தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil Language & Literature > கவிப்பேரரசு வைரமுத்து - Kavi Perarasu Vairamuthu > தண்ணீர் தேசம் - part 1 >  தண்ணீர் தேசம் - part 2


thaNNiir dEcam of Vairamuthu - part I

தண்ணீர் தேசம் -I
கவிஞர் வைரமுத்து
 
Etext input: Major part (90%) provided by Anantha Vikatan in Anjal font format. Input of missing 10% by Mr. A. Arasu of IGCAR,Kalpakkam, Tamilnadu. Proof-reading and coordination: Mr. S. Srinivasan of IGCAR, Kalpakkam, Tamilnadu. This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
C - Project Madurai 2002. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

thaNNiir dEcam of Vairamuthu - originally published in 1996 as a 24-part series in the tamil weekly magazine Anantha Vikatan. Our sincere thanks go to Kavinjar Vairamuthu for giving permission (through his son Mr. Madhan Karky Vairamuthu )to release this Etext version free in the Internet and to the Publishers of Anantha Vikatan for providing us with the Etext file of this work.

This aRiviyal kaaviyam is about the 'sea odyssey'. KalaivaNNan is the hero;Tamilrojaa is the heroine. A lot of scientific facts about the sea, water,and the universe are sown in this modern poetry(pudhukk kavidhai). The work depicts the adventure of fishermen's life at sea.



1

கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.

கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோஜாவை மறந்துபோனான்.

அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.

அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.

என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.

இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.

பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.

மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.

நீங்கள் கடல்பைத்தியம்.

இல்லை. நான் கடற்காதலன்.

கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?

காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோஜா.
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.

அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.

ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.

காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.

அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.

வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.

அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.

கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.
ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?

இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.

எதனால்?

ஆக்டோ பஸ அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோ டிவிட்டால்?

அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.

சிரித்தது அவன் நுரைத்தது கடல்

தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா,
தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.

வா

மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.
குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.

ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.

மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.

ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்

பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.

கலைவண்ணன் கரைமீண்டான்.
அவளை ஆதரவாய் அணைத்து
அங்கவஸதிரமாய்த் தோளில்
அணிந்து அவள் சுட்டுவிழி தாழும்
வேளை கன்னத்தில் சுட்டுவிரல்
கையெழுத்திட்டான்.

காதல் மண்டியிட்டான். காதில்
ஓதினான்.

தமிழ்ரோஜா

அதைவிட சுகமாக
அம்சத்வனிராகம்கூட அவள்
பெயரை உச்சரித்திருக்க
முடியாது.

காதல் அழைக்கும் போதுதான்
பெயர்வைத்ததன்
பெருமைபுரிகிறது.

அந்த சுகம் மீண்டும் அவளுக்கு
வேண்டியிருந்தது. அதனால்
உம் கொட்டாமலிருந்தாள்.

தமிழ்ரோஜா

- இப்போது அவன் அழைத்தது
தோடிராகம்.

உம் என்றாள் தமிழ்.

தண்ணீருக்கு நீ பயந்தால்
உன்னைக்கண்டு நீயே
பயப்படுகிறாய் என்று
அர்த்தம்.

புரியவில்லை.

உன் உடம்பு என்பதே
முன்றில் இரண்டுபங்கு தண்ணீர்.
உன் அழகுதேகம் என்பது 65
சதம் தண்ணீர்.

மெய்யாகவா?

தமிழிடம்
பொய்சொல்வேனா?
விஞ்ஞானம் விளம்பக்கேள்...
வாழும் உயிர்களை
வடிவமைத்தது தண்ணீர்.
70 சதம் தண்ணீர் - யானை.
65 சதம் தண்ணீர் - மனிதன்.
என் அமுதமே. உன் உடம்பில்
ஓடுவது 7.2 லிட்டர் உப்புத்
தண்ணீர்.

நம்ப முடியவில்லை.

உண்மைக்கு உலகம்வைத்த
புனைபெயர் அதுதான்.

உடம்பில் ஏன் உப்புநீர்
ஓடுகிறது?

கடற்கொடை. தாய்தந்த
சீதனம். முதல் உயிர் பிறந்தது
நீரில் என்பதால் ஒவ்வோர்
உடம்பிலும் இன்னும்
ஓடிக்கொண்டேயிருக்கிறது அந்த
உறவுத் திரவம்.

முதல் உயிர் பிறந்தது
கடலிலா? நம்புவதெப்படி
நான்?

கலையின் கழுத்தைக்
கட்டிக்கொண்டாள் தமிழ்.
ஒருவருக்கான காற்றை
இருவரும் சுவாசித்தார்கள்.

சுகபோதையிலும் கலைவண்ணன்
உண்மை உளறினான்.

கடலில் பிறந்த முதல் உயிர்
தண்ணீரில்தானே சுவாசித்திருக்க
முடியும். அந்த மரபுரிமையின்
தொடர்ச்சிதான் இன்றும்
கர்ப்பத்தில் வளரும் சிசு
தண்ணீர்க் குடத்தில்
சுவாசிக்கிறது.

ஆகா, என்று ஆச்சரியம்
காட்டிய தமிழ் அவன் முகத்தில்
முள்குத்தாத பிரதேசம்தேடி
முத்தமிட்டாள்.

அந்த முத்தச்சூடு உயிரெல்லாம்
பரவக்கண்டவன், அவள்
கழுத்தடியில் கைபதித்துக்
குளிரக்குளிரக் குறுமுடி
கோதினான். குழந்தையே.
என் குழந்தையேஎன்று
கொஞ்சினான்.

புரிகிறதா? கடல் நம்
தாய். தாய்கண்டு தமிழ்
அஞ்சலாமா?

தாயென்றால் பூமியை அவள்
ஏன் புசிக்க வேண்டும்?

அவள் மீது குற்றமில்லை.
கடலின் கீழேநகரும் பாறைகள்
அவளை நகர்த்திவிடுகின்றன.

அவளுக்கா கருணையில்லை.
கடல் தந்த அனுமதியால்தான்
முழ்காத நிலப்பகுதி முச்சுவிட
முடிகிறது.

கடல்நீர் இடம்மாறி
நிலப்பரப்பில் நின்றால் எல்லா
இடங்களிலும் முன்று
கிலோமீட்டர் உயரம். தண்ணீர்
நிற்கும்.

புள்ளிவிரம் சொல்லியே
பொழுது
போக்கிவிட்டீர்கள்.

சரி, நல்லவிவரம்
சொல்லட்டுமா? ஒரு
முத்தத்தில் எத்தனை வோல்ட்
மின்சாரம்தெரியுமா?

போதும். போதும்.
புள்ளிவிவரப் புலியே.
ஆளைவிடுங்கள்.

விடமாட்டேன். வா.

தண்ணீரில் நனை அல்லது
தண்ணீரை நனை. அலையோடு
விளையாடு.

தெறிக்கும் திரவநட்சத்திரங்கள்
சொல்லாத இடங்களில்
விழுகையில் இல்லாத அனுபவம்
எழுமே....
அந்த சுகம் துய்.

எத்தனை மனிதர்
கடல்பார்த்தனர்? எத்தனை
மனிதர் இதில் கால்வைத்தனர்?

வா. இந்தச் சிற்றலையில்
கால் வைத்து யாரும் செத்துப்
போனதில்லை.

தண்ணீர் பயம் தவிர்.
சொட்டச் சொட்ட நனை.
கிட்டத்தட்டக் குளி.
நீரின் பெருமை நிறையப்பேர்
அறியவில்லை. காதலி பெருமை
பிரிவில். மனைவி பெருமை
மறைவில். தண்ணீரின் பெருமை
பஞ்சத்தில். அல்லது
வெள்ளத்தில்.

நீ உணவில்லாமல் ஒருமாதம்
வாழலாம். நீரில்லாமல்
ஒருவாரம் வாழமுடியாது.
தண்ணீர்தான் உயிர். இந்தக்
கடல் அந்த உயிரின் தாய்.
தாயோடு தள்ளி நிற்பதா?
வா.

எட்டி நின்றவளைக் கட்டிப்
பிடித்தான். திமிறினாள்.
வாழைத்தண்டாய்
ஓடிந்தாள். வாளை மீனாய்
வழுக்கினாள்.

அவன் முன்னுக்கிழுத்தான். அவள்
பின்னுக்கிழுத்தாள்.

வேண்டாம். இந்த
விளையாட்டுமட்டும்
வேண்டாம்.

என்னோடு வாழ்ந்தால் நீ
நெருப்புப் பள்ளங்கள் தாண்ட
வேண்டியிருக்கும். நீர்கண்டு
பயந்தால் எப்படி?

நெருப்புப் பயம் இல்லை.
தண்ணீர்தான் பயம்.
அவன் தூக்கமுயன்றான். அவள்
துவண்டு விழுந்தாள்.

கைதட்டிச் சிரித்தன அலைகள்.
நாடகம் பார்த்தன நண்டுகள்.

சிதறிவிழுந்தவளைச்
சேர்த்தெடுத்தான். அவளைச்
சுமந்து அலையில் நடந்தான்.

அவளோ அந்தரத்தில்
நீச்சலடித்தாள். இடுப்பளவுத்
தண்ணீரில் இறக்கிவிட்டான்.
அஞ்சினாள். தண்ணீரின்
ததும்பலில் மிரண்டாள்.

அவனை உடும்பாய்ப்
பற்றினாள். அவன் உதறி
ஒதுங்கினான்.

நுரைச் சதங்கைகட்டி ஆடிவந்த
அலைகள்கண்டு அலறினாள்.
பிரமைபிடித்துப்
பேச்சிழந்தாள்.

தூரத்திலிருந்து ஒரு பேரலை
அவள் பெயர் சொல்லிக்
கொண்டே படைதிரட்டி
வருவதாய்ப் பட்டது அவளுக்கு.
அவ்வளவுதான்.
அவள் ஞாபகச்சங்கிலி
அறுந்துவிட்டது.

அந்த முர்க்க அலையின்
மோதுதலில் தன்னிலை குலைந்து
தடுமாறி எழுந்து ஒருகணம்
மிதந்து மறுகணம் அமிழ்ந்து
மீண்டும் எழுந்து மீண்டும்
விழுந்தாள். அலைகளில்
தொலைந்தாள்.
---------------------------------------------------------------------
2

மருத்துவமனை.

குடல் குடையும் மருந்துவாசம்.
துடைத்துவைத்த சோகம்.

வெள்ளைவெள்ளையாய்
அவசரங்கள். ஆங்கிலத்தில்
அகவும் அழகுமயில்கள்.

அறை எண் 303.

மேகத்தில் நெய்தெடுத்த
மெல்லிய போர்வையின்கீழே
சோர்ந்துகிடந்தது
சுடிதார்ரோஜா. அவள்
கண்கள் செயற்கை உறக்கச்
சிறையிலிருந்தன.

பாரிஜாதப் பூவில்
பட்டாம்பூச்சி
உட்காருவதுபோல் படுக்கையில்
பைய அமர்ந்து அன்புமகள்
நெற்றிதொட்டார் அகத்தியர்.

மாலை நேரத்து வெயிலாய்
அது சூடுகுறைந்து சுட்டது.

உடம்பில் இப்போது
உப்புநீர் இல்லை. சுவாசப்பை
சுத்தம், நுரையீரல் தரைவரை
பிராணவாயு பிரயாணம்.
ஓய்வுதான் தேவை.
உறங்கவிடுங்கள்.

செவிலியின் வெள்ளை அறிக்கை
அவரை வெளியேற்றியது.

அறைக்கு வெளியே தூரத்தில்
தெரிந்த துண்டுவானத்தையே
பார்த்துச் சலித்த கலைவண்ணன்
தன் பக்கத்திலிருந்த
பூந்தொட்டியில் தன்
இதயம்போல் துடிதுடிக்கும்
இலைகளுக்குத் தாவினான்.

சிகரெட் புகை சிந்தனை
கலைத்தது. புகைக்குப் பின்னே
அகத்தியர் தோன்றினார்.

நல்ல உயரம். நாகரிகத்
தோற்றம். நாற்பதுகளில்
நட்சத்திரமாய்த் தொடங்கிய
வழுக்கை - ஐம்பதுகளில்
முழுமதியாய்
முற்றுகையிட்டிருந்தது.
தடித்த கண்ணாடி.
தங்கஃபிரேமுக்காக
மன்னிக்கலாம்.

பெருந்தொழில் அதிபர்.
நாடாளுமனறத்தில் -
வரிபாக்கிப்
பட்டியலில் வந்து வந்து
போகிறவர்.

கலைவண்ணனுக்கு அவரிடம்
பிடித்தது அவர் பெண்.
பிடிக்காதது அவர் பிடிக்கும்
சிகரெட்.

தமிழை இன்னும் கொஞ்சம்
மென்மையாய்க்
கையாண்டிருக்கலாம்
என்றார் அகத்தியர் புகைசூழ.

இப்படி நீரச்சம்கொண்டவள்
என்று நினைக்கவில்லை
நான்.

கனவுகள் நிஜங்களாகவும்,
நிஜங்கள் கனவுகளாகவும்
தோன்றும், அந்தப்
பள்ளிவயதில் கொடைக்கானல்
ஏரியில் பள்ளித் தோழிகளோடு
இவள் படகில் போனாள். அது
கவிழ்ந்தது. மீட்கப்பட்டவள்
இவள் மட்டும்தான். சில
நாட்களில் ஏரியெங்கும்
சீருடைப்பிணங்கள் மிதந்தன.
அன்று கொண்ட நீரச்சம்
இன்றும் தீரவில்லை.

நீரச்சம் நிரந்தர அச்சம்
அல்ல. நிச்சயம் களையலாம்.
இல்லையென்றால் அந்தப் பயம்
உடலையும் மனதையும்
உள்ளிருந்தே தின்றுவிடும்.
இந்தத் தண்ணீர்பயத்தைத்
தவிர்த்தாக வேண்டும்.

கவனம்.
தூசு எடுக்கும் அவசரத்தில்
கருமணியே
தூர்ந்துவிடக்கூடாது. எனக்கு
அவள் ஒரே பெண்.

இதுதான் அடிக்கடி கேட்கும்
அப்பாமொழி.
ஒரே பெண் என்றால்
நூறுசதம் அன்பா? இரண்டு
பெண்கள் என்றால் ஆளுக்கு
ஐம்பதுசதம் அன்பா? நான்கு
பெண்கள் என்றால் இதயத்தை
நான்காக்கி இருபத்தைந்து
சதமா?

ஒரே பெண் என்றால்
உயிர்ப்பாசம் வருமா?
இன்னொரு பெண் இருந்தால்
இவள் இறந்துபோகச்
சம்மதமா?

உங்கள் ஆண்மைகலந்த
அறிவுதான் என் மகளைத்
தலைசாயவைத்தது. என்னைத்
தலையாட்ட வைத்தது. ஆனால்
தர்க்கம் வேறு. தர்மம்
வேறு.
சில குணங்களை
எதிர்த்திடக்கூடாது.
ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயல்புகளை
ஏற்றுக்கொள்ளலாம்.
திரிபுகளை ஏற்றுக்கொள்ள
முடியாது.
எனக்கு நீல விழிகள் பிடிக்கும்.
ஆனால், தமிழ்ரோஜா விழிகள்
கருமை. இருள் உறைந்த
கருமை. நிறம் என்பது
நிறமிகளின் வேலை. அது
இயல்பு. ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் நீரச்சம் என்பது
திரிபு. அது விழியின்
கருமைபோல் இயல்பானதல்ல.
துணியில்
அழுக்கைப்போல் திரிபானது.
மனச்சலவை ஒன்றே
மருந்து.

சலவை செய்யும் ஆர்வத்தில்
சல்லிசல்லியாகிவிடக் கூடாது.
அவள் மென்மையானவள்.

அப்பாக்கள் செய்யும்
இரண்டாம் தவறு இது.
மென்மையை நீங்கள்
கற்பிக்கிறீர்கள். பெண்களின்
செருப்பைக்கூட
மெல்லியதோலில்
வடிவமைக்கிறீர்கள். பதினாறு
வயதுக்கு மேலும் பலூன்வாங்கி
வருகிறீர்கள்.
சில்லென்று முளைக்கும்
சிறகுகளைக்கூட வேண்டாத
ரோமங்களென்று வெட்டி
விடுகிறீர்கள்.
அதனால்தான் காற்று
கடுமையாக அடித்தாலே பல
பெண்களுக்கு ரத்தம்
கசிந்துவிடுகிறது.

ஒன்று சொல்கிறேன்
உங்களுக்கு. என் உயிரின்
கடைசிச்சொட்டுவரை
அவள்தான் நிறைந்திருக்கிறாள்.
என்
நீண்ட பயணத்திற்குத் தகுதியாக
அவளைத்
தயாரிக்கவேண்டும்.

அவள் உங்களுக்குத் தகுதி
இல்லாதவளா?

அப்படியில்லை.
அன்பில் - குணத்தில் -
காதலில் அவள் என்னிலும்
மிக்கவள். ஆனால், என்
வாழ்க்கைக்குத் தயாராய்
அவள் இன்னும்
வார்க்கப்படவில்லை.
என்னுடையது புயல்யாத்திரை.
அவள் பூஜையறைக்
குத்துவிளக்கு. அணைந்து
போகாமலிருப்பது எப்படி
என்பதைச் சுடருக்குச்
சொல்லிக்
கொடுக்கவேண்டும்.

அகத்தியர் பேசவில்லை.
தன் மெளனத்தைப் புகையாய்
மொழி பெயர்த்தார்.
பிறகு வேர்களில் வீழாமல்
இலைகளைமட்டும் நனைக்கும்
சாரலாய் - கலைவண்ணன்
காதுதொடாமல் தனக்குத்
தானே பேசிக்கொண்டார்.

நான் தவறான இடத்தில்
தலையாட்டி விட்டேனா?

காற்றில் கசிந்த வார்த்தை
அவன் காதுகளில்
விழுந்துவிட்டது. சுள்ளென்று
ஏதோ சுட்டது.
பொங்கிவழியாமல்
புலனடக்கம்கொண்டான்.
மோனோலிசாவின்
புன்னகைதிருடி உதடுகளில்
ஒட்டிக்கொண்டான். மெல்ல
மெல்லச் சொல்லவிழ்த்தான்.

நீங்கள் தலையாட்டியது
தப்பானவனுக்கல்ல.
சரியானவனுக்குத்தான்.
எனக்குக் கிராமத்துக்
குட்டிச்சுவர் வாழ்க்கையும்
தெரியும். நகரத்து நட்டசுவர்
வாழ்க்கையும் தெரியும்.

எனக்குச் சோளக்கூழில்
மிதக்கும் மிளகாயும் தெரியும்.
உங்கள் சாராயக் கிண்ணங்களில்
முழ்கிமிதக்கும் பனிக்கட்டிகளும்
தெரியும்.

எனக்கு மழையில் நனைந்த
வைக்கோல் வாசமும்
தெரியும். சொட்டுக்கு ருபாய்
நூறு தந்தால் மட்டுமே
மணக்கும் அரேபிய அத்தரும்
தெரியும்.

செருப்பில்லாத எனது
பாதத்தில் காட்டுப்பாதையில்
குத்திய கருவேலமுள்ளை
நகரத்துத் தார்ச்சாலையில்
வந்து தேய்த்தவன் நான்.

நீங்கள் விதையில்லாத
திராட்சைகளை விழுங்கி
வளர்ந்தவர்கள். நான்
கற்றாழைப்பழத்தின்
அடியிலிருக்கும் நட்சத்திரமுள்
பார்த்தவன்.

நான் சென்னை வந்தது என்
அறிவுக்கு அங்கீகாரம் தேடி
அல்ல. உடல் உழைப்புக்கும்
முளை உழைப்புக்குமான
வித்தியாசத்தின் வேர்காண
வந்தேன்.

சென்னை நூலகங்களில்
வாடகைதராமல் வசித்தேன்.
இரைப்பையைப் பட்டினியிட்டு
முளைக்குப் புசித்தேன்.
சமுகத் தேடல் கொண்ட
பத்திரிகையில் சேர்ந்தேன்.

ஒரு கல்லூரி விழாவில் உங்கள்
மகளைச் சந்தித்தேன்.
முதன் முதலில் என் உயிர்மலரக்
கண்டேன்.
மென்மைச் சிறையைவிட்டு
அவளை மெல்ல மெல்ல மீட்க
நினைக்கிறேன்.
ஏனென்றால் நான் பயணிப்பது
மயிலிறகு பரப்பிய மல்லிகைப்
பாதையல்ல.
நான் சகாராவின்
சகோதரன்.
பகல் சுடும் - இரவு குளிரும்
- இதுதான் என் பயணம்.

நான் பத்திரிகைக்காரன்.
பேனாவின் முடிதிறந்தபோதே
என் மார்பையும் திறந்துவைத்துக்
கொண்டவன்...

அவன் பேசப்பேச, துடிக்கும்
ரத்தம் துடிக்கிறதுஎன்று
அகத்துக்குள் சிரித்த அகத்தியர்
அவன் முச்சுவாங்கவிட்ட
இடைவெளியைத் தனதாக்கிக்
கொண்டார்.

தமிழை
மணம்செய்துகொண்டால்
உங்கள் பாலைவனம் கடக்கச்
சொந்த விமானம் ஒன்று
தந்துவிட
மாட்டேனா?

சொந்தத்தில் விமானம்
வாங்கலாம். அனுபவம் வாங்க
முடியுமா?

உங்கள் பணம் எனக்குக்
குடைவாங்கித் தரலாம்.
மழைவாங்கித் தர முடியுமா?

உங்கள் பணம் மின்னல்.
அதிலிருந்து வெளிச்சம்
வரலாம்.
ஆனால், வெளிச்சமெல்லாம்
தீபமாகுமா?

அகத்தியர் அவன்
தோள்தொட்டார். அந்தத்
தொடுதலில் அனுபவம்
கனத்தது.

பணம் இல்லாதவன்தான்
பணத்தை மதிப்பதில்லை.
சொல்லிலும் உதட்டிலும் சிந்தி
வழிந்தது சில்மிஷம்.

நான் பணம்
உள்ளவனைத்தான்
மதிப்பதில்லை.
ஒவ்வொரு பணக்காரனின்
ஆழத்திலும் கண்ணுக்குத்
தெரியாத
ஒரு குற்றம்
கால்கொண்டிருக்கிறது.

பணம் ஒரு விசித்திரமான
மாயமான். அது தன்னைத்
துரத்துபவனுக்குக்
குட்டி போட்டுவிட்டு
ஓடிக்கொண்டேயிருக்கிறது.
குட்டிகளில் திருப்தி அடையாத
மனிதன் தாய்மானைப் பிடிக்கும்
வேட்டையில் தவிக்கத் தவிக்க
ஓடிச் செத்துப் போகிறான்.

இந்தப் பிரபஞ்சமே
எனது பெட்டி
என்கிறேன் நான். இல்லை
உங்கள்வீட்டுப் பெட்டிக்குள்தான்
பிரபஞ்சம் என்கிறீர்கள்
நீங்கள்.
உங்களைப் பிரபஞ்சமாய்
விரியவிடுங்கள். பிரபஞ்சத்தை
உங்களாய்ச் சுருக்கி
விடாதீர்கள்.

எப்போதும் வெப்பம்.
எதிலும்
ஆவேசம். எதையும்
அறிவாகவே
பார்க்கும் அவசரம். இது
தகாது
கலைவண்ணன்.
நீங்கள் புன்னகையைக்
கழற்றிவிட்டுப் போர்வாள்
தரித்திருக்கிறீர்கள்.

போர்தான். அடுத்த
நூற்றாண்டு
யுத்தம்தான். மிருகவாழ்க்கை
மனிதனுக்குத் திரும்பும். வலிமை
உள்ளது மட்டுமே தப்பிக்கும்.
அன்பு - அறம் - எல்லாம்
அன்றில் - அன்னம் பட்டியலில்
காணாமல்போகும்.
அடுத்த நூற்றாண்டில் எவனும்
சைவனாய் இருக்கமாட்டான்.
நரமாமிசம் தின்பான்.
டீக்கடைகளின் மனிதரத்தம்
விற்கும்.

இந்த நூற்றாண்டு மனமும்
உடம்பும்
அடுத்த நூற்றாண்டுக்காகாது.

நகரவாழ்க்கை என்னும் இந்தத்
தார்ப்பாலைவனம் கடக்க
தோல் - தோள் இரண்டும்
தடித்திருக்கவேண்டும்.

இனி வருவது போராளிகளின்
காலம். மனிதர்களோடு
மனிதர்களும் -
எந்திரங்களோடு
எந்திரங்களும்,
தொடர்ந்து யுத்தம்
புரியும் ஒலிகளின் நூற்றாண்டு.

அந்த யுத்தத்திற்குத் தங்களைத்
தயாரித்துக் கொண்டவர்கள்
மட்டுமே ஜீவிதரயிலின் அடுத்த
நூற்றாண்டுப் பெட்டியில் ஏறிக்
கொள்ளலாம். முடியாதவர்கள்
இந்த நூற்றாண்டின்
இறுதியிலேயே
இறங்கிக் கொள்ளலாம்.

வாழ்க்கையின்மீது
நீங்கள்மட்டுமே
நிறைவேற்றிக்கொள்ளும்
அவநம்பிக்கைத் தீர்மானம்
இது.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்து
உயர்வது உங்கள்
ஒருகரமாய்த்தானிருக்கும்.
இன்னொரு கரம் உயர்ந்தால்
அது உங்கள் இடக்கரமாய்
இருக்கலாம்.

அவ்வளவுக்கு வாழ்க்கை இன்னும்
அழுகிவிடவில்லை. அழுகப்
போவதுமில்லை.

வேட்டையாடுகிற
வேட்டையாடப்
படுகிற இரண்டு இனங்களும்
உயிர்கள் தோனறிய
காலந்தொட்டு
உலவிக்
கொண்டுதானிருக்கின்றன.
ஆனால், சிங்கம்
அழிந்துவிடவுமில்லை. முயல்
முடிந்துவிடவுமில்லை.

வலைகளின் எண்ணிக்கை
அதிகமானதற்காய் மீன்களின்
எண்ணிக்கை
குறைந்துவிடவில்லை.

ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால் வலைகளை அறுக்கத்
தெரிந்தவைமட்டுமே
வாழ்கின்றன
என்கிறேன்.

நம் வாழ்க்கை முறை உடம்பை
வாழையாய் வளர்த்துவிட்டது.
மனதைக் கோழையாய்
வளர்த்துவிட்டது. உடம்புக்கும்
மனதுக்கும் ஒருமைப்பாடு
இல்லை.

செருப்புக் கடித்துச்
செத்துப்போகும்
தேகங்களை
வளர்த்துவிட்டோ ம்.
தந்திவந்தால் இறந்துபோகும்
இதயங்களை
வளர்த்துவிட்டோ ம்.

தேகம் வன்மை செய்து இதயம்
செம்மை செய்யும் பயிற்சிகள்
இல்லை.

இனிவரும் நூற்றாண்டுகளில்
மழை
நிறைய இருக்குமோ
இல்லையோ -
இடி நிறைய இருக்கும்.

கற்பகவிதைகள் வாங்கிக்
காளான் சாகுபடி செய்யும்
இந்தக் கல்விமுறையும் -
ஈசல் பண்ணைகளாகிவிட்ட பல்கலைக்
கழகங்களும் மாணவர்களுக்குத் தந்தனுப்புவது
அடுத்த நூற்றாண்டு ஆயுதம் அல்ல
கடந்த நூற்றாண்டுக் கவண்வில்.

உங்கள் பெண்ணும் விதிவிலக்கல்ல அவள்
ஈசல் உடம்புக்காரி காளான் மனசுக்காரி

என்னிடம் விட்டுவிடுங்கள் எனக்கு
அவளை இணை செய்து கொள்கிறேன்.

அகத்தியர் அவன் கண்களைக் கவனித்தார்
அவற்றில் நம்பிக்கை நட்சத்திரங்கள்
மிதந்து மிதந்து மின்னின.

அவனது சொல்லின் உஷணம் அவரைச்
சுட்டாலும், நெல்லிக்காயின் ஆழத்திலிருக்கும்
இனிப்பை நேசிப்பதுபோல் - அவன்
சொல்லின் உள்ளிருக்கும் அசையாத
நம்பிக்கையை ஆராதித்தார்.

என்ன அது சத்தம்?

என்னை விட்டுவிடுங்கள். தண்ணீரில்
கொல்லாதீர்கள். நீங்கள் என்னை நேசிக்க
வில்லை. நீங்கள் என்னை நேசிக்கவில்லை.

தமிழ் ரோஜாவின் கதறல் அவர்களின்
காதுமடல் திருகியது. அவர்கள் கால்களால்
பறந்தார்கள்.
---------------------------------------------------------------------
3

அன்புள்ள தமிழ்ரோஜா.

இதுவரை உனக்கு நான் எந்தக்
கடிதமும் எழுதியதில்லை.

கடிதம் என்பது தூரங்களின்
காகித வடிவம்.

உனக்கும் எனக்கும்
தூரமில்லை.
உன் காதுகள் என்
உதடுதொடும்
தூரத்திலேயே இருந்ததால்
காகிதத்தில் பேசும் அந்நியம்
நேர்ந்ததில்லை.

இன்னொன்று.
காதல் கடிதங்கள் உணர்ச்சியின்
மத்தாப்புகளாய் இருப்பதுண்டே
தவிர உண்மையின் தீபங்களாய்
இருப்பதில்லை.

ஒரு காதல் கடிதம்
படிக்கப்படும்போதே
எண்பது சதவிகிதம் கழிக்கப்பட
வேண்டும். மிச்சமிருக்கும்
இருபது சதவிகிதத்தில்
உணர்ச்சியின் வண்டலின்கீழே
உண்மையும் கொஞ்சம்
உறைந்திருக்கும்.

உலகத்தின் காதல்
கடிதங்களெல்லாம்
அழகானவை. ஆனால்
ஆரவாரமானவை.

நிலாவில் ரத்தம் கசிவதுபோல்
மீசையோடு பிறந்த
குழந்தைபோல்-
கவனம் ஈர்ப்பவை.
ஆனால் எதார்த்தம் மீறியவை.

எனவே இடைவெளி
இருந்திருந்தாலும் உனக்கு நான்
எழுதியிருக்கமாட்டேன்.

பள்ளம் நிரப்ப
நுரைகொட்டியிருக்கமாட்டேன்.

ஆனால், இப்போது
எழுதுகிறேன்.
ஏனென்றால், இது காதல்
கடிதமல்ல.
என் தன்னிலைவிளக்கம்.

உன்னைக் காதலிக்கத்
தொடங்கியபிறகு
ஒருநாளில் எத்தனை
மணிநேரம் நான்
முட்டாளாயிருக்கிறேன்
என்பதன் மொத்தத்
தொகுப்பு.

நான் உன்னை
நேசிக்கவில்லையோ என்று உன்
உணர்வுகள் உறங்கும்போது நீ
உச்சரித்தாய்.

என் காதலின் எடை என்ன
என்பதை
மில்லிகிராம் சுத்தமாய்ச்
சொல்லிவிட முடியாது.

கத்தியால் கைகீறி ரத்தம்
காட்டவும் மாட்டேன்.

நேசம்காட்ட அனுமன்போல்
நெஞ்சுகிழிக்கவும் மாட்டேன்.

பின் -
அடையாளம் எதுவென்பாய்.

என் வானத்தில் சூரியன்
அஸதமிக்கவில்லையே.
அதுதான் அடையாளம்.

எந்தப் புதுப்பேனா
வாங்கினாலும்
என்பெயர் எழுதிப்பார்ப்பதை
மறந்துஅனிச்சைச் செயலாய்
உன்பெயர்
எழுதிப்பார்க்கிறேனே.
அதுதான் அடையாளம்.

கவிதைகள் அடையாளம்.
என் கண்ணீர் அடையாளம்.

ஒருநாள் என் அறையில் நீ
தவறவிட்ட
உன் பூப்போட்ட கைக்குட்டை
என் பூஜைப்பொருள்.

என் வீட்டுக்கண்ணாடியில்
உன்படத்தை ஓரத்தில் ஒட்டி,
உன் படத்தின் பக்கத்தில்
என் பிம்பம் படியவைத்து
ஜோடிப்பொருத்தம்கண்டு
சுகம்காண்பதில் என்
சிநேகமான காலைப்பொழுது
செலவாகிறதென்று தெரியுமா
உனக்கு?

நினைவுக் கொசுக்களால்
நித்திரைதொலைந்த
ஒரு நீலராத்திரியில்
கால்கடுக்க நடந்து,
கடற்கரை அடைந்து, நீயும்
நானும் சந்தித்த இடத்தில்
அனாதைக் குழந்தைகளாய்
அழுதுகொண்டிருந்த உன்மல்லிகைஉதிர்வுகளை
மடியோடு அள்ளிவந்து
மார்போடு
தழுவிக்கொண்டு விடியவிடிய
விழித்துக்கிடந்தேனே.
அந்த நேச உஷணத்தின்
நிறமறிவாயா நீ?

என் பத்திரிகை அலுவலகத்தின்
எக்ஸரே கண்ணாளர்கள்
உன்னையும் என்னையும்
ஊடறுத்துப் பார்த்து,
தமிழ்நாட்டிலேயே
தமிழ்ப்பற்று அதிகமுள்ளவன்
கலைவண்ணன் மட்டும்தான் என்று
கிண்டல்மொழி சுண்டுவதைக்
கண்டதுண்டா நீ?

பூமியின் அடிவயிற்றில்
கனன்றுகொண்டிருக்கும்
அக்கினிமாதிரி என் அடிமனத்தில்
கனன்றுகொண்டிருக்கும்
ஆசைஅக்கினி
உன்னைச் சுடவில்லையா?

என் நேசம் புரியும் முன்பு நீ
என் நெஞ்சுபுரிய வேண்டும்.

உன்னை உன் வாழ்க்கைக்குத்
தயாரிக்கிறேன்.

தண்ணீர்பயம் கொண்டு
தள்ளிநின்றால்
நாளை எப்படி வெந்நீராற்றில்
விசைப்படகு விடுவாய்?

நீ சுத்தத் தங்கம்தான்.
நல்ல தங்கத்தில் நகைசெய்ய
முடியாது.
சிறிதே கலக்கவேண்டும்
செம்பு.

தைரியம் செம்பு. அனுபவம்
செம்பு.
அதைத்தான் உன்னில் கலக்க
நினைக்கிறேன்.

உன் கங்காரு மடியைவிட்டு
வெளியே வா.
நான் சிங்கத்தின் முதுகு...
ஏறிக்கொள்.
முதலில் - தார்ச்சூடு
காணட்டும் உன்
தாமரைப்பாதம்.

உன் வெல்வெட் திரைவிட்டு
வெளியே வா.
குளிரில் கோணிபோர்த்துக்
கூவம்கரைக் குடிசை ஒன்றில்
இரவுகழி.

உன் சைவக்கோடு கட.
கூறுகட்டி மீன்விற்கும் குப்பத்துக்
கிழவியைச்
சற்றே நகரச் சொல்லிவிட்டு
ஒரு வெயில்பகலில் மீன்
விற்றுப்பார்.

அரசாங்க லாரியில்
தண்ணீர்பிடி.
இரண்டுகுடம் வேர்வைக்குப்
பிறகு
ஒருகுடம் தண்ணீர் நிறைவதை
உணர்.

வெள்ளிக்கரண்டியோடு
பிறந்தவளுக்கு ஏன்
வேலையற்றவேலைஎன்பாய்.

ஓர் ஆணியைச் சுயமாய்
அடிக்கத்
தெரியாதவளுக்கு
வெள்ளிக்கரண்டி
சொந்தமாய் இருக்கக்கூடாது.
அனுபவங்கள் தடுப்பூசிகள்.
போட்டுக்கொள்.

அம்மைகுத்த வந்தால்
கைமறைக்கும்
குழந்தைபோல்
அடம்பிடிக்காதே.

அனுபவங்களுக்கு உடம்பு, மனம்
இரண்டையும் உட்படுத்து.
தன்னைத் திருப்பிப் போடுவதன்
முலம்தான் பூமி சூரியனிடம்
அனுபவம் பெறுகிறது.

வசந்தம்-கோடை-மழை-குளிர்-
வெயில்-புயல் என்ற
அனுபவங்கள்
இல்லையேல் எப்போதோ பூமி
இறந்துபோயிருக்கும்.

கல்யாணச் சந்தையில் உன்னைத்
துலக்கிவைப்பதற்கு மட்டுமல்ல
கல்வி.
அனுபவங்களின்பால்
ஆற்றுப்படுத்துவது கல்வி.

நமக்குள் ஆண்-பெண் என்ற
பேதம்
நம் அவசரத்தேவைக்காக
மட்டும் இருக்கட்டும்.

மற்றபடி பிறப்புமுதல்
இறப்புவரை
உணர்ச்சியும் வலியும்
ஒன்றுதான்.

ஆண் உடம்பில்
ரத்தம் - 5 1/2 லிட்டர்.
பெண் உடம்பில் -
5 லிட்டர் என்ற
பேதமிருந்தாலும் செல்களின்
செயல்கள் ஒன்றுதான்.

எனவே ஆணுக்குத்தான் அதிக
உரிமை. பெண்ணுக்கில்லை என்ற
பிற்போக்குத்தனத்திலிருந்து
பிதுங்கி வெளியே வா.

ஏ பணக்கார நத்தையே.
முதலில் நீ உன் தங்கக்கூடு
தகர்.

இந்தப் பிரபஞ்சமே
பொதுவென்று கொள்ளாமல்
மனிதர்கள் மனைப்பட்டா
வாங்கும் போராட்டத்திலேயே
மரித்துப்போகிறார்கள்.

பயன்படுத்தாத வானம் -
பயன்படுத்தாத சூரியன் -
பயன்படுத்தாத நட்சத்திரம் -
பயன்படுத்தாத பூமி -
பயன்படுத்தாத முளை
மனிதகுலத்துக்குப்
பாக்கியிருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தனது
சொந்த
முளையைக்கூட அடுத்தவன்
மனைவிமாதிரி
பாவிப்பதற்குப்
பயப்படுகிறான்.

இரண்டு சதவிகிதத்துக்குமேல்
முளை இங்கே
வேலை வாங்கப்படவில்லை.

தொண்ணூற்றெட்டு சதவிகித
முளை சாகும்வரை
செல்வியாகவே இருக்கிறது.

நான் என் புலன்கள் திறந்து
பிரபஞ்ச எல்லைவரை பறக்கப்
பிரியப்படுகிறேன்.
நீ மழையில் நனைந்த
கிளிக்குஞ்சாய்
மறுகிநின்றால் எப்படி?

சிறகு விரித்து வா.
சிலிர்த்து வா.

உனக்கு நானோ எனக்கு
நீயோ
சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம் வா.

உனக்கு நான் துன்பம்
செய்திருந்தால்
என்னை நீ மன்னித்துவிடு

நான் உனக்கு நறுக்க நினைத்தென்னவோ
நகம்தான். ஆனால், விரல் காயமாகிவிட்டது.

எப்போதும் படுத்தே கிடக்காதே.
தலையணையொன்றும் மார்க்கண்டேயனின்
சிவலிங்கம் அல்ல.

நம்பிக்கையின் சக்தியை உடலெங்கும் பரப்பு
உன்னை உணர், என்னை நினை.

என்னை மன்னித்துவிட்டாய் என்பதன்
அடையாளமாய் என் குயிலே
தொலைபேசியில் கூவு.

ஆலயமணிகளையும் மாதாகோயில்
மணிகளையும் விட தொலைபேசி
மணியில்தான் நம் காதல் பூஜிக்கப்படுகிறது.

எப்போது கேட்கும் உன் தொலைபேசிச்
சங்கீதம்?

காதலோடு........
கலைவண்ணன்

ஒருதாய் தன் குழந்தையை உறங்கவைப்பது
போல் கடிதத்தின் இமை முடினான். காகிதப்
பறவை சிறகடித்தது.

பத்திரிகைப் பணியை அவன் நேசிக்கிறான்.

அவனுக்கு உலகின் ஜன்னல்களை ஓசையோடு
திறந்துவிட்டது பத்திரிகை.

சூரியன் - பூமி - நிலா இவற்றை
அவன் வாயில் மாத்திரைகளாய்ப் போட்டு
தண்ணீர் ஊற்றியது பத்திரிகை.

அந்தப் பத்திரிகையில் அவன் அதிகம்
நேசிப்பது அவனுக்குத் தந்திருக்கும் சுதந்திரத்தை.

அமைப்புச் சார்புகொண்டவன் எவனும் இங்கே
உண்மை சொல்லமுடிவதில்லை.

அரசு சார்ந்து - அரசியல் சார்ந்து - மதம் சார்ந்து -
தத்துவம் சார்ந்து உண்மைகள் முழுப்பிரசவத்தோடு
வெளிவருவதில்லை.

மக்கள் சார்பு கொண்டவன் மட்டுமே இங்கே
உண்மை பேச முடியும்.

தன்னைப் போலவே தன் பத்திரிகையும்
மக்கள் சார்பு கொண்டது என்ற
நம்பிக்கையில்தான் அவன் அந்த
நாற்காலிக்குத் தாலிக் கட்டியிருந்தான்.

ஒருவகையில் பத்திரிகையும் காதலிதான்.
இரண்டும் குறித்த நேரத்தில் வராவிட்டால்
மாரடைப்பு வந்துவிடும்.

அந்த வாரத்தில் தனக்கான கட்டுரையை
ஆதாரப்படுத்தி, அழகுபடுத்தி உண்மை
களைக்காதிருக்க அங்காங்கே நகைச்சுவை
தெளித்து நயம் சேர்த்தான்.

அவன் இருதயம் மட்டும் தூரத்து மேஜையில்
துடித்துக் கொண்டிருந்தது.

அங்குதான் தொலைபேசி இருந்தது.

அந்த பிளாஸடிக் கூட்டுக்குள் அவன் குயில்
எப்போது கூவும்?

என் காதல் பூஜையின் கோயில்மணி எங்கே?

தொலைபேசியில் ஒலிக்கும் என் தோடி ராகம்
எங்கே?

தயவுசெய்து முணுமுணுக்கவும் என்று
தொலைபேசி அருகே எழுதிவைத்தால் என்ன?
கடைசியில் அது இசைத்தது கலைவண்ணன்
கலைவண்ணன் என்றே அழைத்தது.

ஒன்றாம் மணி அடங்கி இரண்டாம் மணி
முடிவதற்குள் ஓடி எடுத்தான். பெருமுச்சும்
பரபரப்பும் இழைய நான் கலைவண்ணன்
என்றான்.

எதிர்முனையில் கண்ணீர் பேசியது தன்
தாய்மொழியில் பேசியது.

கண்ணீரின் தாய்மொழி விசும்பல்தானே?
---------------------------------------------------------------------
4

இராயபுரம் கடலோரம்.

விஞ்ஞான அன்னங்களாய்
விசைப்படகுகள்.

தண்ணீர்த் தவளைகளாய்க்
கட்டுமரங்கள்.

தாலாட்டும்
தண்ணீர்த் தொட்டிலில்
வாலாட்டும் ஒரு
கடற்கொக்கு. தண்ணீரில்
தங்கம்கரைக்கும்
சொக்கச்சூரியன்.

கடலுக்குள் தலைதூக்கும்
கரும்பாம்பாய்
நீண்டுகிடந்த அந்தத்
தார்ப்பாலத்தின் முடிவில்
கலைவண்ணன் மார்பில் தழைந்து
மடியில் மாலையாய்க்
கிடந்தாள் தமிழ்ரோஜா.

அழுது அழுது கடைசியில்
தூங்கிப்போகும்
ஒரு குழந்தைமாதிரி
விசும்பி விசும்பிக் கிடந்தவள்
கண்ணீர்தீர்ந்து மெளனமானாள்.

சத்தியம்செய். இனி என்
நேசத்தைச்
சந்தேகிக்க மாட்டாயே.

அவளைக் காதுக்குள் காதலித்த
கலைவண்ணன்
அவள் அங்கங்களில் எதுவும்
அவனுக்கு வெளியே
வழியாதவண்ணம் வாரி எடுத்து
வசதி செய்து கொண்டான்.

இரண்டு ஒட்டுமாஞ்செடிகளைக்
கட்டுவதுபோல்
அவளைத் தன் மார்போடு
பதித்து முத்தப்பசையிட்டு
ஒட்டிக் கொண்டான்.

அவள் உடம்பெங்கும் ஒரு
பத்திரமான
பாதுகாப்புணர்ச்சி
பரவியது.

அதுதான்.

ஒவ்வொரு பெண்ணின்
உயிர்த்தேவை அதுதான்.

அந்த இதம்... அந்தக்
கதகதப்பான
உத்தரவாதம்...
அந்தத் தடம்பதியாத
தடவல்... பாசம் குழைத்த
ஸபரிசம்...

ஒவ்வொரு பெண்ணின் உள்ளாசை
அதுதான்.

பெரிதும் பெண்கள் ஆராதிப்பது
அதிரப்புணரும்
அந்நிகழ்வை அல்ல.

அவர்கள் அதிகம் விரும்புவது
இந்த நேசம்
நிஜம் என்னும் நினைப்பை.

அவர்கள் பெரிதும்
பிரியப்படுவது பின்கழுத்தில்
விரல்பதித்துக்
கூந்தல் ஆழத்தில் செய்யும்
கோதுகையை.

பூக்களுக்குச்
சுளுக்கெடுப்பதுபோல்
விரல்களுக்குச்
சொடுக்கெடுக்கும் அந்த
வேடிக்கையை.

தனக்குரியவனின்
முடிகொண்ட மார்பில்
முகம் புதைத்து
விழித்துக்கொண்டே உறங்கும்
ஒரு மயக்கநிலையை.

அந்த மனோநிலையில்
மயங்கிக் கிடந்தாள்
தமிழ்ரோஜா.

இமைகளை விழியிலிருந்தும்
தன்னை அவன் மார்பிலிருந்தும்
விலக்கிக்கொள்ள விரும்பாமல்
வினவினாள்.

எனக்கு ஏனிந்த
வெயில்குளியல்?

காதலரைச் சுடுவதில்லை
என்பது காலங்காலமாய்
நிலவிவரும்
சூரியத் தீர்மானம்.

எப்போதும் என்னை
இங்கேதான் அழைக்கிறீர்கள்.
மெரீனா பிடிக்காதா?

அவன் அவள் கன்னத்துக்கும்
உதட்டுக்கும்
இரண்டங்குல இடைவெளியில்
பதில் பேசினான்.

மெரீனா - திருமணத்தின்மீது
நம்பிக்கையில்லாதவர்கள்
சந்திக்கும் இடம்.

அவள் தளும்பிச் சிரித்ததில்
அவள் கன்னம்
அவன் உதட்டில் விழுந்தது.

சரி... சாந்தோம்?

அது காதல்மீதே
நம்பிக்கையில்லாதவர்கள்
சந்திக்கும் இடம்.

ஓகோ. இது?

நம்பிக்கைமீது
நம்பிக்கை உள்ளவர்கள்
சந்திக்கும் இடம்.

ஓர் அலை ஓங்கி எழுந்துவந்து
கைதட்டிவிட்டு
மீண்டும்
கடலுக்குள் போனது.

அந்த அலைஓசை அச்சத்தில்
அவன் உடம்புக்குள்
ஓடிஒளிவதுமாதிரி
அவனுக்குள் ஒட்டி ஒடுங்கினாள்
அவள்.

ஓ, கடலே. நீ இன்னும்
சில அலைகளை
அடுத்தடுத்து எனக்காக
அனுப்பிவைக்கக் கூடாதா?

புல்லாங்குழலின் காதில்
உதடு ஊதுவதைப் போல
அவன் அவள் காதில்
குறைந்த குரலில்
குனிந்து பேசினான்.

உனக்குப் பிடித்த ஒரு
செய்தியும் பிடிக்காத
ஒரு செய்தியும்
சொல்லட்டுமா?

ஒருமுறை கண்திறந்து
ம்... சொல்லிவிட்டு
மறுபடி முடிக்கொண்டாள்.

உனக்குப் பிடித்த
செய்தி...
நீ கடைசிப் பரீட்சை
எழுதியதும் தேர்வு
மண்டபத்திலேயே
நம் திருமணம்.

சரி, பிடிக்காத
செய்தி?

கடலுக்குள் நம் முதலிரவு.

அய்யோ.

அவள் அவனை
நிஜமாய்க் கிள்ளிப்
பொய்யாய் அழுதாள்.

தூரத்தில் கரையோரத்து
விசைப்படகு ஒன்று
கடல்புக
எத்தனித்துக்
கொண்டிருந்தது.

அதன் எந்திரஓசை, ஓரத்தில்
மேய்ந்த மீன்களையெல்லாம்
ஆழத்தில் அனுப்பிவைத்தது.

கலைவண்ணன் மீண்டும்
கடல்பார்த்தான். மடியில்
கிடக்கும் புதையலை
மறந்துபோனான்.

அவள் அவனை உதறி
எழுந்தாள். ஊடல் கொடி
பிடித்தாள்.

உண்மையில் நீங்கள்
நேசிப்பது கடலையா? -
என்னையா?

உன்னைத்தான். நிச்சயமாய்
உன்னைத்தான். கடலைவிட
மதிப்புடையவள் என்
காதலியே
நீதான்.

கடலைவிட
மதிப்புடையவளா? அவள்
கண்விரிந்தாள்.

ஆமாம். ஒரு டன்
கடல்தண்ணீர் 0.000004
கிராம்
தங்கம் வைத்திருக்கிறது.

ஆனால், 72 சதவிகிதம்
மட்டுமே தண்ணீர் கொண்ட
உடலில்
நீ 50 கிலோ கிராம்
தங்கமல்லவா
வைத்திருக்கிறாய்.

நான் உன்னைக்
காதலிப்பேனா? கடலைக்
காதலிப்பேனா?

அவள் காதுகள் முடிக்
கத்தினாள். போதும்.
போதும். உங்கள் புள்ளிவிவரம்
போதும்.

கடலுக்குள் நுழைவதற்குத்
தூரத்து விசைப்படகு துடித்துக்
கொண்டிருந்தது.
நான் கடல்பார்த்தபோதும்
உன் கண்பார்த்தபோதும்
மட்டும் பிரமித்திருக்கிறேன்
தமிழ்.

நீலக்கடல்பற்றி
நிறையப் படித்தேன். உன்னைப்
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.

என் ஒவ்வொரு கனவிலும்
உலாவரும் கடல் தேவதை
நீதான்.

நீ கடல். நான் பூமி.

என் மீது உன் அலைகளை
அனுப்பிக்கொண்டே
இருக்கிறாய்.

நீதான் என்மீது
புயல்வீசுகிறாய். நீதான்
என்மீது
மழைதூவுகிறாய்.

ஒவ்வொரு நாளும் என்
ஓரக்கரைகளை அரித்து
அரித்து என்னை உன்
உள்ளிழுத்துக்
கொண்டிருக்கிறாய்.

கடல் இல்லையென்றால்
வானுக்கு நிறமில்லை. நீ
இல்லையென்றால் என்
வாழ்க்கைக்கு நிறமில்லை.

நீ கடல். நான் பூமி என்பது
வெறும் உவமை
அல்ல. உண்மை.

சூரிய வெப்பத்தை உடனே
உள்வாங்கி
உடனே வெளிவிடுகிறது பூமி.
உடனே கொதித்து
உடனே குளிர்ந்துவிடும்
என்னைப் போல.

சூரிய வெப்பத்தை
மெல்லமெல்ல உள்வாங்கி
மெல்லமெல்ல வெளிவிடுகிறது
கடல் - அணு
அணுவாக அன்புவயப்பட்டு
உயிர்நிறையக்
காதலிக்கும் உன்னைப்
போல.

கலைவண்ணனுக்குப்
புனைபெயர் கடல்மைந்தன்
என்று வைக்கலாம்.

நான் மட்டுமல்ல.
ஒவ்வொரு மனிதனும் கடலின்
மைந்தன்தான்.
ஒவ்வொரு பெண்ணும்
கடலின் புத்திரிதான்.
ஒன்றை மறந்தேன். இன்னொரு
வகையிலும் நீதான் கடல்.
நான்தான் பூமி.

எந்த வகையில்?

முன்றில் இரண்டுபங்கு தண்ணீர்
இருந்தும் மிச்சமுள்ள பூமி,
தாகத்தால் தவிக்கிறதே...
அதைப்போல -
அமிர்தப் பாத்திரமாய் நீ
அருகிருந்தும் தாகப்பட்ட மனசு
தவியாய்த் தவிக்கிறதே.

தள்ளியிருந்த தமிழ்ரோஜா
தாவும் குழந்தையாய்
அருகில் வந்தாள்.

அதுதான் எனக்கும்
ஆச்சரியம். தண்ணீர்
இவ்வளவிருந்தும்
தாகம் ஏன் தீரவில்லை?

புள்ளிவிவரம் சொன்னால்
பொறுத்துக்கொள்வாயா?
கொள்வேன்.

சொல்வேன். பூமியின்
தண்ணீரில் 97 சதம்
கடல்கொண்ட
நீர். உப்பு நீர். குடிக்க
உதவாத நீர்.

மிச்சமுள்ள 3 சதம்தான்
நிலம்கொண்ட நீர்.
அதில் 1 சதம் தண்ணீர்
துருவப்பிரதேசங்களில்
பனிமலைகளில்
உறைந்துகிடக்கிறது.

1 சதம் தண்ணீர் கண்டுகொள்ள
முடியாத ஆழத்தில்,
மொண்டுகொள்ள முடியாத
பள்ளத்தில் கிடக்கிறது.
மனிதகுலம்
பயன்படுத்துவதெல்லாம்
மிச்சமுள்ள 1
சதத்தைத்தான்.

அய்யய்யோ. அந்த 1
சதமும் தீர்ந்துவிட்டால்?

தீராது. தண்ணீர் பூமிக்கு
வெளியே போய்விட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் பருகுவது
பயன்படுத்தப்பட்ட பழைய
தண்ணீரைத்தான். தண்ணீரும்
காதலைப்போலத்தான். அதன்
முலகங்கள் அழிவதில்லை.

தூரத்து விசைப்படகு
தண்ணீர் கிழிக்கத் தயாரானது.
கிழக்கு நோக்கித் தன் முக்கை
மொத்தமாய்த் திருப்பியது.

கலைவண்ணன் கரையில்
இருந்துகொண்டே
மீண்டும் கடலில் முழ்கினான்.
விழித்துக்கொண்டே கனவில்
பேசினான்.

கடல்.
அது ஒரு தனி உலகம்.
பள்ளிகொண்ட விஸவருபம்.
எண்பத்தையாயிரம் உயிர்வகை
கொண்ட உன்னத அரசாங்கம்.

அடுத்த நூற்றாண்டு
உணவுத்தேவையின்
அமுதசுரபி.

முத்துக்களின் கர்ப்பப்பை.
பவளங்களின் தொட்டில்.

மங்கனீஷ பாறைகளின் உலோக
உலகம்.
பெட்ரோல் ஊற்றின
பிறப்புறுப்பு.
கலங்கள் நகரும்
திரவத்திடல்.
அது கவிஞர்களின் கனா.
விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடம்.
ஞானிகளின் தத்துவம்.

விசைப்படகு அந்தக்
காதலர்பாலம்
கடந்துதான்
கடல்புக வேண்டும்.

இப்போது ததும்பித் ததும்பி
அவர்களை நோக்கித்
தவழ்ந்து வந்தது அந்த
டீசல்பறவை.

தூரத்துச் சித்தரங்களாய்
அதன்
விளிம்பில் சில மீனவர்கள்.

படகு நெருங்க...
நெருங்க...

ஓ....
அவனுக்குத் தெரிந்தவர்கள்.
அவனை நேசிப்பவர்கள்.

மீனவர் போராட்டத்தில்
கைதாகி
அவன்
எழுத்துக்களால்
மீட்கப்பட்டவர்கள்.
அவர்களும் அவனைக்
கண்டுகொண்டார்கள்.

கலைவண்ணன்.
கலைவண்ணன்.

எந்திரஓசை கிழத்துக்
குரலெடுத்துக்
கூவினார்கள்.

அவன் மடியில்
படுத்துக்கிடந்தவள்
வெடித்துப்
பூத்தாள்.

விசைப்படகை வெறித்துப்
பார்த்தாள்.
பிறகு கண்களால் கேள்விகேட்டு
மெளனம் காத்தாள்.

கண்ணிமைக்காத கலைவண்ணன் -
தோழர்கள். என் மீனவத்
தோழர்கள் என்றான்.

என்ன பேனாக்காரரே.
கடலோடு
போய்விடுவோம்.
வாருங்களேன்.

விசைப்படகிலிருந்து வீசிய
அழைப்பு காற்றுவழி
மிதந்து கரையேறியது.

பாலம் நோக்கியே படகும்
வந்தது.

காதலியே. தமிழ்ரோஜா.
கடல்சென்று வருவோமா?

கண்ணடித்துச் சிரித்தான்
கலைவண்ணன்.

அய்யோ.

அவள் பெங்குவின் பறவைபோல்
பின்வாங்கினாள்.

கொஞ்சதூரம் போகலாம், சுத்தமான காற்று
சுகமான தாலாட்டு, தரையில் விழுந்த
ஆகாயமாய்க் கடல்பார்க்கலாம்.

ஓராயிரம் பறவைகளின் ஊர்வலம் பார்க்கலாம்
உடனே திரும்பலாம்.

கால்கள் பின்னுக்கிழுக்க - அச்சத்தில் முகம்
வியர்க்க - வேண்டாம் அந்த விபரீதம்
என்று விலகி ஓடினாள்.

படகு பக்கத்தில் வந்துவிட்டது.

கலைவண்ணனைப் பார்த்துக் கத்தினார்கள்.
கடலுக்குள் போய்வருவோம் மீன்விருந்து
வைப்போம் மாலைக்குள் கரைசேர்ப்போம்
ஒரே கதியில் உரைநடையில் பாடினார்கள்.

படகு நின்றது பாலம் உரசி.

தயவுசெய்து வா தமிழ் கலை கெஞ்சினான்

வேண்டாம் வேண்டாம்
மாட்டேன. மாட்டேன்.

அவள் சுடுமணலில் விழுந்த ஒற்றை
மழைத்துளியாய் ஓடி மறையப்பார்த்தாள்.

நீங்களும் வாருங்கள் தங்கையும் வரட்டும்
அழைப்புக் குரல்கள் அதிகமாயின.

இப்படி அஞ்சினால் எப்படி?
பாதுகாப்பான பயணம் இது. சின்னச்சின்ன
அனுபவங்கள் வேண்டாமா? சிறகடி
என்னோடு. வா தமிழ். வா.

அவள் சுருங்கினாள்
இவன் நெருங்கினான்.

அவள் அஞ்சி விழித்தாள்
இவன் கெஞ்சி
அழைத்தான்.

அவள் விழித்தாள்.
இவன் அள்ளினான்.

அங்கே அரங்கேறியது ஓர் அகிம்சை இம்சை
அவளை மார்போடு அள்ளி கவனமாய்க்
கால்வைத்து விசைப்படகில் குதித்தான்.
தாலாட்டும் படகில் தடுமாறி விழுந்தான்.

வீழ்வது அவனாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்
தமிழ் காயப்படாமல் கட்டிக்கொண்டான்.

அவள் உள்ளாடிய அச்சத்தில்
ஊமையானாள். மீனவர்கள் கைதட்டி
ஒலிஎழுப்ப கிலிகொண்டது கிளி.

பயப்படாதே தமிழ். பார் என் தோழர்களை.
அவர் பாண்டி இவர் பரதன் இவர் இசக்கி
அவர் சலிம்.

எல்லோரையும் அவள் வேர்த்த
முகத்தோடு வெறித்துப் பார்த்தாள்.

அவளை அவர்களுக்கு அறிமுகம் செய்தான்

இவள்தான் தமிழ்ரோஜா. இப்போது
மனைவிபோல் இருக்கும் என் காதலி.
பின்னாளில் காதலிபோல் இருக்கப்போகும்
என் மனைவி.

விசைப்படகு விரைந்து படபடத்தது
தமிழ்ரோஜா இதயம் இரண்டுமடங்கு
துடிதுடித்தது.
---------------------------------------------------------------------

---------------------------------------------------------------------
5

கண்விழித்துப் பாரடி என்
காதல்தமிழே.
இமைகொண்டு கண்ணுக்கும்
கரம்கொண்டு முகத்துக்கும்
இரட்டைக்கதவுகள் இட்டுக்
கொண்டவளே.

இப்போது வங்காள
விரிகுடாவில் முப்பது
கிலோமீட்டர் வேகத்தில்
முன்னேறிக்
கொண்டிருக்கிறோம்.

மேலே
நீலவானம் - நீளவானம்.
கீழே
நீலக்கடல் - நீளக்கடல்.

தண்ணீரில் அங்கங்கே
வெள்ளைவெள்ளையாய்க் கவிதை
எழுதும் கடற்காற்று.

சரி. சரி. கண்திறந்துபார்.
சமுத்திரம் உனக்குக் கீழே.

பிளாஸடிக் வலைகளின்மேலே
நைந்து குலைந்து
நலிந்துகிடந்தவள் விலக்கவில்லை
விழித்திரைகளை.

தலைசுற்றியது தமிழுக்கு.

அவள் அடிவயிற்றில் மெல்ல
மெல்லப் பெரிதானதொரு
குமட்டல் குமிழி.

புதிய விருந்தாளிகள்
வந்திருக்கும் புளகாங்கிதத்தில்
அலைமீன்கள் ஆனார்கள்
மீனவர்கள்.

வராதவர்கள்
வந்திருப்பதால் விழாத மீன்கள்
விழும்.

நம்பிக்கைமொழி பேசி
நடனமாடினார்கள்.

காதலர் தனிமைக்குப்
பின்பக்கம் தந்துவிட்டு
முன்பக்கச் சுக்கான் அறையில்
மொத்தமானார்கள்.

தன் சொற்பொழிவுக்குக் கடல்
கைதட்டுவதாய்க் கருதிய
களிப்போடு இன்னும் அதிகமாய்
ஓசையிட்டது விசைப்படகு.

காதலியை மடியில்போட்டவன்
கண்களைக் கடலில்
போட்டான்.

கண்ணுக்கெட்டிய மட்டும்
கடலோ கடல்.

இது வியப்பின் விசாலம்.
பூமாதேவியின் திரவச்சேலை.
ஏ தமிழா.
உன் புலமைகண்டு
புல்லரிக்கிறேன்.
இதன் பரப்பை வியந்தாய்.
பரவை என்றாய். ஆழம்
நுழைந்தாய். ஆழி என்றாய்.
ஆற்றுநீர் - ஊற்றுநீர் -
மழைநீர் முன்றால் ஆனதென்று
முந்நீர் என்றாய்.

வியந்துகிடந்தவன்உடைந்துகிடந்தவளை
மடியில் அள்ளி ஒட்டவைத்தான்.

ஏ தமிழ். என்ன இது?
திற, கண்களைத் திற.
கண்களால் கடல்விழுங்கு.
விசைப்படகு விரையும்போது
கடலோடு ஒரு வெள்ளிவீதி
பார்.

அன்பு கொண்டவர்களைக்
காணும்போது துயரம்
மெல்லமெல்ல மறைவதுமாதிரி
- தூரத்துக்கரை மெல்ல
மெல்லத் தொலைவது பார்.

ததும்பும் தண்ணீர்
ஊஞ்சல்மேலே அழகுப்
பறவைகள் ஆடுவதுபார்.

தப்பு செய்துவிட்டுவந்த
கணவர்கள், தாழ்திறவாக்
கதவுகளுக்கு வெளியே
நிற்பதுபோல் -
துறைமுகத்துக்குள்
அனுமதியில்லாத கப்பல்கள்
தூரத்தில் நிற்பது பார்.

அங்கொன்றும்
இங்கொன்றுமாய்க்
கடற்பட்டாம் பூச்சிகளாய்
மிதக்கும் கட்டுமரங்கள்
பார்.

காசுக்கு மனம்மாறும்
வஞ்சகர்களைப் போல
அங்கங்கே நிறம்மாறும்
கடல்பார்.

நீ ஏன் பயப்படுகிறாய்?

தன்னைக் கடைந்து கடைந்து
கடந்துவிட்டானே என்று
கடல்தான் மனிதனைப் பார்த்து
பயப்படுகிறது.

அவளை அவன் மில்லிமீட்டர்
மில்லிமீட்டராய் மலர்த்தப்
பார்த்தான்.

ஆனால், தன் புலன்களைப்
பூட்டிக்கொண்டவள்
திறக்கவேயில்லை.

ஆடும் படகு ஆடஆட அடிவயிறு
அழுத்தியது அவளுக்கு.

நிறந்தெறியாத பூச்சிகள்
நெற்றிப் பொட்டில்
பறந்தன.

உள்ளே வளர்ந்து வளர்ந்து
உடையப்பார்த்தது
குமட்டல்குமிழி.

முகம்தூக்கிப் பார்த்தபோது
அவன்
கையில் பிசுபிசுத்தது அவள்
கண்ணீர்.

அழுகிறாயா?
கடல்நீரை மேலும்
கரிக்கவைக்கிறாயா?
கடலில் 3.6 சதம் உப்பு
முன்னமே இருக்கிறது.
அதுபோதும். எங்கே... உன்
இதழ்நீர் துப்பு. இனிக்கட்டும்
கடல்.

ஏன் இப்படி என்னைச்
சோதிக்கிறீர்கள்?
அவள் எழுத்துக்கூட்டி
விசும்பினாள்.

அவன் சின்முறுவல் பூத்தான்.

தன்மேல் விழும் மண்ணைச்
சோதனை என்று
சொன்னதுண்டா விதை?

உளியின் உரசலைச் சோதனை
என்று சொன்னதுண்டா சிலை?

இது பயிற்சி. முளைக்கவைத்து
முழுமையாக்கும் முயற்சி.

சோதனை என்று சொல்லாதே
பெண்ணே.
சொடுக்கு, விரலுக்குச்
சோதனை அல்ல.

அவள் வயிற்றில் புறப்பட்ட
வாந்தி நெஞ்சில் வந்து
நின்றுவிட்டது.

தன்னிரு கரங்களால் அவள்
தலைதாங்கித் தவித்தாள்.

துவண்ட கொடிகண்டு துடித்தான்
அவனும்.

இது கடல்நோய்.
ஒருவகையில் இது ஒவ்வாமை.
முதன்முதலாய்க் கடல்புகும்
பலருக்கு இது வரவே வரும்.
கலங்காதே.
சின்னச் சின்னச் சிரமங்களுக்கு
உன் உடம்பை உட்படுத்து.

எனக்கிது தேவைதானா?

அவள் கன்னத்தில் வழிந்த
கண்ணீர் வாயில் விழுந்ததில்
வார்த்தை நனைந்தது.

தேவைதானா என்று
கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா?
குரங்கிலிருந்து மனிதன்
குதித்திருக்க முடியுமா?
தூரத்தை நெருக்கியிருக்க
முடியுமா?
நேரத்தைச் சுருக்கியிருக்க
முடியுமா?

தேவைதான் முட்டைக்குள்
இருக்கும் உயிரை
முச்சுவிடவைக்கிறது.

தேவைதான் உலக உருண்டைக்கு
ஒரேபகல் கொண்டுவர
யோசிக்கிறது.

உணர்வுகளின் தேவை காதல்.
உணர்ச்சிகளின் தேவை காமம்.
உலகத்தின் தேவை உழைப்பு.

இந்தத் தேவைகளின் வெவ்வேறு
வடிவங்களே வாழ்க்கை.

பெண்மீது காதலும் வெற்றிமீது
வெறியும் இல்லையென்றால்
இன்னும் இந்த பூமி பிறந்த
மேனியாகவே
இருந்திருக்கும்.

அவன் பேச்சுக்குக்
காதுகொடுத்தது காற்று
மட்டும்தான்.

அவளால் தாங்கமுடியவில்லை.
ஒவ்வாத சூழல்.
உடன்படவில்லை உடம்பு.
ஏதோ ஒரு திசையில் -
ஆனால் மிகமிகப் பக்கத்தில்
மரணம்
மையம்கொண்டிருப்பதாய்ப்பட்டது
அவளுக்கு.

என்னைக் கொல்லாதீர்கள்.
படகைத் திருப்புங்கள்.
படபடப்பாய்
வருகிறதெனக்கு.

அவன் இரு கரங்களாலும் அவள்
முகம் அள்ளினான்.
வசதி இல்லாத இடங்களிலும்
வளைத்து வளைத்து
முத்தமிட்டான்.

இடைவேளையில் பேசினான்.

இது ஓர் அனுபவம்.
படபடப்பு என்பது உயிருக்கு
நேரும் உயர்ந்த அனுபவம்.
படபடப்பு இல்லையென்றால்
பரிணாமம் இல்லை.

முதன் முதலில் நிலாவுக்கு
மனிதனைக் கொண்டு சென்ற
விண்வெளிக்கலம் பூமிக்குத்
தெரியாத நிலாவின்
மறுபக்கத்தில் சுற்றத்தொடங்க
- விண்ணுக்கும் மண்ணுக்கும்
ஒலித்தொடர்பு அறுந்துபோக
- முப்பத்து முன்று நிமிடம்
பூமியின் இதயம்
படபடக்கவில்லையா?

மைனஸ 27 டிகிரியில் -
எவரெஸட் உச்சிதொட இன்னும்
நானூறடிதான் இருக்கையில் -
அந்த தூரம்
கடக்கும்வரைக்கும் ஆக்சிஜன்
இருக்குமா என்று ஹிலாரி
ஐயம் கிளப்ப டென்சிங்கின்
இதயம் படபடக்கவில்லையா?

வடதுருவம் தொடும் முயற்சியில்
ஏழுமுறை விழுந்து ஒவ்வொரு
தோல்வியிலும் ஒரு விரல்
இழந்து எட்டாம் முறையும் தன்
முயற்சி தொடர்ந்து, ஸலெட்ஜ
வண்டிகள் சிதறிப்போக,
இழுக்கும் நாய்கள்
இறந்துபோக இதுதானோ தன்
கடைசிப் பயணம் என்று
வெற்றிக்குச் சற்றுதூரத்தில்
விரக்தியில் நின்றபோது
எட்வின்பியரியின் இதயம்
படபடக்கவில்லையா?

இன்னும் பத்துநாட்களில்
கண்ணுக்குக்
கரைதெரியாவிட்டால்
புறப்பட்ட இடத்துக்கே
திரும்பவேண்டும் என்று
மாலுமிகள் போர்க்கொடி
பிடிக்க அந்த ஒன்பதாம்
ராத்திரியில் கொலம்பஸின்
இதயம் படபடக்கவில்லையா?

அவர்களைவிடவா ஆபத்து
உனக்கு?

அவர்கள் உயிரைப்
பணயம்வைத்துப் பயணம்
செய்தவர்கள்.

நீ சுகமாக இருக்கிறாய்.

தாய்க்குரங்கின் பிடியிலிருக்கும்
குட்டியைப்போல்
நீ என் மடியில்
பத்திரமாயிருக்கிறாய்.

பதறிப்பதறிச் சிதறிப்
போகாதே.
எழு தமிழ். எழு.

ஒரு பேரலையின் உசுப்பலில்
விசைப்படகு ஆபத்தான
ஆட்டமொன்றாட - அந்த
அதிர்வலைகள் அவள் உள்ளுக்குள்
பரவிஉசுப்ப - அவளுக்கு
வந்துவிடும் போலிருந்தது
வாந்தி.
அவள் தரைமேல் மீனாய்
வலைமேல் உருண்டாள்.

தாளாமல் துடித்தவளைத்
தாவிஎடுத்து
அவலம் கொள்ளாதே
தமிழ். இது ஓர் அனுபவம்
என்றான்.

வேண்டாம். எனக்கிந்த
அனுபவம் வேண்டாம்.
அவள் சட்டை பிடித்துலுக்கிச்
சத்தமிட்டாள்.

அவனோ ஏசுவின்
மலைப்பிரசங்கம் மாதிரி
அலைப்பிரசங்கம்
ஆரம்பித்தான்.

பாவம். வயதுக்கு வந்த
குழந்தை நீ. அனுபவங்களின்
தொகுப்புதான் வாழ்க்கை.
நம் வாழ்க்கைமுறை
தீர்மானிக்கபட்ட
அனுபவங்களையே நம்மீது
திணித்தது.

யாருக்கோ நேர்ந்த
அனுபவங்களை
ஒப்புக்கொள்ளுமாறு நம்மீது
துப்பியது.

ஆகவே தாத்தாக்களின்
நகல்களாகவே தமிழன்
தயாரிக்கப்பட்டான்.

எனவே பல நூற்றாண்டுகளாக
இந்த இனம் இருந்த
இடத்திலேயே இருந்தது.

சாதிக்கும் முளையிருந்தும்
சோதிக்கும் முயற்சி இல்லை.

வாழ்நாளில் 66,000 லிட்டர்
தண்ணீர் குடித்தான்.
ஆயுளில் முன்றில் ஒருபங்கு
தூங்கினான்.
நான்குகோடி முறை
இமைத்தான்.
நாலரை லட்சம் டன்
ரத்தத்தை இதயத்தால்
இறைக்கவைத்தான்.
35 ஆயிரம் கிலோ உணவு -
அதாவது எடையில் இந்திய
யானைகள் ஏழு தின்றான்.
மரித்துப் போனான்.

இதற்குத்தானா மனிதப்பிறவி?

யாருக்கும் இங்கே
குறைந்தபட்ச லட்சியம்கூட
இல்லை.

நமக்கேனும் வேண்டாமா?
இற்றுப்போன பழைய
இரும்புவேலிகளைச் சற்றே
கடக்கவேண்டாமா?

ரத்தம்பார்த்தாலே
மயங்கிவிழும் ஒரு தலைமுறையை
மீட்கவேண்டாமா?

எழுந்து உட்கார்.
துன்பமென்பது மனதின் பிரமை.
மனதை மாற்றுத்திசையில்
ஆற்றுப்படுத்து.
தும்மல் - காதல் - வாந்தி
முன்றும் வந்தால்
அடக்கலாகாது.
அதன்போக்கில் விட்டுவிடு.

அவள் மெல்ல அசைந்தாள்.
கவிழ்ந்துகிடந்தவள் நிமிர்ந்து
எழுந்தாள். கண்திறந்து
கடல்பார்த்தாள்.

நடுக்கடல் கண்ட திடுக்கிடல்
கண்ணில் தெரிந்தது.

முச்சு - நம்பிக்கை
இரண்டையும் மெல்ல மெல்ல
உள்ளிழுத்தாள்.

கடைவிழியில் ஆடிய கண்ணீருக்கு
நங்கூரமிட்டாள்.

ஓங்கியடித்த ஓர் அலை
விசைப்படகின் விளிம்பு தாண்டி
திடதிரவமாய் அவள்மீது
விழுந்தபோது
ஓ வென்றலறினாள்
ஓசையோடு.
நன்றாய் நனைந்துவிட்டாள்.

கலைவண்ணன் தொடாத
பாகமெல்லாம் கடல்தண்ணீர்
தொட்டுவிட்டது.

ஓடிவந்தனர் உள்ளிருந்தோர்

என்ன.... என்னவாயிற்று? பாண்டியும்
இசக்கியும் படபடத்தார்கள்.

ஒன்றுமில்லை. அலை...

உள்ளே ஓடிய சலீம் துவைக்கவேண்டிய
ஒரு துண்டைத் துடைத்துகொள்ள நீட்டினான்

பரவாயில்லை. கடல்நோய் கொண்டவர்கள்
நனைந்தால் நல்லதுதான்.
இசக்கி அனுபவம் சொன்னான்.

தண்ணீர் சொட்டச்சொட்ட தானே
தலைதாங்கிக் தமிழ்ரோஜா அழுதாள்.
அதில் கண்ணீர் எது? தண்ணீர் எது?
கடல்மீன் அழுத கதைதான்.

ஒரு கண்ணில் பாசம் ஒரு கண்ணில்
பரிதாபம் மீனவர்பார்வை நிலைகுலைந்தவள்
மீது நிலைத்தது.

ஆவேசமாய் நிமிர்ந்தவள் - இப்போதே
கரைதிரும்ப வேண்டும் என்றாள் அழுதவிழி
துடைத்தபடி

மீன் விழுந்தாலும் விழாவிட்டாலும்
மாலைக்குள் கரைசேர்ப்போம் என்றான் பாண்டி

அலையில் இந்தப் படகு கவிழ்ந்துவிட்டால்?

கவிழாது. கவிழ்ந்தாலும் எங்கள் உயிர் கொடுத்து
உங்கள் உயிர்காப்போம் தங்கையே.
தடித்த எழுத்துக்களில் பேசினான் இசக்கி.

விடவில்லை அவள்.

டீசல் தீர்ந்துவிட்டால்?

தீராது 2800 லிட்டர் கொள்ளும் கலத்தில்
இரண்டாயிரம் லிட்டர் அடைத்திருக்கிறோம்
நம்பிக்கை சொன்னான் பாண்டி

படகைத் திருப்ப முடியுமா - முடியாதா?
அவள் கரைக்கே கேட்குமாறு கத்தினாள்.

யாரும் பேசவில்லை.

முட்டிக்கொண்ட இரண்டு அலைகள் எட்டிமோத
தஞ்சாவூர் பொம்மையாய்த் தலையாட்டியது படகு.

அவள் வயிற்றுக்குள் வட்டமிட்ட
குமட்டல்குமிழி வளர்ந்து வளர்ந்து -
நெஞ்சு கடந்து - தொண்டைதொட்டு -
வெளியேறியது. அவள் வலையெல்லாம்
நனைய வாந்தியெடுத்தாள்

கலைவண்ணன் தன் கட்டைவிரல் பதித்து
அவள் நெற்றிப்பொட்டை அழுத்தினான்
மீனவர் பதறினர.

சலீம் மட்டும் கலைவண்ணனைக்
கேட்டேவிட்டான்
தங்கை வாந்தியெடுக்கும்படி
அப்படி என்ன செய்தீர்கள்?
---------------------------------------------------------------------
6

உள்ளே எதையும் ஒளிக்காதே.
துணிந்துவிடு. துப்பிவிடு.

ஆசையைத் துப்பு.
ஞானம் வரும்.
அச்சம் துப்பு.
வீரம் வரும்.
ரகசியம் துப்பு. தூக்கம்
வரும்.

அவள் அடிவயிற்றில் உழன்ற
வாந்தி துப்பினாள். அழுத்தம்
குறைந்தது. அமைதி வந்தது.
நெற்றியில் அடித்த சம்மட்டி
நின்றேவிட்டது. மழை நின்ற
பின்னால் இலை சொட்டும்
துளிபோல தலைபாரம்
வடிந்தது, சொட்டுச்
சொட்டாய்.

அவள் வலை நனைய
வாந்தியெடுத்தது கண்டு
பதறிய மீனவர் சிதறி ஓடினர்.
காணாமல் போன வேகத்தில்
மீண்டும் கண்ணில் தெரிந்தனர்.

பரதன் கையில் குடிதண்ணீர்
பாண்டி கையில் கோப்பைத்
தேநீர்.

இதற்குத் தேநீர்தான்
மருந்து.

குடி தாயே. குடி.

- இசக்கி வைத்திய வார்த்தை
சொன்னான்.

பருகினாள் அவள்.
பாலில்லாத தேநீர்.
அவள் களைப்பை மாற்றும்
கறுப்புத் தாய்ப்பால்.

துவண்ட கொடியைத்
தோளில் அணைத்து
வாந்தியெடுத்த
வாய்க்கடை துடைத்து
விரிந்த குழலை
விரல்கொண்டளைந்து
காதலிதுயரம் கண்களால்
அளந்து அவள் கண்ணோரம்
சிதறிய
கண்ணீர் துடைத்த கலைவண்ணன்
இப்போது
பரவாயில்லையா..? -
என்றான் இதமாக.

புலவர்க்கு மட்டுமே புரியும்
சில தமிழ்ச்சொற்கள் மாதிரி
- அவனுக்கு மட்டுமே
புரியும்படி ஒரு புன்னகை
புரிந்தாள்.

அந்தப் பாலைவனச்சாரல்
கண்டு பளிச்சென்று மலர்ந்தவன்
- எல்லாரும் ஜோராக
ஒருமுறை கைதட்டுங்கள்.
தமிழ் புன்னகைக்கிறாள். தமிழ்
புன்னகைக்கிறாள்.
- என்று தன்னைமறந்து
கத்தினான்.

அவர்கள் குழந்தைகளாய்ச்
சிரித்தார்கள்.
குதூகலமானார்கள்.
மார்கழிமாத வெயில்
மறைவதற்குள் துணிகாய
வைக்கத் துடிக்கும் ஒரு
சலவைக்காரியைப் போல
அந்தப் புன்னகை மறைவதற்குள்
அவளைக் கரைசேர்த்துவிடக்
கருதினார்கள்.
மின்னல்வேகத்தில் மீன்பிடிக்க
ஆயத்தமானார்கள்.

பாண்டி கட்டளையிட்டான்.

பரதா. விசைப்படகின்
வேகம் குறை. இந்த இடத்தின்
ஆழம் அறி. இரும்புக் குண்டை
நுனியில்கட்டிய பிளாஸடிக் கயிறு
எடு.
வீசு கடலில்.
விடு. விடு. போகட்டும்.
அது தரைதொட்ட உணர்வு
தட்டுப்படுகிறதா? இப்போது
எடு. ஆழக்கயிற்றின் நீளம்
அள. எத்தனை பாகம்?

இசக்கி அளந்து சொன்னான்.
பதினான்கு பாகம்...

பதினான்கு பாகமா?
பரவாயில்லை - இருபத்தைந்து
மீட்டர். இறக்கு, இறக்கு.
வலைகளை இறக்கு. அய்யா
பேனாக்காரரே.
அம்மா தமிழ்ரோஜா.
ஓரமாய் ஒதுங்குங்கள்.
வலையோடு சேர்த்துக்
கடலோடு எங்கள் இரும்புவடம்
இறங்கும். தலையில்
மோதலாம். தள்ளியிருங்கள்.

ஏ இசக்கி. ஏ சலீம்.
வலைவிரிய வசதியாய்ப்
பக்கப்பலகை இறக்கு.
கவனம். ஒவ்வொரு பலகையும்
தொண்ணூறு கிலோ.
நகர்த்திவிட்டு நகராவிட்டால்
முகத்தைப் பிய்க்கும்.

மீன் விழும் முன்னே நீ விழக்கூடாது.
சுறாக்கள் உன்னைச்
சுவைத்துவிடக் கூடாது.
அப்புறம் உன்
வைப்பாட்டிக்கெல்லாம் நான்
வாழ்வுதர முடியாது.
இரும்புவடத்தில் வேகம்
இருக்கு. பக்கப் பலகையைப்
பார்த்து இறக்கு...

கடலில் எறிந்த வலை
காணாமல் போக - மிதந்த
மிதவைகள் அமிழ்ந்துபோக -
பக்கப்பலகைகளின் பாரம்
அழுத்த ஆடிக்காற்றில்
பாவாடையாய் அகலப்பட்டது
வலை.

விழித்த விழி விழித்தபடி
வியந்துநின்ற தமிழ் ரோஜா -

படகுக்கு வால்முளைத்த
மாதிரி வலை மிதந்து
கொண்டே வருமா?
என்றாள்

ஆமாம். கடலின் தரையை
வலை தடவிக்கொண்டே வரும்.
வலைநீளும் எல்லைக்குள் எந்த
மீன் வந்தாலும் அது
வலைப்படும். வலையில்
மாட்டிய மீனும்
அரசியல்வாதியிடம் மாட்டிய
பணமும் ஒன்றுதான். சிக்கினால்
மீளாது.

வெண்கல உண்டியலில்
வெள்ளிக்காசுகளாய்த் ததும்பிச்
சிரித்தாள் தமிழ்ரோஜா.

இதுவல்லவோ நான்
எதிர்பார்த்தது. இதுவல்லவோ
என் மனம் கேட்டது.
இதற்காகவல்லவோ நான்
தண்ணீரில் தவமிருப்பது.

சிரி பெண்ணே சிரி. இந்தக்
கடல் இத்தனை யுகமாய்
எத்தனை சிரித்ததோ
அத்தனைச் சிரிப்பையும்
மொத்தமாய்ச் சிரி...

சுக்கான் அறையில் பரதன்.
சமையல் அறையில் சலீம்.
விசைப்படகின் வெளித்தளத்தில்
அணில் மனிதர்களாய் -
பாண்டியும் இசக்கியும்.

விசித்திர வாழ்க்கை
இவர்களுக்கு என்றாள்
தணிந்த குரலில் தமிழ்.

இல்லை. வேதனை
வாழ்க்கை இவர்களுக்கு
என்றான் தடித்த குரலில்
கலை.

விளங்கவில்லை.

உனக்கு மட்டுமில்லை.
உலகுக்கே விளங்கவில்லை.
இவர்கள் இந்த மண்ணின்
பூர்வகுடிகள். காற்றை
எதிர்த்துக் கடல்
கிழித்தவர்கள். கிழக்கிலும்
மேற்கிலும் நம் நாகரிகத்தை
நடவுசெய்தவர்கள்.

பூமியின் மையக்கோட்டுக்கு
மேலே போனவர்கள். ஆனால்
இன்னும