|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts in Unicode released by Project Madurai in chronological order > பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்த பாட்டுக்கோட்டை பாடல்கள் > Pattukottai Kalyanasundaram - மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

pattukkOttai kalyAnasundaram's songs
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்த
பாட்டுக்கோட்டை
பாடல்கள்
Etext Preparation (input) : Vasan Pillai, New Mexico, U.S.A
Etext Preparation (proof-reading) : Vasan Pillai, New Mexico, U.S.A
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
01 அரசியல் அறம்
1.1 கெட்டதை விடுங்கள்
1.2 வாய்ச்சொல் வீரர்
1.3 சூதாட்டம்
1.4 போரைத் தடுப்போம்
1.5 மனைவியே மந்திரி!
1.6 படிப்பும் உழைப்பும்!
1.7 ஏழைகளின் வேர்வை
1.8 பகை நீங்கும்
1.9 கரையேறும் பாதை
1.10 நாடு கெட்டுப் போகுது
1.11 ஒன்றுபட்ட வாழ்வு02 நாட்டு நலம்
2.1 வீரன்
2.2 போருக்கு
2.3 பொது வாழ்வு!
2.4 செயல் வீரர்!
2.5 நாங்கள் பிறந்த நாடு
2.6 நீதி தவிக்குது
2.7 கண் தூங்குமோ?
2.8 வள்ளல் வழி
2.9 வீரச் செயல்
2.10 குழி பறிக்குது வேரிலே!
2.11 உழைத்து முன்னேறு
2.12 ஆமாம் சாமி ஆசாமிகள்
2.13 வம்பு வளர்க்கும் கும்பல்
2.14 கலைந்து விடும் காலம்03 இயற்கை
3.1 போட்டி வேண்டாம்
3.2 இருள் விலகும் விளக்கு
3.3 தட்டி எழுப்பிடும் சேவலே
3.4 மனிதனைக் கேலிசெய்யும் பறவை
3.5 ஆணவக் குரங்கு!
3.6 நல்லதைக் கெடுப்பவர்
3.7 ஓடும் நீரின் சங்கீதம்
3.8 இதயத்தை திருடியவள்
3.9 அனல் வீசும் நிலவு
4.1 சேவை
4.2 காதல் மாத்திரை
4.3 விடுதலை
4.4 கணவனுக்குச் சேவை
4.5 உயிர்
4.6 எங்கும் இன்பம்
4.7 கடவுள் எங்கே
4.8 ஆளை விழுங்கும் காலம்
4.9 நீயே துணை!
4.10 மாசற்ற அன்பு
4.11 பெண் மனசு
4.12 ஞானம்!
4.13 நோட்டம்!
4.14 ஒரே ரத்தம்
4.15 ஏங்கும் ஏழை
5.1 வீணர்களின் சொல்
5.2 நாளை உலகம் நல்லவர் கையில்!
5.3 காலம் மாறும்
5.4 அடக்கம் வீரமும்!
5.5 தூங்காதே தம்பி
5.6 கொஞ்சும் குரல்!
5.7 இதய ஒளி!
5.8 உயர்ந்த நினைவு
5.9 பெண்ணரசு!
5.10 உன்னை நம்பு!
5.11 நல்லவனாக
5.12 சிறுவரிடம் திறமை
5.13 துன்பம் வெல்லும் கல்வி!06 காதல் சுவை
6.1 காதலின் இலக்கணம்
6.2 காதல் பலன்
6.3 கடல் கடப்பேன்
6.4 ஆசைக்குப் பேதமில்லை
6.5 நாணம் எதற்கு
6.6 ஆசை வளருது
6.7 விருந்துக்கு அழைக்குது
6.8 சக்திக்குமேல் ஆசை
6.9 வண்டைத்தேடும் மலர்
6.10 இன்பம் காணலாம்
6.11 மூடிவைத்த காதல்!
6.12 தடைபோடும் நாணம்
6.13 பெண் தெய்வம்
6.14 பேசும் விழிகள்
6.15 சிலைக்குள் தெய்வம்
6.16 விருந்து!
6.17 கண்ணும் கண்ணும் பேசுது
6.18 பார்த்து ரசிப்பேன்!
6.19 கலையான நிலை
6.20 மாறும் மனம்
6.21 பூமாலை போட்டவன்
6.22 தாலி கட்டும் வீரன்
6.23 சேவை
6.24 பகைக்குரல் மாறுதே!
6.25 நல்ல துணைவன்
6.26 பெண் முகம் கண்ணாடி
6.27 எண்ணக் கனவுகள்!
6.28 பருவம்
6.29 கதை சொல்லும் தீபாவளி!
6.30 பொல்லாத காதல்
6.31 பெண்ணென்ற கோயில்
6.32 மாறாத ஆசை
6.33 காதலர் நிலை
6.34 கண் மலர்
6.35 நடக்கும் மின்னல்!
6.36 ஒன்றுபட்ட கணவனுக்கு
6.37 காதல் தோல்வி
6.38 அன்பு விதை
6.39 இல்லறம்
6.40 புது அழகு
6.41 காதலை ஏற்கும் நிலவு!
6.42 தடையில்லை!
6.43 இல்லற ஓடம்
6.44 கதை கட்டுவார்
6.45 இன்ப வேகம்
6.46 பெரும் சுகம்
6.47 ஆசை மனம்!
6.48 இன்பம் தேடுது
6.49 பேசும் சிட்டு
6.50 கண்ணால் அடக்குவேன்
6.51 மயிலோ குயிலோ!
6.52 வெளிவேசம்!
6.53 கேள்வியும் பதிலும்
6.54 வளைகாப்பு
6.55 மங்கையின் மகிமை
6.56 இன்ப கீதம்
6.57 ஒரு விழிப் பார்வை
6.58 முற்றிய காதல்
6.59 அன்பு ஆசை
6.60 பெண் உறவு!
6.61 மணமகள்
6.62 பொறுப்புள்ள பெண்
6.63 நன்றி கூறும் தென்றல்
6.64 பிரிக்க முடியுமா
6.65 ஒற்றுமை கலைந்தால்...
6.66 எண்ணத்தில் பொருத்தம்
6.67 வழி தேடும் காதல்
6.68 துணை தேடுதே!
6.69 அன்பு வளருமா?
6.70 வளையல் போடும் சண்டை
6.71 அழகு வந்தது
6.72 பருவம் வாடுது07 நகைச்சுவை
7.1 குட்டு வெளியாகும்
7.2 வீட்டுக்குள் வீரம்
7.3 கடல் ஆழமும் பெண் மனமும்
7.4 வேலையற்ற மச்சான்
7.5 வெளுத்துக் கட்றாண்டி
7.6 காக்காய் பிடித்து!
7.7 கலை!
7.8 நாடகம் பார்க்க
7.9 சூடேற்றும் பார்வை!
7.10 குடும்பத்தோடு பயணம்08 தத்துவம்
8.1 எது சொந்தம்!
8.2 மனக்குரங்கு
8.3 போலிகளும் காலிகளும்
8.4 வரவும் செலவும்
8.5 உழைக்காமல் சேர்க்கும் பணம்
8.6 இனிப்பும் கசப்பும்
8.7 உண்மை
8.8 வீண் அனுதாபம்!
8.9 வெறும் பேச்சு!
8.10 துணிச்சல்
8.11 துன்பத்தை மிதி!
8.12 பொறுமை பொங்கினால்!
8.13 கற்பின் விலை
8.14 வெற்றி எங்கள் கையிலே
8.15 சோம்பல் ஒழிக
8.16 ஒற்றுமை
8.17 நிழலும் வெயிலும்
8.18 ஆரம்பமும் முடிவும்!
8.19 ஒன்றிருந்தால் ஒன்றில்லை
8.20 தேன் கலசம்
8.21 எது வேண்டும்?
8.22 நிலையில்லா உலகம்!09 தனிப்பாடல்
9.1 புதிய ஒளி வீசுது பார்!
9.2 நண்டு செய்த தொண்டு
9.3 வெஞ்சிறை உடைந்தது
9.4 பெண்
9.5 மனித சக்தி
9.6 சுதந்திரத் தாயின் மகிழ்ச்சி....
9.7 தாமரை என்றோர் ஏடு மலர்ந்தது
9.8 பாரதி
9.9 என் விருப்பம்
9.10 கொதிக்கும் தார்
9.11 ஏற்றத்தாழ்வு மாற்றும் கொடி!
9.12 நடுவில் இருக்கும் சாமி
9.13 நாலு முழ வேட்டி
9.14 படத் தொழில் வளர
9.15 அகராதியைக் கிழிக்கும்
9.16 நீ யார்
9.17 சாதி மயக்கம்
9.18 அடிமை விலங்கு ஒடிந்தது
9.19 வாழவிடு
9.20 பின்னாலே கண்ணு
9.21 இருள் வர அஞ்சும்
9.22 காலத்திலே செல்லு
9.23 உன்னை நீ!
9.24 இறைவனுக்கு நன்றி
9.25 நல்லவரைப் போற்றுவோம்
9.26 ஜீவா
9.27 கவிஞரின் முதல் கவிதை
9.28 கவிஞரின் இறுதிக் கவிதை
சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
செய்யுறதைச் செஞ்சுடுங்க
நல்லதுன்னா கேட்டுக்குங்க
கெட்டதுன்னா விட்டுடுங்க
முன்னாலே வந்தவங்க
என்னென்னமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்சியும் செஞ்சாங்க
ஒண்ணுமே நடக்காம
உள்ளம் நொந்து செத்தாங்க
என்னாலும் ஆகாதுன்னு
எனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )
முடியிருந்தும் மொட்டைகளாய்
மூச்சிருந்தும் கட்டைகளாய்
விழியிருந்தும் பொட்டைகளாய்
விழுந்துகிடக்கப் போறீங்களா?
முறையைத் தெரிஞ்சு நடந்து
பழைய நினைப்பை மறந்து
உலகம் போற பாதையிலே
உள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க?
என்னபண்ணி கிழிச்சீங்க? ( சொல்லு )
[பாண்டித் தேவன்,1959]
மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா-எம்
மனசிலே பட்டதை வெளியிலே சொல்றேன்
வந்ததுவரட்டும் போடா-சில ( மனு )
உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
ஒலகம் இதுதாண்டா-ராஜா
ஒலகம் இதுதாண்டா
உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு
உல்லாச புரிதாண்டா-இது
உல்லாச புரிதாண்டா... ( மனு )
வசதியிருக்கிறவன் தரமாட்டான்-அவனை
வயிறுபசிக்கிறவன் விடமாட்டான் ( வசதி )
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான் (மனு)
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா-நான்
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா ( மனு )
ஒரு சிறுவன்: அங்கே நானும் வாரேண்டா...
வெளியே படிக்க வேண்டியது நெறய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா-சிலர்
படிக்க மறந்தது நெறய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா.... ( மனு )
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறும் போடுறான்..
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுகிறான்-இவன்
சோறு போடுகிறான்-அவன்
கூறு போடுறான்.
[கண் திறந்தது,1959]
சூதாடி மாந்தர்களின்
சுகவாழ்வும் ஒருநாளில்
பாதாளம் போகுமெனல்
பாரறிந்த உண்மையன்றோ?
சொல்ல முடியாத துன்பக் கதை
சூதாடி மனிதரின் சோகக் கதை
நல்ல மனிதரும் வஞ்சகராகி
கள்ள வேலைகள் செய்த கதை-சிலர்
கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை ( சொல்ல )
அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்
அரசு உரிமையை இழந்ததும்
அழகு பாஞ்சாலி அம்மையாருடன்
அனைவரும் காட்டில் அலைந்ததும்
அன்பு மேலிடும் நளன் தமயந்தி
அல்லல் சுமந்து வருந்தியதும்
அரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்
ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே ( சொல்ல )
[உலகம் சிரிக்கிறது,1959]
மனிதரை மனிதர்
சரிநிகர் சமமாய்
மதிப்பது நம் கடமை
வள்ளுவப் பெருமான்
சொல்லிய வழியில்
வாழ்வது அறிவுடைமை,
உழைப்பை மதித்து
பலனைக் கொடுத்து
உலகில்போரைத் தடுத்திடுவோம்,
அண்ணன் தம்பியாய்
அனைவரும் வாழ்ந்து
அருள்விளக் கேற்றிடுவோம்.
[இரும்புத் திரை, 1960]
எல்லோரும் இந்நாட்டு மன்னரே-நாம்
எல்லோரும் இந்நாட்டு மன்னரே
நல்லாரும் பொல்லாரும்
நல்வழி செல்லாரும்
உள்ளாரும் காசுபணம்
இல்லாமல் இருந்தோரும் (எல்லோரும்)
முன்னேற்ற மில்லாமல்
மூலையிலே கிடந்தவரும்
கண்ணிலே நீர்பெருகக்
கவலையிலே மிதந்தவரும்
தண்ணீரும் காற்றுமுண்டு
தள்ளாடி நடந்தவரும்
தலைவிதியே நம்பிநம்பி
சக்கைபோல் வாழ்ந்தவரும் (எல்லோரும்)
மன்னன்:
ராசாதிராசன் வந்தேனே-நான் வந்தேனே
ராசாதிராசன் வந்தேனே
எங்கும்புகழொடு இன்பம்பெருகிட
பொங்கும் வளமோடு
புவிதனை ஆண்டிடும் மகாராசா
பக்கத்துச் சேரியிலே
குறிப்பிட்ட தேதியிலே
பள்ளிக்கூடம் தொறந்தாச்சா மந்திரி?
மந்திரி!மந்திரி!!குழு:
எங்கே? எங்கே? எங்கே?
மந்திரி:
அவரவர் மனைவிகளே
அவர்களுக்கு மந்திரிகள்
அன்புகொண்டு குடியரசு புரிந்திடணும்
ஆவதெல்லாம் பொதுவாய்த்தான்
நடந்திடணும் ( அவரவர் )மன்னன்:
ஆகா! ஆகா!! சபாசு!!!
ஆண்டி மடத்திலுள்ள
அட்ரசை மாத்தியதில்
ஆஸ்பத்திரி தொறந்தாச்சா மந்திரி?
மந்திரி! மந்திரி!!மந்திரி:
இப்போ-
ஆரோக்கியம் கம்மியில்லே
யாருக்கும் பிணியில்லே
ஆஸ்பத்திரி தேவையில்லே மன்னரேகுழு:
ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!
மன்னன்:
கட்டத் துணியும்-நம்ப
கடன்கேட்ட கோதுமையும்
கப்பலில் வந்தாச்சா மந்திரி?மந்திரி:
இனி-
எட்டாத சீமைகளை
எதிர்பார்க்கத் தேவையில்லே
இங்கேதும் பஞ்சமில்லை மன்னரேகுழு:
ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!
மன்னன்:
பாயும் புலிபோன்ற
பட்டாள வீரர்கையில்
ஆயுதம் தந்தாச்சா மந்திரி?
மந்திரி! மந்திரி!!மந்திரி:
இப்போ-
ஆயுதம் தேவையில்லே
அடிதடி வம்புமில்லே
அமைதிதான் நிலவுது மன்னரேகுழு:
எங்கும் அமைதிதான் நிலவுது மன்னரே
ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!
[ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு,1960]
படிப்பு தேவை-அதோடு
உழைப்பும் தேவை-முன்னேற
படிப்புத் தேவை அதோடு
உழைப்பும் தேவை!
உண்மை தெரியும்
உலகம் தெரியும்
படிப்பாலே-நம்
உடலும் வளரும்
தொழிலும் வளரும்
உழைப்பாலே-எதற்கும் ( படி )
பாடுபட்டதால் உயர்ந்தநாடுகள்
பலப்பல உண்டு-மன
பக்குவம் கொண்டு
மக்கள் முன்னேறக்
காரணம் ரெண்டு-அதுதான் ( படி )
வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடுகட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிர் விவரம் கண்ட
சர் சி.வி.ராமனும் தொழிலாளி!-எதற்கும் ( படி )
ஜனத்தொகை மிகுந்தாலும்
பசித்துயர் மலிந்தாலும்
பணத்தொகை மிகுந்தோர்-மேலும்
பணம் சேர்க்க முயல்வதாலும்
உழைத்தால்தான் பற்றாக்குறையை
ஒழிக்க முடியும்-மக்கள்
ஓய்ந்திருந்தால் நாட்டின் நிலைமை
மோசமாக முடியும்-எதற்கும் ( படி )
[சங்கிலித் தேவன், 1960]
ஆ.... விஷயம் ஒன்று சொல்லப் போறேன்
கேளடி கேளு-உண்மை
வெளியாகும் நேரம் வந்தது
கேளடி கேளு
ஓ.... நடந்தது எல்லாம் தேவையில்லை
தள்ளடி தள்ளு-இனி
நடக்கப் போற சங்கதியத்தான்
சொல்லடி சொல்லு
ஓ.... வறுமையில்லே வாட்டமில்லே
வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே ஆ....
வறுமையில்லே வாட்டமில்லே
வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே
ஆ.... கொடுமையெல்லாம் மாறி வருது
கேளடி கேளு
குடிசையத்தான்-இன்பம்
குடிசையத்தான் நாடி வருது
கேளடி கேளு ( விஷயம் )
நல்லவர் போல உலகம்மீது
நரியும் கழுகும் உலவும் போது
ஆ....
நல்லவர் போல உலகம்மீது
நரியும் கழுகும் உலவும்போது
நம்மை இன்பம் நாடிவருமா
சொல்லடி சொல்லு
நிம்மதியா-உலகம்
நிம்மதியாக வாழ விடுமா
சொல்லடி சொல்லு
நடந்தது எல்லாந் தேவையில்லை
தள்ளுடி தள்ளு-இனி
நடக்கப் போற சங்கதியைத்தான்
சொல்லடி சொல்லு
ஏமாத்தும் போர்வையிலே
ஏழைகளின் வேர்வையிலே
எக்காளம் போடுற கூட்டம்-நாட்டில்
எக்காளம் போடுற கூட்டம்-மக்கள்
எதிர்த்துகிட்டா எடுக்கணும் ஓட்டம்
( விஷயம் )
[எல்லோரும் இந்நாட்டு மன்னர், 1960]
துணிந்தால் துன்பமில்லை
சோர்ந்துவிட்டால் இன்பமில்லை! (துணிந்தால்)
இனிமை கலந்துவரும் பாட்டிலே-மனம்
எதையும் மறந்துவிடும் கேட்டாலே! (துணிந்தால்)
கசக்கும் வாழ்விலே,கவலைவரும் போதிலே
இனிக்கும் குரலெழுப்ப,பறவையுண்டு பாரிலே!
துடிக்கும் இதயங்களே தாளம்-காற்றில்
மிதக்கும் ஓசையெல்லாம் கானம் (துணிந்தால்)
ஆராரோவென்று அன்னை பாடக் கண்டு
அமைதியிலே குழந்தை தூங்குவதுமுண்டு
வாடிடும் முல்லை ரீங்கார வண்டு
வருவது கண்டு மனம் பொங்கும் மதுசிந்தும்
பகைமை நீங்கிவிடும் பாட்டாலே-பெரும்
பசியும் தீர்ந்துவிடும் கேட்டாலே! (துணிந்தால்)
[ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, 1960]
தாயில்லை தந்தையில்லை
தக்க துணை யாருமில்லை
ஒய்வில்லாக் கவலையாலே
ஒரு வழியும் தோன்றவில்லை
இலை இல்லை மலரும் இல்லை
கனி இல்லை காயும் இல்லை
தலையில்லா உருவம்போலே
வாழ்வும் ஆனதே ( இலையில்லை )
விதியே உன்வேலையோ
இதுதான் உன் ஆசையோ
கதியில்லா ஏழை எங்கள்
காலம் மாறுமோ? ( விதியே )
நிலவில்லா வானம்போலே
நீரில்லா ஆறுபோலே
சிலையில்லா கோயில்போலே
வீடும் ஆனதே ( நிலவில்லா )
ஒருநாளில் ஓயுமா
இருநாளில் தீருமோ
பலநாளும் துன்பமானால்
உள்ளம் தாங்குமோ?
கரையேறும் பாதை காணோம்
கண்ணீரில் ஓடமானோம்
முடிவில்லா வேதனை ஒன்றே
கண்ட லாபமோ? ( இலையில்லை )
[ஆளுக்கொரு வீடு, 1960]
பாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது
கேடுகெட்ட கும்பலாலே-நீங்க
கேடுகெட்ட கும்பலாலே.... ( பாடு )
சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே
வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்.... ( பாடு )
சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே...
[விக்ரமாதித்தன், 1962]
ஆண்: கதிராடும் கழனியில்
சதிராடும் பெண்மணி
கலைமேவும் அழகாலே
கவர்ந்தாள் கண்மணி
முதிராத செடியே
முல்லை மலர்க் கொடியே
பெண்: அன்பே என் ஆருயிரே
ஆணழகே என்னுடன்
தென்பாங்கு பண்பாடும்
தீராத இன்பமே!
ஆண்: ஏரோட்டும் விவசாயி
எருதுகளை ஏரியிலே
பெண்: நீராட்டும் அழகைப்பாரு கண்ணாலே!
ஆண்: பாராட்ட வேண்டியவள்
பானைதனைத் தலையில் வைத்து
பக்குவமா வாரா பாரு பின்னாலே!
பெண்: தேனாறு பாயுது
செங்கதிர் சாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது
ஆண்: மானே இந்நாட்டிலே
வகையான மாறுதல்
வந்தாலன்றி ஏது சீருகள்?
இருவரும்: உழவனும் ஓயாத
உழைப்பும்போல் நாமே
ஒன்றுபட்ட வாழ்க்கையில்
என்று மிருப்போம்
[கண்ணின் மணிகள் நாடகத்திற்கு எழுதிய பாடலில் மாற்றம் செய்து திரைப்படத்திற்கு எடுக்கப்பட்டது]
நாட்டுக்கு ஒரு வீரன்!-செஞ்சிக்
கோட்டைக்கு அதிகாரன்
அந்த நாளில் ஆற்காடு நவாபை
எதிர்த்த ராஜா தேசிங்கு
கதையை நாம் சொல்வோம் இங்கு:
இந்தப்-
பாட்டைக் கேட்டால் பரம்பரை நிலைமை
பளிச்சுப் பளிச்சுன்னு தெரியும்,
வேட்டு பீரங்கி கூட்டத்தில் பாய்ந்து
வெட்டியவன் கதை விபரம் புரியும்...( நாட்டுக்கு )
துள்ளிப் பாயும் குதிரை ஒன்று
டில்லித் துரையிடம் இருந்தது,
கொல்லிச் சாரல் கொங்கு பக்கிரி
சொல்லிப் பரிசாய்த் தந்தது
உள்ளத் துணிவாய் சவாரி செய்ய
எல்லாப் படையும் பாய்ந்தது
உறுதி கொண்டவர் வருக வருகவென
ஓலை எங்குமே பறந்தது (நாட்டுக்கு)
அந்தப் பேச்சைக் காதிலே கேட்டான்
தேரணி மகாராஜா
டில்லிக்குப் போனான் குதிரையைப் பார்த்தான்
தேரணி மகாராஜா அவன்
திகைத்துப் போனதால் சிறையில் தள்ளினான்
டில்லிக்கு மகாராஜா
தேரணி சிங்கை டில்லிச் சிறையில்
தள்ளிய மறுவாரம்
சிங்கக் குழந்தையை ஈன்றுவிட்டது
செஞ்சித் திருநகரம், செஞ்சித் திருநகரம்
சிங்கக் குழந்தையை ஈன்றுவிட்டது
செஞ்சித் திருநகரம்....! (நாட்டுக்கு)
உறையிலிருக்கும் போர்வாள் போலே
அறையிலிருந்தான் தேசிங்கு!
உலக வழக்கம் உணரும் வரைக்கும்
மடியில் வளர்ந்தான் தேசிங்கு!-தாய்
மடியில் வளர்ந்தான் தேசிங்கு!
சிறையிலிருக்கும் தேரணி மன்னன்
சேதியறிந்தான் தேசிங்கு!
புரவியடக்கக் கருதி வடக்கே
புலிபோல் பாய்ந்தான் தேசிங்கு!
அப்பனை விரட்டிய அதிசயக் குதிரையை
அங்கே கண்டானே!
அஞ்சாமலேறி சவாரி செய்து
அரும்புகழ் கொண்டானே....! (நாட்டுக்கு)
வசனம்: தகப்பனை மீட்ட தேசிங்கு ராஜாவுக்கு திருமணம் நடந்தது. அப்போது டில்லி பாதுஷா ஆர்க்காடு நவாபை விட்டு கப்பம் கேட்கச் சொன்னான்.அதைக் கேட்டதும் தேசிங்கு ராஜன் என்ன சொன்னான் தெரியுமா?
செப்புக் காசுக்கூட செஞ்சி நாட்டான்-வட
சீமைக்கு கட்டிட மாட்டான்-டில்லி
சேவடிக்குத் தினம் காவடி தூக்குவோன்-அவன்
தெரிஞ்சும் எப்படிக் கேட்டான்
இப்புவி மக்கள் இருப்பதெல்லாம்-அவன்
அப்பன் வீட்டு நிலமோ?-இந்தக்
குப்பைக் கூளங்களின் தப்புச் செயல்களை
ஒப்புக் கொள்ள வேணுமோ-நான்
கப்பம் கட்ட வேணுமோ? (நாட்டுக்கு)
குன்று நிகர் தேசிங்கு
கண்டபடி ஏசினான்
தண்டலுக்கு வந்தவன்
தலைதெறிக்க ஓடினான்,
அன்று நவாபு சேனை
அத்தனையும் கூட்டினான்,
அழகு செஞ்சி நகரை நோக்கி
ஆனை குதிரை ஓட்டினான்.
அந்தக் காட்சியைக் கண்ணாலே கண்டான்
ராஜா தேசிங்கு!
அகமது பொங்கி முகமதுகானை
அழைத்துவரச்சொன்னான்
வசனம்: அப்போது முகமதுகான் என்ன செய்து கொண்டிருக்கிறான். ஆருயிர்த் தோழன் முகமதுகான் கல்யாண கோலத்திலிருக்கிறான். மண மகளிடம் முகமதுகான் விடை கேட்கும் கட்டம் காண்க.
வந்தது வந்தது ஓலை
வாளும் தலைகளும் சந்திக்கும் வேளை!
வந்தது வந்தது ஓலை
வாழ்க்கை தொடங்கிடும் வேளை-என்
வார்த்தையைக் கேளுங்கள் போகலாம் நாளை
வாழ்க்கை தொடங்கிடும் வேளை
மானம் பெரிது உயிர் சிறிது-இது
வழி வழி வந்த வழக்கமடி
மானம் பெரிது உயிர் சிறிது-இது
வழி வழி வந்த வழக்கமடி-இதில்
மாற்றம் நடந்தால் என் மார்பின் உதிரம்-நம்
மண்ணை மணப்பதும் உண்மையடி-என்
வண்ணக்கிளியே விடை கொடடி(வந்தது)
நாளை வெற்றியில் திருமணம் இன்றேல்
நடப்பது வேறென்றே
நீலவேணியில் ஏறிப்பாய்ந்தான்
நெஞ்சில் உறுதி கொண்டே
வீரன்வந்ததைக் கண்ணாலே கண்டான்
ராஜாதேசிங்கு!
வெற்றிவந்ததாய் எண்ணி மகிழ்ந்தான்
ராஜாதேசிங்கு!
பாராசாரிக் குதிரை நீல வேணிக் குதிரை
பக்கம் பக்கம் வந்து நின்றன
சிங்க ஏறுபோல் இருவர் ஏறியமர்ந்ததும்
எதிரிப்படை நோக்கிச் சென்றன
அணி வகுத்த படை அதிருது-அங்கு
கனமிகுத்த யானை கதறுது!
ஆர்க்காட்டான் நெஞ்சம் பதறுது-அவன்
அழைத்து வந்தோர் தலை உதிருது
ஓர் கூட்டம் பல கூறாய்ச் சிதறுது-சிலர்
உடம்பும் காலும் சேர்ந்து ஒதறுது
அடிபட்டு,ஒடிபட்டு,மிதிபட்டு,அறுபட்டு
தரைமுட்ட லானவர்கள் எத்தனையோ-தலை
உடைபட்டுக் குடல் கொட்டி
படை விட்டுத் தெறிபட்டு நடைகட்டித்
துணிந்தவர் எத்தனையோ!
சிங்கம் முகமது சிங்கம் எங்கும்
செந்நீர் ஆடி வருகையிலே
செப்புச் சிலைநகர் தேசிங்கு கைவாள்
தீப்பொறி கக்கிச் சுழலையிலே
செக்கா வானமா பூமியா வென்று
சிந்திக்க வைக்கும் வேளையிலே
தீரன் முகமது குண்டடிபட்டு
வீழ்ந்ததைத் தேசிங்கு கண்டானே
வெற்றியினருகில் கையொடிந்தது போல்
மேனி துடித்து நின்றானே
தனித்தனி மதத்தில் பிறந்த நமது
சரித்திரமே ஒரு புதுமையடா!
இணைந்த நம்குரலின் ஒற்றுமை முழக்கம்
என்றுமே அழியாத பெருமையடா!
தங்கத் தூணொன்று குங்குமச் சேற்றில்
சாய்ந்ததோ வென்று அழுதானே....!
நம்குலப்பெயரை நாட்டி விரைவிலே
நானும் வருகிறேன் என்றானே
சுற்றிய சேனை அடங்கலும் வென்றான்
சூரன் நவாபும் ஓடி ஒளிந்தான்
கத்தி எடுத்தே நன்றி மொழிந்தான்
வெற்றி வெற்றியென விண்ணிலெறிந்தான்!
பெற்ற பூமியை வணங்கி நிமிர்த்தினான்
பெரும் படைவாளை மார்பிலேந்தினான்
வற்றாப் புகழோன் செஞ்சியின் தலைவன்
மடிந்ததை யறிந்தாள் மாது ராணியும்
திருமணமாகி ஒரு கணமாகிலும்
திருமுகம் காணாதிருந்தீரே
திரையில் மறைந்ததும் கரந்தனில் முத்தம்
சிந்தியதோடு பிரிந்தீரே!
பெரும்படை வென்று திரும்புவேனென்று
இடும்தடை கடந்து சென்றீரே!
திறம்பட நின்று வரும் பகைகொன்று
களந்தனில் அமைதி கொண்டீரே-என்று
சிரந்தனைமோதி அழுதாளே
தியாக வீரனைத் தொழுதாளே
நடந்த கதை இது மெய்யிலே-உடன்
ராணியும் விழுந்தால் தீயிலே!
(நாட்டுக்கு)
[ரங்கோன் ராதா,1955]
அடியார்கள் உள்ளத்தில் குடிகொள்ளும் தேவதையே!
ஆதரிக்க வேணுமே-என் ஜக்கா தேவி
அடங்காத பேர்களையும் ஆலைவாய்க் கரும்பு போல
ஆட்டிவைக்கும் அம்பிகை நீயே-என் ஜக்கா தேவி
ஆதரிக்க வேணுமே
காகம் பறக்காத தேசமெல்லாம்
கத்தியால் வெட்டுவேன் பாதர் வெள்ளை!-அய்யா
கருவறுத்தவன் பாதர் வெள்ளை
பாதர் வெள்ளையென்ற பேரைக் கேட்டால்
பத்துமாத கர்ப்பம் பறந்துவிடும்!
இலங்கை தேசத்திற்கு இந்திரஜித்து
பாஞ்சால நாட்டிற்கு பாதர் வெள்ளை!
பாஞ்சாலங் குறிச்சியின் பஞ்சவர்ணக்கிளி
வந்தேனே நானும் வந்தேனே
பஞ்சபாணன் துயர் மிஞ்சும் ரூபவதி
வஞ்சியஞ்சிடும் கொஞ்சும் கிளிமொழி
பாதச் சிலம்புக் கொஞ்சி
பத்தினியால் வஞ்சி
வந்தேனே- நானும்
வந்தேனே!
பாதர்: போருக்கு போறேண்டி பாதர் வெள்ளை
போக விடைதாடி வெள்ளையம்மா!
வெள்: போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் கண்டதினால்
பாதர்: கண்ட கனவதைச் சொல்லாவிட்டால்
கத்தியால் வெட்டிடுவேன் பாதர் வெள்ளை
வெள்: பிஞ்சு மலருமே சோம்பக் கண்டேன்
பிஞ்சிட்ட வாழையும் சாகக் கண்டேன்
பாதர்: பிஞ்சிட்ட வாழையும் சாகக் கண்டால்
பின்வாங்கேன் சண்டையில் பாதர் வெள்ளை!
வெள்: ஊமத்துரை மாமா கட்டபொம்மு
ஊரை விட்டோடக் கனவு கண்டேன்
பாதர்: ஊரை விட்டோடக் கனவு கண்டால்
ஊக்கத்துடன் சண்டை செய்வேனடி!
ஏறியுட் கார்ந்தோர் குதிரையின் மேல்
இழுத்துப் பிடித்தார் கடிவாளத்தை
வையாளி யோடுதங் காட்டுவழி
வாரி எறியுதாம் பேக்குதிரை!
ஒட்ட ரங்காடு ஒடங்காடு
ஓடிவருகுதாம் பேக்குதிரை!
சில்லாடற்காடு செடிக்காடு
சிட்டாப் பறக்குதாம் பேக்குதிரை!
காலில் அகப்பட்ட கற்களெல்லாம்
பிறண்டு ஓடுதாம் முன்னாலே!
ஓட்டப் பிடாரத்து பாதை வழி
ஓடி வருகுதாம் பஞ்சவர்ணம்
கொக்குப் பறந்ததுபோல் குதிரை
கோட்டையை விட்டுமே கண்டு கொண்டு
குதிரையை விட்டுமே தானிறங்கினான்
கோடையிடி போன்ற பாதர் வெள்ளை!
[குலதெய்வம்,1956]
தூங்காது!கண் தூங்காது!
இருள் சூழும் உலகில்
பொதுவாழ்வு தோன்றும்வரை
தூங்காது; கண் தூங்காது! (தூங்காது)
வேங்கைவாட நரி மேன்மையாவதும்,
வேங்கைவாட நரி மேன்மையாவதும்,
வீரர்மரபு தாழ்வதும் நீங்கும்வரை
தூங்காது; கண் தூங்காது!
ஆதி நீதி முறை ஆட்சி செய்யவே
அன்பு மழை பெய்யவே
சோதி இறையருள் ஆறுபாயவே
பேதம் மறைந்து உய்யவே, காணும்வரை
தூங்காது; கண் தூங்காது
இருள் சூழ்ந்த உலகில்
பொதுவாழ்வு தோன்றும்வரை
தூங்காது; கண் தூங்காது!
[கற்புக்கரசி,1957]
வரும் பகைவர் படைகண்டு
மார்தட்டிக் களம் புகும்
மக்களைப் பெற்றோர் வாழ்க!
மணங்கொண்ட துணைவர்க்கு
விடைதந்து வேல்தந்த
மறக்குலப் பெண்கள் வாழ்க!
உரங்கொண்டு போராடி
உதிரத்தில் நீராடி
அறங்காத்த உள்ளம் வாழ்க!
திறமான புகழ்கொண்ட
திடமான தோள்களும்
செயல் வீரர் மரபு வாழ்க!
[அம்பிகாபதி,1957]
ஆண்: துள்ளி வரப் போறேன்
சுருள் சுருளாய் பாட்டுகளை
அள்ளி விடப் போகிறேன்
அய்யா எஞ்சாமிகளே-இந்தப்
திரையைக் கொஞ்சம் தூக்கிடுங்கோ
தமிழ்நாடு
இருவர்: நாங்க பொறந்த தமிழ் நாடு-இது
நாலு மொழிகளின் தாய் வீடு!
ஓங்கி வளரும் கலையைத் தலையிலே
தாங்கி வளரும் திருநாடு! (நாங்க)
பெண்: மதுரத் தமிழ் வழிந்து
உதிரத்தொடு கலந்து
மனதில் துணிவுகொண்டு வாழ்ந்தவர்-சக்தி
வளரக்கலை பயின்று தேர்ந்தவர்
ஆண்: அன்று-
எதிரிப்படை யெழுந்து
பதறிமிகச் சினந்து
இமயச்சரிவில் வந்த போதிலே-வெற்றி
எமக்கென்றே முழங்கிற்று காதிலே!-இது (நாங்க)
ஆந்திர நாடு
இருவர்: எங்கள் நாடுஆந்திர நாடு-விசால
ஆந்திரநாடு
எந்த நாடும் இதற்கில்லை ஈடு!
பெண்: பொங்கும் கிருஷ்ணா நதி ஓடும் நாடு
ஆண்: போகம் மூன்றும் தவறாத நாடு (எங்)
பெண்: எங்கள் பொழிலும் தோன்றுவளர் கூடு
ஆண்: என்றும் நீ இதைப் போற்றிக் கொண்டாடு (எங்)
பெண்: கீர்த்தனை கவிதைகள் ஆயிரம் வளர் நாடு (எங்)
ஆண்: இதை-நேர்த்தியுடன்
இருகை கூப்பி வாழ்த்துவமே(எங்)
கன்னட நாடு
பெண்: தங்கம் விளையும் பூமி
எங்கள் கன்னட பூமி
காவேரி ஆறு பாயும்
காட்டில் யானைகள் மேயும்
சாமுண்டி சக்தி மேவும்
தவறாத பக்தி வாழும் (தங்கம்)
மலையாள நாடு
இருவர்: எங்கள் மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்
பெண்: அலையாடும் கடல் விளையாடும்
ஆண்: அக்கம் பக்கம் கொக்குகளும்
வட்டமிட்டுப் பறக்கும் (எங்கள்)
பெண்: பாக்குமரத்திலே பாளை சிரிக்கும்-பச்சை
பட்டாடைபோல் கதலி இலை விரிக்கும்
ஆண்: தேக்கு மரங்கள்
விண்ணை இடிக்கும்-இன்னும்
சித்திரைச் சோலையெல்லாம்
கண்ணைப்பறிக்கும்
அழகுக் குயில்கள் வந்து
பாடிக்கிடும்-தென்னையை
மிளகுக்கொடி படர்ந்து
மூடிக்கிடும்
பெண்: சிலுசிலுக்கும் அருவி
ஓடிக்கிடும்-மயில்
சிறகை விரிச்சிகிட்டு
ஆடிக்கிடும்
ஆண்: தேனிருக்கும்
பெண்: பூவிருக்கும்
பெண்: மானிருக்கும்
ஆண்: வனமிருக்கும்
இருவர்: செங்கனிகளுமிருக்கும்
தின்றால் மிகு இனிக்கும் (எங்கள்)
[திருமணம்,1958]
ஒருவன்: மூளை நெறஞ்சவங்க
காலம் தெரிஞ்சவங்க
மூத்தவங்க படிச்சவங்க
வாழ்கின்ற நாடு!-இது
மற்றவன்: மூச்சுத் திணறுதுங்க
முளியும் பிதுங்குதுங்க
பாத்துக்குங்க கேட்டுக்குங்க
ஜனங்கள் படும்பாடு!-இது
ஒருவன்: நெலமை இப்படி இருக்குது
நீதி கெடந்து தவிக்குது
கொடுமை மேலே கொடுமை வளர்ந்து
நெருக்குது - அது
அருமையான பொறுமையைத்தான்
கெடுக்குது - ஊர் (நெலமை)
மற்றவன்: பாதை மாறி நடக்குது,
பாஞ்சுபாஞ்சு மொறைக்குது
பழமையான பெருமைகளைக்
கொறைக்குது-நல்ல
பழக்கமெல்லாம் பஞ்சு பஞ்சாப்
பறக்குது - ஊர்ப் (நெலமை)
ஒருவன்: என்ன இருந்தாலும் மனுசன்
இப்படி ஆடக் கூடாது
மற்றவன்: எதுக்கும் ஒரு முடிவிருக்குது
அதிகநாளு ஆடாது
ஒருவன்: ஏழைகளை அடிச்சுப் பறிக்கும்
எண்ணம் உடம்புக் காகாது
மற்றவன்: காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா
கவனிக்காமெப் போகாது-ஊர் (நெலமை)
ஒருவன்: அன்பு வளர்ந்த கோட்டைகுள்ளே
அகந்தை புகுந்து கலைக்குது
மற்றவன்: வரம்பு மீறி வலுத்த கைகள்
மக்கள் கழுத்தை நெரிக்குது
ஒருவன்: விருப்பம் போல நரிகள் சேர்ந்து
வேட்டையாடிக் குவிக்குது
மற்றவன்: வெறிநாய்க்கு உரிமை வந்து
வீட்டுகாரனைக் கடிக்குது-ஊர் (நெலமை)
[உத்தம புத்திரன்,1958]
எங்கே உண்மை என் நாடே
ஏனோ மௌனம் சொல் நாடே
மேலான செல்வம் வீணாகலாமோ?
வீழாமல் மீளாயோ! (எங்கே)
மீறிவரும் குரல் கேளாயோ
வெற்றி வரும் வேகம் பாராயோ
பாராளத் தகுந்தவள் உன் மகளோ
பாதகம் புரிந்திடும் பொய் மகளோ
தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்
தாழ்ந்தாலுன் கண் தாங்குமோ (எங்கே)
காலமுன்னைக் குறை கூறாதோ
காவியங்கள் யாவும் ஏசாதோ
வாள் வீரம் சூழ்ச்சியை வாழ்த்திடுமோ
போலியைப் பொய்மையைப் போற்றிடுமோ
தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்
தாழ்ந்தாலுன் கண் தூங்குமோ....?
[இரத்தினபுரி இளவரசி,1959]
அடியார்க்கு அடியாராய்
அத்தனையும் கற்றவராய்ப்
பெரியவராய்ச் சின்னவராய்ப்
பேசுகின்ற உத்தமரே!
முடிகள் நரைத்தாலும் மூளை நரைக்காமல்
முன்னேறி வந்தவரே-ஐயா-உங்கள்
பொன்மேனி வாழியவே!
அன்பும் அறிவும் ஆசையும் நெறைஞ்ச
ஐயா வாழ்க!வாழ்க!
அம்பது வருஷம் இவரைச் சுமந்த
அன்னை பூமி வாழ்க! (அன்பும்)
சின்னக் குழந்தையைப்போலே துள்ளி விளையாடும்
குணம் வாழ்க!-ஐயா
குணம் வாழ்க!-ஒரு
தினை அளவுகூட சுயநலமில்லாத
மனம் வாழ்க-ஐயா
மனம் வாழ்க! (அன்பும்)
காசு பணங்களை கைதிகளாக்கிய
கை வாழ்க!-ஐயா
கை வாழ்க!
காலந் தெரிஞ்சு அதை விடுதலை செய்த
பை வாழ்க!-ஐயா
பை வாழ்க!
அளவுக்கு மீறி சேர்த்து வைப்பதால்
ஆபத்து வருமென்றே
அள்ளி அள்ளியே வழங்குகின்றாரிவர்
வள்ளல் வழி நின்றே-இமய மலையும்
இவரும் ஒன்றே! (அன்பும்)
[ஆளுக்கொரு வீடு,1960]
தஞ்சமென்று வந்தவரைத்
தாய்போல் ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு
வாள் முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில்
அன்புக்கு இடம் கொடுத்து
அறங் காக்கும் மக்களிடம்
பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-அது
அப்படியே நிக்குது எங்கண்ணிலே-நான்
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-அது
அப்படியே நிக்குது எங்கண்ணிலே
மூணுபக்கமும் கடல் தாலாட்டுது-தன்
மானமுள்ள மக்களைப் பாராட்டுது
வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்துவந்து நிலத்தை நீராட்டுது-பல
வளம்பெருகி மறவர் பேர்நாட்டுது (அதி)
மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு-அதில்
மனங்கவரும் அழகுக் கலையிருக்கு,
மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு (அதி)
அங்கே-
சந்தன மரக்கிளையும் தமிழ்க்கடலும்-தழுவி
சந்தமிசைத்துத் தென்றல் தவழ்ந்து வரும்
செந்தாழை மலர்தொட்டு மணம்சுமந்து வரும்
இங்கே-
தங்கிட நிழலுமில்லை
பொங்கிடக் கடலுமில்லை-சற்று
நேரங்கூட வெயில் மறைவதில்லை
நம்மை தழுவிடத்
தென்றலெதும் வருவதில்லை.
[கலையரசி,1965]
ஒற்றுமையில் ஓங்கிநின்ற சக்தியாலே-மக்கள்
உள்ளமெல்லாம் பொங்குதடா வெள்ளம்போலே
வெற்றியெனும் மேடையிலே அன்புக்காளை....
வீரநடை போடுதடா இந்தவேளை....
அன்பிருக்குது அறிவிருக்குது
பண்பிருக்குது பாரிலே...அதை
அழிக்க எண்ணித் திருட்டு நரிகள்
குழிபறிக்குது வேரிலே...
ஒருவர்: மாமறவர் வழியில் பிறந்து சிறந்து
மகாவீரன் என விளங்குவேன்
மற்றவர்: வாளும் திடமுடைய தோளும்
துணையிருக்க யார்க்கும் உலகில்
அஞ்சிடேன்
இருவர்: எண் திசைகளும் கண்டு நடுங்க
வென்று வாகை சூடுவோம்
அறிவிலே கலைஞராய் திறனிலே
தீரராய்
நாடும் ஏடும் எமைப்பாட
தொல்லுலகம் உள்ளவரை
வளர்புகழ் அடைவோம்
கூட்டம்: இது வீரர் பிறந்த மண்ணு -இதில்
நாமெல்லாம் ஒண்ணு
சக்க: அட ஆத்தே நீங்க பெரும்
வீரர்கள்தான்-உங்களைப்
பார்த்தே எதிரி ஓடிப்போயிடுவான்
கூட்டம்: அன்பிருக்குது அறிவிருக்குது
பண்பிருக்குது பாரிலே-அதை
அழிக்க எண்ணித் திருட்டு நரிகள்
குழிபறிக்குது வேரிலே...
ஒருவர்: வெட்டும்கூர் வாளினைக்
காட்டிடுவேன்-நாட்டில்
வேதனை செய்வோரை வாட்டிடுவேன்
மற்றவர்: எந்தநாடும் இதற்கீடில்லை என்றே-என்
சொந்த நாட்டைச் சொர்க்க
மாக்கிடுவேன்
இருவர்: கற்றவர் நெஞ்சக் கருத்தினிலே ஒன்றி
ஒற்றுமை கொண்டுல காண்டிடுவோம்
வெட்டும் கூர்வாளினைக்
காட்டிடுவோம்-நாட்டில்
வேதனை செய்வோரை வாட்டிடுவோம்
கூட்டம்: இது வீரர் பிறந்த மண்ணு-இதில்
நாமெல்லோரும் ஒண்ணு
சக்க: அட ஆத்தே நீங்க பெரும்
வீரர்கள்தான்-உங்களைப்
பார்த்தே எதிரி ஓடிப்போயிடுவான்
கூட்டம்: அன்பிருக்குது அறிவிருக்குது
பண்பிருக்குது பாரிலே-அதை
அழிக்க எண்ணித் திருட்டு நரிகள்
குழிபறிக்குது வேரிலே.
[மர்மவீரன்,1958]
பையன்கள்: ஓரொண்ணு ஒண்ணு
ஈரொண்ணு ரெண்டு
மூவொண்ணு மூணு
நாலொண்ணு நாலு
வாத்தியார்: ஓரொண்ணு ஒண்ணு
உள்ள தெய்வம் ஒண்ணு
ஈரொண்ணு ரெண்டு
ஆண் பெண் ஜாதி ரெண்டு
மூவொண்ணு மூணு
முத்துத் தமிழ் மூணு
நாலொண்ணு நாலு
நன்னிலம் நாலு
உள்ள தெய்வம் ஒண்ணு
ஆண் பெண் ஜாதி ரெண்டு
முத்துத் தமிழ் மூணு
நன்னிலம் நாலு
பையன்: அஞ்சொண் அஞ்சு
வாத்தியார்: அஞ்சுவதற்கு அஞ்சு
பையன்: ஆறொண் ஆறு
வாத்தியார்: நல்லறிவுகள் ஆறு
பையன்: ஏழொண் ஏழு
வாத்தியார்: இசைக்குலங்கள் ஏழு
பெண் குழந்தை: ஸரிகமபதநிஸா
பையன்: ஏழொண் ஏழு
வாத்தியார்: இசைக் குலங்கள் ஏழு
பையன்: எட்டொண் எட்டு
வாத்தியார்: எட்டும் வரை எட்டு
பையன்: ஒன்பதொண் ஒன்பது
வாத்தியார்: உயர் மணிகள் ஒன்பது
பையன்: பத்தொண் பத்து
வாத்தியார்: பாடல்கள் பத்து
லாலல்ல லாலல்ல லாலலல்லா
லாலல்ல லாலல்ல லாலலல்லா
வாத்தியார்: உன்னையெண்ணிப்பாரு
உழைத்து முன்னேறு
உண்மையைக் கூறு
செம்மை வழி சேரு
பெண் குழந்தை: உன்னை யெண்ணிப்பாரு
உழைத்து முன்னேறு
உண்மையைக் கூறு
செம்மை வழி சேரு
வாத்தியார்: அன்புக்கு வணங்கு
அறிந்த பின் இணங்கு
பண்புடன் விளங்கு
பசித்தவர்க் கிரங்கு
பையன்: அன்புக்கு வணங்கு
அறிந்தபின் இணங்கு
பண்புடன் விளங்கு
பசித்தவர்க் கிரங்கு
லாலல்ல லாலல்ல லாலலல்லா
லாலல்ல லாலல்ல லாலலல்லா
வாத்தியார்: பேதங்கள் தீர்த்து
பெருமையை உயர்த்து
நீதியைக் காத்து
நேர்மையைக் காட்டு
பெண் குழந்தை: நேர்மையைக் காட்டு
பொன் மொழி கேட்டு
பொய்மையை மாற்று
பொறுப்புகள் ஏற்று
பொதுப் பணியாற்று
வாத்தியார்: திருக்குறள் நூலை
சிறந்த முப்பாலை
கருத்துடன் காலை
படிப்பதுன் வேலை
லாலல்ல லாலல்ல லாலலல்லா
லாலல்ல லாலல்ல லாலலல்லா
[மகனே கேள்,1965]
ஆண்: ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு (ஆறறிவில்)
அடக்கமில்லா பெண்கள் சிலர்
நடக்கும் எடக்கும் நடையிலும்
ஆதிகால பண்பைக் காட்டிப்
பறக்க விடும் உடையிலும் (ஆறறிவில்)
தன்ரேகை தெரியாத
பொய்ரேகைக் காரரிடம்
கைரேகைப் பார்க்கவரும் முறையிலும்
அவன் கண்டது போல் சொல்லுவதை
நம்பிவிடும் வகையிலும்
ஏமாறும் மனத்திலும்
ஆமாஞ்சாமி கருத்திலும்
எந்த நாளும் திருந்தாத
மூடத்தனத்திலும்
சோம்பேறி சுகத்திலும்
துடை நடுங்கும் குணத்திலும்
சொந்த நிலையை மறந்து திரியும்
ஈனப் பேச்சிலும்
சிந்திக்காத இடங்களிலும்
தெண்டச் சோத்து மடங்களிலும் (ஆறறிவில்)
[மகனே கேள், 1965]
பெண்: மட்டமான பேச்சு-தன்
வாளைக் கெடுக்குதுங்க-அது
வெட்டித்தனமாக் கேக்கிறவங்க
காதையும் கெடுக்குதுங்க (மட்ட)
ஆண்: மட்டமான பேச்சு...
இருவரும்: மட்டமான பேச்சு...
சந்திலும் பொந்திலும் வாதம்-அதால்
தலைவலி மருந்துக்கு லாபம்-அந்த
ஜாடையிலே சில கேடிகள் செய்வது
சட்டையின் பைகளைக்
கெடுக்குதுங்க
கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து
குடும்பத்தைக் கலக்குதுங்க-பெருங்
குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி
பொழப்பையும் கெடுக்குதுங்க
புரளியும் வதந்தியும் மூட்டி-ஒரு
பொய்யை நூறாகக் கட்டி-கரும்
பூதமென்றும் சிறு
பேய்களென்றும்-பல
பாதையும் ஊரையும் கெடுக்குதுங்க (மட்ட)
அறையில் வளர்ந்து வெளியில் பறந்து
அவதிப் படுத்துதுங்க-ஊரை
அவதிப் படுத்துதுங்க-அது
அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே
அமைதியைக் கெடுக்குதுங்க
பாழும் பொய்யென்று காட்டி-உடல்
மாயக் கூடென்று கூட்டி-உயர்
வானத்திலே பரலோகத்தைப் பாரென்
மனதையும் அறிவையும்
கெடுக்குதுங்க (மட்ட)
மட்டமான பேச்சு-தன்
வாயைக் கெடுக்குதுங்க-அது
வெட்டித்தனமாக் கேக்கிறவங்க
காதையும் கெடுக்குதுங்க
ஆண்: எது?
பெண்: மட்டமான பேச்சு
[மகனே கேள்,1965]
ஆண் : மணவறையில் சேர்த்து வைத்து
வாழ்த்துரைக்கும் ஓர் காலம்
மக்களைப் பெற்று மகிழவைக்கும் ஓர் காலம்
மனதிலே பாசங்கள் வளர்ந்து மறைந்தபின்னே
கனவுகண்டு விழிப்பதுபோல் கலைத்துவிடும் ஓர் காலம்
காலம்....காலம்
சூதாட்டம் ஆடும் காலம்-பல
மாறாட்டம் செய்து போகும்
வாதாடி என்ன லாபம்-துயர்
மலிந்தோர்க்கு எதுநியாயம் (சூதாட்டம்)
பெண் : சூதாட்டம் ஆடும் காலம்-பல
மாறாட்டம் செய்து போகும்
வாதாடி என்ன லாபம்-துயர்
மலிந்தோர்க்கு ஏது நியாயம் (சூதாட்டம்)
பேராசை காட்டி மயக்கும்-இணை
பிரியாத அன்பைப் பிரிக்கும்
பெண் : மாறாத இன்பம் போலே-வந்து
மறைந்தோடும் மண் மேலே
ஆண் : இனி வாதாடி என்ன லாபம்-துயர்
மலிந்தோர்க்கு ஏது நியாயம்
சூதாட்டம் ஆடும் காலம்-பல
மாறாட்டம் செய்து போகும்
ஆண் : மக்கள் வேண்டும்; செல்வம் வேண்டும்-என
மறவாமல் உள்ளம் தூண்டும்
மக்கள் வேண்டும் செல்வம் வேண்டும்-என
மறவாமல் உள்ளம் தூண்டும்
மந்தையாக யாவும் கூடும்
சந்தை மாடு போலே ஓடும்-இனி
வாதாடி என்ன லாபம்-உந்தன்
நிலை காண ஏது நேரம் (சூதாட்டம்)
பெண் : வாதாடி என்ன லாபம்-துயர்
மலிந்தோர்க்கு ஏது நியாயம்
ஆண் : சூதாட்டம் ஆடும் காலம்-பல
மாறாட்டம் செய்து போகும்.
[மகனே கேள்,1965]
ரோஜா : ஓ....மல்லியக்கா
மல்லி : ஏண்டி, ரோஜா அக்கா
ரோஜா : மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே?
கொஞ்சம் சொல்லடியக்கா
எதுக்கு இப்படி குலுக்கி நடக்கிறே?
மல்லி : நான்-மணவறையைச் சிங்காரிச்சு
வாசனையை அள்ளித் தௌிச்சு
வாரவங்க எல்லோரையும்
மயக்கப் போறேன்
மணப்பொண்ணு கூந்தலிலே
மணக்கப் போறேன்
ரோஜா : நீ-மணப்பொண்ணு தலையில் மட்டும்
மணக்கப்போறே,
நான்-மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி
தொங்கப் போறேன்
நீ-வாசனையைக் கொடுத்துப்பிட்டு
வதங்கப் போறே,
நான் வாரவங்க கையில் எல்லாம்
குலுங்கப் போறேன்-அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? - உன்
தரத்துக்கும் உடல் நெறத்துக்கும் நான்
கொறஞ்சு போனேனா?
மல்லி : கள்ளமில்லா மனசுக் கென்னை உவமை
சொல்வாங்க - பெரும்
கவிஞரெல்லாம் காவியத்தில் இடம்
கொடுப்பாங்க,
காத்தடிச்சா போதும் என்னைக்
காணத்துடிப்பாங்க - ஓன்னை
கண்டாக்கூட முள்ளெ நெனச்சு
முகஞ்சுளிப்பாங்க - அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? - உன்
தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
கொறஞ்சு போனேனா?
ரோஜா : நீ - மலருமுன்னே வந்து கடைக்கு
மலிஞ்சு போறவ!
மல்லி : நீ - உலருமுன்னே தொட்டாக்கூட
உதிர்ந்து போறவ!
ரோஜா : நீ - வளரும் போதே கொம்பைத்
தேடிப்புடிச்சவ!
மல்லி : அதுக்கு வகையில்லாமெ
தனிச்சு நின்னு!-அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? - உன்
தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
கொறஞ்சு போனேனா?
(தாமரை வருதல்)
தங்கச்சி தங்கச்சி
தாமரைத் தங்கச்சி
எங்களுக்குள்ளே எவதான் சிறந்தவ
எடுத்துச் சொல்லு தங்கச்சி?
தாமரை : மலருவதெல்லாம் உலருவதுண்டு
மறந்துட வேணாம் அக்கச்சி! அக்கச்சி! - சில
மனிதரைப் போல வம்புகள் பேசி
பிரிந்திட வேணாம் அக்கச்சி! அக்கச்சி!
தாமரை : உலகில் சிறந்தது என்ன?
மல்லி : அன்பு உள்ளவர் செய்திடும் தானம்
தாமரை : அந்த தானத்தில் சிறந்தது என்ன?
ரோஜா : நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்
தாமரை : அதிலும் சிறந்தது என்ன?
மல்லி : பல அஹிம்சா மூர்த்திகள்
ஆராய்ந்து சொன்ன உலக சமாதானம்!
தாமரை : அதை நாம் உணர்ந்து
நடக்க வேணும் எல்லோரும்-ஒன்றாய்
இருக்கவேணும்!-அப்போதுதான்
உலவும் சமாதானம்-எங்கும்
நிலவும் சமாதானம்!
மூவரும் : அதை நாம் உணர்ந்து
நடந்திடுவோம்
எல்லோரும் ஒன்றாய்
இருந்திடுவோம்!
[மக்களைப் பெற்ற மகராசி,1957]
வா வா வெண்ணிலவே-வா இருள்
மறைந்தோடப் பிறந்தாயென் விருந்தாளியே!
மங்கை மனதிலே மலிந்திடும் கனவில்
பங்கு கொண்டுதவும் பாற்குடமே! (வா வா)
குமுதம் வாய் திறந்து குலுங்கும் வேளை
குலவியுடன் ஒளிதனில் குளிக்கும் வேளை
அமுதான நிலகண்டு கருமேகம் புகுந்தால்
அதைநானும் சகியேனே! கலை வெள்ளமே!
கலைவெள்ளமே! (வா வா)
நாளை என் கண்கள் விழித்திருந்தாலுந்தன்
நகை முகம் மகிழ்ந்திட நற்செய்தி சொல்லுவேனே
நம்பினேன் உனதன்பையே நலம் பொங்க வா
(வா வா)
[சௌபாக்கியவதி,1957]
பெண் : கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!
கொந்தளிக்கும் நெஞ்சிலே,
கொண்டிருக்கும் அன்பிலே,
அக்கறை காட்டினாத் தேவலே
ஆண் : குப்பையைக் கிளறிவிடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே,
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே!
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ-கோ-கோ!
பெண் : காலம் நேரம் அறிந்து உலகை
தட்டி எழுப்பிடும் சேவலே!
காத்திருப்பவரைக் கொத்தி விரட்டிடும்
காரணம் என்ன சேவலே?
ஆண் : கொத்தவுமில்லை விரட்டவுமில்லை
குற்றம் ஏதும் நடந்திடவில்லை
கொண்ட நினைவுகள் குலைந்து போனபின்
இன்பம் ஏது கோழியே?-அந்த
எண்ணம் தவறு கோழியே
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ-கோ-கோ!
பெண் : நாட்டுக்கு மட்டும் போதனை சொல்லி
நம்பிய பெண்ணின் நிலையை அறியா
ஞானியை நீயும் பாரு-இது
ஞாயந்தானா கேளு?
ஆண் : நம்பியிருப்பதும் நட்பை வளர்ப்பதும்
அன்பு-மெய் அன்பு! அந்த
அன்பின் கருத்தை விதவிதமாக
அர்த்தம் செய்வது வம்பு
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ-கோ-கோ!
[பதிபக்தி,1958]3.4 மனிதனைக் கேலிசெய்யும் பறவை
பெண்கள் : காக்காய்க்கும் காக்காய்க்கும்
கல்யாணமாம்
கானக் கருங்குயிலு
கச்சேரியாம்!
ஆண்கள் : கண்ட கண்ட பக்கமெல்லாம்
அழைப்புகளாம்
காலம் தெரிஞ்சுக்கிட
குறிப்புகளாம் (காக்)
பெண்கள் : வீட்டுக்கு வீடு
விருந்துகளாம்
வில்லு வண்டிக் கூண்டுமேலே
ஊர்வலமாம்
ஆண்கள் : பழங்களும் விதைகளும்
பரிசுகளாம்-அதன்
பரம்பரை மொழியிலே
வாழ்த்துகளாம்!
எல்லோரும்: காக்காய்க்கும் காக்காய்க்கும்
கல்யாணமாம்
கானக் கருங்குயிலு கச்சேரியாம்!
பெண்கள் : ஒற்றுமையில்லாத
மனிதரைப்போல்-அது
ஒண்ணைஒண்ணு கொத்திகிட்டு ஓடலையாம்!
ஆண்கள் : உயர்வு தாழ்வு என்று பேதம் பேசிக்கிட்டு
ஒதுங்கி வாழ இடம் தேடலையாம்
ஒதுக்கி வாழ இடம் தேடலையாம்! (காக்)
பெண்கள் : அதிகமாகச் சேத்துகிட்டு
அல்லும் பகலும் பாத்துக்கிட்டு
இருப்பவங்க போலே நடக்கலையாம்!
ஆண்கள் : நல்ல இதயத்தை மாத்திகிட்டு
ஈயாதவன் போல
கதவைத்தான் சாத்திகிட்டுச்
சாப்பிடலையாம்!
பெண்கள் : வரிசை தவறாமே
குந்திக்கிட்டுதாம்
வந்ததுக்கெல்லாம் இடம்
தந்திக்கிட்டு தாம்!
ஆண்கள் : மனிதனைக் கேலி
பண்ணிக் கிட்டுதாம்-அவன்
வாழ்க்கையில் கோணலை
எண்ணிக்கிட்டுதாம்!
எல்லோரும்: காக்காய்க்கும் காக்காய்க்கும் கல்யாணமாம்!
கானக் கருங்குயிலு
கச்சேரியாம்
[பிள்ளைக்கனியமுது,1958]
ஆடு மயிலே நீ ஆடு மயிலே
ஆனந்த நடனம் ஆடுமயிலே! (ஆடு மயிலே)
பாடு குயிலே இசை பாடு குயிலே
அன்பு வாழ இன்பம் சூழ அகமதில்
அமைதி பெருகி நிலைபெறவே! (ஆடு மயிலே)
ஆடாதே நீயும் ஆடாதே-வீண்
ஆணவக் குரங்கே ஆடாதே
போடாதே சத்தம் போடாதே-கொடும்
பார்வை ஆந்தையே போடாதே!
வாடாதே முகம் வாடாதே
வண்ண மலரே வாடாதே!
வழக்கமான பூசை முடியுமுன்னே
மறந்தும் இதழை மூடாதே! (வாடாதே)
ஓடாதே மானே ஓடாதே-நீ
ஓடும் வழி தவறி ஓடாதே!
வேடன் வலையிலும் சிங்கத்தின் வாயிலும்
விருந்தாய் விழுந்து விடாதே! (ஓடாதே)
[இரத்தினபுரி இளவரசி,1959]
வா வா சூரியனே
மனிதர் நிலையை தெரிஞ்சுக்க
வஞ்சகர் அதிகம் உண்டு
நோக்கம் பாத்து நடந்துக்க! (வா வா)
தூங்கிக்கிடந்த உயிர்களெல்லாம்
துள்ளி எழுந்திடும் காலையிலே
சோர்ந்து கிடந்த கைகளெல்லாம்
துணிந்திடும் பல வேளையிலே
உலகத்தை நினைச்சாலே
உடம்பு நடுங்குது
ஊருகெட்ட கேட்டைப் பார்த்து
நீதி பதுங்குது!
உருவங்கள் மனிதர்போல
ஓடி அலையுது
உள்ளத்திலே எண்ணமெல்லாம்
நஞ்சா விளையுது (வா வா)
நாடு முன்னேற பலர்
நல்லதொண்டு செய்வதுண்டு
நல்லதைக் கெடுக்கச் சிலர்
நாச வேலையும் செய்வதுண்டு
ஓடெடுத்தாலும் சிலர்
ஒற்றுமையாய் இருப்பதில்லை-இந்த
உண்மையை தெரிந்தும்-நீ
ஒருவரையும் வெறுப்பதில்லை! (வா வா)
[பாண்டித்தேவன்,1959]
சலசல ராகத்திலே
டம்மு டும்மு தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா....நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?
(சலசல)
ஆத்துக்குள்ளே நானிருக்க
அக்கரையில் மனமிருக்க
அலைமேலே அவை எழுந்து
ஆளை வந்து தள்ளிடுதே
நேரத்திலே போகணும்
நீண்ட கதை பேசணும்
ஆழத்தையும் தாண்டியே
அன்பு முகத்தைப் பார்க்கணும் (சல சல)
பச்சை மலைச் சாரலிலே
பனியுறங்கும் பாறையிலே
படை போலே பறவையெல்லாம்
பறந்துவந்து கூடுதே!
மீனும் மீனும் மேயுதே
வேடிக்கையாய்ப் பாயுதே
ஆனந்தமாய்க் கண்களும்
அவரை நாடிப் போகுதே (சல சல)
[ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,1960]
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே (என்)
கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே (கண்)
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே-உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்)
கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே-ஒரு
கள்ளியிடம் இருக்குதுடி வெண்ணிலாவே-அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே-அதை
வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்)
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே....
கொஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே-நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே-இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே-இது (அவள்)
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே!
[எல்லோரும் இந்நாட்டு மன்னர்,1960]
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்றபோது
ஆடாத சிலைகளும் ஆடாதோ?
ஆனந்த கீதங்கள் பாடாதோ?
ஆடலுக்கும் பாடலுக்கும்
ஊதும்குழல் யாழினுக்கும்
ஆதாரமானது கானம்
ஊடலுக்கும் காதலுக்கும்
உண்மைஅன்புக் கூடலுக்கும்
உகந்தது வாலிப காலம்
வண்டுலாவும்மலர்ச் சோலையிலே-தென்றல்
வந்துலாவுகின்ற வேளையிலே-காளைக்
கன்றுபோல் உருவம் கொண்டஆள் ஒருவன்
நின்று போட்ட ஒரு பார்வையிலே-என்னைக்
கொன்று விட்டானடி மாமயிலே!
இதையும் அதையும் கண்டு
மதியும் மயக்கங் கொண்டு
இதயக்கதவை வந்து தட்டுதே-எண்ணம்
இமயச் சிகரம் தன்னை எட்டுதே!
அதிகத் துணிவு கொண்டு
ஆசை கரைபுரண்டு
அதிரத் தலை சுழன்று சுற்றுதே-நிலவு
அனலை வாரிக் கொட்டுதே
[இரும்புத்திரை,1960]
ஆண் : அறம் காத்த தேவியே!
குலம் காத்த தேவியே!
அறிவின் உருவமான ஜோதியே
கண் பார்த்தருள்வாயே!
அன்னையே!அன்னையே! (அறம்)
பெண் : ஹே மாதா! என் தாயே!
உன் பாதம் நம்பினேன் அம்மா!
சத்தியம் லட்சியமாய்ச்
சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா!
ஆண் : துன்பம் இல்லாமல் எல்லோரும் மனம்
ஒன்றுகூடி இன்பம் கொண்டாடும் தினம்
நம் மனதில் உறுதியாகவே
மலிந்த கொடுமை நீங்கவே-இம்
மனித வாழ்வில் உயர்வு காணவே
நீ வாழ்த்திடுவாயே தேவியே! தேவியே!
பெண் : ஹே!பவானி லோகமாதா!
ஏழைகளின் வாழ்வில் சுகம்தா
சத்தியமே லட்சியமாய்ச்
சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா!
[மஹேஸ்வரி,1955]
சிங்கார வேலவனே! சிவகாமி தன் மகனே!
தினைப்புனத்தில் குறவர் வீட்டிலே
திருட்டுத்தனமா புகுந்தவனே சண்முகனே - ரொம்ப
சிறுசிலே வெண்ணெய் திருடித் தின்னவன் மருமகனே!
பச்சை மயில் வாகனனே
பாடுங்குறி சொல்லிடவா?
உச்சிமலை விட்டிறங்கி
உலகத்தைக் கண்டிடவா?
காசியாத்திரை போகையிலே-ஒரு
காதல் மாத்திரை தின்னதுண்டா?
சோசியர் மகன் சொக்கலிங்கம் - ஒங்க
சொப்பனத்தில் வந்து சொன்னதுண்டா?
ஆசை வீட்டிலே விளக்கு வைக்கற
அழகுக் கன்னியைக் கண்டதுண்டா?
பேச நினைச்சு ராவும் பகலா
பித்த மயக்கம் கொண்டதுண்டா? - ஐயாவே அந்த
உத்தமி உனக்குப் பத்தினியாவா மெய்யாவே
ஒருத்தர் நிலைமை இப்படியிருக்க
ஒங்க நிலைமையும் ஒண்ணுதானா?...ஒரு
கருத்த கன்னியின் பெருத்த மேனியில்
கண்ணைப் பதிச்சதும் உண்மைதானா?
அருத்தம் புரிஞ்சு-அவளும் - வாழைக்
குருத்துபோல வாடிப்போனா
தரத்துக்கேத்த தங்கரதம் - அவ
சம்மதிப்பா நீங்க தேடிப்போனா
சரிதானா? - ஒரு
ஜாடைக்கு என்னைப்போல்
தடிச்ச உடம்பு
அதுதானா?
[சௌபாக்கியவதி,1957]
உள்ளும் புறமாகி
ஒளியாகி-ஞான
வெளியாகி நின்ற உமையே!
துள்ளும் கலைகளாகித்
துளியாகிக் கடலாகித்
தௌிவாகி நின்ற திருவே!
அல்லும் பகலுமாகி
அறமாகித் தரமாகி
வளமாகி வந்த வடிவே!
அனுதினமும் உனது மலரடி
இணையில் இணையுமெனை
ஆண்டருள்வாய் அம்மையே...!
கையிலே சூலமும்
கண்ணிலே கருணையும்
கனிவாயில் அன்பு நகையும்
கொய்யாத மலர்முகமும்
குலுங்கு நவமணி அழகுங்
கொண்ட தாயே!
மை போன்ற இருட்டிலே
வையகமும் மாந்தரும்
மயங்கும் வேளை
மெய்யிலே அறிவெனும்
விளக்கேற்றி வைத்து நீ
விடுதலை வழங்குவாயே...!
[சௌபாக்கியவதி,1957]
ஓ....மாதா!பவானி!
மனம் நிறை சங்கரி!
உனை நம்பிய பேதைக்கு
அமங்கலமா அம்மா...தேவி....
சகலமும் நீயெனத் துவங்கிய வாழ்வினில்
சகுன பேதமா?..இதுதான் உனது வேதமா? மங்கல
இசை இன்னும் ஓயவுமில்லை
மணவறை ஆடை மாற்றவுமில்லை
மஞ்சள் அரிசி மண்ணில் சிந்தவுமில்லை
வந்த பேரின்பம் வைகைச் சுழல்தானோ?
வஞ்சம் ஏனோ...ஓ-மாதா (சகலமும்)
கணவன் துணையே நிலையான செல்வம்!
கணவன் உயிரே மனையாளின் தெய்வம்!
கணவன் சேவையைப் பறிப்பதிலும் எனைப்
பலிகொள்ளலாமே...மாதா..தேவி...மாதா!
[சௌபாக்கியவதி,1957]
கண்டி கதிர்காமம் எஞ்சுப்பையா
கழுகுமலை பழனிமலை
கால்நடையாய்ப் போக வேணும்
எங்கந்தா, எம்முருகா-என்வேலா
எங்குமரா-ஆ-ஆ
சுப்பிரமணியா-ஆறுமுகா-நீ
கண்திறந்து பார்த்திடய்யா
எட்டுஜாண் குச்சிக்குள்ளே...கந்தையா
எத்தனை நாளிருப்பேன்
எட்டுஜாண் குச்சிக்குள்ளே-கந்தையா
எத்தனை நாளிருப்பேன்-ஒரு
மச்சுவீடு கட்டித் தாருங்காணும்-உச்சி
மலையின் மேலோனே-ஒரு (மச்சு வீடு)
சட்டியில் சேர்ந்ததெல்லாம்-கந்தா உன்
சன்னதி சேர்த்திடுவேன் (சட்டியில்)
மொட்டை ஆண்டி ஒன்னை
முழுசாவே நம்புறேன்
மோட்சம் தந்திடப்பா-அட (மொட்டை)
தீராத வினைகளெல்லாம்
தீர்த்து வைப்பார் கோவிந்தம்
மாறாத மனசையெல்லாம்
மாத்தி வைப்பார் கோவிந்தம்!
பட்டை நாமம் கண்டால்
பசி தீர்ப்பார் கோவிந்தம்-உன்
கட்டை கடைந்தேறக்
கைகொடுப்பார் கோவிந்தம்!
கோவிந்தம் கோவிந்தம்
கொடுத்தா புண்ணியம் கோவிந்தம்!
ரகுரா