தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கி -  அலை ஒசை >  பாகம் 1- பூகம்பம் > பாகம் 2 - புயல் > பாகம் 3 - எரிமலை  > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 1 to 11பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 12 to 23  > பாகம் 4 - பிரளயம் அத்தியாயங்கள் - 24 to 35 > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 36 to 43

கல்கி - அலை ஒசை: பாகம் 4 - பிரளயம்
kalki -  alai Ocai: Part IV - piraLayam
[also in pdf ]


Acknowledgements:

Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's Works and for the help to publish them in PM in TSCII format. Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala
HTML Version and TSCII version proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi Chennai
PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.

©  Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


 உள்ளுறை -அத்தியாயங்கள்

4.024 என் சொர்க்கம் மின்பதிப்பு
4.025 அடுத்த ஆண்டு மின்பதிப்பு
4.026 தந்தியின் மர்மம் மின்பதிப்பு
4.027 இருளில் ஒரு குரல் மின்பதிப்பு
4.028 நரக வாசல் திறந்தது! மின்பதிப்பு
4.029 சீமந்த புத்திரி மின்பதிப்பு
4.030 "மரணமே! வா!" மின்பதிப்பு
4.031 பிழைத்த அகதி மின்பதிப்பு
4.032 ராகவன் துயரம் மின்பதிப்பு
4.033 ராகவன் கோபம் மின்பதிப்பு
4.034 சீதாவின் ஆவி மின்பதிப்பு
4.035 பானிபத் முகாம் மின்பதிப்பு

கல்கியின் அலை ஒசை: பாகம் 4- 'பிரளயம்'
இருபத்து நான்காம் அத்தியாயம்
என் சொர்க்கம்

சீதாவின் வரவினால் ராகவனுடைய சுரம் குணம் அடைந்து வந்ததாகத் தோன்றியது. சுரத்தின் வேகத்தில் அவன் எவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் எப்படியெல்லாம் சத்தம் போட்டுப் பிதற்றினாலும் சீதாவின் கை பட்டவுடனேயே அவன் உடம்பும் மனமும் சிறிது அமைதி அடைந்தது. இதைக் கவனித்த சித்ரா, "அடியே! இதற்கு முன்னால் நீ என்னவெல்லாம் தவறாக நடந்திருந்தாலும் இப்போது நல்ல சமயத்தில் வந்து உன் புருஷனுடைய உயிரைக் காப்பாற்றினாய். நீ செய்த பாவத்துக்கெல்லாம் பிராயசித்தம் செய்து கொண்டுவிட்டாய்!" என்று சொன்னாள். இதைக் கேட்ட சீதாவின் கண்களில் நீ ததும்பிற்று. சீதா வந்த புதிதில் ராகவனுடைய கண்கள் அவளைப் பார்த்தாலும் அவள் யார் என்று அவன் தெரிந்து கொண்டதற்கு அடையாளம் காணப்படவில்லை. ஆனால் இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு ஒரு தடவை சீதாவைப் பார்த்தபோது ராகவனுடைய கண்களில் வியப்பும் முகத்தில் மலர்ச்சியும் தோன்றின. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சீதாவுடன் அவன் பேச ஆரம்பித்தான். அவள் கல்கத்தாவுக்கு என்றைக்கு வந்தாள், எங்கே தங்கியிருந்தாள் என்பதைப் பற்றியெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். ஹாவ்ராவில் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தவர்களைப் பற்றி ரொம்பவும் சிலாகித்தும் பேசினான்.

குழந்தை வஸந்தி கேட்ட கேள்வியையே ஒரு நாள் சௌந்தரராகவனும் சீதாவிடம் கேட்டான். "உன் பிரயாண மெல்லாம் முடிந்து விட்டதல்லவா? இனிமேல் எங்கேயும் போக வேண்டாம் அல்லவா?" என்றான். "முன்னேயும் எனக்குப் போக வேண்டியிருக்கவில்லை. இனிமேலும் எனக்கு எங்கும் போல வேண்டியிராது!" என்றாள் சீதா. "அப்படிப் போவதாயிருந்தாலும் வஸந்தியை விட்டு விட்டுப் போகாதே! எங்கே போனாலும் அவளையும் கூட அழைத்துக் கொண்டு போய் விடு!" என்றான் ராகவன். "வஸந்தியையும் விட்டுப் போகவில்லை; உங்களையும் விட்டுப் போக உத்தேசமில்லை" என்றாள் சீதா. "என்னைப் பற்றிக் கவலை என்னத்திற்கு!" என்றான் ராகவன். சீதா பதில் சொல்லாமல் ராகவனுடைய முகத்தைத் துயரம் ததும்பிய கண்களினால் ஏறிட்டுப் பார்த்தாள். மற்றொரு நாள் ராகவன், "சீதா! உனக்கு இந்தக் கல்கத்தா நகரம் ரொம்பப் பிடித்திருக்கிறது என்று சித்ரா சொன்னாள், அது வாஸ்தவந்தானே?" என்று கேட்டான். சீதா சிறிது முக மலர்ச்சியுடன், "ஆமாம்; கல்கத்தா எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இங்கேயே நான் இருந்து விடுவதில் எனக்குப் பூரண சம்மதந்தான்!" என்றாள். "ரொம்ப சந்தோஷம்; நீயும் வஸந்தியும் இங்கேயே இருந்து விடலாம். உங்களுக்கு நல்ல துணையும் இருக்கிறது. சித்ராவையும் அவளுடைய கணவனையும் போல் நல்லவர்கள் எங்கும் கிடைக்கமாட்டார்கள்!" என்று சொன்னான் ராகவன். சீதா சந்தேகக் குரலில், "நானும் வஸந்தியும் மட்டும் இங்கே இருக்கிறதோ? நீங்கள்?" என்றாள்.

"எனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை, அதிலும் இங்கே நடந்த கோர கிருத்யங்களையெல்லாம் பார்த்த பிறகு அடியோடு பிடிக்காமற் போய் விட்டது. இங்கே இருந்தேனானால் என்னுடைய மூளை சரியாகவே ஆகாது. உடம்பு கொஞ்சம் சரியானதும் இங்கிருந்து கிளம்பிப் போய் விடவேண்டும் என்று உத்தேசித்திருக்கிறேன்." "தயவு செய்து இப்படிப் பிரித்துப் பேச வேண்டாம். உங்களுக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை என்றால், எனக்கும் பிடிக்கவில்லை. உங்களுக்கு எந்த ஊர் பிடிக்கிறதோ, அந்த ஊர்தான் எனக்கும் பிடிக்கும். நீங்கள் எங்கே போகிறதாக உத்தேசம்?" "நான் பஞ்சாப் மாகாணத்துக்குப் போகிறதாக இருக்கிறேன்." "நீங்கள் பஞ்சாபுக்குப் போகிறதாயிருந்தால், நானும் அந்த பஞ்சாபுக்கே வருகிறேன்." "ஒரு வேளை பஞ்சாப் தேசம் உனக்குப் பிடிக்காது!" "பிடிக்காமல் என்ன? டில்லியில் நாம் இருக்கும்போதே பஞ்சாபுக்குப் போய்ப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. அமிர்தசரஸில் சீக்கியர்களின் அற்புதமான பொற்கோயில் இருக்கிறதாம். இந்தியாவிலேயே பெரிய மசூதி அங்கே இருக்கிறதாம், அதையெல்லாம் பார்க்கலாம் அல்லவா?" ராகவனுடைய முகம் சுருங்கியது. "சீதா! உன்னை ஒன்று கேட்டுக் கொள்கிறேன். வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசு, ஆனால் மசூதி என்கிற பேச்சை மட்டும் நான் இருக்கும் போது எடுக்காதே! என் உடம்பு பதறுகிறது!" என்றான். சீதாவுக்குப் பழைய நினைவுகள் எல்லாம் குமுறிக்கொண்டு வந்தன. தாஜ்மகாலைப் பார்க்கவேண்டும், அக்பர் சமாதியைப் பார்க்க வேண்டும் என்பது போன்ற ஆசைகளினால் தனக்கு நேர்ந்த இன்னல்களையெல்லாம் நினைத்துக் கொண்டாள்.

"ஏதோ யோசியாமல் சொல்லிவிட்டேன். எனக்கு இனிமேல் ஒரு இடத்தையும் பார்க்கவேண்டாம், உங்களையும் வஸந்தியையும் பார்த்துக்கொண்டேயிருந்தால் அதுவே போதும்!" என்றாள். சீதாவின் இந்த வார்த்தைகள் சௌந்தர ராகவனுக்குச் சொல்ல முடியாத இன்பத்தை, வெகுகாலமாக அவன் அநுபவித்திராத அபூர்வ மகிழ்ச்சியை அளித்தன. இன்னொரு நாள் ராகவன், "சீதா! எதற்காக நான் இங்கிருந்து பஞ்சாபுக்குப் போகத் தீர்மானித்தேன் தெரியுமா?" என்று கேட்டான். "தெரியாது; எனக்குக் காரணம் தெரிய வேண்டியதுமில்லை! பஞ்சாபுக்கு நீங்கள் போக விரும்புவது ஒன்றே போதும்." "இல்லை; உனக்குக் காரணம் தெரிந்திருக்கவேண்டும். நான் சீமையிலிருந்து திரும்பி வந்தவுடனேயே நான் வேலை செய்யும் கம்பெனிக்காரர்கள் `பஞ்சாபுக்குப் போகிறாயா? அங்கே லாகூரில் ஷாலியார் தோட்டம் இருக்கிறதாம். மானேஜர் உத்தியோகம் தருகிறோம்' என்று கேட்டார்கள். நான் அதற்கு உடனே பதில் சொல்லவில்லை. பஞ்சாப் டில்லிக்குப் பக்கத்தில் இருப்பதால் அங்கே போக எனக்கு அச்சமயம் விருப்பமாக இல்லை. ஆனால் இங்கே ஆகஸ்டு 16ம் தேதி ஆரம்பித்து நடந்த சம்பவங்களைப் பார்த்த பிறகு `வசித்தால் பஞ்சாபிலேதான் வசிக்க வேண்டும்' என்று முடிவு செய்துவிட்டேன். உலகத்தில் எத்தனையோ மகான்கள் எவ்வளவோ மதங்களை ஸ்தாபிக்கிறார்கள். அவர்களுக்குள்ளே சீக்கிய மதத்தை ஸ்தாபித்த குருநானக் என்பவரையே நான் மிகப்பெரிய மகான் என்று கருதுகிறேன். அவர்தான் ஒரு மதத்தை ஸ்தாபித்ததோடு ஒரு வீர சமூகத்தையும் படைத்தார்.

உலகத்திலே வீரர்கள் என்று சொன்னால் சீக்கியர்களைத்தான் சொல்லவேண்டும். கேள், சீதா! இந்த ஊரில் கலகம் ஆரம்பித்த முதல் இரண்டு நாள் நான் என்ன நினைத்தேன், தெரியுமா? கல்கத்தாவிலும் வங்காளத்திலும் ஹிந்து என்று சொல்லிக்கொள்ள ஒரு ஆணோ, பெண்ணோ, குழந்தையோ இல்லாமற் போய்விடும் என்று நினைத்தேன். மூன்றாம் நாள் என்ன ஆயிற்று தெரியுமா? கிளம்பினார்கள், சீக்கியர்கள்! இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலோர் டாக்ஸி கார் ஓட்டிய டிரைவர்கள். அவர்கள் கையில் கிர்பானை எடுத்துக்கொண்டு புறப்பட்ட பிறகுதான் கல்கத்தாவிலும் வீர புருஷர்கள் இருக்கிறார்கள் என்று ஏற்பட்டது! கல்கத்தாவில் உள்ள முப்பது லட்சம் ஹிந்துக்களும் உயிர் பிழைத்தார்கள்! இப்படிப்பட்ட வீரர்களின் தாய்நாடு பஞ்சாப் தேசம். அத்தகைய நாட்டில் போய் இருப்பதே புண்ணியம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை என்னுடைய மனோ நிலையை உன்னால் புரிந்துகொள்ள முடியாமலிருக்கலாம்!" என்று தயங்கிச் சொன்னான் ராகவன். உண்மையில் ராகவனுடைய மனோநிலையை சீதாவினால் புரிந்துகொள்ள முடியவில்லைதான். பஞ்சாபியர்களைப்பற்றி அவளுடைய நினைவுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. டில்லியில் அவள் பஞ்சாபியருடன் பழகியிருக்கிறாள். சுத்த முரடர்கள்; நாகரிகமில்லாதவர்கள். வங்காளிகளின் நாகரிகம் என்ன, படிப்பு என்ன, மரியாதை என்ன? கல்கத்தாவில் வங்காளிகளுடன் அவளுக்கு ஏற்பட்டிருந்த சொற்பப் பழக்கம் அவர்களைப் பற்றி மிக நல்ல அபிப்பிராயத்தை அளித்திருந்தது. அமர்நாத் ஆகியவர்களின் அபிப்பிராயமும் அதற்கு ஒத்தேயிருந்தது.

பழைய காலமாயிருந்தால் ராகவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் மறுத்து ஒன்பது வார்த்தை சீதா சொல்லி யிருப்பாள். ஆனால் இப்போது இந்த இயல்பு அவளிடம் மாறிப் போயிருந்தது. ராகவனுடைய உடல்நிலையும் அவனுடன் மாறுபட்டுப் பேசக் கூடாது என்று வற்புறுத்தியது. ஆகையால் ராகவன் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சீதா கூறினாள்: "என்னத்திற்காக இவ்வளவு தூரம் வளைத்து வளைத்துப் பேசுகிறீர்கள்? நான்தான் முன்னமேயே சொல்லி விட்டேனே? எனக்குக் காரணம் ஒன்றுமே தெரியவேண்டியதில்லை. உங்களுக்குப் பிடித்த இடம் எதுவோ அதுதான் எனக்குப் பிடித்த இடம் அந்த நாளிலும் அப்படித்தான் நினைத்திருந்தேன். இப்போதும் அவ்விதமே எண்ணியிருக்கிறேன். நடுவில் தலைவிதியின் காரணமாக அங்குமிங்கும் சுற்றியலைய நேர்ந்தது. அதெல்லாம் பழைய கதை, இனிமேல் உங்களை நான் பிரியப் போவதில்லை. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, அதுதான் என்னுடைய சொர்க்கம்...." இந்தக் கடைசி வார்த்தை களைக் கேட்டுக் கொண்டு சித்ராவும் அமரநாத்தும் உள்ளே வந்தார்கள். "இப்போதுதான் எனக்கு உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஊரில் கலகம் வந்தாலும் வந்தது உங்கள் இரண்டு பேரையும் ஒன்று சேர்த்து வைத்தது. எப்படிப்பட்ட கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும் என்று இதனாலேதான் நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்!" என்றாள் சித்ரா. "எங்களை ஒன்று சேர்த்து வைப்பதற்காக இவ்வளவு பயங்கரமான கலகம் நடக்க வேண்டுமா? அதற்காகப் பத்தாயிரம் பேர் செத்துப் போகவேண்டுமா" என்றாள் சீதா. "இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்தக் கலகத்தை ஆரம்பித்ததே நான்தான் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள் போலிருக்கிறது!" என்று சௌந்தரராகவன் தமாஷ் செய்தான். "கலகத்தை நீங்கள் ஆரம்பித்து வைக்கவில்லை; உங்கள் மனைவி ஸ்ரீமதி சீதாதேவிதான் ஆரம்பித்து வைத்தார்! அவர் ஹாவ்ரா ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கிய அன்றைக்குத் தானே கலகம் ஆரம்பித்தது?" என்றான் அமரநாத்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து ஐந்தாம் அத்தியாயம்
அடுத்த ஆண்டு

நமது கதையின் முடிவு நெருங்கி வரும் சமயத்தில் நாமும் கொஞ்சம் அவசரமாகப் போகவேண்டியிருக்கிறது. காலண்டரில் ஏறக்குறைய ஒரு வருஷத்தை அப்படியே புரட்டித் தள்ளிவிட்டு, அடுத்த 1947-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்கு வருவோம். அன்றைய தினம் சுதந்திர பாரத தேசத்தின் ஜகஜ் ஜோதியான தலைநகரமாய் விளங்கிய டில்லி மாநகரத்துக்குச் செல்வோம். 1942 -ம் வருஷத்திலிருந்து இந்தியா தேசத்துக்கு ஆகஸ்டு மாதம் முக்கியமான மாதமாயிற்று. அந்த வருஷம் ஆகஸ்டு மாதத்திலேதான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் அதன் உச்ச நிலையை அடைந்தது. பிற்பாடு, 1946-ம் வருஷம் ஆகஸ்டில் முஸ்லிம் லீக் கொண்டாட விரும்பிய நேர் நடவடிக்கை (டைரக்ட் ஆக்ஷன்) தினம் இந்தியத் தாயின் திருமேனியைப் புண்படுத்தி, அதன் மூலம் ஆகஸ்டு மாதத்துக்கு முக்கியம் அளித்தது. 1947-ம் வருஷம் ஆகஸ்டு மாதமோ இந்திய சரித்திரத்திலேயே இணையற்ற முக்கியம் பெற்றது. ஆயிரம் வருஷத்துக்கு மேல் அடிமையாக வாழ்ந்திருந்த பாரத தேசம் அந்த வருஷம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி சுதந்திர தேசம் ஆயிற்று. நாற்பது கோடி இந்திய மக்கள் விடுதலைப் பேறு அடைந்தார்கள். அதே சமயத்தில் அவர்களில் முப்பத்திநாலு கோடிப் பேர் இந்திய யூனியன் என்னும் தனிச் சுதந்திர நாட்டினராகவும், பாக்கி ஆறு கோடிப் பேர் சுதந்திர பாகிஸ்தான் பிரஜைகளாகவும் பிரிந்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த வைபவத்தைத் தேசமெங்கும் மகத்தான உற்சாகத்துடனே கொண்டாடினார்கள். இந்திய சுதந்திர அரசாங்கத்தின் தலைநகரமான டில்லியிலே கொண்டாடினார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? அன்று காலையிலிருந்து டில்லியும் புதுடில்லியும் ஒரே கோலாகலமாயிருந்தன. சுதந்திரத் திருநாளன்று மாலை டில்லி மாநகரம் அளித்த அலங்காரக் காட்சியைப் போல் அதற்கு முன்னால் அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் காலத்திலே கூடப் பார்த்திருக்க முடியாது. அந்த நாளில் மின்சார விளக்கு ஏது? அல்லது இவ்வளவு பொதுஜன உற்சாகத்துக்குத்தான் இடம் ஏது? முக்கியமாக, சரித்திரப் பிரசித்தமான 'சாந்தனி சவுக்' என்னும் வெள்ளி வீதியும், அந்த வீதியிலுள்ள மணிக்கூண்டும், டவுன் ஹாலும், இன்னும் சுற்றுப்புறங்களும், அற்புதமான தீபாலங்காரங்களும் ஜகஜ்ஜோதியாகப் பிரகாசித்துக் கண்கொள்ளாக் காட்சியளித்தன!

சூரியாவும் தாரிணியும் அன்று சாயங்காலம் டில்லியின் குதூகலக் கொண்டாட்டங்களையும் தீபாலங்காரங்களையும் பார்த்துக் கொண்டு வெள்ளி வீதியில் நடந்து கொண்டிருந்தார்கள். டில்லி நகரம் தீபங்களினால் ஜொலித்ததுபோல் அவ்விருவருடைய முகங்களும் பிரகாசமாயிருந்தன. இதே வெள்ளி வீதியில் சூரியாவும் தாரிணியும் போலீஸாரின் கையில் அகப்படாமல் இருப்பதற்காக வேஷந்தரித்துக் கொண்டும், வெளிச்சம் மேலே படாமல் ஒளிந்து மறைந்து கொண்டும் எத்தனையோ தடவை நடந்ததுண்டு. ஆனால் இப்போது அம்மாதிரியான பயமுமில்லை; தயக்கமு மில்லை, ஒளிவு மறைவுக்கு அவசியமும் இல்லை. சூரியா கதர்க்குல்லா அணிந்து கொண்டும், தாரிணி ஆரஞ்சு வர்ணப்புடவை அணிந்து கொண்டும், பகிரங்கமாகக் கைகோத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் நடந்தார்கள். பதினாயிரக்கணக்கான ஜனக் கூட்டத்துக்கு மத்தியில் நடந்தபோதிலும் அவர்களுக்குத் தங்களைத் தவிர வேறு யாரும் அக்கம்பக்கத்தில் இருப்பதாகவே ஞாபகமில்லை. அவ்வளவு மெய்மறந்த உற்சாகத்துடன் அவர்கள் உல்லாசமாகப் பேசிக் கொண்டு சென்றார்கள். "இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்து கொண்டாட்டமும் நடத்துவதை நம்முடைய ஜீவிய காலத்தில் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருந்ததே! இதைக் காட்டிலும் நமக்குக் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் வேறு என்ன இருக்கிறது?" என்றாள் தாரிணி. "நம்மைப் பொறுத்த வரைக்கும் இதைவிட மேலான அதிர்ஷ்டம் ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அது நம்முடைய கலியாண வைபவந்தான்!" என்று சொன்னான் சூரியா. "இன்று டில்லி நகரின் அலங்கார தீபங்கள் வானத்து நட்சத்திரங்களுடன் போட்டி போடுகின்றன என்று சொன்னால் பொருத்தமாகவே இருக்கும். வானத்து நட்சத்திரங்களை எண்ணினாலும் எண்ணலாம். இந்தத் தீபங்களை எண்ண முடியாது போலிருக்கிறதே?" என்றாள் தாரிணி. "நான் ஒன்று சொன்னால் நீங்கள் வேறொன்று சொல்கிறீர்களே? நம்முடைய வரப்போகும் கலியாணத்தைப் பற்றி நான் குறிப்பிட்டேன். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நாம் திருமணம் செய்து கொள்கிறது என்று பேசி முடிவு செய்திருந்தோமல்லவா? அதைப்பற்றி இப்போது உங்கள் அபிப்பிராயம் என்ன? தயவுசெய்து சொல்லவேணும்?" என்றான் சூரியா.

"இதே வெள்ளி வீதியில் முன்னே நாம் எத்தனை தடவை போலீஸுக்குப் பயந்து தயங்கிப் பதுங்கி நடந்திருக்கிறோம். அதையெல்லாம் நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. அப்போது நாம் பேசிக் கொண்டதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. காந்திஜியினாலும் மற்ற மிதவாத காங்கிரஸ் தலைவர்களினாலும் இந்தியாவுக்குச் சுதந்திரம் வரப்போவதில்லை - அவர்களையெல்லாம் தலைமைப் பதவியிலிருந்து துரத்தி விட்டுப் பொதுஜனப் புரட்சி இயக்கத்தை நடத்த வேண்டும் - சோசலிஸ்ட் கட்சியினால்தான் அந்த மகா இயக்கத்தை நடத்தமுடியும் என்றெல்லாம் பேசிக் கொண்டோ மல்லவா? கடைசியாகப் பார்த்தால் அந்த மகாத்மா கிழவரும் மிதவாதக் காங்கிரஸ் தலைவர்களுமே இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டி விட்டார்களே?" என்றாள் தாரிணி. "அதைப்பற்றி இப்போது என்ன விவாதம்? எந்தச் சட்டியில் சுட்டாலும் பணியாரம் வேகவேண்டியதுதானே முக்கியம்? பணியாரம் வெந்து விட்டது! சுதந்திரம் வந்து விட்டது! நாம் கலியாணம் செய்து கொள்வதற்கிருந்த இதர தடையும் நீங்கிவிட்டது!" என்றான் சூரியா. "இந்தியா உண்மையில் சுதந்திரம் அடைந்து விட்டதென்றா சொல்கிறீர்கள்? எனக்குச் சந்தேகமா யிருக்கிறது!" என்றாள் தாரிணி. "அதிலேகூடச் சந்தேகம் வந்துவிட்டதா? 'காந்திஜியின் ஆத்ம சக்தி வென்று விட்டது!' 'இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது!' 'பண்டிட் மவுண்ட் பேட்டனுக்கு ஜே!' என்று தேசமெல்லாம் ஒரே கோஷமாயிருக்கிறதே! அதில் சந்தேகம் என்ன இருக்க முடியும்? ஆகையால் நம் முன்னால் உள்ள அடுத்த முக்கியமான புரோகிராம் நம்முடைய திருமணந்தான்!" என்றான் சூரியா. "சூரியா! ஒரே பல்லவியைத் திருப்பித் திருப்பிப் பாடுகிறீர்களே?" "வேறு என்ன பல்லவியை இன்று பாடுவது? 'ஜனகணமன' 'வந்தே மாதர' கீதங்களைத்தான் ரேடியோவில் விடாமல் கொலை செய்து கொண்டிருக்கிறார்களே! ஆகையால் நம்முடைய கலியாணத் தேதியை இந்த நல்ல நாளில் நிச்சயம் செய்யலாம்."

"இந்தியா தேசம் சுதந்திரம் அடைந்தது உண்மையானால் எதற்காகத் தேசம் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும்? சுதந்திர இந்தியா சுதந்திரமாகச் செய்த காரியமா இது?" "இந்தியா இரண்டாகப் பிரிந்ததினால் இப்போது என்ன மோசம் போய்விட்டது? இரண்டு பிரிவுகளும் தனித்தனியாகச் சுதந்திரம் அனுபவித்துப் போகட்டுமே! மேலும், இந்தியா பிரிந்தது என்றால் கோடரியைப் போட்டுப் பிளந்துவிட்டார்களா? அல்லது பீகார் பூகம்பத்தைப் போல் பூகம்பம் வந்து பிளந்துவிட்டதா? அப்படி ஒன்றும் இல்லையே? பாரதபூமி இன்னும் ஒரே பூமியாகத்தானே இருக்கிறது?" என்றான் சூரியா. "அதைப் பற்றித்தான் சந்தேகப்படுகிறேன். தாயின் இரண்டு கைகளையும் வெட்டித் துண்டித்துத் தனியாகப் போட்டுவிட்டது மாதிரி எனக்குத் தோன்றுகிறது!" "அதெல்லாம் ஒன்றுமில்லை, ஆதிகாலத்திலிருந்து நம் இந்தியா தேசம் பல ராஜ்யங்களாகப் பிளவுபட்டே இருந்திருக்கிறது." "அந்தப் பிளவுகள் அரசியல் காரணம் பற்றியவை. இது மதத்தின் பெயரால் ஏற்பட்ட பிரிவினை அல்லவா?" "அதை நான் ஒப்புக் கொள்ளவில்லை, மதத்திற்காக ஏற்பட்ட பிரிவினை என்று எப்படிச் சொல்லலாம்? இந்தியாவில் முஸ்லிம்களும் பாகிஸ்தானில் ஹிந்துக்களும் வாழ்ந்திருக்கத்தானே போகிறார்கள்?" "அதுதான் சந்தேகம், சூரியா! 'டான்' பத்திரிகையை இன்று பார்க்க வில்லையா? அமிருதசரஸ் கடைவீதி தீப்பிடித்து எரிகிறதாமே!" "'டான்' பத்திரிகையில் வந்தது வெறும் புளுகாயிருக்கும்.அப்படியே இருந்தாலும் இருக்கட்டும். தேசத்துக்காக நாம் கவலைப்பட்டதெல்லாம் போதும்! எது எப்படியாவது போகட்டும். இப்போது நம் கலியாணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்!" "நமக்குள் கலியாணம் எப்படிச் சாத்தியம்? மத வித்தியாசம் ஒன்று இருக்கிறதே! நீங்கள் ஹிந்து; நான் முஸ்லிம்." "இது என்ன புதிய தடை புறப்படுகிறது! நான் ஹிந்துவுமல்ல; நீங்கள் முஸ்லிமும் அல்ல. நமக்கு மதம் என்பதே கிடையாது.

மனித தர்மந்தான் நம்முடைய மதம். இதைப்பற்றிப் பல தடவை பேசி முடிவு கட்டியிருக்கிறோம்! மேலும் நீங்கள் முஸ்லிம் மதத்தினர் என்பதாக நான் என்றைக்கும் நம்பவேயில்லை. சில சமயம் முஸ்லிம் ஸ்திரீயைப்போல் உடை தரித்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் முஸ்லிம் ஆகிவிட முடியாது." "ஒருவருடைய தாயும் தகப்பனும் முஸ்லிமா யிருந்தால்....?" "ஒருவருடைய தாயும் தகப்பனும் முஸ்லிமாயிருந்தால் அதைப் பற்றி ரஜினிபூர் ராஜகுமாரிக்கு என்ன கவலை?" என்றான் சூரியா. தாரிணி கலகலவென்று சிரித்தாள். "முஸ்லிம் ஸ்திரீயைப் போன்ற வேஷம் சில காரியங்களுக்கு ரொம்பவும் சௌகரியமாயிருக்கிறது. இல்லாவிட்டால் ரஜினிபூர் அரண்மனையை விட்டு நான் வெளிக் கிளம்பியிருக்கவே முடியாது. ரஜினிபூர் ராஜாவும் அவருடைய தாயாரும் என்னை எப்படியாவது அங்கே இருக்கப் பண்ண வேண்டும் என்று பார்த்தார்கள். பாதி ராஜ்யம் கேட்டால்கூடக் கொடுத்திருப்பார்கள். ஆனால் நான் முஸ்லிம் ஸ்திரீ என்பதை அவர்களால் சகிக்க முடியவில்லை! அதனாலேயே நான் அங்கிருந்து புறப்படச் சம்மதித்தார்கள். இப்போது கூட நான் உண்மையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்துவிடவில்லையென்று சொன்னால் போதும்; ரஜினிபூர் அரண்மனைக்கு நான்தான் ராணி!" "கூடவே கூடாது; என் இதய ராஜ்யத்துக்குத் தாங்கள் ராணியாயிருந்தால் போதும்; நமக்குக் கலியாணம் ஆனவுடனே...." "சூரியா! உங்களுக்குக் கூச்சம் என்பதே கிடையாதா? ஆயிரம் பதினாயிரம் ஜனங்களுக்கு மத்தியிலேதானா காதலையும் கலியாணத்தையும் பற்றிப் பேசுவது? கொஞ்சம் தனி இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டு பேசக் கூடாதா?" என்றாள் தாரிணி.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து ஆறாம் அத்தியாயம்
தந்தியின் மர்மம்

தாரிணியும் சூரியாவும் டில்லி டவுன்ஹாலுக்குப் பின்னால் உள்ள பூந்தோட்டத்துக்குச் சென்று அங்கே போட்டிருந்த சலவைக்கல் பெஞ்சி ஒன்றில் உட்கார்ந்து கொண்டார்கள். டவுன் ஹாலின் தீபாலங்கார ஒளி நிலா வெளிச்சத்தைப் போல் நாலாபுறமும் கவிந்து பரந்திருந்தது. நகரத்தின் பல பகுதிகளிலும் நடந்த சுதந்திரக் கொண்டாட்டங்களின் கோலாகல சத்தம் சில சமயம் குறைவாகவும் சில சமயம் அதிகமாகவும் கேட்டது. அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்த இடத்தை ஒட்டிச் சென்ற நடைபாதைகளில் குறுக்கும் நெடுக்கும் ஜனங்கள் கும்பல் கும்பலாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் குதூகலமாகப் பேசிக்கொண்டும் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டும் சென்றார்கள். அவர்களுடைய கவனமெல்லாம் அன்று நடந்த சுதந்திர விழா வைபவங்களிலே ஈடுபட்டிருந்தபடியால் சூரியாவும் தாரிணியும் அங்கே தனித்து உட்கார்ந்திருப்பதை அவர்களில் யாரும் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. சூரியா ஆர்வத்துடன் கூறினான்:- "தாரிணி! இங்கே அக்கம்பக்கத்தில் நம்முடைய பேச்சை ஒட்டுக் கேட்கக் கூடியவர்கள் யாரையும் காணோம். நாம் தாராளமாக மனம் விட்டுப் பேசலாம் அல்லவா? உண்மையில் நம்முடைய கலியாண விஷயத்தை ஆயிரம் பேருக்கு மத்தியில் சாட்சி வைத்துக்கொண்டு பேசி முடிவு செய்வதே விசேஷமாயிருக்கும் என்று நினைத்தேன். ஏனெனில் முன்னொரு சமயம் நாம் இப்படித்தான் தனிமையாக உட்கார்ந்து பேசினோம். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நம்முடைய கலியாணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தோம்...." தாரிணி குறுக்கிட்டு, "கொஞ்சம் தவறாகச் சொல்கிறீர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நம்முடைய கலியாணத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று முடிவு செய்தோம்!" என்றாள். "அப்படியே இருக்கட்டும், இப்போது அதைப் பற்றி நாம் யோசிப்பதற்கு வேறு தடை ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டான் சூரியா.

அந்தச் சமயத்தில் வெள்ளி வீதியிலிருந்து, "மகாத்மா காந்திக்கும் ஜே!" "பண்டிட் மவுண்ட்பேட்டனுக்கு ஜே!" என்று ஜனங்கள் பலத்த குரலில் கோஷமிடும் சத்தம் கேட்டது. "கோஷத்தைக் கேட்டீர்களா? இத்தனை ஜனங்கள் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று நம்பிக் குதூகலப்படுகிறார்கள். ஆனால் உங்களுக்கு மட்டும் இந்தியா சுதந்திரம் பெற்றதில் நம்பிக்கை உண்டாகவில்லை!" என்று சூரியா சுட்டிக் காட்டினான். "எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கத்தான் இருக்கிறது. ஆனால் என் மனது மட்டும் எதனாலோ நிம்மதி அடையவில்லை என்று தோன்றுகிறது." "அப்படியானால் அது என்னுடைய தவறில்லை; காந்தி மகாத்மாவின் தவறு. அந்தத் தவறைத் திருத்துவதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. தாரிணி! நம்முடைய கலியாணத்துக்குத் தடையாக இருப்பது வேறு ஏதாவது உண்டா?" என்று சூரியா கேட்டான். "இன்னும் ஒரு தடை இருக்கிறது. என்னுடைய தாயார் தகப்பனாரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் நான் கலியாணம் செய்து கொள்ள விரும்பவில்லை! என் தாயார் தகப்பனார் யார் என்று தெரியாவிட்டால் எந்தச் சம்பிரதாயப்படி நாம் கலியாணம் செய்து கொள்வது?" "இது என்ன, சீர்திருத்த ஆவேசமுள்ள புரட்சித் தலைவியான தாரிணி திடீரென்று வைதிகச் சம்பிரதாயத்தில் பற்று கொண்ட அதிசயம்! குருட்டு நம்பிக்கைகளையும் அர்த்தமற்ற பழைய ஆசாரங்களையும் தகர்த்தெறிந்து காதல் தெய்வத்தின் சந்நிதியில் கலியாணம் செய்து கொள்வது என்று நாம் எத்தனையோ தடவை பேசி முடிவு செய்யவில்லையா?"

"பேசும்போது அதெல்லாம் சரியாகத் தோன்றியது. காரியத்தில் வரும்போது தயக்கமாயிருக்கிறது. சூரியா! என் பெற்றோர்கள் யார் என்று தெரியாத வரையில் என் மனம் நிம்மதி அடையாது. இதுவரையில் இந்தியா தேசத்தின் சுதந்திர இயக்கத்தில் கவனம் சென்று கொண்டிருந்தது, இனிமேல் அதுவும் இல்லை. என் தாய் தகப்பனார் யார் என்ற விசாரம் என் மனதை ஓயாமல் வாட்டிக் கொண்டிருக்கும். இந்த விசாரம் தீரும்வரை இல்வாழ்க்கையில் என்னால் உங்களுக்குச் சுகமும் நிம்மதியும் ஏற்படாது." "அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நீ படுகிற விசாரத்தை நானும் பகிர்ந்துகொண்டு அநுபவிப்பேன். உன் காரணமாக எனக்கு ஏற்படுகிற கஷ்டம் எல்லாம் உண்மையில் சுகமென்றே தோன்றும். ஆனாலும் உன்னுடைய மன நிம்மதி மிகவும் முக்கியமானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக வேண்டிய பிரயத்தனம் செய்யத் தயாராயிருக்கிறேன். தாரிணி! உன்னுடைய பெற்றோர்கள் யார் என்பதைப்பற்றி உன் மனதில் எந்தவிதமான சந்தேகமோ, ஊகமோ தோன்றியதில்லையா?" "தோன்றாமல் என்ன? பல தடவை தோன்றித்தானிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தடவையும் என் ஊகம் பொய்யாய்ப் போயிருக்கிறது. முதலில் ரஸியா பேகத்தை என் தாயார் என்றும் சீதாவின் தகப்பனார்தான் எனக்கும் தகப்பனார் என்றும் எண்ணியிருந்தேன் அது பிசகு என்று ஏற்பட்டது. ரஸியா பேகம் உண்மைத் தாயார் அல்லவென்றும் வளர்ப்புத் தாயார் என்றும் வெளியாயிற்று. பிறகு என் உண்மைத் தாயார் யார் என்று கண்டுபிடிக்க முயன்றேன். ரஸியா பேகத்தின் சகோதரி கங்காபாய் என் தாயார் என்றும், அவள் அபாக்கியவதியாக அற்பாயுளில் இறந்தாள் என்றும் தெரிந்தது. அதற்குப் பிறகு என் தகப்பனார் யார் என்று கண்டுபிடிக்க முயன்று வருகிறேன் இன்றுவரை அது தெரிந்தபாடில்லை." "தாரிணி! நிச்சயமாக நீ ரஜினிபூர் ராஜாவின் புதல்வி அல்லவா?"

"நான் எப்படிச் சொல்ல முடியும்? ரஜினிபூர் பெரிய ராணி நான் ராஜகுமாரிதான் என்று சொல்லுகிறாள். முதலில் அதை மறுதளித்த ரஸியா பேகமும் இப்போது அதுதான் உண்மையென்று சொல்லுகிறாள். காலஞ்சென்ற ராஜாவின் சொந்த சொத்தில் நான் பங்கு கேட்கவேண்டும் என்றுகூட ரஸியாபேகம் விரும்புகிறாள். ஆனால் என் மனத்திற்குள் மட்டும் ஏதோ ஒன்று நிச்சயமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது; நான் ஒரு சுதேச ராஜாவின் குமாரியாக இருக்க முடியாது என்று." "தாரிணி! என் மனத்திலிருந்து ஒரு பெரிய பாரம் இறங்கியது போலிருக்கிறது. உன் உள் உணர்ச்சி எப்போதும் சரியாயிருப்பது வழக்கம். இது விஷயத்திலும் அது சரியாகத்தானிருக்க வேண்டும்." "ஆனாலும் என்ன உண்மை என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சூரியா! சில சமயம் ஒரு விசித்திரமான எண்ணம் என் மனதில் உண்டாகிறது. சீதாவை நான் என்று எண்ணிக் கொண்டு ரஜினிபூர் ஆட்கள் பிடித்துக்கொண்டு போனார்கள் அல்லவா? இது ஏன் என்று சில சமயம் தான் சிந்தனை செய்வதுண்டு. நீங்கள் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பித்துக் கொண்டு போன பிறகு நான் சீதாவின் கதியை அறிந்து கொள்வதற்காக ரஜினிபூருக்குப் போனேன். ராஜமாதாவும் ராஜகுமாரரும் வற்புறுத்தியதின் பேரில் சில நாள் அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது அவர்கள் பல தடவை சீதாவின் முகஜாடை என் முக ஜாடையைப் போல் இருந்ததாகவும் அதனால்தான் அந்தப் பிசகு நேர்ந்ததாகவும் சொன்னார்கள். இது உண்மையா? அப்படியானால் இதன் காரணம் என்னவாயிருக்கக்கூடும்? உங்களால் ஊகித்துச் சொல்ல முடியுமா?" என்று தாரிணி கேட்டாள்.

சூரியா சிந்தனையில் ஆழ்ந்தாள். ரஜினிபூர் ஆட்கள் அத்தகைய தவறு ஏன் செய்தார்கள்? ஒருவேளை அவர்கள் செய்த தவறில் தாரிணியின் பிறப்பைக் குறித்த இரகசியம் இருக்குமோ? அது என்னவாயிருக்ககூடும்? - சூரியாவுக்கு விளங்கவில்லை. "எனக்கு அத்தகைய காரணம் ஒன்றும் தோன்றவில்லை. இந்தப் புதிரை அவிழ்க்கக் கூடியவர்கள் வேறு யாரும் இல்லையா, தாரிணி!" "இல்லாமல் என்ன? ரஸியா பேகத்துக்கும் மௌல்வி சாகிபுக்கும் அது நிச்சயம் தெரியும். ஒரு நாளைக்கு அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. மௌல்வி சாகிபு என்னிடம் உண்மையைச் சொல்லிவிடவேண்டும் என்று வற்புறுத்தினார். ரஸியா பேகம் கூடாது என்று சொன்னாள். இருவருக்கும் இது விஷயமாகப் பெரிய சண்டையே நடந்தது. அது ஒன்றும் என் காதில் விழாதது போல் நான் நடந்துகொண்டேன். ஏனெனில் வற்புறுத்திக் கேட்டால் உண்மை வெளி வராது. சந்தர்ப்பம் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்." "மௌல்வி சாகிபு என்று யாரைச் சொல்லுகிறாய்? ஜும்மா மசூதிக்கு எதிரில் நீ சில காலம் வசித்த சந்து வீட்டில் குரான் வாசித்துக் கொண்டிருந்தாரே, அவரையா?" "ஆமாம், சூரியா! அவரைத்தான் சொல்கிறேன்." "அவர் யார், தாரிணி? அந்த மௌல்வி சாகிபு யார்?" "இது என்ன கேள்வி? மௌல்வி சாகிபு ரஸியா பேகத்தின் கணவர்!" என்றாள் தாரிணி. "அது தெரியும், மௌல்வி சாகிபு ரஸியா பேகத்தின் கணவராவதற்கு முன்னால் அவருடைய பெயர் என்ன என்று கேட்டேன்."

தாரிணி சிறிது நேரம் யோசனை செய்துவிட்டுக் கூறினாள்: "உங்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டியதுதான். நீங்களே ஊகித்துத் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். அதை மறைத்து வைப்பதில் இனி உபயோகமும் இல்லை சூரியா! அந்த மௌல்வி சாகிபு, சீதாவின் தகப்பனார் துரைசாமி ஐயர்தான்." சூரியா மௌனமாக இருந்தான்; தாரிணி கூறியதை அவன் மனம் ஜீரணம் செய்து கொண்டிருந்தது. "என்ன? ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கிவிட்டீர்கள் போலக் காணப்படுகிறது!" என்றாள் தாரிணி. "அப்படி ஒன்றும் இல்லை, சில விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொண்டேன். சீதா தன்னை ஆக்ரா கோர்ட்டில் ஒரு முஸ்லிம் வந்து சாட்சி கூறிக் காப்பாற்றியதாகச் சொன்னாள். எனக்கு உடனே உங்கள் வீட்டில் பார்த்த மௌல்வியின் ஞாபகம் வந்தது. இரண்டையும் இரண்டையும் கூட்டி நாலு என்று ஊகம் செய்து கொண்டேன். தாரிணி! அந்தச் சாகிபுவை நான் உடனே பார்க்க விரும்புகிறேன்." "எதற்காக? அவரிடம் சண்டை பிடிப்பதற்காகவா?" "ஆமாம்." "ரஸியா பேகத்தைக் கலியாணம் செய்து கொண்டதற்காகவா? அல்லது அவர் ஹிந்து மதத்துக்குத் துரோகம் செய்ததற்காகவா?" "அதற்கெல்லாம் இல்லை, அவர் எங்களையெல்லாம் மறந்துவிட்டிருப்பதற்காக ஒரு முக்கிய விஷயம் அவரைக் கேட்டு நான் தெரிந்து கொள்ள வண்டும். சீதாவின் கலியாணத்தன்று அவர் 'கலியாணத்தை நிறுத்தவும்' என்று தந்தி கொடுத்திருந்தார். அதன் காரணத்தை இன்னொரு சமயம் சொல்கிறேன் என்றார். பிறகு அவரைக் கேட்பதற்குச் சந்தர்ப்பம் ஏற்படவேயில்லை. தாரிணி! இப்போது உடனே போய் நான் அவரைப் பார்த்தாக வேண்டும்."

"அது முடியாத காரியம், மௌல்வி சாகிபும் ரஸியா பேகமும் கொஞ்ச நாளாக இந்த ஊரில் இல்லை. போகிற இடமும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால் அந்தத் தந்தியின் காரணத்தை நானே சொல்லிவிடக்கூடும், சூரியா! கஷ்டமான விஷயந்தான்; ஆனால் சொல்லி விடுகிறேன். அந்தச் சமயம் வரையில் உங்கள் மாமாவை நான் என் தகப்பனார் என்றும், ரஸியா பேகத்தைத் தாயார் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். சௌந்தரராகவனுக்கும் எனக்கும் இருந்த நட்பைக் குறித்து ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா? அந்த நட்பில் ஏமாற்றமும் வெறுப்பும் அடைந்து பீகார் பூகம்ப விபத்தில் சேவை செய்வதற்காக நான் புறப்பட்டுப் போனேன். அந்தச் சமயத்தில் ரஸியா பேகம் ரஜினிபூர் ராஜாவைக் குத்த முயன்று சிறை சென்றாள். இந்தச் செய்தியை எனக்குக் கூறி ஆறுதல் சொல்லுவதற்காகத் துரைசாமி ஐயர் என்னைத் தேடிக்கொண்டு வந்தார். செய்தியைச் சொல்லிவிட்டு எனக்கு ஆறுதலாக ரஸியா பேகம் உண்மையில் என் தாய் அல்ல என்றும் சொன்னார். கலியாணம் செய்துகொண்டு சுகமாய் வாழும்படி எனக்கு போதித்தார். அப்போதுதான் நான் வரித்திருந்த புருஷனுக்கே சீதாவை மணம் செய்யப் பேசியிருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரிந்தது. பாவம்! என்னிடம் அவருக்கு ரொம்பவும் அபிமானம் உண்டு. ஆகையினாலேதான் 'கலியாணத்தை நிறுத்திவிடவும்' என்று அவர் தந்தி கொடுத்தார். அவர் தந்தி கொடுத்தது அப்போது எனக்குத் தெரியாது. வெகுகாலத்துக்குப் பிற்பாடுதான் தெரிந்தது."

"தாரிணி! அந்தத் தந்தியின் மர்மம் இன்னதென்பது வெகுகாலமாக என் உள்ளத்தை வருத்தி வந்தது; அதை இன்று வெளியிட்டதற்காக வந்தனம். அந்தத் தந்தி விஷயமாக நான் மிக்க மூடத்தனமாக நடந்து கொண்டேன். அதை யாரிடமும் காட்டாமல் மறைத்து வைத்தேன்; தந்தியில் கண்டிருந்தபடி கலியாணத்தை மட்டும் நிறுத்தி விட்டிருந்தால்?.... அடாடா! சீதாவின் வாழ்க்கை இவ்வளவு துன்பமயமாகியிராதல்லவா? நாம் நல்லது என்று நினைத்துக் கொண்டு செய்கிற காரியம் சில சமயம் எவ்வளவு கெடுதலாய் முடிந்துவிடுகிறது!" "நல்ல எண்ணத்துடன் செய்கிற காரியம் ஒரு நாளும் கெடுதலாய் முடியாது. இப்போது சீதாவும் சௌந்தரராகவனும் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்தால் பரவசமடை வீர்கள்." "அவர்கள் சந்தோஷமாயிருப்பது உனக்கு எப்படித் தெரியும், தாரிணி? நேரில் பார்த்ததைப் போலச் சொல்லு கிறாயே?" "ஆமாம்; பஞ்சாபுக்குப் போய் நேரில் அவர்களைப் பார்த்தபடியினால்தான் சொல்லுகிறேன்." "ஆகா! அது எப்போது? பஞ்சாபுக்கு எப்போது போயிருந்தாய்? சீதா நிஜமாகவே சந்தோஷமாகவே இருக்கிறாளா?" என்று சூரியா அடங்காத ஆர்வத்துடன் கேட்டான். "அத்தங்காளைப்பற்றிச் சொன்னதும் வருகிற ஆத்திரத்தைப் பார்!" என்றாள் தாரிணி. "என்னைவிடச் சீதாவின் விஷயத்தில் உனக்கு அக்கறை அதிகமாயிருப்பது நன்றாய்த் தெரிகிறதே? நான் போய் அவர்களைப் பார்க்கவில்லையே? நீதானே பார்த்திருக்கிறாய்? இத்தனைக்கும் நாம் அவர்களுடைய வாழ்க்கையில் தலையிடுவதினால் அவர்களுக்குத் தொல்லைதான் ஏற்படுகிறது என்று நாம் இருவரும் சேர்ந்து தீர்மானம் செய்திருந்தோமே!...."

"சீதாவின் விஷயத்தில் எனக்கு ஏன் இத்தனை பாசம் என்பது எனக்கே விளங்கவில்லைதான்....." "தாரிணி! நிஜமாகச் சீதாவின் மேல் உள்ள பாசத்தினாலே தான் நீ பஞ்சாபுக்குப் போனாயா?" "இல்லை! பஞ்சாபுக்குப் புறப்பட்டபோது அவர்களைப் பார்க்கும் உத்தேசம் எனக்கில்லை. இந்த வருஷ ஆரம்பத்தில் மறுபடியும் என்னுடைய சரித்திர ஆராய்ச்சி வேலையை நான் ஆரம்பித்தேன். ராவல்பிண்டிக்கு அருகிலுள்ள தட்சசீலத்துக்கு நானும் என் தோழி நிர்மலாவும் போனோம். அங்கே நாங்கள் பார்த்த அற்புதங்களைப் பற்றி ஒரு புத்தகமே எழுத வேண்டும். திரும்பி வரும்போது சீதா வசிக்கும் ஹௌஷங்காபாத் வழியாக வரவேண்டியிருந்தது. இறங்கி அவளைப் பார்க்காமல் வருவதற்கு என் மனம் கேட்கவில்லை. இறங்கியதும் நல்லதாய்ப் போயிற்று. சீதாவும் சௌந்தரராகவனும் குழந்தை வஸந்தியும் எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறார்கள் தெரியுமா? வஸந்தியின் கன்னங்கள் காஷ்மீர் ரோஜாப் புஷ்பங்களைப் போல இருக்கின்றன. அந்தக் குழந்தையின் முகம் என் மனதைவிட்டுப் போகவேயில்லை. சீதாவும் உடம்பு நன்றாய்த் தேறியிருக்கிறாள்...." "சௌந்தரராகவனும் நன்றாய்த்தானிருக்கிறார்! போன வருஷம் இந்த நாளில் யமலோகத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று காட்டுவதற்கு யாதொரு அடையாளமும் இல்லை!" என்று சூரியா சொன்னதும் தாரிணி வியப்படைந்தாள். "நீங்கள் அவரைப் பார்த்தீர்களா, என்ன? எப்போது எங்கே?" என்று கேட்டாள். "சௌந்தரராகவன் பெயரைச் சொன்னதும் வருகிற ஆத்திரத்தைப் பார்" என்றான் சூரியா. "எங்கள் பழைய சரித்திரத்தை நானும் மறந்துவிட்டேன். அவரும் அடியோடு மறந்துவிட்டார்; சீதாவுங்கூட மறந்து விட்டாள். நீங்கள் மட்டும் மறக்கவில்லை போலிருக்கிறது!" என்றாள் தாரிணி. "மன்னிக்க வேண்டும், நானும் அந்தப் பழைய கதையையெல்லாம் மறந்துதான் இருந்தேன்.

ஆனால் இன்று காலையில் ராகவனைப் பார்த்தபடியால் பழைய கதை நினைவு வந்தது...." இத்தனை நேரமும் சாவதானமாக உட்கார்ந்திருந்த தாரிணி சட்டென்று எழுந்து நின்றாள். "இன்று காலையில் பார்த்தீர்கள் என்றால் இந்த டில்லியில் தான் பார்த்திருக்க வேண்டும். அவரை மட்டுமா? சீதாவும்கூட இருந்தாளா?" "அவரை மட்டும்தான் பார்த்தேன், சீதாவை அழைத்து வரவில்லையாம். உத்தியோக சபலம் அவரை மறுபடியும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இப்போதுதான் புதுடில்லியில் சுதந்திர அரசாங்கம் ஏற்படப் போகிறதே? தம்முடைய உத்தியோகத்தை திருப்பிக் கொடுக்கமாட்டார்களா என்று பார்ப்பதற்காக வந்தாராம். டில்லிக்கு வந்து ஒரு வாரம் ஆயிற்றாம்." "ஐயோ! இது என்ன விபரீதம்? இரண்டு நாளாக அடிக்கடி எனக்குச் சீதாவின் ஞாபகம் வந்து கொண்டிருக்கிறது. அதன் காரணம் இப்போதுதான் தெரிகிறது. சூரியா! சௌந்தரராகவன் எங்கே தங்கியிருக்கிறார்? அவரை நான் உடனே பார்க்க வேண்டும்." "அவரை உடனே பார்க்க முடியாது, இன்று காலையிலேயே அவர் கல்கத்தாவுக்கு ரயில் ஏறிவிட்டார். அவருடைய உத்தியோக சம்பந்தமான பழைய ரிகார்டுகள் கல்கத்தாவில் தங்கிவிட்டனவாம். அவற்றை எடுத்து வருவதற்காகப் போகிறாராம். தமக்கு மறுபடி உத்தியோகம் வந்துவிடும் என்றும் டில்லிக்கே திரும்பி வந்துவிடப் போவதாகவும் எக்களிப்புடன் சொன்னார். அதைக் குறித்து நீ ஏன் இவ்வளவு பதட்டமடைய வேண்டும், தாரிணி!" "ஏன் என்று எனக்கே தெரியவில்லை. சூரியா! என்னுடைய உள் உணர்ச்சியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று சொன்னீர்கள். சீதாவுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று என் உள் உணர்ச்சி சொல்லுகிறது. அவளைக் காப்பாற்றுவதற்கு நாம் உடனே கிளம்பியாக வேண்டும்." "இது என்ன பைத்தியம்?" "எனக்கு பைத்தியம் இல்லை; ராவல்பிண்டி கலவரத்தின் போது நான் பஞ்சாப்பில் இருந்தேன்.

அந்தப் பயங்கரங்களைப் பற்றி இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது. ராவல்பிண்டியைப்போல் ஆயிரம் ராவல்பிண்டிகள் பஞ்சாப் முழுதும் நடக்கலாம் என்று அங்கிருந்து வந்தவர்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய கட்சியைச் சேர்ந்த சிநேகிதர்கள் பலர் பஞ்சாபில் இருக்க விரும்பாமல் இங்கே வந்துவிட்டார்கள்." "அப்படியிருந்தால் சௌந்தர ராகவனுக்குத் தெரிந்திராதா? அவர் ஏன் சீதாவை விட்டுவிட்டு வருகிறார்?" எனக்குப் பைத்தியம் என்று சொன்னீர்கள் அல்லவா? பைத்தியம் எனக்கில்லை; அவருக்குத்தான். பஞ்சாப் சீக்கியர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று அவர் ஒரே திட நம்பிக்கையில் இருக்கிறார். அதனாலேயே சீக்கியர் வசிக்கும் பகுதியில் அவர் வீடு எடுத்துக் கொண்டு வசிக்கிறார். ஆனால் அவருடைய நம்பிக்கை பைத்தியக்கார நம்பிக்கை. சூரியா! நீங்கள் என்னுடன் வரப்போகிறீர்களா? இல்லையா? வரா விட்டால் நான் தனியாகவே போகப் போகிறேன். ஒருவேளை நீங்கள் இங்கே இருப்பதே நலமாயிருக்கும்." "ஒரு நாளும் இல்லை தாரிணி! உன்னுடன் நரகத்துக்கு வேண்டுமானாலும் வரத் தயார் என்று பல தடவை நான் சொல்லி யதுண்டு. அவசியமானால் அதைக் கட்டாயம் நிறைவேற்றுவேன். ஆனால் இது அவசியமா, உசிதமா என்று மறுபடியும் யோசிக்க வேண்டும். நாம் சீதாவின் விஷயத்தில் தலையிட்ட போதெல்லாம் அவளுக்குக் கஷ்டந்தான் நேர்ந்திருக்கிறது....." "அதெல்லாம் பிராயசித்தம் செய்யும்படியான சந்தர்ப்பம் இப்போது ஒருவேளை ஏற்படுமோ, என்னமோ? யார் கண்டது?" என்று சொல்லிக்கொண்டே தாரிணி விரைவாக நடக்கத் தொடங்கினாள். சூரியா அவளைத் தொடர்ந்து சென்றான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து ஏழாம் அத்தியாயம்
இருளில் ஒரு குரல்

நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது; கடிகாரத்தின் முட்கள் பன்னிரண்டு எண்ணிக்கையைச் சமீபித்துக் கொண்டிருந்தன. சீதா கையில் 'டிரிப்யூன்' பத்திரிகை வைத்திருந்தாள். கொஞ்சம் பத்திரிகை படிப்பதும் பிறகு ஏதோ யோசிப்பதும் கடிகாரத்தைப் பார்ப்பதும் மறுபடி படிப்பதுமாயிருந்தாள். தூக்கம் வராத இரவுகளில் சீதா ஏதாவது புத்தகமோ பத்திரிகையோ படிப்பது வழக்கம். சிறிது நேரத்துக்கெல்லாம் தூக்கம் வந்துவிடும். ஆனால் அன்றைக்கு வெகுநேரம் படித்தும் தூக்கம் வரவில்லை. பல காரணங்களால் அவளுடைய மனம் ஏற்கனவே கலக்கமுற்றிருந்தது. பத்திரிகையில் படித்த செய்திகள் அந்தக் கலக்கத்தை அதிகப்படுத்தின. ஹௌஷங்காபாத் நகரத்தின் கோடியில் அது ஒரு தனி வீடு. சுற்றிலும் சிறு தோட்டமும் காம்பவுண்டு சுவரும் இருந்தன. வீட்டின் மச்சு அறையில் சீதா தன்னந் தனியாக இருந்தாள். இல்லை, 'தன்னந்தனியாக' என்று சொல்வது தவறு. பக்கத்துக் கட்டிலில் குழந்தை வஸந்தி படுத்துத் தூங்கினாள். ஆனால் குழந்தை வஸந்தியைத் துணை என்று சொல்ல முடியாதல்லவா? சீக்கிய காவற்காரன் தினம் தினம் இராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு ஒன்பதரை மணிக்குள் திரும்பி வந்து விடுவது வழக்கம். அன்றைக்கு எதனாலோ அவன் திரும்பவில்லை. இந்தப் பத்திரிகையில் வந்திருக்கும் செய்திகளுக்கும் அவன் வராததற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த வஸந்தியின் மீது சீதாவின் பார்வை சென்றது. குழந்தையின் கன்னங்கள் உப்பி இரண்டு அழகிய ஆப்பிள் பழங்களைப்போலக் காணப்பட்டன. மூடிய கண்களுடன் தூங்கிய குழந்தையின் முகத்தில் களை சொட்டிற்று. பஞ்சாபுக்கு வந்த பிறகு குழந்தைக்கு உடம்பு நன்றாய் ஆகியிருக்கிறது. ஒரு வருஷத்தில் எவ்வளவு நல்ல வளர்த்தி! நம்முடைய ஊர்ப் பக்கமாயிருந்தால், குழந்தைக்கு இப்போது மேலாக்குப் போட வேண்டும் அல்லது சித்தாடை உடுத்த வேண்டும் என்பார்கள். ஆனால் இந்தப் பக்கத்திலேதான் பெரிய பெரிய ஸ்திரீகள் எல்லாரும் கால் சட்டையும் மேல் சட்டையும் அணிந்து கொண்டு ஒரு அங்கவஸ்திரத்தையும் தரித்துக் கொண்டு வெளியில் புறப்பட்டு விடுகிறார்களே? இங்கே தேச ஆசாரம் அப்படி! குழந்தைக்கு மேலாக்கு, சித்தாடை வாங்குவது பற்றி என்ன கவலை?

சுவரிலே மாட்டியிருந்த வஸந்தியின் போட்டோ படத்தைச் சீதா பார்த்தாள். பஞ்சாப் பெண்களைப் போல் கால் சட்டை, மேல் சட்டை, அங்கவஸ்திரத்துடன் விளங்கிய வஸந்தியின் படம் அது, அந்த உடை குழந்தைக்கு அழகாய்த் தானிருக்கிறது. ஆனால் சில வருஷம் போன பிறகு நன்றாயிருக்குமா? ஒருவேளை இந்தப் பக்கத்திலேயே நாம் நெடு நாள் இருந்துவிட்டால் வஸந்தி வயதான பின்னரும் இப்படித்தான் உடை தரிப்பாளோ, என்னமோ? இந்த ஊரிலேயே இருப்பதற்கு ஆட்சேபம் என்ன? ஒன்றுமேயில்லை, பஞ்சாபைப் போன்ற தேசமே கிடையாது. எந்த விதத்தில் பார்த்தாலும் சரிதான். கள்ளிச் சொட்டைப் போலக் கனமான பால், ரூபாய்க்கு இரண்டரைப் படி. ஆப்பிளும் ஆரஞ்சும் திராட்சையும் வாதாமியும் கொள்ளை கொள்ளையாய்க் கிடைக்கின்றன; மற்ற சாமான்களும் அப்படித்தான். ஏன் எல்லாருக்கும் உடம்பு நன்றாய் ஆகாது? இந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் நல்ல ஆஜானுபாகுவாக வளர்ந்திருப்பதற்குக் கேட்பானேன்? ஆகா! இந்தப் பக்கத்தின் இயற்கை அழகைத்தான் என்னவென்று சொல்ல? ஏதோ நம்முடைய பக்கங்களிலும் 'வஸந்த காலம்' என்று சொல்கிறார்கள். அங்கேயெல்லாம் வசந்த காலத்தைக் கண்டது யார்? புத்தகங்களிலே படிப்பதுதான். இங்கேயோ சரியாகப் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி வஸந்த காலம் பிறப்பதைக் கண்ணாலே காணலாம். முதல் நாள் வரையில் மரங்கள் எல்லாம் மொட்டை மொட்டையாய் நிற்கும். பிப்ரவரி மாதம் 15-ந் தேதியன்று பார்த்தால் மரங்களில் எல்லாம் சின்னஞ்சிறு சிவந்த மொட்டுக்களைக் காணலாம். முதலில் மொட்டுக்கள் மலரும்; பிறகு இலைகள் தளிர்க்கும். பிப்ரவரி 14-ந் தேதி வரையில் வாசற் பக்கமெல்லாம் வெறுங் கட்டாந் தரையாகக் காணப்படும். சரியாக 15-ந் தேதியன்று எங்கே பார்த்தாலும் தரையில் சிறு சிறு மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங்கும். பூமாதேவி திடீரென்று குதூகலித்துச் சிரிப்பது போன்ற அக்காட்சியை எப்படி வர்ணிப்பது? இவ்வளவு அழகான நாட்டை விட்டு ஏன் போகவேண்டும்? கோடைகாலத்தில் இங்கே வெயில் என்னமோ கடுமைதான்; சந்தேகம் இல்லை; ஆனால் பக்கத்தில் காஷ்மீர் இருக்கிறது; சிம்லா இருக்கிறது; இன்னும் பல மலை வாசங்களும் இருக்கின்றன.

மே, ஜுன் மாதங்களில் மலைக்குப் போய்விட்டு வந்தால் மற்ற மாதங்களைப் பற்றிக் கவலையே இல்லை. பஞ்சாபுக்கு வந்தபிறகு, ஏறக்குறைய இந்தப் பத்து மாத காலமும் சீதாவின் வாழ்க்கை ஒரே ஆனந்தமயமாக இருந்தது, வம்பு இல்லை, தும்பு இல்லை, அசூயை இல்லை, ஆத்திரம் இல்லை, பொறாமை இல்லை, புழுங்குவதும் இல்லை, சிநேகிதர்கள் இல்லை, விரோதிகளுமில்லை. தான் உண்டு, தன் கணவனின் அன்பு உண்டு, தன் குழந்தையின் மழலை உண்டு, வேறு என்ன வேண்டும் இந்த உலகத்தில்? இத்தகைய ஆனந்தமயமான வாழ்வு இன்னும் எத்தனை காலம் நிலைத்து நிற்குமோ தெரியவில்லையே? மறுபடியும் அந்தப் பாழும் டில்லிக்குப் போக வேண்டிவருமோ, என்னமோ, தெரியவில்லையே? இவருக்கு என்னத்துக்காகத் திடீரென்று சர்க்கார் உத்தியோக மோகம் மறுபடியும் பிடித்துக் கொண்டது? என்ன இருந்தாலும் புருஷர்களுடைய போக்கே விசித்திரமானதுதான். வீட்டில் அமைதியும் இன்பமும் குடிகொண்டிருந்தால் அவர்களுக்குப் போதுவதில்லை. கூட்டமும் கூச்சலும் அதிகாரமும் ஆர்ப்பாட்டமும் தடபுடலும் இருந்தால்தான் புருஷர்களுக்கு வாழ்க்கை ரஸிக்கும் போலும். கிளப்புகள், பார்ட்டிகள், விருந்துகள் இல்லாமல் அவர்களால் அதிக காலம் உற்சாகமாக இருக்க முடியாது போலும்! இல்லாமற் போனால், பஞ்சாபுக்கும் வந்த புதிதில் இருந்த உற்சாகம் அவருக்கு இப்போது ஏன் இல்லாமற் போயிற்று? சிரிப்பும் குதூகலமும் களிப்பும் விளையாட்டும் ஏன் வர வர குறைந்து போய்விட்டன?

பத்து நாளைக்கு முன்புதான் திடீரென்று அவர் இந்த வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார். "சீதா! ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் வரப் போகிறது. நம்முடைய சொந்த சர்க்கார் ஏற்படப் போகிறது. புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நான் வீட்டில் இடம் கொடுத்தேன் என்பதற்காகத்தானே எனக்கு உத்தியோகம் போயிற்று? போன உத்தியோகம் ஆகஸ்டு 15-ந் தேதி எனக்குத் திரும்பி வந்துவிடும்!" என்றார். "அப்படியானால் இந்த ஊரைவிட்டு டில்லிக்குப் போக வேண்டியிருக்குமோ?" என்று சீதா கேட்டாள். அவளுடைய குரலில் தொனித்த கவலையைத் தெரிந்து கொண்டு ராகவன், "டில்லிக்குப் போய்த்தான் தீரவேண்டும் என்று அவசியம் இல்லை. இஷ்டமிருந்தால் டில்லிக்குப் போகலாம். இஷ்டம் இல்லாவிட்டால் பாகிஸ்தானுக்கு 'ஆப்ட்' செய்து கொண்டு பஞ்சாபிலேயே உத்தியோகம் பார்க்கலாம். சீதா! உன்னிடம் உண்மையைச் சொல்லி விடுகிறேனே! என்னதான் இருந்தாலும் சர்க்கார் உத்தியோகத்தைப் போல கம்பெனி உத்தியோகம் ஆகாது. ஆயிரம் ரூபாய் சம்பளம் குறைவாயிருந்தாலும் சரி, சர்க்கார் உத்தியோகத்தின் மவுஸே வேறுதான்" என்றான் சௌந்தரராகவன். இதற்குப் பிறகு சீதா ஆட்சேபம் சொல்ல விரும்பவில்லை. "அதற்கென்ன சந்தேகம்? சர்க்கார் உத்தியோகம் திரும்பி வந்தால் வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா?" என்றாள். "ஆனால் சர்க்கார் உத்தியோகம் நம்மைத் தேடிக் கொண்டு வராது. நாம் அதைத் தேடிக் கொண்டு போகவேண்டும். டில்லிக்குப் போய் அதற்காகக் கொஞ்சம் வேலை செய்தாக வேண்டும். உடனே புறப்பட்டுப் போனால்தான் கைகூடும். திரும்பி வரப் பத்துப் பதினைந்து நாள் பிடிக்கலாம். நீ இங்கேயே இருக்கிறாயா, சீதா? அல்லது என்கூட நீயும் வருகிறாயா?" என்று கேட்டான் ராகவன். "நான் உங்களுடன் வந்தால் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்குமா?" என்று சீதா கேட்டாள். "அப்படிப் பிரமாத இடைஞ் சலாயிராது. கொஞ்சம் இடைஞ்சலாயிருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்!"

இதன் பிறகு சீதா டில்லிக்கு ராகவனுடன் போகும் எண்ணத்தை விட்டு விட்டாள். அடிக்கடி ராகவன் வெளியூர் களுக்குக் கம்பெனி காரியமாகப் போவதுண்டு. அதுபோல இப்போது போய்விட்டு வருகிறார். தான் எதற்காகப் பரபரப்பு அடைய வேண்டும்? டில்லிக்குத் தானும் போனால் அதிக நாள் அங்கே தங்கும்படி நேர்ந்தாலும் நேர்ந்துவிடும். அவர் மட்டும் தனியாகப் போனால் சீக்கிரம் திரும்பி வந்துவிடுவார்! இவ்விதம் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு ராகவனுக்கு விடை கொடுத்து அனுப்பினாள். ராகவன் போய் இரண்டு நாளைக்குப் பிறகு சிறிதும் எதிர்பாராத விதமாகப் பாமா என்பவள் வந்து சேர்ந்தாள். முன்னொரு காலத்தில் அவள்பேரில் சீதாவுக்கு ரொம்பவும் கோபம் இருந்தது. ஆனால் இப்போது சீதாவின் மனதில் கோபத்துக்கோ ஆங்காரத்துக்கோ அசூயைக்கோ சிறிதும் இடம் இருக்கவில்லை. அப்படி எப்போதேனும் சிறிது ஆங்காரம் தோன்றினாலும் தேவபட்டணத்திலிருந்து தான் நள்ளிரவில் புறப்பட்ட அன்று காந்தி மகாத்மாவின் படத்தின் முன்னிலையில் செய்த பிரதிக்ஞையை நினைவுபடுத்திக் கொள்வாள். உடனே ஆங்காரம் அடங்கிச் சாந்தம் குடி கொள்ளும். எனவே, பாமாவைச் சீதா அன்புடன் வரவேற்றாள். அவளுடைய குணமும் இப்போது நல்ல விதத்தில் மாறியிருந்தது கண்டு மகிழ்ந்தாள். ராகவன் டில்லிக்குப் போக நேர்ந்தது பற்றி இன்னொரு காரணத்தை பாமாவிடமிருந்து சீதா அறிந்தாள். ராகவன் எந்தக் கம்பெனியில் உத்தியோகம் பார்த்தானோ அந்தக் கம்பெனியார் பஞ்சாபில் தங்களுடைய கடையைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்களாம். பஞ்சாப் பாகிஸ்தானில் சேரப் போவதுதான் அதற்குக் காரணமாம். ஆகையால், "இனி பஞ்சாப்பில் உனக்கு வேலை இல்லை! மதராஸுக்குப் போகிறாயா?" என்று ராகவனைக் கேட்டிருந்தார்களாம். இதனால் வெறுப்படைந்துதான் ராகவன் திரும்பவும் சர்க்கார் உத்தியோகத்தைத் தேடிப்போயிருக்க வேண்டும் என்று பாமா சொன்னாள்.

லாகூரில் கம்பெனியின் காரியங்களை முடிவு செய்வதற்காகப் பாமாவின் தகப்பனார் லாகூருக்கு வந்திருந்தாராம். அவருடன் வந்திருந்த பாமா, ராகவன் என்ன செய்யப் போகிறார் என்று தெரிந்து கொண்டு போவதற்காக ஹொஷங்காபாத்துக்கு வந்தாளாம். இதையெல்லாம் கேட்ட சீதாவுக்கு கொஞ்சம் மனக் கலக்கம் அதிகமாயிற்று. பஞ்சாப் பாகிஸ்தானில் சேர்வதற் காகக் கம்பெனியை எதற்காக மூடவேண்டும் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் ராகவன் மதராஸுக்குப் போக விரும்பாதது இயற்கைதான் என்பதை உணர்ந்திருந்தாள். ஆகையால் டில்லியிலே உத்தியோகம் பார்க்க வேண்டியிருந்தாலும் நான் தடை சொல்லுவதில்லையென்று எண்ணிக் கொண்டாள். பாமா மேலும் சில தினங்கள் சீதாவுடன் அங்கே இருந்தாள். பஞ்சாபின் நிலைமைகளைப் பற்றி ஏதேதோ பயங்கரமான விஷயங்களைக் கூறினாள். அந்த நிலைமையில் ராகவன் சீதாவைத் தனியாக விட்டுவிட்டுப் போனது பற்றிக் குறை கூறினாள். சீதா அதை மறுக்கவே, "அப்படியானால் நானும் ராகவன் வரும் வரையில் இங்கே இருக்கின்றேன்!" என்றாள். ஆனால் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதியன்று "அப்பா என்னைப் பற்றிக் கவலைப் படுவார்; நான் இனி இருக்க முடியாது" என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டாள். பாமா போன பிறகு சீதா தன்னுடைய தனிமையை அதிகமாக உணர ஆரம்பித்தாள். மனதில் கலக்கம் மணிக்கு மணி அதிகமாகிக் கொண்டு வந்தது. ஆயினும் தைரியத்தை அடியோடு இழந்துவிடவில்லை. 'உலகத்தில் பார்க்க வேண்டிய பயங்கரங்களையெல்லாம் பார்த்தாகிவிட்டது. அநுபவிக்க வேண்டிய கஷ்டங்களையெல்லாம் அநுபவித்தாகிவிட்டது. புதிதாக இனிமேல் எனக்கு என்ன கஷ்டம் வந்துவிடப் போகிறது?' என்று அடிக்கடி தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மனதைத் திடப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

பாமா சென்று இன்றைக்கு நாலு தினம் ஆகிவிட்டது. ராகவனிடம் இருந்தோ கடிதம் ஒன்றும் வரவில்லை. ஏன் பிடிவாதம் பிடித்து ராகவனுடன் தானும் போகவில்லையென்று தோன்றியது. பாமாவை வற்புறுத்தித் தன்னுடன் இருக்கும்படி சொல்லாமற் போனதும் பிசகுதான். பத்திரிகையிலே போட்டிருக்கும் செய்திகளையெல்லாம் பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது! எங்கே, எப்போது, என்ன நடக்கும் என்று குமுறிக் கொண்டிருக்கிறதாமே? இப்படியெல்லாம் பத்திரிகையில் எழுதியிருப்பதில் அர்த்தந்தான் என்ன? விளக்கை அணைத்துவிட்டுச் சீதா படுத்துக்கொண்டாள். கடிகாரத்தில் மணி பன்னிரண்டு அடித்தது பன்னிரண்டாவது தடவை மணி அடித்ததும், நிசப்தம் குடிகொண்டது, ஒரு நிமிஷ நேரத்துக்குத்தான். அப்புறம் எங்கேயோ வெகு தூரத்தில் ஏதோ ஒரு சத்தம் கேட்டது. வர வர அது பெருகி கொண்டும் அருகில் நெருங்கிக் கொண்டும் வந்தது. சமுத்திரத்தில் அடிக்கும் அலைகளின் ஓசை மாதிரி இருந்தது. சீச்சீ! இது என்ன பிரமை? அந்தப் பழைய உபத்திரவம் மறுபடியும் திரும்பி வருகிறது போலிருக்கிறதே! ஐந்தாறு மாதமாகவே இவ்விதம் அடிக்கடி காதில் ஓசை மாதிரி கேட்கிறது. ஆரம்பிக்கும்போது மெதுவாயிருக்கிறது; வர வர சத்தம் அதிகமாகிறது. காதிலே ஏதோ கோளாறு என்று ராகவன் சொன்னது சரியாகத்தான் இருக்க வேண்டும்! அடுத்த தடவை லாகூருக்குப் போகும்போது நல்ல காது வைத்தியரைக் கொண்டு பரிசோதித்துப் பார்க்க வேண்டும். இருக்கிற இடைஞ்சல் எல்லாம் போதாது என்று காது வேறே செவிடாகித் தொலைந்துவிட்டால் என்னத்தைச் செய்கிறது?

காதிலே கேட்ட அலை ஓசை வர வர அதிகமாகி வரவே அந்தப் பிரமையைப் போக்கிக் கொள்வதற்காகப் படுக்கையிலிருந்து எழுந்தாள். அவள் படுத்திருந்த மச்சு ஹாலின் ஒரு பக்கத்துக்குப் போய் அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். இராத்திரியில் எந்த நேரத்திலும் ஹௌஷங்காபாத் நகரத்தில் மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது வழக்கம். ஆனால் இன்றைக்கு ஒரு விளக்கையும் காணோமே? இது என்ன அதிசயம்! ஒருவேளை 'கரண்ட்' தடைப்பட்டு விட்டதா என்ன? ஆனால் இந்த வீட்டில் விளக்கு 12 மணி வரையில் எரிந்ததே! அப்புறம் கரண்ட் நின்று போயிருக்குமோ? ஸ்விட்சைப் போட்டுப் பார்க்கலாமா? எங்கேயோ ஒரு விஸில் அடிக்கும் சத்தம் கேட்டது. அதற்குப் பதிலாக இன்னொரு விஸில் சத்தம் கேட்டது. நாய் ஒன்று ஊளையிட்டது. 'தம்' 'தம்' என்று எங்கேயோ ஒரு முரசு பயங்கரமாகத் தொனி செய்தது. சீதாவுக்கு உடம்பு சிலிர்த்தது, சீ! இது என்ன பைத்தியக்காரப் பயம்? போலீஸார் விஸில் ஊதினால் அது ஒரு ஆச்சரியமா? நாய் ஊளையிடாமல் வேறு என்ன செய்யும்? எங்கேயோ சீக்கியரின் குருத்வாரத்தில் முரசு முழங்குகிறது. இன்று ஏதாவது உற்சவமாயிருக்கலாம். இதற்காக நாம் ஏன் பயப்பட வேண்டும்? திடீரென்று அர்த்தமில்லாத ஒரு புது பயங்கரமான எண்ணம் சீதாவின் மனதில் தோன்றியது. இரண்டு கண்கள் தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அவை எங்கிருந்து பார்க்கின்றன என்று தெரியவில்லை. அறைக்குள்ளிருந்தா, வெளியிலிருந்தா என்று தெரியவில்லை. மனிதருடைய கண்ணா, காட்டு மிருகத்தினுடைய கண்ணா, கோட்டானுடைய கண்ணா, கொள்ளிவாய்ப் பிசாசின் கண்ணா என்றும் தெரியவில்லை.

ஒரு சமயம் அந்தக் கண்கள் பின்னாலிருந்து பார்ப்பது போலிருந்தது. இன்னொரு சமயம் அந்தக் கண்கள் பக்கவாட்டிலிருந்து பார்ப்பதாகத் தோன்றியது. ஜன்னலுக்கு எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு மரம் இருந்தது. இருட்டில் அந்த மரம் நெடிதுயர்ந்த ஒரு கரிய பூதம் எனக் காணப்பட்டது. அதிலிருந்து இரண்டு கண்கள் சீதாவை உற்று நோக்கின. முதலில் சாதாரணக் கண்களாக அவை தோன்றின. பிறகு நெருப்புத் தணலைப்போல் அக்கண்கள் பிரகாசித்தன. சீதா தலையை ஒரு ஆட்டம் ஆட்டி அந்த மரத்திலிருந்து பார்வையைத் திருப்பி அடுத்த வீட்டின் பக்கம் நோக்கினாள். அடுத்த வீட்டுக் கூரை மேலிருந்து இரண்டு கண்கள் அவளை நோக்கின. வெளியிலிருந்து தன் பார்வையைத் திருப்பி அறைக்குள்ளே செலுத்தினாள். அறையின் சுவரிலிருந்து அவளை இரு கண்கள் நோக்கின, மறுபடியும் வெளியில் பார்த்தாள். வீட்டைச் சுற்றிலுமிருந்து நூற்றுக்கணக்கான கண்களின் ஜோடிகள் அக்னிமயமாக ஜொலித்துக் கொண்டு அவளை உற்று நோக்கின. "நம்முடைய மூளை குழம்பி வருகிறது! சீக்கிரத்தில் பைத்தியம் பிடித்துவிடுமோ, என்னமோ! அவர் எப்போது வருவாரோ, தெரிய வில்லையே! அவர் வரும் வரையிலாவது நாம் பைத்தியமாகாமல் இருக்க வேண்டும்" என்று எண்ணிக் கொண்டே ஜன்னல் பக்கமிருந்து திரும்பி வந்து படுக்கையில் படுத்த