|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Language & Literature > Jeyakantan > Short Story Collections of Jeyakantan - ஜெயகாந்தனின் சிறுகதைகள் > யுக சந்தி > இல்லாதது - எது > இரண்டு குழந்தைகள் > நான் இருக்கிறேன் > பொம்மை > தேவன் வருவாரா?. > துறவு > பூ உதிரும் > குறைப் பிறவி > யந்திரம் > டிரெடில் > பிணக்கு > நந்தவனத்தில் ஓர் ஆண்டி > நீ இன்னா ஸார் சொல்றே? > புதிய வார்ப்புகள் > சுயதரிசனம் > அக்ரஹாரத்துப் பூனை > அக்கினிப் பிரவேசம் > புது செருப்புக் கடிக்கும் > நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?
Short Story Collections of Jeyakantan in Unicode
ஜெயகாந்தன் - துறவு
| "எங்கே, போனவங்களெ இன்னங் காணலியே....." என்று முனகிக்கொண்டே, வாசற்படியை ஒரு
கையால் பற்றியவாறு, பாதித்தெருவரை உடம்பை வளைத்து நீட்டித் தெருக்கோடி வரை
பார்த்தாள் பங்கஜம் அம்மாள். அப்பொழுதுதான் அடுத்த வீட்டு வாசலில், சேலைத் தலைப்பில் ஈரக் கையைத் துடைத்துக்கொண்டு வந்து நின்றாள் மரகதம். "என்ன மரகதம்....பகலெல்லாம் காணவே இல்லியே? வேலை சாஸ்தியோ?" என்று ஆரம்பித்தாள் பங்கஜம். "அதெல்லாம் ஒண்ணுமில்லே அக்கா; என்னவோ நெனப்பிலேயே நேரம் போயிடுச்சி..." அந்த இரண்டு வீடுகளையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் அந்தச் சாய்வுத் திண்ணையின் இரு புறங்களிலும் இருவரும் உட்கார்ந்து கொண்டனர். ---இரண்டு பெண்கள் கூடிப் பேசுவதென்றால் அந்தப் பரஸ்பர இன்பம் அவர்களுக்கல்லவா தெரியும்? "மணி எட்டு இருக்குமா?" என்றாள் பங்கஜம். "இப்பத்தானே ஏழரை அடிச்சிது? வேலையெல்லாம் ஆச்சுதா?..." "ஆச்சு.... வேலை ஆயி என்ன பண்றது? 'பொழுதோட வீட்டுக்கு வந்தமாம், சாப்பிட்டமாம்'கிற பேச்சேதான் எங்க வூட்டு ஐயாவுக்கு கெடையாதே' கோயிலும் கொளமும் சுத்திப்பிட்டு ராத்திரி மணி ஒம்பதோ, பத்தோ?---அவுக போறதுமில்லாம அந்தப் பய சோமுவையும் கூட்டிக்கிட்டுப் போயிடறாவ...." "சோமு வீட்டிலே இல்லே?---குரல் கேட்டுதே' " --மரகதம் பேச்சை வளர்க்கவே அப்படிக் கேட்டு வைத்தாள். "அவன் அடிக்கிற கூத்தை எங்கே போயிச் சொல்றதம்மா... பக்தி ரொம்ப மீந்து போச்சி...வௌக்கு வெச்சா வீட்டிலே தங்கமாட்டேங்கிறான். உபந்நியாசம் கேக்கப் போயிடறான்....போன வருசமே பெயில்...எப்பப் பார்த்தாலும் சாமியும், பாட்டும்தான்.... கறி திங்கமாட்டானாம்; முட்டைகூட வேண்டாம்கிறான்....அவுகளுக்கோ அந்த வாசமில்லாம சோறு எறங்காது. இவனோ, அதைத் தொட்ட கையைக் களுவாம, சோத்தெத் தொடாதேங்கிறான்...இந்த ரெண்டு பேருக்கும் ரெண்டு சமையல் பண்ண என்னால் ஆகுமா?.... கெடக்குக் களுதைன்னு வெறும் ரஸத்தோட விட்டுட்டேன் இன்னக்கி...." "என்ன அக்கா சமையல்?" "ஆறு மணிக்குமேலே குப்பம்மா வந்தா, கடைக்குப் போறேன்னா... ஒரு எட்டணாவெ குடுத்து அனுப்பிச்சேன், ஆறணாவுக்கு--- தோ...இத்தினி இத்தினி நீளத்துக்கு எட்டு கெளுத்தி வாங்கியாந்தா...அதோட ரெண்டு மாங்கா கெடந்தது, அதையும் போட்டுக் கொளம்பு வச்சேன்... அவனுக்குத் தொட்டுக்க என்ன பண்றதுன்னு ஒண்ணுந் தோணலே... வெறும் ரசத்தோட விட்டுட்டேன்... எனக்கு ஒண்ணுமே முடியலே... காத்தாலே இருந்து ரெண்டுத் தோளும் என்னா கொடைச்சல்' அப்படியே இத்துப் போவுது... சின்னப்பையன் ரமணி வேறே ராவிக்கெல்லாம் இருமித் தொலைக்கறான்... தூக்கமா வருது? இந்த லெட்சணத்திலே ரெண்டு கறி, ரெண்டு கொளம்பு வைக்க யாராலே முடியும்? பிள்ளையா பொறந்ததுவ, இருக்கறதைச் சாப்பிடணும்...'அது வேணாம், இது வேணாம்'...சைவமாம், சைவம்'...இவனும் இவன் சைவமும்...நான் என்னத்தைப் பண்ண...மூஞ்சியை மூணு மொளம் நீட்டிக்கிட்டு வெறும் ரசத்தை ஊத்தித்திங்கும்...ஹ்உம்... --பங்கஜம் அம்மாள் மூச்சுவிடாமல் கொட்டி அளந்து சலித்துப்போய்ப் பெருமூச்செறிந்தாள்' மரகதம் ஆரம்பித்தாள்: "அதை ஏன் கேக்கறீங்க அக்கா....எங்க வீட்டிலே இருக்கறவரு... மத்தியானம் அப்பிடித்தான், பாருங்க.... காலையிலே ஆபீசுக்குப் போகும்போது, 'முருங்கைக்காய் சாம்பார் வச்சி, உருளைக்கிழங்கு வறுவல் பண்ணு'ன்னு சொல்லிட்டு போனாவ....பதினோரு மணி வரைக்கும் சாம்பாரை வச்சி, சாதத்தையும் வடிச்சிட்டு உக்காந்திருந்தேன், உக்காந்திருந்தேனோ அப்பிடி உக்காந்திருந்தேன். கட்டையிலே போற காய் கறிக்காரனைக் காணவே இல்லை....மணியோ பதினொண்ணு ஆயிடுச்சி. அதுக்கு மேலே யாரைப் புடிச்சிக் கடைக்கு அனுப்ப? அவுவ பன்னெண்டு மணிக்கெல்லாம் வந்து எலையெப் போடுன்னு பறப்பாவளேன்னு, ரெண்டு வாளக்காய் கெடந்தது; அதை வறுத்து வச்சேன்...எலை முன்னே வந்து உக்காந்ததும் மனுசனுக்கு ஏன்தான் அப்பிடி ஒரு கோவம் வருமோ, ஆண்டவனே....'எளவெடுத்த வாளைக்காய்க் கருமந்தானா?ன்னு தட்டோட வீசி, எறிஞ்சாவ பாருங்க...நா என்னக்கா பண்ணுவேன் என்று சொல்லும்போதே கண்களை முந்தானையால் கசக்கிக்கொண்டாள், கடைசியிலே....நானும் அதெக் கையாலே தொடலே...அப்பிடியே கெடக்கு...." மரகதம் எதையெதையோ சொல்லி வருத்தப்படவே, பங்கஜம் பேச்சைத் திருப்பினாள்: "அது கெடக்கு...ஒன் நாத்தனார் முளுவாம இருந்து 'அபார்ஸ'னாயி ஆசுபத்திரியிலே கெடக்கான்னியே....என்னாச்சு?...காயிதம் வந்துதா..." மரகதம் குரலின் தொனி இறங்கி ஒலிக்கப் பேசினாள்: "பாத்தீங்களா, மறந்தே போனேனே...அபார்ஸனும் இல்லே, கிபார்ஸனும் இல்லே.... அவளுக்குத்தான் ஏழுமாசம் ஆயிடுச்சே...என்னாநடந்துதோ.... காத்தாலேருந்தே வயித்துப் புள்ளெ அசையிலியாம்---தடபுடலா போயி ஆசுபத்திரிக்கிக் கொண்டு போயிருக்காவ.... வயித்தை அறுத்து..... ----மிகவும் மும்முரமாக சம்பாஷணை 'கிளைமாக்ஸ்' அடையும் தருணத்தில் வாசற்படியில் செருப்பின் மிதியோசை கேட்டது' --சப்தத்திலிருந்தே, வருவது தன் கணவர்தான் என்பதைப் புரிந்துக்கொள்வாள் பங்கஜம்---ரெண்டு பெணகளும் எழுந்து நின்றனர். பங்கஜம் அம்மாளின் கணவன் சதாசிவம் பிள்ளையும், மகன் சோமுவும் திருநீறு துலங்கும் நெற்றியுடன் சிவப் பழங்களாய் உள்ளே நுழைந்தனர். மரகதம் குரலைத் தாழ்த்தி ரகசியம் பேசுவது போல் கூறினாள்: "ராஜியை அனுப்புங்க அக்கா.....வாளைக்காய் குடுத்தனுப்பறேன் சோமுவுக்கு..." "எதுக்கம்மா? என்று தயங்கினாள் பங்கஜம். "தம்பிக்குத்தான்...கெடக்கு, ராஜியை அனுப்புங்க அக்கா....." என்று புன்னகையுடன் கூறிவிட்டு உள்ளே போனாள் மரகதம். அடுக்களைக்கு வந்த பங்கஜம், மகனுக்கும் கணவனுக்கும் இலையிட்டு, மணைபோட்டு.... "ஏட்டி, ராஜி' அடுத்த வீட்டு அக்கா, என்னமோ தாரேன்னா...போயி வாங்கியா..." என்றாள். "என்னது?....என்ன வாங்கியாரச் சொல்றே, இன்னேரத்திலே...." என்று அதட்டல் குரல் போட்டார் பிள்ளை. "அதுவா? நீங்க பெத்து வச்சிருக்கீங்களே சைவப்பளமா, ஒரு பிள்ளை, அதுக்கு, சாதத்துக்குத் தொட்டுக்க ஒண்ணுமில்லே...அதுக்காவத்தான்...இல்லாட்டி தொரை கோவிச்சிக்குவாரில்லே...." என்று இரைந்தாள் பங்கஜம். ---அவளுக்குத் தெரியும், பிள்ளையிடம் எந்தச் சமயத்தில் எந்த ஸ்தாயியில், எந்த பாவத்தில் குரலை முடுக்கிப் பேசினால், சொன்னதை அவர் ஏற்றுக்கொள்வார் என்று. முற்றத்தில் கைகால் அலம்பிக்கொண்டிருந்த சோமு இந்த அஞ்ஞானிகளுக்காக வருந்துவதுபோல் மெல்லச் சிரித்தான். பிறகு, மாடத்திலிருந்த திருநீற்றை அள்ளிப் பூசிக்கொண்டு கூடத்திலிருந்த திருநீற்றை அள்ளிப் பூசிக் கொண்டு கூடத்திலிருந்த படங்களின் முன் நின்று 'அருட்சோதி தெய்வமென்னை' என்று கசிந்துருக ஆரம்பித்தான். சோமுவுக்கு வயது பதினைந்துதான்---அதுதான் மனிதனுக்குப் 'பித்து'ப் பிடிக்கும் பருவம். ---அது சமயப் பித்தாகவோ, கலைப் பித்தாகவோ, அரசியல் பித்தாகவோ அல்லது பெண் பித்தாகவோகூடப் பிடிக்கலாம்' சோமுவுக்கு அங்க வளர்ச்சிகளும், ஆண்மை முத்திரைகளும் ஏற்படும் பருவம் அது. முகம் குழந்தை மாதிரிதான் இருந்தது. உடலிலும் மனசிலும் சதா ஒரு துடிப்பும் வேகமும் பிறந்தது. மனம் சம்பந்தமில்லாத ஸ்தாயிகளிலெல்லாம் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது. உலகையும், வாழ்வையும் அறிய உள்ளம் பரபரத்தது. ஏதோ ஒரு இடத்தைத் தொட்டவுடனே எல்லா இடத்தையும் தொட்டுவிட்டதாக எண்ணி இறுமாந்தது. 'தான் புதிதாக அறிந்த விஷயங்கள் எல்லாம் புதிதாகப் பிறந்தவை' என்று நம்பி, அவற்றை மற்றவர்கள் அறியமாட்டார்கள் என்ற எண்ணத்தினால், மற்றவர்களைவிடத் தன்னை உயர்த்திப் பாவித்தது. மனசில் வாழ்வும், உற்றாரும், உறவினரும் ---எல்லாமே வெறுப்புத்தான், சதா நேரமும் 'சிடுமூஞ்சி'யும் கலகலப்பின்மையும், எதையோ நினைத்து ஏங்குவதுபோலவும், ஏகாந்தத்தை நாடுவதும்.... வீடே வெறுத்தது' சோமுவுக்கு வேதாந்தப் பித்துதான்' பொழுதோடு வீட்டுக்கு வராமல் பள்ளிக்கூடத்திலிருந்து ஓடக்கரைக்கும், கொய்யாத் தோப்புக்கும் போய் விளையாடிவிட்டு இரவு ஏழு மணிக்கோ, எட்டு மணிக்கோ வீடு திரும்பி, ஆடிய களைப்பில் உண்ட மயக்கத்துடன் உறங்கிப் போவதையே வழக்கமாக கொண்டிருந்த சோமு போன வருஷம் எட்டாம் வகுப்பில் 'கோட்' அடித்து விட்டான். வீட்டில் வசவுகளும் கண்டிப்பும் அதிகமாகி இனிமேல் பள்ளிக்கூடம் விட்டவுடன் நேரே வந்து வீட்டு வாசலைத்தான் மிதிக்கவேண்டும் என்ற கட்டளை பிறந்தது. இரவு சாப்பாடு வரை படிக்கவேண்டும் என்ற தண்டனை வேறு. வீட்டுக் கூடத்தில் அவனது தம்பிகளான சீனாவும் ரமணியும் கொஞ்ச நேரம் படித்துவிட்டு, மற்ற நேரமெல்லாம் தங்கை ராஜியுடன் விளையாடிக்கொண்டிருக்க, சோமு மட்டும், துயரமும் கவலையும் தோய்ந்த முகத்துடன் --- புத்தகத்தையும், சன்னல் வழியே வௌ¢யுலகத்தையும் பார்த்தவாறு -- தந்தையின் உத்தரவை மீற முடியாமல் படித்துக் கொண்டிருப்பதைக் கண்ட பங்கஜம் அம்மாளுக்குப் பாவமாய் இருந்தது. "போதும்' நீ படிச்சிக் கிளிக்கிறது. கொஞ்சம் காத்தாட வௌ¢யிலே போயி வா....உம்..." என்று அவன் கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கி வைத்தாள். சோமு தந்தையை எண்ணித் தயங்கி நின்றான். "நீ போயிட்டு வா....அவுக வந்தா நா' சொல்லிக்கிறேன், அவுக மட்டும் வீட்டிலேயேதானே இருக்காவ?.... கோயிலுக்கு போவாம அவுவளாலே, ஒரு நாளு இருக்க முடியுதா?.... நீயும் போயி அந்த நடராஜா கிட்டே 'எனக்கு நல்ல புத்தியெயும், தீர்க்காயுசையும், படிப்பையும் குடுடா ஆண்டவனே'ன்னு வேண்டிக்கிட்டுவா....அவுவ வந்தா நான் சொல்லிக்கறேன். அவள் சொல்லி முடிக்கும் முன் சட்டையை மாட்டிக் கொண்டு ஒரே ஓட்டம்.... "சீக்கிரம் வந்துடுடா சோமு..." என்று இரைந்து கூவிச் சொல்லும் தூரத்துக்குப் போய்விட்டான் அவன். காதில் விழுந்ததோ, என்னவோ... எட்டு மணிக்கு, சதாசிவம் பிள்ளை வரும்போதோ, "சோமு எங்கே?...." என்று கேட்டுக்கொண்டு வந்தார். "ஆமா.... சோமு சோமுன்னு அவனை வறுத்துக் கொட்டிக்கிங்க.... அவனுக்கு மட்டும் வீடே கதியா?..... நான்தான் என்ன பாவம் பண்ணிப்பிட்டோ இந்த ஜெயில்லே கெடக்கேன்.... ஒரு கோயில் உண்டா, கொளம் உண்டா?.... திருநாள் உண்டா, பெருநாள் உண்டா?.... என் தலைவிதி ஒங்களுக்குகெல்லாம் உளைச்சிக் கொட்டிச் சாகணும்னு..... என் வயித்திலே பொறந்தததுக்குமா, அந்த பாவம்.... பிள்ளையப் பார்த்தா பாவமா இருக்கு.... என்ன தான் அதிகாரம்னாலும் இப்பிடியா?" என்று கண்ணைத் துடைத்து. மூக்கைச் சிந்தி, முந்தானையை மடக்கி, முன்கையை நீட்டிக்கொண்டு எழுந்து வந்தாள் பங்கஜம். "எங்கே சோமுன்னுதானே கேட்டேன்" என்று பம்மிப் பதில் கொடுத்தார் பிள்ளை. ----இனிமேல் விஷயத்தைத் தெரிவித்தால் ஒன்றும் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு சாந்தமான குரலில் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னாள் பங்கஜம்; "கோயிலுக்கு போயிருக்கான்... நான் தான் அனுப்பிச்சேன். நீங்க அவனை ஒண்ணும் மூஞ்சியைக் காட்டாதீங்க. பையனைப் பார்த்தா பாவமா இருக்கு...." முற்றத்தில் இறங்கி கால் அலம்பிக்கொண்டிருந்த பிள்ளை, "சரி, சரி, நானே நெனச்சேன்... நாளையிலேருந்து வடக்கே இருந்து ஒரு பெரிய மகான் வந்து 'லெக்சர்' பண்ணப்போறார்.... அவர் பேரு அருளானந்தராம்.... பெரிய இவுராம்...." பங்கஜம் தந்த டவலில் முகம் துடைத்துக்கொண்டார் மாடத்திலிருந்த திருநீற்றை எடுத்துப் பூசிக்கொண்டார். "சரி, எலையெப் போடு.....என்ன வச்சிருக்கே?...." என்று சொல்லிவிட்டு, படங்களுக்கு முன்னே கரம்கூப்பி நின்றார். "கத்திரிக்காய் வதக்கிக் கொளம்பு....அப்பளம்' " ---கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்த அவர் முகத்தில் ஒரு சுளிப்பு'..... சேவிப்பு முடிந்தது; முகம் கடுகடுத்தது' "என்னடி வச்சிருக்கேன்னே...." "கத்திரிக்காய் வதக்கிக் கொளம்பு; அப்பளம்' " "சனியன்.....ரெண்டு கருவாடு கூடவா கெடைக்கலே....அதுகூடப் போட்டுக் கொதிக்க வைக்க... சீ சீ, நாளு பூரா மனிசன் கொரங்குத் தீனியா திம்பான்...." என்று சலித்துக் கொண்டார். ----சதாசிவம் பிள்ளை சிவபக்தர்; நர மாமிசம் கேட்காமலிருக்கிறாரே போதாதா?.... மறுநாளிலிருந்து சோமு தந்தையுடன் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்தான். 'சாமி ஆண்டவனே....இந்த வருஷம் நான் பாஸாகணும்' என்று ஆரம்பித்த பக்தி, ஜீவகாருண்யமே திறவுகோல் என்று வளர்ந்து, 'வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்' என்று சோமுவின் மனத்தில் கனியலாயிற்று. சுவாமி அருளானந்தரின் பிரசங்கம் தொடர்ந்து இருபத்தியேழு நாட்கள் ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது அல்லவா?.... சோமுவுக்கு ஞானம் பொழிய ஆரம்பித்தது. 'ஆமாம்....தாய் தந்தை, உடன்பிறந்தார், செல்வம், சுற்றம், உலகம் எல்லாம் பொய்தானே.... சாவு வரும்; அது மட்டும்தான் உண்மை. அந்த பெரிய உண்மைக்கு நேரில் இவையெல்லாம் அற்பப் பொய்' 'படிப்பு ஏன்?....சம்பாதனை எதற்கு?..... 'முடிவில் ஒருநாள் செத்துப்போவேனே.... அப்பொழுது இவற்றில் ஏதாவது ஒன்று....யாராவது ஒருவர் என்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியுமா, என்ன?.... 'தாய் அல்லது தந்தை இவர்களில் யாரேனும். யாராயிருந்தாலும் முடிவில் எல்லோரும் ஒருநாள் செத்துப் போவார்கள்...இவர்களில் யாரையாவது நான், அல்லது என் கல்வி, எனது சம்பாதனை காப்பாற்ற இயலுமா என்ன?.... 'முடியாது' '
|