அங்கவன் பூங்கழல்யாம்
பே(சு)அத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே. .. 109
கொளு
கண்இணை பிறழ்வன வண்ணம் உரைத்தது.

21. தழையெதிர்தல்
தோலாக் கரிவென்ற தற்கும் துவள்விற்கும் இல்லின்தொன்மைக்(கு)
ஏலாப் பரி(சு)உள வேயன்றி ஏலேம் இருஞ்சிலம்ப
மாலார்க்(கு) அரிய மலர்க்கழல் அம்பல வன்மலையில்
கோலாப் பிரசம் அன் னாட்(கு)ஐய நீதந்த கொய் தழையே. .. 110
கொளு
அகன்ற இடத்(து) ஆற்றாமை கண்டு கவன்ற தோழி கையுறை எதிர்ந்தது

22. குறிப்பறிதல்
கழைகாண் டலும்சுளி யுங்களி யானையன் னான்கரத்தில்
தழைகாண் டலும்பொய் தழைப்பமுன் காண்பன்இன்(று) அம்பலத்தான்
உழைகாண் டலும்நினைப் பாகும்மெல் நோக்கிமன் நோக்கங்கண்டால்
இழைகாண் பணைமுலை யாய்அறி யேன்சொல்லும் ஈடவற்கே. .. 111
கொளு
தழை எதிரா(து) ஒழிவதற்கோர்
சொல்லறி யேனெனப் பல்வளைக்(கு) உரைத்தது.

23. குறிப்பறிந்து கூறல்
தவளத்த நீறணி யும்தடந் தோள்அண்ணல் தன்னொருபால்
அவள்அத்த னாம்மக னாம்தில்லை யான்அன்(று) உரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையும்
துவளத் தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே. .. 112
கொளு
ஏழைக்(கு) இருந்தழை தோழிகொண்(டு) உரைத்தது. 23

24. வகுத்துறைத்தல்
ஏறும் பழிதழை யேன்பின்மற்(று) ஏலா விடின்மடன்மா
ஏறும் அவன்இட பங்கொடி ஏற்றிவந்(து) அம்பலத்துள்
ஏறும் அரன்மன்னும் ஈங்கோய் மலைநம் இரும்புனம்காய்ந்(து)
ஏறும் மலைதொலைத் தாற்(கு)என்னை யாம்செய்வ(து) ஏந்திழையே. .. 113
கொளு
கடித்தழை கொணர்ந்த காதல் தோழி
மடக்கொடி மாதர்க்கு வகுத்துரைத்தது.

25. தழையேற்பித்தல்
தெவ்வரை மெய்யெரி காய்சிலை ஆண்டென்னை ஆண்டுகொண்ட
செவ்வரை மேனியன் சிற்றம் பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைகண் டாய்உள்ள வா(று)அருளான்
இவ்வரை மேற்சிலம் பன்எளி தில்தந்த ஈர்ந்தழையே. .. 114
கொளு
கருங்குழல் மடந்தைக்(கு) அரும்பெறல் தோழி
இருந்தழை கொள்கென விரும்பிக் கொடுத்தது.

26. தழை விருப்புரைத்தல்
பாசத் தளையறுத்(து) ஆண்டுகொண் டோன்தில்லை அம்பலம் சூழ்
தேசத் தனசெம்மல் நீதந் தனசென்(று) யான்கொடுத்தேன்
பேசிற் பெருகும் சுருங்கு மருங்குழல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிலள்அன்றிச் செய்யா தனஇல்லை பூந்தழையே. .. 115
கொளு
விருப்பவள் தோழி பொருப்பற்(கு) உரைத்தது.
---------------

பதின்மூன்றாம் அதிகாரம்
13. பகற்குறி

பேரின்பக் கிளவி
பகற்குறித் துறைமுப் பதினோ(டு) இரண்டு
இயற்கைபோல் சிவத்தோ(டு) இயலுறுக் கூட்டிப்
பிரித்த அருளின் பெரும்பகற் குறியே.

1. குறியிடங் கூறல்
வானுழை வாள்அம்ப லத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாஇரு ளாய்ப்புற நாப்பண்வண் தாரகை போல்
தேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கான்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில் காட்டுமொர் கார்ப்பொழிலே. .. 116
கொளு
வாடிடத்(து) அண்ணல் வண்தழை எதிர்ந்தவள்
ஆடிடத்(து) இன்னியல்(பு) அறிய உரைத்தது.

2. ஆடிடம் படர்தல்
புயல்வளர் ஊசல்முன் ஆடிப்பொன் னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும் அருவி திருவுருவில்
கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரம் தீர்த்தருளும்
தயல்வளர் மேனியன் அம்பலத் தான்வரைத் தண்புனத்தே. .. 117
கொளு
வண்தழை எதிர்த்த ஒண்டொடிப் பாங்கி
நீடமைத் தோளிய(டு) ஆடிடம் படர்ந்தது.

3. குறியிடத்துக் கொண்டு சேறல்
தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றில் முற்றிழைத்துச்
கனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவர்
வினைவளம் நீறெழ நீறணி அம்பல வன்தன்வெற்பில்
புனைவளர் கொம்பர்அன் னாய்அன்ன காண்டும் புனமயிலே. .. 118
கொளு
அணிவளர் ஆடிடத்(து) ஆய வெள்ளம்
மணிவளர் கொங்கையை மருங்குஅ கன்றது.

4. இடத்துய்த்து நீங்கல்
நரல்வேய் இனநின தோட்(டு)உடைந்(து) உக்கநன் முத்தம்சிந்திப்
பரல்வேய் அறையுறைக் கும்பஞ் சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவன்இங் கேநில்உங் கேசென்றுன் வார்குழற்(கு)ஈர்ங்
குரல்வேய் அளிமுரல் கொங்கார் தடமலர் கொண்டுவந்தே. .. 119
கொளு
மடத்தகை மாதரை இடத்தகத்து உய்த்து
நீங்கல் உற்ற பாங்கி பகர்ந்தது.

5. உவந்துரைத்தல்
படமா கணப்பள்ளி இக்குவ டாக்கியப் பங்கயக்கண்
நெடுமால் எனஎன்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே
இடமா இருக்கலுற் றோதில்லை நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து வைஇற்றுஇவ் வார்பொழிற்கே. .. 120
கொளு
களிமயிற் சாயலை ஒருசிறைக் கண்ட
ஒளிமலர்த் தாரோன் உவந்துரைத்தல். 5

16. மருங்கணைதல்
தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல் லோன்அருள் என்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின் மூடித்தன் ஏர்அளப்பான்
ஒத்(து)ஈர்ங் கொடியின் ஒதுங்குகின் றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலை காள்என்னுக்கு இன்னும் பெருக்கின்றதே. .. 121
கொளு
வாணுதல் அரிவை நாணுதல் கண்ட
கோதை வேலவன் ஆதர வுரைத்தது.

7. பாங்கியறிவுரைத்தல்
அளிநீ(டு) அளகத்தின் அட்டிய தாதும் அணியணியும்
ஒளிநீள் கரிகுழல் சூழ்ந்தஒண் மாலையும் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடல் தில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ அனையபொன் னேபண்ணு கோலம் திருநுதலே. .. 122
கொளு
நெறி குழற் பாங்கி அறிவறி வித்தது.

8. உண்மகிழ்ந்துரைத்தல்
செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே
கெழுநீர் மையில்சென்று கிண்கிணி வாய்க் கொள்ளும் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன் கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை அளிகுவமே. .. 123
கொளு
தண்மலர்க் கோதையை
உண்மகிழ்ந்(து) உரைத்தது.

9. ஆயத்து உய்த்தல்
கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லம்எழில் தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன் சிற்றம் பலம்அனையாய்
செழுந்தா(து) அவிழ்பொழில் ஆயத்துச் சேர்க் திருத்தகவே. .. 124
கொளு
கனைகடல் அன்ன கார்மயில் கணத்துப்
புனைமட மானைப் புகவிட்டது.

10. தோழி வந்து கூடல்
பொன்அனை யான்தில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த
மின்னனை யான்அருள் மேலவர் போன்மெல் விரல் வருந்த
மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந் தாழ்குழற்(கு) ஏய்வனவே. .. 125
கொளு
நெறியுறு குழலியை நின்றிடத்(து) உய்த்துப்
பிறைநுதற் பாங்கி பெயர்ந்தவட்(கு) உரைத்தது.

11. ஆடிடம் புகுதல்
அறுகால் நிறைமலர் ஐம்பால் நிறையணிந் தேன் அணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல் லாயம்மெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்(கு)அரி யோன்புலி யூரன்ன ஒண்ணுதலே. .. 126
கொளு
தனிவிளை யாடிய தாழ்குழல் தோழி
பனிமதி நுதலிய(டு) ஆடிடம் படர்ந்தது.

12. தனிகண்டு உரைத்தல்
தழங்கும் அருவிஎம் சீறூர் பெரும இதுமதுவும்
கிழங்கும் அருந்தி இருந்(து) எம்மோ(டு) இன்று கிளர்ந்துகுன்றர்
முழங்கும் குரவை இரவிற்கண்(டு) ஏகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரான்எரி யாடிதென் தில்லை மணிநகர்க்கே. .. 127
கொளு
வேயத்த தோளியை ஆயத்து உயத்துக்
குனிசிலை அண்ணலைத் தனிகண்(டு) உரைத்தது.

13. பருவங் கூறி வரவு விலக்கல்
தள்ளி மணிசிந்தம் உந்தித் தறுகண் கரிமருப்புத்
தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால்விடை யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வனமுலையே. .. 128
கொளு
மாந்தளிர் மேனியை வரைந்(து) எய்தா(து)
ஏந்தல் இவ்வா(று) இயங்கல் என்றது. 13

14. வரைவு உடம்படாது மிகுத்துக் கூறல்
மாடஞ்செய் பொன்னக ரும்நிக ரில்லைஇம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை உள்ளவரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரல் கொடிச்சியென் றோநின்று கூறுவதே. .. 129
கொளு
வரைவு கடாய வாணுதல் தோழிக்கு
விரைமலர்த் தாரோன் மிகுத்துரைத்தது.

15. உண்மை கூறி வரைவு கடாதல்
வேய்தந்த வெண்முத்தம் சிந்துபைங் கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானக மானும் சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவர் ஏனல்எங் காவல்இத் தாழ்வரையே. .. 130
கொளு
கல்வரை நாடன் இல்ல(து) உரைப்ப
ஆங்கவள் உண்மை பாங்கி பகர்ந்தது.

16. வருத்தங் கூறி வரைவு கடாதல்
மன்னும் திருவருந் தும்வரை யாவிடின் நீர்வரைவென்(று)
உன்னும் அதற்குத் தளர்ந்தொளி வாடுதிர் உம்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ் சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புலன் என்னப் புலம்புவனே. .. 131
கொளு
கினங்குழை முகத்தவள் மனங்குழை வுணர்த்தி
நிரைவளைத் தோளி வரைவு கடாயது.

17. தாய் அச்சங்கூறி வரைவு கடாதல்
பனித்துண்டம் சூடும் படர்சடை அம்பல வன்உலகம்
தனித்துண் டவன்தொழும் தாளோன் கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப் பாரிப்புக் கண்டழிவுற்(று)
இனிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்(கு) என்றஞ்சும் எம்அனையே. .. 132
கொளு
மடத்தகை மாதர்க்கு அடுப்பன அறியா
வேற்கண் பாங்கி ஏற்க உரைத்தது.

18. இற்செறி அறிவித்து வரைவு கடாதல்
ஈவிளை யாட நறவிளை(வு) ஓர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கிஎம் மெல்லியலைப்
போய்விளை யாடல்என் றாள்அன்னை அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாட நின் றேவிளை யாடி திருமலைக்கே. .. 133
கொளு
விற்செறி நுதலியை இற்செறி உரைத்தது.

19. தமர் நினைவு உரைத்து வரைவு கடாதல்
சுற்றும் சடைக்கற்றைச் சிற்றம் பலவன் தொழாதுதொல்சீர்
கற்றும் அறியல ரின்சிலம் பாஇடை நைவதுகண்(டு)
எற்றும் திரையின் அமிர்தை இனித்தமர் இற்செறிப்பார்
மற்றும் சிலபல சீறூர் பகர்பெரு வார்த்தைகளே. .. 134
கொளு
விற்செறி நுதலியை இற்செறி விப்பரென்(று)
ஒளிவே லவற்கு வெளியே உரைத்தது.

20. எதிர்கோள் கூறி வரைவு கடாதல்
வழியும் அதுஅன்னை என்னின் மகிழ்வும்வந்(து) எந்தையும்நின்
மொழியின் வழிநிற்கும் சுற்றம்முன்னேவயம் அம்பலத்துக்
குழிஉம்பர் ஏத்தும்எம் கூத்தன்குற் றாலமுற் றும்அறியக்
கெழி உம்ம வேபணைத் தோள்பல என்னோ கிளக்கின்றதே. .. 135
கொளு
ஏந்திழைத் தோழி ஏந்தலை முன்னிக்
கடியா மாறு நொடிதுஏ(கு) என்றது.

21. ஏறுகோள் கூறி வரைவு கடாதல்
படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும் நுண்
இடையார் மெலிவுகண்(டு) அண்டர்கள் ஈர்முல்லை வேலிஎம்முர்
விடையார் மருப்புத் திருத்திவிட் டார்வியன் தென்புலியூர்
உடையார் கடவி வருவது போலும் உருவினதே. .. 136
கொளு
என்னையர் துணிவு இன்ன(து) என்றது.

22. அயல் உரை உரைத்து வரைவு கடாதல்
உருப்பனை அன்னகைக் குன்றொன்(று) உரித்(து)உர ஊர்எரித்த
நெருப்பனை அம்பலத்(து) ஆதியை உம்பர்சென்(று) ஏத்திநிற்கும்
திருப்பனை யூர்அனை யாளைப்பொன் னாளைப் புனைதல் செப்பிப்
பொருப்பனை முன்னின்(று) என் னோவினை யேன்யான் புகல்வதுவே. .. 137
கொளு
கயல்புரை கண்ணியை அயலுரை உரைத்தது.

23. தினை முதிர்வு வரைவு கடாதல்
மாதிடம் கொண்(டு)அம் பலத்துநின் றோன்வட வான்கயிலைப்
போதிடம் கொண்டபொன் வேங்கை தினைப்புனம் கொய்கஎன்று
தாதிடம் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று
சோதிடம் கொண்(டு)இதுஎம் மைக்கெடு வித்தது தூமொழியே. .. 138
கொளு
ஏனல் விளையாட்(டு) இனிஇல் லையென
மானல் தோழி மடந்தைக்(கு) உரைத்தது.

24. பகல் வரல் விலக்கி வரைவு கடாதல்
வடிவார் வயல்தில்லை யோன்மல யத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக யான்உமக்(கு) என்னுரைக்கேன்
தடிவார் தினைஎமர் காவேம் பெருமஇத் தண்புனமே. .. 139
கொளு
அகல்வரை நாடனைப் பகல்வரல் என்றது.

25. தினையடு வெறுத்து வரைவு கடாதல்
நினைவித்துத் தன்னைஎன் நெஞ்சத்து இருந்(து)அம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின் மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின் றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட தாகி விளைந்ததுவே. .. 140
கொளு
தண்புனத் தோடு தளர்வுற்றுப்
பண்புனை மொழிப் பாங்கி பகர்ந்தது.

26. வேங்கையடு வெறுத்து வரைவு கடாதல்
கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்(கு)அம் பலத்(துஐ அமிழ்தாய்
வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய்
நனைகெடச் செய்தனம் ஆயின் நமைக்கெடச் செய்திடுவான்
தினைகெடச் செய்திடு மாறும்உண் டோஇத் திருக்கணியே. .. 141
கொளு
நீங்குக இனிநெடுந் தகையென
வேங்கை மேல்வைத்து விளம்பியது

27. இரக்கமுற்று வரைவு கடாதல்
வழுவா இயல்எம் மலையர் விதைப்பமற்(று) யாம் வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்கள்எல் லாம்எம் குழாம்வணங்கும்
செழுவார் கழல்தில்லைச் சிற்றம் பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப தாவ(து)இத் தொல்புனத்தே. .. 142
கொளு
செழுமலை நாடற்குக் கழுமலுற்(று) இரங்கியது.

28. கொய்தமை கூறி வரைவு கடாதல்