|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > சிவகாமியின் சபதம் > பொன்னியின் செல்வன் > பார்த்திபன் கனவு > சோலைமலை இளவரசி > கல்கி - அலை ஒசை > பாகம் 1- பூகம்பம் > பாகம் 2 - புயல் > பாகம் 3 - எரிமலை > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 1 to 11 > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 12 to 23 > பாகம் 4 - பிரளயம் அத்தியாயங்கள் - 24 to 35 > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 36 to 43

Acknowledgements:Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's Works and for the help to publish them in PM in TSCII format. Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala
HTML Version and TSCII version proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi Chennai
PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.© Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 1.001 | தபால்சாவடி | மின்பதிப்பு |
| 1.002 | தாயின் உள்ளம் | மின்பதிப்பு |
| 1.003 | பம்பாய்க் கட்டிடம் | மின்பதிப்பு |
| 1.004 | வாசலில் ரகளை | மின்பதிப்பு |
| 1.005 | கிட்டாவய்யர் குடும்பம் | மின்பதிப்பு |
| 1.006 | மந்திராலோசனை | மின்பதிப்பு |
| 1.007 | பத்மாபுரம் | மின்பதிப்பு |
| 1.008 | சௌந்தர ராகவன் | மின்பதிப்பு |
| 1.009 | கதவு திறந்தது | மின்பதிப்பு |
| 1.010 | காமாட்சி அம்மாள் | மின்பதிப்பு |
| 1.011 | "என்னைக் கேட்டால்....." | மின்பதிப்பு |
| 1.012 | கராச்சியில் நடந்தது | மின்பதிப்பு |
| 1.013 | வானம் இடிந்தது | மின்பதிப்பு |
| 1.014 | வண்டி வந்தது | மின்பதிப்பு |
| 1.015 | ராஜத்தின் ரகசியம் | மின்பதிப்பு |
| 1.016 | தேவி பராசக்தி | மின்பதிப்பு |
| 1.017 | துரைசாமியின் இல்லறம் | மின்பதிப்பு |
| 1.018 | மூன்று நண்பர்கள் | மின்பதிப்பு |
| 1.019 | மோட்டார் விபத்து | மின்பதிப்பு |
| 1.020 | அம்மாஞ்சி அறிமுகம் | மின்பதிப்பு |
| 1.021 | சீதாவின் காதலன் | மின்பதிப்பு |
| 1.022 | கன்னத்தில் ஒருஅறை | மின்பதிப்பு |
| 1.023 | இது என்ன ஓசை? | மின்பதிப்பு |
| 1.024 | நெஞ்சு விம்மியது | மின்பதிப்பு |
| 1.025 | கண்கள் பேசின | மின்பதிப்பு |
| 1.026 | மலர் பொழிந்தது! | மின்பதிப்பு |
| 1.027 | இடி விழுந்தது! | மின்பதிப்பு |
| 1.028 | நிச்சயதார்த்தம் | மின்பதிப்பு |
| 1.029 | பீஹார்க் கடிதம் | மின்பதிப்பு |
| 1.030 | இதுவா உன் கதி? | மின்பதிப்பு |
| 1.031 | மதகடிச் சண்டை | மின்பதிப்பு |
| 1.032 | காதலர் உலகம் | மின்பதிப்பு |
| 1.033 | அத்தையும் மருமகனும் | மின்பதிப்பு |
| 1.034 | கலியாணமும் கண்ணீரும் | மின்பதிப்பு |
சாலையின் இரு புறத்திலும் ஆலமரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப் போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது, எங்கே முடிவாகிறது என்று தெரிந்துகொள்ள முடியாததாயிருந்தது. பகவானுடைய விசுவரூபத்தின் அடியும், முடியும்போல, இரு திசையிலும் அடர்ந்த மரக்கிளைகளிடையில் அந்தச் சாலை மறைந்து விட்டது. கிழக்கு மேற்காக வந்த சாலை வடதிசை நோக்கித் திரும்பிய முடுக்கிலே ராஜம்பேட்டைக் கிராமத்தின் தபால்சாவடி எழுந்தருளியிருந்தது. அதன் வாசற்கதவு பூட்டியிருந்தது. தூணிலே இரும்புக் கம்பியினால் கட்டித் தொங்க விடப் பட்டிருந்த தபால்பெட்டி திக்கற்ற அநாதையைப்போல் பரிதாபத் தோற்றம் அளித்தது. சற்றுத் தூரத்தில் ஒரு கட்டைவண்டி 'லொடக்' லொடக்' என்ற சத்தத்துடனே சாவகாசமாக அசைந்து ஆடிய வண்ணம் சென்றது. வண்டிக்காரன், 'அய் அய்' என்று அதட்டி மாடுகளை முடுக்கினான். தபால் சாவடிக்கு எதிரே சாலையின் மறுபக்கத்தில் ஒரு மிட்டாய்க் கடை. அந்தக் கடையின் வாசலில் அப்போது ஆள் யாரும் இல்லை. உள்ளேயிருந்து 'சொய் சொய்' என்ற சத்தம் மட்டும் கேட்டது. அந்தச் சத்தத்தோடு கடைக்குள்ளிருந்து வந்த வெங்காயத்தின் வாசனையும் சேர்ந்து மிட்டாய்க் கடை அய்யர் மசால் வடை போட்டுக்கொண்டிருந்தார் என்பதை விளம்பரப்படுத்தின. ஆலமரக் கிளையில் நிர்விசாரமாகக் குடியிருந்த பறவைகள் உல்லாசமாகக் கிறீச்சிட்டுக் கொண்டிருந்தன. அதோ 'டக்கு டக்கு' என்ற பாதக் குறட்டின் சத்தம் கேட்கிறது. வருகிறவர் ஸ்ரீமான் கே.பி. பங்காரு நாயுடு பி.பி.எம். அவர்கள்தான். பி.பி.எம் (B.P.M.) என்றால் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். பிராஞ்சு போஸ்டு மாஸ்டர் என்று அறிந்து கொள்க. கிராமத்துப் போஸ்டு மாஸ்டருக்குச் சம்பளம் சொற்பந்தான். ஆனால், அவருடைய அதிகாரம் பெரியது. அவருடைய உத்தியோகப் பொறுப்பு அதைவிட அதிகமானது. "ஜில்லா கலெக்டராகட்டும்; ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னரேயாகட்டும்; இந்தத் தபால் ஆபிஸுக்குள் அவர்களுடைய அதிகாரம் செல்லாது! இன்னொருவருக்கு வந்த கடிதத் தைக் கொடு என்று கவர்னர் கேட்டாலும், 'மாட்டேன்' என்று சொல்ல எனக்கு அதிகாரம் உண்டு!" என்று நாயுடுகாரு பெருமிதத்துடன் சொல்லிக் கொள்வார். இதோ அருகில் வந்து விட்டார் போஸ்டு மாஸ்டர் பங்காரு நாயுடு. தபால் சாவடியின் பூட்டில் திறவுகோலைப் போட்ட உடனே கதவு திறந்து கொள்கிறது. பங்காரு நாயுடு அவருடைய சாம்ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கிறார். ஆனால், வாசற் படியைத் தாண்டியதும் மேலே அடி வைக்க முடியாமல் பிரமித்துப் போய் நிற்கிறார். தபால்கார பாலகிருஷ்ணன் உள்ளே சாவதானமாக உட்கார்ந்து நேற்று வந்த தபால்களை வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறான். போஸ்டு மாஸ்டர் திகைத்து நின்றதைக் கண்ட பாலகிருஷ்ணன், "ஏன் ஸார், இப்படி வெறித்துப் பார்க்கிறீர்கள்! நான் என்ன பேயா, பிசாசா?" என்று கேட்டான். "நீ-நீ-வந்து-வந்து...எப்படி அப்பா நீ உள்ளே புகுந்தாய்?" என்று பங்காரு நாயுடு தடுமாறிக் கொண்டே கேட்டார். "எனக்கு இக்ஷிணி வித்தை தெரியும் ஸார்! கொஞ்சநாள் நான் பீதாம்பர ஐயரின் சிஷ்யனாயிருந்தேன். கண்சிமிட்டும் நேரத்தில் இந்தச் சுவருக்குள்ளே நுழைந்து வெளியிலே போய் விடுவேன்!" "உண்மையைச் சொல், அப்பனே? விளையாடாதே!" "என்ன ஸார், அப்படிக் கேட்கறீங்க! விளையாடுவதற்கு நான் என்ன பச்சைக் குழந்தையா?" "போஸ்டாபீஸ் கதவு பூட்டி யிருக்கும்போது எப்படி உள்ளே வந்தாய்? சொல், அப்பா!" "கதவு பூட்டியிருந்ததா, ஸார்! பார்த்தீங்களா, ஸார்!" "பின்னே? இப்பத்தானே சாவியைப் போட்டுத் திறந்தேன்?" "சாவியைப் போட்டுப் பூட்டைத் திறந்தீங்க! ஆனால், கதவைத் திறந்தீங்களா என்று கேட்டேன்." "பூட்டைத் திறந்தால் கதவைத் திறந்ததல்லவா, தம்பி! என்னவோ மர்மமாய்ப் பேசுகிறாயே?" "ஒரு மர்மமும் இல்லீங்க, ஸார்! நேற்று சாயங்காலம் ஒரு வேளை கொஞ்சம் 'மஜா'விலே இருந்தீங்களோ, என்னமோ! நாதாங் கியை இழுத்து மாட்டாமல் பூட்டை மட்டும் பூட்டிக்கிட்டுப் போய்விட்டிங்க!" போஸ்டு மாஸ்டர் சற்றுத் திகைத் திருந்துவிட்டு "பாலகிருஷ்ணா! கடவுள் காப்பாற்றினார், பார்த்தாயா? நீ புகுந்தது போலத் திருடன் புகுந்திருந்தால் என்ன கதி ஆகிறது!" என்று சொல்லி உச்சிமேட்டை நோக்கிக் கும்பிட்டார். "கதி என்ன கதி? அந்தத் திருட்டுப் பயலின் தலைவிதி வெறுங்கையோடே திரும்பிப் போயிருப்பான்! இங்கே என்ன இருக்கிறது, திருட்டுப் பசங்களுக்கு? அதுபோகட்டும் ஸார் தபால்பெட்டியின் சாவியை இப்படிக் கொடுங்க!" சாவியை வாங்கிக் கொண்டு போய்ப் பாலகிருஷ்ணன் தபால் பெட்டியைத் திறந்து அதிலிருந்த தபால்களை எடுத்துக் கொண்டு வந்தான். தபால்களின் மேலே ஒட்டியிருந்த தலைகளில் 'டக் - டக்' 'டக் - டக்' என்று தேதி முத்திரை குத்த ஆரம்பித்தான். போஸ்டு மாஸ்டர் ஒருசிறு தகரப்பெட்டியில் இருந்த தபால்தலைகளை எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர், திடிரென்று தலையை நிமிர்த்தி, "ஏனப்பா, பாலகிருஷ்ணா! தேதியைச் சரியாக மாற்றிக் கொண்டாயா?" என்று கேட்டார். பாலகிருஷ்ணன் முத்திரை அடிப்பதை நிறுத்திவிட்டு, "என்ன கேட்டிங்க, ஸார்?" என்றான். "முத்திரையில் தேதியைச் சரியாய் மாற்றிக் கொண்டாயா" என்பதாகக் கேட்டேன். "இன்றைக்குத் தேதி பதினைந்துதானே சார்!" "தேதி பதினைந்தா? நான் சந்தேகப்பட்டது சரிதான்!" "பின்னே என்ன தேதி, ஸார்!" "பதினாறு அப்பா, பதினாறு!" "கொஞ்சம் உங்கள் எதிரிலே இருக்கிற சுவரிலே பாருங்க, ஸார்!" பாலகிருஷ்ணன் காட்டிய இடத்தில் தினகரன் காலண்டர் மாட்டியிருந்தது. அது 1933-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 15தேதி என்று காட்டியது. "அட பரந்தாமா! வருஷத்தைக்கூட இதைப் பார்த்துப் போட்டுவிட்டாயோ?" "பின் எதைப் பார்த்துப் போடுகிறது? காலண்டர் காட்டுகிற வருஷம் மாதம் தேதிதானே போட்டுத் தொலைக்க வேணும்?" "அட கேசவா! இது போன வருஷத்துக் காலண்டர் அல்லவா? வருஷம், தேதி இரண்டும் பிசகு!" பங்காரு நாயுடு எழுந்து போய்க் காலண்டரில் வருஷத்தையும் தேதியையும் மாற்றினார். இப்போது அந்தக் காலண்டர் 1934-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 16தேதி என்று காட்டியது. சாலையில் பெட்டி வண்டி ஒன்று இரு பெரும் காளைகளால் இழுக்கப்பட்டு ஜம் ஜம் என்று சென்றது. "பட்டாமணியம் கிட்டாவய்யரின் வண்டி போகிறது, ஸார்!" என்றான் பாலகிருஷ்ணன். "ஆமாம்; ஜனவரி மாதம் பதினாறு தேதி ஆகிவிட்டது அல்லவா? ஜனவரி வசூலிக்கப் பட்டாமணியம் புறப்படுவது நியாயந்தானே?" என்று பங்காரு நாயுடு ஒரு பழைய சிலேடையைத் தூக்கிப் போட்டார். "ஏன் ஸார்! கிட்டாவய்யர் பெண்ணுக்கு எப்போது கல்யாணமாம்? உங்களுக்குத் தெரியுமா?" "பாலகிருஷ்ணா! உனக்கு என்ன அதைப்பற்றிக் கவலை?" "கவலையாகத்தான் இருக்கிறது. கலியாணம் ஆகிவிட்டால் அந்தக் குழந்தை புருஷன் வீடு போய்விடும்!" "போனால் உனக்கு என்ன?" "ஏதோ இந்த விடியா மூஞ்சித் தபாலாபீஸுக்கு அந்தக் குழந்தை இரண்டிலே, மூன்றிலே வந்துகொண்டிருக்கிறது. அதனால் ஆபீஸ் கொஞ்சம் கலகலப்பாயிருக்கிறது. லலிதா புருஷன் வீட்டுக்குப் போய்விட்டால் அப்புறம் இங்கே ஒரு காக்காய்கூட வராது. நீங்களும் நானும் எதிரும் புதிருமாய் உட்கார்ந்து ஈ ஓட்ட வேண்டியதுதான்?" "பாவம்! இந்த ஆபீசுக்கு ஈயாவது வரட்டுமே பாலகிருஷ்ணா! அதை ஏன் ஓட்ட வேண்டுமென்கிறாய்?" "ஈயை ஓட்டாமல் என்னத்தைச் செய்வது? அதை நான் ஓட்டாவிட்டால் இங்கே இருக்கிற பசையையெல்லாம் அது ஒட்டிக் கொண்டு போய்விடும். பாருங்கள், ஸார்! நான் தேவபட்டணம் தபாலாபீஸில் வேலை பார்த்தபோது மாதம் பிறந்து ஏழாந் தேதிக்குள்ளே நூறுக்குக் குறையாமல் மணியார்டர் வந்து குவியும்!" "யாருக்கு? உனக்கா?" "எனக்கு என்னத்திற்கு வருகிறது? கொடுத்து வைத்த மவராசன் மகன்களுக்கு வரும்." "யாருக்கோ மணியார்டர் வந்தால் உனக்கு என்ன ஆயிற்று?" "மணியார்டர் ஒன்றுக்கு அரைக்கால் ரூபாய் வீதம் நூற்றரைக்கால் இருபத்தைந்து ரூபாய் நம்பளுக்குக் கிடைக்கும்." "நூற்றரைக்கால் இருபத்தைந்தா? கணக்கிலே புலிதான்!" "தேவபட்டணத்தில் நூற்றரைக்கால் இருபத்தைந்துதான். இந்தத் தரித்திரம் பிடித்த ஊரில் நூற்றரைக்கால் ஏழரைகூட ஆகாது!" "போதும்! போதும்! வேலையைப் பார், பாலகிருஷ்ணா! தங்கவேலு அதோ வந்துவிட்டான்." வெளியே சற்றுத் தூரத்தில் 'ஜிங் ஜிங் ஜிக ஜிங்' என்ற சத்தம் கேட்டது. வர வர அந்தச் சத்தம் தபாலாபீசை நெருங்கியது. ரன்னர் தங்கவேலு கையில் உள்ள ஈட்டிச் சிலம்பைக் குலுக்கிக்கொண்டு தபால் சாவடியின் வாசலுக்கு வந்து சேர்ந்தான்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
இரண்டாம் அத்தியாயம் ராஜம்பேட்டை அக்கிரகாரத்து வீடுகளில் சரிபாதி வீடுகளுக்கு மேலே பாழடைந்து கிடந்தன. உருப்படியாக இருந்த வீடுகளில் பட்டாமணியம் கிட்டாவய்யரின் வீடு இரட்டைக் காமரா அறைகளுடன் கம்பீரமாக நிமிர்ந்து நின்றது. வீட்டின் முன்கட்டில் செங்கல் - சிமெண்ட் தளம் போட்ட கூடத்தில் உட்கார்ந்துகொண்டு சரஸ்வதி அம்மாள் தன் மகள் லலிதாவுக்குச் சடை பின்னிவிட்டுக்கொண்டிருந்தாள். பின்னல் முடியும் சமயத்தில், தபால் ஆபீஸ் பங்காரு நாயுடுவும் பாலகிருஷ்ணனும் கேட்ட 'ஜிங் ஜிங் ஜிக ஜிங்' என்னும் சத்தம் அந்த வீட்டுக்குள்ளேயும் நுழைந்து லேசாகக் காதில் விழுந்தது. "எத்தனை நேரம், அம்மா! சீக்கிரம் பின்னி விடேன்!" என்றாள் லலிதா. "மெதுவாகத்தான் பின்னுவேன்; என்ன அப்படி அவசரமாம்? பதை பதைக்கிற வெய்யிலிலே தபாலாபீஸுக்கு ஓட வேண்டுமாக்கும்! தபால் வந்திருந்தால் எங்கே போய் விடும்? தானே பாலகிருஷ்ணன் கொண்டு வந்து தருகிறான்!" இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பின்னல் முடிந்து விட்டது. அதைத் தூக்கிக் கட்ட போகும் சமயத்தில் லலிதா சடக்கென்று பிடுங்கிக்கொண்டு எழுந்தாள். "நான் கட்டிக்கொள்கிறேன், அம்மா!" என்று சொல்லிக் கொண்டே வாசற்பக்கம் ஓடினாள். "லலிதா! லலிதா! இங்கே வா! வா என்றால் வந்துவிடு. வராவிட்டால்...நீ.. மாத்திரம் போய்விடுவாயோ? அப்புறம் திரும்பி இந்த வீட்டில் அடி வைத்தால்..." இவ்விதம் சரஸ்வதி அம்மாள் சத்தம் போட்டுக்கொண்டிருக்கும்போதே பட்டாமணியம் கிட்டாவய்யர் வீட்டுக்குள்ளே நுழைந்தார். அப்பாவைப் பார்த்ததும் குழந்தை லலிதா தயங்கி நின்றாள். அவளுடைய தேகம் பூங்கொடியைப்போலத் துவண்டது. கபடு சூது அறியாத அவளது குழந்தை முகத்தில் வெட்கமும் சலுகையும் போட்டியிட்டன. லலிதாவின் தாயார் கணவனைக் கண்டதும் எழுந்து நின்றாள். அவளைப் பார்த்துக் கிட்டாவய்யர், "என்ன தடபுடல், சரசு? எதற்காகச் சத்தம் போடுகிறாய்? எப்பொழுது பார்த்தாலும் குழந்தையைக் கோபித்துக் கொள்வதுதானா உனக்கு வேலை?" என்று கடுமையான குரலில் கேட்டார். "ஆமாம்; உங்கள் செல்லக் குழந்தையைக் கோபித்துக் கொள்வதுதான் எனக்கு வேலை. இப்படி நீங்கள் இடம் கொடுத்துக் கொடுத்து..." "...இடம் கொடுத்துக் கொடுத்துச் சர்வ அசடாக ஆக்கி விட்டேன். போகட்டும்; உன் வயிற்றிலே பிறந்தபோது அவள் சமத்தாகப் பிறந்தாள் அல்லவா? அதுபோதும். இந்த கலாட்டாவெல்லாம் இப்போது எதற்காக என்று கேட்கிறேன். லலிதா என்ன செய்துவிட்டாள்?" "எத்தனையோ தடவை சொல்லியாச்சு! தபால் ஆபீஸுக்குத் தனியாக ஓடுவேன் என்கிறாள். வருகிற தபால் வழியிலா நின்றுவிடும்? தை பிறந்துவிட்டது; இந்த வருஷம் எப்படியாவது குழந்தைக்குக் கலியாணம் பண்ணியாக வேணும்...." "போதும், நிறுத்து! கலியாணத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" கலியாணம் பண்ணும் வயதான பெண்ணை யாராவது தனியாக அனுப்புவார்களா?" "அனுப்பினால் என்ன? பூகம்பமா வந்துவிடும்? தபால் ஆபீஸ் இரண்டு பர்லாங் தூரம்கூட இல்லை. வீட்டுக்குள்ளே பெண்களைப் பூட்டி வைக்கிற காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது... லலிதா! நீ போய் வா! எனக்கு ஏதாவது தபால் வந்திருந்தால் அதையும் வாங்கிக்கொண்டுவா!" அவ்வளவுதான்; அம்மாவைக் கடைக்கண்ணால் ஒரு தடவை பார்த்துவிட்டு லலிதா மானைப்போல் துள்ளி வாசலில் ஓட்டம் பிடித்தாள். "நானும் பார்த்தாலும் பார்த்தேன், பெண்ணுக்கு இப்படிச் செல்லம் கொடுக்கிறவர்களைப் பார்த்ததே யில்லை. பம்பாய்க்குப் போய்விட்டு வந்ததிலிருந்து அப்பாவும் பெண்ணும் இப்படியாகிவிட்டீர்கள். இதெல்லாம் என்னத்தில் போய் முடியப் போகிறதோ, என்னமோ?" என்று சரஸ்வதி அம்மாள் முணுமுணுத்தாள். "எல்லாம் சரியாகத்தான் முடியும்; நீ வாயை மூடிக்கொண்டிரு! மாப்பிள்ளை மட்டும் பெரிய படிப்புப் படித்தவனாய் வேண்டும் என்கிறாயே; அதற்குத் தகுந்தபடி பெண்ணைப் பழக்க வேண்டாமா? வீட்டுக்குள்ளே பொத்திப் பொத்தி வைத்துக் கொண்டிருந்தால் எப்படி நாளைக்கு..." இதற்குள்ளே வாசலிலிருந்து யாரோ ஒருவர் வருகிற காலடி சத்தமும் கனைப்பும் கேட்டன. சரஸ்வதி அம்மாள் கொஞ்சம் பின்னால் ஒதுங்கிச் சென்று தூண் ஓரத்தில் நின்றாள். வந்த மனிதர் கிட்டாவய்யரின் நெருங்கிய நண்பரும் உறவினருமான சீமாச்சு அய்யர். அந்த நண்பர்களுடைய பேச்சு ஒரு தனி ரகமாயிருந்தது. "என்ன ஓய்!" "என்ன ஓய்!" "என்ன ஓய்!" "என்ன ஓய்!" "தெரியுமா ஓய்?" "என்ன தெரியுமா?" ஓய்?" "காலையில் பட்டணத்திலிருந்து நம்முடைய அத்தான் கலியாணசுந்தரம் வந்தான். வரும்போது கையில் பத்திரிகை கொண்டு வந்தான். அதில் எல்லாம் சக்கைப் போடாகப் போட்டிருக்கிறது, ஓய்!" "என்ன போட்டிருக்கிறது, ஓய்?" "பீஹார் மாகாணத்தில் பூகம்பமாம்!" "என்ன? என்ன? என்ன?" "பிரமாதமான பூகம்பமாம்! உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ரொம்ப இருக்கலாம் என்று பயப்படுகிறார்களாம்... பத்திரிகை பூராவும் இந்த ஒரு விஷயந்தான்! சக்கைப்போடு!" "சீமாச்சு! இது என்ன அதிசயம்?" "எது என்ன அதிசயம்?" "நீ வருகிறதற்கு ஐந்து நிமிஷத்துக்கு முன்னாலேதான் பூகம்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்?" "என்ன பேசிக் கொண்டிருந்தீர்?" "சரசுவிடம் குழந்தை தபாலாபீஸுக்குப் போனால் பூகம்பமா வந்துவிடும்? என்று சொல்லிக் கொண்டிருந்தேன். சொல்லி வாய் மூடுவதற்குள் நீ உள்ளே நுழைந்து 'பீகாரில் பூகம்பம்' என்கிறாய்!" "பிராமணர் வாக்கு உடனே பலித்துவிட்டதாக்கும்! நீர் என்ன சாமானியப் பட்டவரா! பெரிய வைதிக பரம்பரை. அதர்வண வேதத்தைக் கரைத்துக் குடித்தவர். ஓய்! உம்மைக் கூப்பிடுகிறாப்போல இருக்கிறது!" தூண் மறைவிலே நின்று கொண்டிருந்த சரஸ்வதி அம்மாள் சற்று முன்புறமாக வந்து கிட்டாவய்யரைத் திரும்பிப் பார்க்கும்படி செய்யச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். இதை கவனித்து விட்டுத்தான் சீமாச்சுவய்யர் அவ்விதம் சொன்னார். "சரசு! இப்படி முன்னால் வந்து தைரியமாகச் சொல்லேன்! நம்ம சீமாச்சுவிடம் என்ன சங்கோஜம்?" சரஸ்வதி அம்மாள் ஈனசுவரத்தில், "அவர் என்னமோ பூகம்பம், கீகம்பம் என்று சொல்லுகிறாரே? குழந்தை தனியாகப் போயிருக்கிறாளே! உடனே நீங்களாவது போய் அழைத்து வாருங்கள்! இல்லாவிட்டால் ஆள் அனுப்புங்கள்" என்றாள்.
தாயின் உள்ளம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
மூன்றாம் அத்தியாயம் கிட்டாவய்யர் பட்டணத்து நாகரிகத்தைக் கிராமங்களுக்குக் கொண்டுவர ஆசைப்பட்டார். அந்த ஆசையின் அறிகுறியாகச் சில காலமாய் அவர் தமது மனைவியைப் பெயர் சொல்லி நாலு பேருக்கு முன்னால் கூப்பிடவும் அவளுடன் சங்கோசமின்றிச் சம்பாஷிக்கவும் ஆரம்பித்திருந்தார். பீஹார் பூகம்பத்தையும் லலிதா தபால் ஆபீஸ் சென்றதையும் சம்பந்தப்படுத்திய தமது மனைவியின் பேதமையை எண்ணியபோது அவர் முகம் புன்னகை பூத்து மலர்ந்தது. "சரசு! பீகாரிலே பூகம்பம் வந்தால் இவ்விடத்தில் நமக்கு என்ன வந்தது? வீண் காபரா செய்யாதே!" என்று சொன்னார். "இது என்ன பேச்சு! பூகம்பம் பீஹாரிலிருந்து இவ்விடம் வர எத்தனை நேரம் செல்லும்?" "அதெல்லாம் ஒன்றும் வராது, நம் ஊருக்கும் பீஹாருக்கும் ஆயிரத்தைந்நூறு மைல் தூரம், தெரியுமா? வீணாக அலட்டிக் கொள்ளாதே!" "ஆமாம்! நான் வீணாக அலட்டிக் கொள்கிறேன். நீங்கள்..." இந்தச் சமயத்தில் சீமாச்சுவய்யர் மத்தியஸ்தம் செய்ய ஆரம்பித்தார். "ஓய்! பெற்ற மனம் பித்து என்று கேட்ட தில்லையா? பெற்ற தாய்க்கு அப்படித்தான் கவலையாயிருக்கும்; நம்மைப் போன்ற தடியர்களுக்கு நிர்விசாரம்!" என்றார். "ஆமாம், ஆமாம்! உலகத்தில் ஒருவரும் பெண்ணைப் பெறவில்லை. இவள்தான் அதிசயமாகப் பெற்றாள்! 'பூவரசை மரத்தைத் தேள் கொட்டிற்று - புளியமரத்துக்கு நெறி கட்டியது' என்ற கதையாக, பீஹாரில் பூகம்பம் என்றால், அதற்காக நாம் பயப்பட்டுச் சாக வேண்டும் என்கிறாள். பெண்கல்வி வேண்டும் என்று இதற்காகத்தான் சொல்கிறது." மறுபடியும் சீமாச்சுவய்யர் குறுக்கிட்டு, "ஓய்! மத்தியானம் சாப்பாட்டுக்கு மேலே ஒரு 'கழுதை' ஆட்டம் போடலாமா?" என்றார். "பேஷாய்ப் போடலாம்; இங்கேயே சாப்பிடலாமே, ஓய்!" என்றார் கிட்டாவய்யர். "வேண்டாம்! அப்புறம் நம்முடைய வீட்டில்..." என்று சொல்லிக்கொண்டே சீமாச்சுவய்யர் வெளியேறினார். கிட்டாவய்யர் கொல்லைக் கிணற்றடிக்குக் குளிப்பதற்குச் சென்றார். சரஸ்வதி அம்மாள் வீட்டு வாசலுக்குச் சென்று குழந்தை லலிதா பீஹார் பூகம்பத்துக்குத் தப்பிப் பத்திரமாய் வந்து சேர வேண்டுமென்ற கவலையோடு அவள் வரும் வழியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அக்கிரகாரத்தின் வீதி திரும்பிக் கொஞ்ச தூரம் போனதும் பெரிய சாலை இருந்தது. சாலையோடு அரை பர்லாங்கு தூரம் நடந்தால் தபால் சாவடி இருந்தது. லலிதா ஓட்டமும் நடையுமாகச் சென்று ஐந்து நிமிஷத்தில் தபால் ஆபீசை அடைந்தாள். அவள் உள்ளே போவதற்குள் ரன்னர் தங்கவேலு தபால் மூட்டையைக் கொண்டு போய்ப் போஸ்டு மாஸ்டர் முன்னிருந்த மேஜையின் மேல் வைத்திருந்தான். நாலு அடி நீளமும் மூன்று அடி அகலமும் உள்ள அந்த மேஜையில் நாலாயிரம் இடத்தில் மை கொட்டிய அடையாளங்கள் காணப்பட்டன. போஸ்ட் மாஸ்டர் பேனாவை மேஜைமேல் தீட்டிவிட்டுத் தான் எழுதுவது வழக்கமோ என்று சொல்லும்படி தோன்றியது. தபால்கார பாலகிருஷ்ணன் ரன்னர் தங்கவேலுவைப் பார்த்து, "ஏன் அப்பா இத்தனை நேரம்? வழியில் எங்கேயாவது படுத்துத் தூங்கிவிட்டு வந்தாயோ!" என்றான். "தினம் உனக்கு இது ஒரு கேள்வி. ஐந்து மைல் ஜிங்கு ஜிங்கு என்று ஓடிவந்து பார்த்தால் தெரியும்!" என்றான் தங்கவேலு. "சும்மா இருங்க, அப்பன்மார்களே! இதோ கிட்டாவய்யர் வீட்டுக் குழந்தை வருகிறது!" என்று சொல்லிவிட்டுப் பாங்காரு நாயுடு தம் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தினார். லலிதா ஓடி வந்ததினால் ஏற்பட்ட மூச்சு இரைப்புடனே, "போஸ்டு மாஸ்டர்! எனக்கு ஏதாவது லெட்டர் வந்திருக்கிறதா?" என்று கேட்டாள். போஸ்டு மாஸ்டர் அப்போதுதான் அவளுடைய வரவை அறிந்தவர்போல் நிமிர்ந்து பார்த்து, "ஓகோ! நீயா குழந்தை? கொஞ்சம் உட்காரு! தபால் கட்டை உடைத்துப் பார்த்துச் சொல்கிறேன்!" என்றார். "இன்னும் கட்டு உடைக்கவில்லையா? ஸார்!" "கட்டும் உடைக்கவில்லை; குட்டும் உடைக்கவில்லை!..." "சீக்கிரம் உடைங்கோ, ஸார்!" "என்ன அம்மா அவ்வளவு அர்ஜண்டு?" "அர்ஜண்டுதான், ஸார்! இன்றைக்கு பம்பாயிலிருந்து எனக்குக் கடிதம் வரும்." "இவ்வளவுதானே? ஹூம்! பம்பாயிலிருந்தானே? இதற்கா இவ்வளவு அவசரம்? ஒருவேளை சிங்கப்பூரிலிருந்து கடிதம் வருகிறதாக்கும் என்று பார்த்தேன்." "சிங்கப்பூர் ரொம்ப ஒசத்தியா? எங்க பம்பாயிலே...." "உங்க பம்பாய் மட்டும் ஒசத்தியா? எங்க சிங்கப்பூரிலே" "எங்க பம்பாயிலே, விக்டோ ரியா டெரிமினஸ் ஸ்டேசனை நீங்கள் பார்த்தால் அப்படியே அசந்து போய் விடுவேள், ஸார்!" "எங்க சிங்கப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு உறைபோடக் காணாது உங்க விக்டோ ரியா டெர்மினஸ்! தெரியுமா குழந்தை!" "எங்க பம்பாயிலே எட்டு மாடி வைத்த வீடு இருக்கு, ஸார்!" "ஹூம்? இவ்வளவுதானா? சிங்கப்பூர்லே இருபத்து நாலு மாடி வைத்த வீடு இருக்கே?" "எங்கே பம்பாயிலே மச்சு வைத்த மோட்டார் பஸ் இருக்கே?" "எங்க சிங்கப்பூரிலே மாடி வைத்த ரிக்ஷா வண்டி இருக்கே?" "எங்கே பம்பாயிலே வழவழவென்று தார் ரோடு இருக்கே?" "ஹூம்! எங்க சிங்கப்பூரிலே ரப்பர் ரோடு போட்டிருக்கே?" "உம் வந்து, வந்து, எங்க பம்பாயிலே அத்தங்கா இருக்காளே?" "ஹூ!...எங்கே சிங்கப்பூரிலே அய்யங்கார் இருக்காரே?" "உங்களோடு போட்டி போட என்னால் முடியாது! தபால் கட்டைப் பிரிங்கோ, ஸார்!" "நிஜமாய்ப் பிரிச்சு விடட்டுமா?" "நிஜமாய், சீக்கிரமாய்ப் பிரிங்கோ ஸார்! உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு, ஸார்!" "இதோ உடைச்சுட்டேன், குழந்தை!" என்று சொல்லிக் கொண்டே போஸ்டு மாஸ்டர் தபால் கட்டைப் பிரித்துத் தபால்களின் விலாசத்தை ஒவ்வொன்றாய்ப் பார்க்கத் தொடங்கினார். "ஆச்சா! இதோ இருக்கிறது குழந்தை, பம்பாய்க் கடிதம்! ஆனால் விலாசம் தப்பா இருக்கே! உங்க அப்பா பேரல்லவா...." "இங்கே கொடுங்க ஸார், பார்க்கலாம். இது எங்க அப்பாவுக்குத்தான், எங்க அத்திம்பேர் எழுதியிருக்கார். இன்னும் பாருங்க, ஸார்! எனக்குக் கட்டாயம் லெட்டர் இருக்கும்!" "ஆஹா! இதோ ஒன்று இருக்கு; இதுவும் அப்பாவுக்குத் தான்." "இங்கே கொடுங்கள்! ஆமாம்; இதையும் அப்பாவிடம் கொடுத்துவிடுகிறேன். எனக்கு ஏதாவது கடிதம் இருக்கா என்று பாருங்கோ, ஸார்!" என்று ஏமாற்றமான குரலில் கூறினாள் லலிதா. போஸ்ட் மாஸ்டர் எல்லாத் தபால்களையும் பார்த்தபிறகு கடைசியாக அடியில் இருந்த கடிதத்தைப் பார்த்து, "ஆகா! இதோ இருக்கு உன் தபால்! எல்லாவற்றுக்கும் அடியிலே போய் உட்கார்ந்திருக்கு!" என்று சொல்லிவிட்டு எடுத்துக் கொடுத்தார். லலிதா ஆவலோடு அக்கடிதத்தை வாங்கிக் கொண்டு வாசற்பக்கம் குதித்தோடினாள். தபாலாபீசின் வாசலிலேயே உறையை உடைத்து உள்ளே இருந்த கடிதத்தை எடுத்துப் பார்த்தாள். அந்தக் கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தது:- என் பிரியமுள்ள உயிருக்கு உயிரான தோழி லலிதாவுக்கு அத்தங்காள் சீதா அன்புடன் எழுதியது. போன ஞாயிற்றுக்கிழமை நான் எழுதிய கடிதம் உனக்குக் கிடைத்திருக்கும். அதை எழுதும்போது மிகவும் சந்தோஷமாயிருந்தேன். வரிந்து வரிந்து நாலு பக்கம் எழுதித் தள்ளினேன். நான் எழுதும்போது அம்மா வந்து பார்த்துவிட்டு, 'சீதா! இவ்வளவு நீளமாய்க் கடிதம் எழுதுவதற்கு அப்படி என்னதான் சமாசாரம் இருக்கும்?' என்று கேட்டாள். 'அம்மா! நாலு பக்கம் எழுதியும் இன்னும் சமாசாரம் முடிய வில்லை. தொடர்கதை மாதிரி அடுத்த வாரம் எழுதப் போகிறேன்' என்றேன். அம்மா என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, 'என் கண்ணே! இப்படியே நீயும் லலிதாவும் உங்களுடைய ஆயுள் முழுவதும் சிநேகிதமாயிருங்கள்!' என்றாள். அப்போது அம்மாவின் கண்ணில் கண்ணீர் சுரந்திருப்பதைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன். 'இது என்ன அம்மா? எதற்காகக் கண்ணீர் விடுகிறீர்கள்?' என்று நானும் வருத்தமாகக் கேட்டேன். 'ஒன்றுமில்லை சீதா! எனக்கு இந்த உலகில் சிநேகிதிகளே இல்லை. நீயாவது ஒரு நல்ல சிநேகிதியைப் பெற்றிருக்கிறாயே என்பதாகச் சந்தோஷப் பட்டேன், வேறொன்றுமில்லை' என்றாள். 'அது எப்படி அம்மா! சந்தோஷத்தினால் யாராவது கண்ணீர் விடுவார்களா?' என்று மறுபடியும் கேட்டேன். 'எத்தனையோ கதைப் புத்தகங்கள் படிக்கிறாயே, சீதா! ஆனந்தக் கண்ணீர் என்று கேட்டதில்லையா?' என்றாள். 'நானும் லலிதாவும் சிநேகிதமாயிருப்பதில் உனக்கு அவ்வளவு ஆனந்தமா?' என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன். 'ஆமாம், சீதா! யார் கண்டார்கள்? எனக்கு ஏதாவது காலைத் தலையை வலித்ததென்றால் உனக்கு வேறு துணை யார் அம்மாவினுடைய மனத்திற்குள் எங்களுக்கு வரப்போகிற விபத்து தெரிந்ததோ, என்னமோ? லலிதா! நான் மேலே என்னத்தை எழுதுவேன்? சென்ற கடிதம் எழுதின மறுநாளே அம்மா சுரமாகப் படுத்துக் கொண்டாள். 'சாதாரண சுரம், இரண்டு நாளில் சரியாய்ப் போய்விடும்' என்று அம்மா சொன்னதை நம்பிச் சும்மா இருந்து விட்டோ ம். மூன்றாம் நாள் அப்பாவுக்கு ஏதோ சந்தேகம் வந்து டாக்டரை அழைத்து வந்தார். டாக்டர் 'டைபாய்டு சுரம் என்று சொல்லிவிட்டார்' 'இந்த அம்மாள் போஷாக்குக் குறைவினால் ரொம்பவும் மெலிந்து போயிருக்கிறாள். இத்தனை நாள் கவனியாமல் இருந்துவிட்டிர்களே?' என்று அப்பாவை டாக்டர் கேட்டபோது எனக்குச் 'சுருக்' என்றது. அடிக்கடி அம்மா விரதம் இருந்ததும் பட்டினி கிடந்ததும் அதைப்பற்றி அப்பா கொஞ்சம் கூடக் கவனியாமல் இருந்ததும் ஞாபகம் வந்தது. லலிதா! அதையெல்லாம் இப்போது எழுதி என்ன பிரயோசனம்! அம்மாவுக்கு உடம்பு ரொம்ப அதிகமாகி விட்டது. 'கடவுள் அருள் இருந்தால் பிழைப்பாள்!' என்று அப்பாவிடம் டாக்டர் சொல்லிக் கொண்டிருந்தார். கடவுளின் அருள் இருக்குமா, லலிதா! அல்லது கடவுள் என்னை அநாதையாக விட்டுவிட்டு அம்மாவை அவரிடம் அழைத்துக்கொண்டு விடுவாரா? மாமாவுக்கு அப்பா கடிதம் எழுதியிருக்கிறார். உடனே, புறப்பட்டு வரும்படி நீயும் சொல்லு. மாமா வந்தால் ஒருவேளை அம்மா பிழைத்துக் கொண்டாலும் பிழைத்துக் கொள்வாள். அடுத்த வாரக் கடிதம் உனக்கு எழுதுவேனோ என்னமோ தெரியாது, கடிதம் எழுதினாலும் எழுதாவிட்டாலும் எப்போதும் உன் நினைவாகவே இருப்பேன். உன் அருமைத் தோழி, சீதா. தபால் சாவடித் திண்ணையில் நின்றபடியே மேற்படி கடிதத்தைப் படித்த லலிதாவின் உள்ளம் உருகிவிட்டது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்று, விம்மி அழத்தொடங்கினாள். விம்மிய சத்தம் தபால் ஆபீஸுக்குள்ளே கேட்டது. போஸ்டு மாஸ்டர் பங்காரு நாயுடு, போஸ்டுமேன் பாலகிருஷ்ணன், ரன்னர் தங்கவேலு ஆகிய மூன்று பேரும் வெளியே ஓடிவந்து பார்த்தார்கள். "என்ன அம்மா! என்ன?" என்று கவலையுடன் கேட்டார்கள். கையில் பிரித்து வைத்திருந்த கடிதத்தைப் பார்த்து விட்டு, "குழந்தை! கடிதத்தில் ஏதாவது துக்க சமாசாரம் இருக்கிறதா?" என்றார்கள். "ஆமாம் பம்பாயிலிருக்கிற என்னுடைய அத்தைக்கு உடம்பு சரியில்லையாம்!" என்றாள் லலிதா. "இதற்கு ஏன் அம்மா அழவேண்டும்? உலகத்தில் எத்தனையோ பேருக்கு உடம்புக்கு வருகிறது சொஸ்தமாகிவிடவில்லையா?" என்றார் போஸ்டு மாஸ்டர். பிறகு, "பாலகிருஷ்ணா! இந்தக் குழந்தையைக் கிட்டாவய்யரின் வீடு வரையில் கொண்டு போய் விட்டுவிட்டுவா!" என்றார். "ஆகட்டும், ஸார்! வா அம்மா!" என்று சொல்லிக் கொண்டே பாலகிருஷ்ணன் புறப்பட்டான்.
பம்பாய்க் கட்டிடம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நான்காம் அத்தியாயம் கிட்டாவய்யரின் மனைவி சிறிது நேரம் வாசலில் கால்கடுக்க நின்று லலிதாவை எதிர்பார்த்தாள். பிறகு சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்து பார்த்தாள். வீதியோடு யாராவது புருஷர்கள் சென்றால் உடனே எழுந்து ரேழியில் போய் நின்று கொள்வாள். இரண்டொரு தடவை வீட்டுக்கு உள்ளேயும் போய் விட்டு வந்தாள். கடைசியாக லலிதா கையில் பிடித்த கடிதத்துடனும் கண்ணில் கண்ணீருடனும் துணைக்குத் தபால்கார பாலகிருஷ்ணனுடனும் வருகிறதைப் பார்த்ததும் சரஸ்வதி அம்மாள் மனம் கலங்கி விட்டாள். பாய்ந்து சென்று குழந்தையைத் தாவி கட்டிக்கொண்டு, "அடிப்பெண்ணே! என்னடி விஷயம்? நான் பயப்பட்டது சரியாய்ப் போய்விட்டதே?... பாலகிருஷ்ணா! குழந்தை ஏன் அழுகிறாள்? தடுக்கி விழுந்து விட்டாளா?" என்று அலறினாள். மனக் குழப்பத்தினால் அக்கம் பக்கத்து வீட்டு ஆண் பிள்ளைகள் வாசலில் வந்து நிற்பதைக்கூட அவள் கவனிக்கவில்லை. அம்மா இவ்விதம் கேட்டதும் லலிதாவின் தேம்பல் அதிகமாயிற்று. ஆனால் பாலகிருஷ்ணன், "அதெல்லாம் ஒன்றுமில்லை, அம்மா! பம்பாயிலிருந்து ஏதோ கடிதம் வந்திருக்கு! அதைப் படித்துவிட்டுக் குழந்தை அழுகிறது!" என்றான். "இவ்வளவுதானே? கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது? லலிதா! என்ன தான் இருந்தாலும் நீ எதற்காக அழவேண்டும்," என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள். இதற்கும் லலிதாவிடமிருந்து பதில் வராமல் போகவே சரஸ்வதி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. "யாராவது செத்துக்கித்துத் தொலைந்து போய்விட்டார்களா என்ன? நீ சொல்லாவிட்டால் நானாகப் பார்த்துக் கொள்கிறேன்!" என்று லலிதாவின் கையிலிருந்த கடிதத்தைப் பிடுங்கினாள். கொல்லைக் கிணற்றில் விச்ராந்தியாகக் குளித்துவிட்டு அப்போதுதான் வீட்டுக் கூடத்துக்கு வந்து கிட்டாவய்யர் வாசலில் நடந்த கலாட்டா சத்தத்தைக் கேட்டு விட்டு வெளியே வந்தார். தான் சொன்னதைக் கேளாமல் லலிதா தபாலாபீசுக்குப் போனதற்காக அவளைத் தம் மனைவி அடிப்பதாக எண்ணிக் கொண்டு, "இந்தா சரசு! குழந்தையை அடிக்க வேண்டுமானால் இப்படித்தானா நாலு பேர் சிரிக்கும்படி தெருவிலே நின்று கொண்டு அடிக்கவேண்டும்? உள்ளே வந்து கதவை இழுத்துத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு அடித்துக் கொன்றுவிடு, தெருவிலே வேண்டாம்" என்றார். "நான் ஒன்றும் உங்கள் குழந்தையை அடிக்கவும் இல்லை; கொல்லவும் இல்லை. தபாலாபீசிலிருந்து வரும்போது அழுது கொண்டே வந்தாள். கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாதபடியால் கையில் கொண்டுவந்திருந்த கடிதத்தை வாங்கிப் படிக்கலாம் என்று நினைத்தேன். அதற்குள் நீங்கள் வந்து, 'அடிக்கிறாய்' 'கொல்லுகிறாய்' என்கிறீர்கள். நீங்களும் உங்கள் பெண்ணும் எப்படியாவது போங்கள். என் வயிற்றில் இவள் பிறக்கவில்லை என்று நினைத்துக்கொள்கிறேன்" என்று சரஸ்வதி அம்மாள் உரக்கச் சத்தம் போட்டுக் கத்திவிட்டு விடுவிடு என்று உள்ளே போனாள். கோடை இடி இடித்து ஆலங்கட்டி மழை பெய்து விட்டது போலிருந்தது. மனைவியின் கோபத்தைக் கிட்டாவய்யர் சிறிதும் பொருட்படுத்தாதவராய், "பாலகிருஷ்ணா! என்ன சமாசாரம்? குழந்தை எதற்காக அழுகிறாள்?" என்று கேட்டார். அதன் விவரத்தைத் தெரிவித்து விடை பெற்றுக்கொண்டு திரும்பத் தபாலாபீஸுக்குப் போனான். ஐயர் வீட்டில் காப்பி சாப்பிடச் சொன்னால் சாப்பிடுவதற்குத் தயாராக அவன் வந்திருந்தான். ஆனால் அங்கு நடந்த ரகளையைப் பார்த்து விட்டு உடனே திரும்பினான். தபாலாபீசை அடைந்ததும் "ஸார்! பட்டாமணியம் கிட்டாவய்யர் இவ்வளவு சாதுவாயிருக்கிறாரே? அவருக்கு வாய்த்த சம்சாரம் ரொம்பப் பொல்லாத அம்மா, ஸார்! சற்று நேரத்துக்குள் எவ்வளவு ரகளை பண்ணிவிட்டாள்!" என்றான். "என்னடா பாலகிருஷ்ணா இப்படிச் சொல்கிறாய்? கிட்டாவய்யர் சம்சாரம் பரம சாதுவாயிற்றே! இருக்கும் இடமே தெரியாதே! நான் எத்தனையோ தடவை போயிருக்கிறேன் அந்த அம்மாளின் குரலைக்கூடக் கேட்டதில்லையே?" என்றார் நாயுடு. "உங்கள் துரதிர்ஷ்டம் ஸார், அது! இன்றைக்கு நீங்கள் வந்திருந்தால் பார்த்திருப்பீர்கள்! அடே அப்பா! தாடகை சூர்ப்பனகை எல்லாரும் அப்புறந்தான்! மொத்தத்திலே பெண் பிள்ளைகளைக் கட்டிக்கொண்டு மாரடிக்கிறதே கஷ்டந்தான்!" என்றான் பாலகிருஷ்ணன். "பாலகிருஷ்ணா! நான் சொல்வதைக் கேள். நீ பிரம்மசாரி, அதனால் உனக்கு இந்த விஷயம் தெரியவில்லை. ஒவ்வொரு பெண் பிள்ளையிடத்தும் தாடகையும், சூர்ப்பனகையும் குடிகொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி லக்ஷ்மியும் சரஸ்வதியும் சீதையும் அருந்ததியும் இருக்கிறார்கள். புருஷன் யாரைக் கூப்பிடுகிறானோ அவர்கள் வெளிவருவார்கள். சூர்ப்பனகையை விரும்பினால் சூர்ப்பனகையும் சீதையை விரும்பினால் சீதையும் வருவார்கள். ஏதாவது பைத்தியக்காரத்தனமான எண்ணம் எண்ணிக் கலியாணம் பண்ணிக் கொள்ளாமலிருந்து சாப்பாட்டுக்குக் கஷ்டப்படாதே!" என்றார் நாயுடு. "ஆகக்கூடி, கலியாணம் செய்துகொள்வதென்பது சமையல் செய்து போடுவதற்காக என்றுதானே சொல்கிறீர்கள்! நான் கலியாணம் செய்து கொண்டால், 'லவ் மாரியேஜ்' தான் செய்து கொள்வேன்!" என்று பாலகிருஷ்ணன் சொல்லிவிட்டு அப்போது பிரபலமாகியிருந்த சினிமாப் பாட்டைச் சீட்டியடிக்கத் தொடங்கினான். இங்கே கிட்டாவய்யர் தம் குழந்தையை அன்புடன் தடவிக் கொடுத்துவிட்டு, "லலிதா! ஏன் அழுகிறாய்? கடிதத்தில் அப்படி என்ன எழுதியிருக்கிறது, அம்மா?" என்று கேட்டார். லலிதா விம்மலையும் தேம்பலையும் பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டு, "அப்பா! அத்தைக்கு உடம்பு ரொம்ப சரிப்படவில்லையாம், சீதா எழுதியிருக்கிறாள். உங்களுக்கும் இதோ கடிதம் வந்திருக்கிறது" என்று சொல்லித் தான் கொண்டு வந்திருந்த இரண்டு கடிதங்களையும் அவரிடம் கொடுத்தாள். கிட்டாவய்யர் முதலில் ஒரு கடிதத்தைப் படித்துப் பார்த்தார். உடனே அவருடைய கண்களிலும் நீர் பெருகத் தொடங்கியது. உள்ளே சென்று சாய்மான நாற்காலியில் சாய்ந்தார். சரஸ்வதி அம்மாள் சற்று நேரத்துக்கெல்லாம் சாந்தமான குரலில், "சாப்பிட வரலாமே!" என்றாள். கிட்டாவய்யர் அது காதில் விழாதவர்போல் மௌனமாகயிருந்தார். "ஏன் கவலையாயிருக்கிறீர்கள்? கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது?" என்று சரஸ்வதி அம்மாள் மீண்டும் கேட்டாள். "ராஜத்துக்கு உடம்பு சரிப்படவில்லையாம்" என்றார் கிட்டாவய்யர். "உடம்பு சரிப்படாவிட்டால் என்ன? தானே சரியாய்ப் போய்விடுகிறது. இதற்காகச் சாப்பிடாமல் இருக்கப் போகிறீர்களா? வாருங்கள்! குழந்தைகள் சாப்பிட உட்கார்ந்து விட்டார்கள்." "இல்லை, சரசு! குழந்தைகள் சாப்பிடட்டும், எனக்கு இப்போது சாப்பாடு இறங்காது. ராஜத்துக்கு ரொம்ப உடம்பு சரி இல்லையாம், 'டைபாய்டு சுரமாம், பிழைப்பதே..." "பிழைப்பதே புனர் ஜன்மந்தான். போன வருஷமும் இப்படித்தான் கடிதம் எழுதியிருந்தார்கள். போய்ப் பார்த்தால் ஒன்றும் இல்லை. உங்களுக்கு நானூறு ஐந்நூறு ரூபாய் செலவு வைப்பதில் அவர்களுக்குத் திருப்தி போலிருக்கிறது." இதைக் கேட்ட கிட்டாவய்யர் சாய்மான நாற்காலியிலிருந்து கோபமாக எழுந்தார். அப்போது பிரிக்காமல் வைத்திருந்த இன்னொரு கடிதம் கீழே விழுந்தது.
வாசலில் ரகளை
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஐந்தாம் அத்தியாயம் ராஜம்பேட்டை கிட்டாவய்யர் அவருடைய தந்தைக்கு ஒரே புதல்வர். தகப்பனார் அகண்ட காவேரிக் கரையில் தேடி வைத்திருந்த பல ஏக்கரா நன்செய் நிலத்துக்கும் கிராம முனிசீப் வேலைக்கும் உரிமை அடைந்தார். வளமான பூமி; பொன் போட்டால் பொன் விளையக்கூடியது. ஆயினும், அந்நிலத்தில் பொன்னைப் போடாமல் பொன்னைக் காட்டிலும் சிறந்த சம்பா நெல், கதலி வாழை, வெற்றிலை, கரும்பு முதலியவை பயிராக்கி வந்தனர். தகப்பனார் காலத்திலேயே அவருடைய சகோதரிகள் இருவருக்கும் கலியாணம் ஆகிவிட்டது. ஆகவே அவர் குடும்பத்தலைவரான பிறகு குடும்பத்துக்கும் பெரிய செலவு ஒன்றுமில்லை. எனினும் தான தர்மங்களிலும் பொதுக் காரியங்களிலும் சிநேகிதர்களுக்கு உதவி செய்வதிலும் பிள்ளைகளைப் படிக்க வைப்பதிலும் தாராளமாகப் பணம் செலவழித்துக் கொண்டிருந்தபடியால் தகப்பனார் காலத்துக்குப் பிறகு சொத்து விருத்தியடையவில்லை. புதல்வி லலிதாவுக்கு மட்டும் வருஷத்துக்கு ஒரு வயது வீதம் கூடிக்கொண்டே யிருந்தது. சென்ற வருஷமே கலியாணம் செய்திருக்க வேண்டும். இந்த வருஷமும் கலியாணம் செய்யாமலிருந்தால் குடிமூழ்கிப் போய்விடும் என்பது அவருடைய மனைவி சரஸ்வதி அம்மாளின் திடமான அபிப்பிராயம். சென்ற வருஷம் கிட்டாவய்யர் லலிதாவின் கலியாணத்தில் அதிக சிரத்தை காட்டாததின் காரணம், அவர் குடும்ப சகிதமாய்ப் பம்பாய்க்கு பிரயாணம் செய்ய நேர்ந்ததுதான். கிட்டாவய்யரின் சகோதரிகளில் ஒருத்தி அவருக்கு மூத்தவள். அந்த அம்மாளுக்குச் சமீப கிராமம் ஒன்றில் வைதிக குடும்பத்தில் கலியாணமாகியிருந்தது. கிட்டாவய்யரின் தங்கை ராஜமோ பம்பாயில் இருந்தாள். சிறு பிராயத்தில் ராஜம் கிட்டாவய்யரின் வாஞ்சைக்குப் பெரிதும் உரிமை பெற்றிருந்தவள். அவளுடைய கலியாணத்தின் போது கிட்டாவய்யர் காட்டிய உற்சாகத்துக்கும் பெருமைக்கும் அளவே கிடையாது. ராஜத்தை மணந்த மாப்பிள்ளையைப் பல தடவை "அதிர்ஷ்டக்காரன்" என்று அவர் பாராட்டியதுண்டு. ஆனால், யாரும் அறிய முடியாத தெய்வ சித்தத்தினால் ராஜத்தின் அதிர்ஷ்டம் அவ்வளவு சரியாக இல்லை. கலியாணம் ஆன உடனேயே மாப்பிள்ளை துரைசாமிக்குப் பம்பாயில் ரயில்வே காரியாலயத்தில் நல்ல உத்தியோகம் ஆயிற்று. கொஞ்ச காலத்துக்குப் பிறகு ராஜம் பம்பாய்க்குப் போனாள். ராஜத்தின் இல்வாழ்க்கை அவ்வளவு ரம்மியமாக இல்லை என்று சீக்கிரத்திலே தெரிய வந்தது. ஆனாலும் விவரம் இன்னதென்று தெரியவில்லை. மான உணர்ச்சி அதிக உள்ளவளான ராஜம்மாள் தன்னுடைய கஷ்டங்களைப் பகிரங்கப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. பம்பாய்க்கும் ராஜம் பேட்டைக்கும் போக்குவரவு அடிக்கடி இருக்க முடியாதல்லவா? நாளடைவில் கடிதப் போக்குவரவு கூட நின்று போயிற்று. சிற்சில சமயம் கிட்டாவய்யர், "ராஜம் எப்படியிருக்கிறாளோ?" என்று எண்ணி ஏங்குவார். அப்போது அவருடைய கண்களில் கண்ணீர் துளிக்கும். கண்ணைத் துடைத்துக்கொண்டு, "அவள் தலைவிதி அப்படி!" என்று எண்ணி ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுத் தம் காரியத்தைப் பார்க்கத் தொடங்குவார். இந்த நிலையில், ஒரு வருஷத்துக்கு முன்னால் ராஜத்திடமிருந்து கடிதம் ஒன்று வந்தது; உருக்கமான கடிதம் அது. இத்தனை வருஷமாக எவ்வளவோ பொறுமையுடன் கஷ்டங்களைச் சகித்துக் கொண்டிருந்தும் தன்னுடைய மனவேதனை தீர்ந்தபாடில்லை என்று ராஜம் எழுதியிருந்தாள். வர வரத் தன் உடம்பு நிலையும் மோசமாகி வருகிறதென்றும் கூடிய சீக்கிரம் வந்து தன்னை ஒரு தடவைப் பார்த்துவிட்டுப் போகவேண்டுமென்றும் தமையனைக் கேட்டுக் கொண்டிருந்தாள். "வரும் போது மன்னியையும் லலிதாவையும் அழைத்து வர வேணும். சீதா அவளுடைய அம்மங்காளைப் பார்க்க வேண்டும் என்று துடிதுடித்துக் கொண்டிருக்கிறாள்" என்றும் எழுதியிருந்தாள். கிட்டாவய்யருக்குத் தம் மனைவியைப் பம்பாய்க்கு அழைத்துப் போக விருப்பமில்லை. ஆனால் சரஸ்வதி அம்மாளின் மனோநிலை அதற்கு நேர்மாறாக இருந்தது. லலிதாவுடன் பம்பாய்க்குப் போவதில் அவள் துடியாக நின்றாள். குழந்தைகளுக்குத் தலைமொட்டை போடுவதற்காகத் திருப்பதி யாத்திரை போனதைத் தவிர அந்த அம்மாள் பிரயாணம் அதிகமாகச் செய்ததில்லை. பிரயாணம் செய்ய ஆசைப்பட்டதும் கிடையாது. ஆனால் இப்போது பம்பாய்க்குப் போவதில் ஆத்திரம் காட்டினாள். காரணம் லலிதாவுக்கு வயது பதினாலு ஆகியிருந்ததுதான். "நாலு இடத்துக்குப் போய்ப் பார்த்தால் தானே நல்ல வரனாகக் கிடைக்கும்? இந்தப் பட்டிக்காட்டிலேயே உட்கார்ந்திருந்தால் எப்படி?" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். ஆகவே கிட்டாவய்யர் குடும்ப சகிதமாய்ப் பம்பாய்க்குப் போனார். சரஸ்வதி அம்மாள், லலிதா, லலிதாவின் தம்பி சுண்டு ஆகியவர்களும் போயிருந்தார்கள் பிரயாணம் வெகு உற்சாகமாயிருந்தது. துரைசாமி ஐயர் ஸ்டேஷனுக்கு வந்து அவர்களைத் தாதரில் இருந்த தம் ஜாகைக்கு அழைத்துச் சென்றார். பம்பாயில் தங்கியிருந்தபோது லலிதாவும் சுண்டுவும் வெகு குதூகலமாயிருந்தார்கள். லலிதாவும் அவளைவிட ஒரு வயது மூத்தவளான சீதாவும் பிராண சினேகிதர்களானார்கள். ஒருவரையொருவர் மறப்பதில்லையென்றும் கையடித்துச் சத்தியம் செய்து கொண்டார்கள். லலிதாவுக்கும் சுண்டுவுக்கும் பம்பாய் நகரத்துக் காட்சிகளையெல்லாம் காட்டுவதில் சீதாவுக்கு அளவில்லாத பெருமை; சொல்ல முடியாத உற்சாகம். மிருகக்காட்சிச் சாலையாகட்டும், மியூஸியம் ஆகட்டும், ரயில்வே ஸ்டேஷன்கள் ஆகட்டும், தாஜ்மகால் ஹோட்டல் ஆகட்டும், எட்டு மாடியுள்ள மாளிகைகள் ஆகட்டும், மலபார் குன்றிலுள்ள மச்சுத் தோட்டம் ஆகட்டும் - லலிதா பார்த்ததையே பார்த்துக்கொண்டு பிரமித்துப் போனபடி நிற்பாள். சீதாவோ, அடிக்கடி, "இங்கே வாடி! இதைப் பாரடி! இப்படிப் பார்த்ததையே பார்த்துக் கொண்டு நின்றால் பட்டிக்காடு என்று பரிகாசம் செய்வார்கள். ஓடி வாடி! ஓடி வா!" என்று அவசரப்படுத்துவாள்; கையைப் பிடித்து இழுப்பாள்; முதுகைப் பிடித்துத் தள்ளுவாள்; "சீ! அசடே!" என்று சில சமயம் வையவும் வைவாள். ஆனால், இதையெல்லாம் லலிதா பொருட்படுத்தவில்லை. சீதாவிடம் அவளுக்கு ஏற்பட்டிருந்த அளவில்லாத பிரியமும் அவளாலேதானே இந்தப் பம்பாய்க் காட்சிகளையெல்லாம் பார்க்கிறோம் என்ற நன்றி உணர்ச்சியும் சேர்ந்து சீதா இழுத்த இழுப்புக்கெல்லாம் லலிதா பம்பாயில் தங்கிய நாட்களில் எப்போதும் ஒரே உற்சாகமாயிருந்தாள். இதற்கு முன் எந்த நாளிலும் அவள் அவ்வளவு சந்தோஷமாயிருந்ததில்லை. ஆனால் கிட்டாவய்யரும், அவருடைய மனைவி சரஸ்வதி அம்மாளும் வெவ்வேறு காரணங்களினால் லலிதாவுக்கு நேர்மாறான மனோநிலையை அடைந்திருந்தார்கள். ராஜத்தின் வாழ்க்கை ஏமாற்றமும் மன வேதையும் நிறைந்தது என்று கிட்டாவய்யர் அறிந்து கொண்டார். ஆனால் அதன் காரணங்களை அவர் தெளிவாக அறிய முடியவில்லை. அவர்கள் பம்பாயில் தங்கியிருந்த நாட்களில் துரைசாமி அபூர்வமாகவே வீட்டுக்கு வந்தார். வந்தபோதெல்லாம் முக மலர்ச்சியோடு மரியாதையாகவே பேசினார். இரவு நேரங்களில் பெரும்பாலும் 'டியுடி' இருக்கிறதென்பதாய்ச் சொல்லி அவர் வீட்டிற்கு வருகிறதில்லை. ராஜத்தின் கஷ்டங்களைக் கிட்டாவய்யர் அறிந்து கொள்ள முயன்றார். பணக்கஷ்டம் இருப்பது பிரத்யட்சமாகத் தெரிந்தது. ராஜத்தின் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் தொங்கிய திருமாங்கல்யத்தைத் தவிர வேறு ஆபரணம் என்பதே கிடையாது. கிட்டாவய்யர் எதிர்பார்த்தபடி ராஜம் அதிகமாக மெலிந்து படுத்த படுக்கையாக இல்லை. சுறுசுறுப்பாக நடமாடிக் கொண்டுதான் இருந்தாள். கிட்டாவய்யர் ராஜத்தைக் கேட்டபோது, "எனக்கு உடம்பு ஒன்றுமில்லை, அண்ணா! உங்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருந்தது. அதற்காகத்தான் அப்படி எழுதியிருந்தேன்" என்றாள். கிட்டாவய்யர் இதனால் ஏமாந்து விடாமல் மேலும்மேலும் கேள்விகள் கேட்டு உண்மை அறிய முயன்றார். "ஏன் அம்மா, ராஜம்! உன் அகத்துக்காரருக்கு ஏதேனும் கெட்ட பழக்கம் உண்டோ ? குடி, கிடி...." "குடி, குதிரை பந்தயம் இன்னும் எல்லாம் உண்டு, அண்ணா! அதை யெல்லாம் ஏன் கேட்டு என் வயிற்றெரிசலைக் கிளப்புகிறாய்?" என்று சொல்லி விட்டுக் கலகலவென்று கண்ணீர் வடித்தாள். கிட்டாவய்யர் அவளுக்குத் தேறுதல் கூறிக் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டார். சூதாட்டங்களோடு கூடச் சிற்றின்ப விவகாரங்களிலும் துரைசாமி ஈடுபவதுண்டு என்று ராஜத்தின் சிற்சிலவார்த்தை களிலிருந்து கிட்டாவய்யர் ஊகித்தார். ஆனால் தங்கையிடம் இதைப்பற்றி அதிகம் கேட்பதில் உள்ள விரஸத்தைக் கருதி நிறுத்திக் கொண்டார். துன்பப்பட்டிருந்த ராஜத்தினிடம் கிட்டாவய்யர் காட்டிய பிரியத்தையும் அநுதாபத்தையும் பார்க்கப் பார்க்க, சரஸ்வதி அம்மாளின் உள்ளத்தில் குரோதப் புகை கிளம்பத் தொடங்கியது. ராஜத்தின் கஷ்டங்களைத் தெரிந்து கொள்வதற்காக அவளிடம் அவர் தனியாகப் பேசும் போதெல்லாம் சரஸ்வதி அம்மாள் அங்கே தேடிக்கொண்டு வந்து சேருவாள். "சரசு! நீ போ!" என்றால், "இரகசியம் என்ன இரகசியம்? நல்ல வெட்கக் கேடு!" என்று கன்னத்தை தோள்பட்டையில் இடித்துக் கொண்டு திரும்பிச் செல்வாள். "அந்தப் பிராமணர் பரமசாது! தங்கக் கம்பி; பார்ப்பதற்கு மகாராஜா மாதிரியிருக்கிறார். இந்தத் துக்கிரிதான் இப்படிக் குடித்தனத்தைப் பாழாக்கியிருக்கிறாள்!" என்று முணுமுணுப்பாள். தன் புதல்வி லலிதாவைக் காட்டிலும் ராஜத்தின் மகள் சீதா சிவப்பாகவும் இலட்சணமாகவும் இருப்பதைப் பார்க்கப் பார்க்கச் சரஸ்வதிக்கு ஆத்திரம் பொங்கியது. சீதா கலகலவென்று பேசுவதும் சிரிப்பதும் இவளுக்குக் குரோதத்தை உண்டாக்கியது. லலிதா எப்போதும் சீதாவைப் பின்தொடர்ந்து போவதும், அவள், "சீ! போடி! வாடி!" என்று அதட்டுவதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருப்பதும் சரஸ்வதி அம்மாளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவேயில்லை. இந்த நிலைமையை ராஜம் ஒருவாறு அறிந்துகொண்டு தன்னுடைய இனிய பேச்சினாலும் உபசாரத்தினாலும் மன்னியைக் கூடுமான வரையில் சாந்தப்படுத்தி வந்தாள். லலிதாவின் பேரில் ரொம்பவும் அதிகாரம் செலுத்தாதபடி சீதாவுக்கு அடிக்கடி எச்சரிக்கை செய்து வந்தாள். இதனாலெல்லாம் சரஸ்வதி அம்மாளின் மனம் சாந்தம் அடையவில்லை. லலிதா சீதா இவர்களின் தோற்றத்தை அவளுடைய உள்ளம் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. லலிதா மாநிறமானவள்; சீதாவின் மேனியோ வெண்பட்டினையொத்த சந்தன வர்ணங்கொண்டது. சாமுத்திரிகா இலட்சணம் அறிந்தவர்கள் ஒருவேளை சீதாவைவிட லலிதாதான் அழகுடையவள் என்று சொல்லக்கூடும். ஆனால் மேலெழுந்த வாரியாகப் பார்ப்பவர்களுக்கு இருவரில் சீதாதான் அழகி எனத் தோன்றும். லலிதாவின் கண்கள் நீண்டு சாந்தம் குடிகொண்டு தாமரை இதழின் வடிவை ஒத்திருந்தன. சீதாவின் கண்களோ அகன்று வட்ட வடிவமாய்க் குமுத மலரையொத்திருந்தன. அவளுடைய கண்ணிமைக் குள்ளே கருவிழிகள் அங்குமிங்கும் சுழன்று சஞ்சல புத்தியைக் காட்டின என்றாலும், பார்ப்பவர்களை உடனே பிரமிக்கச் செய்யும் தன்மை வாய்ந்திருந்தன. சீதா பம்பாய்ப் பட்டிணத்தின் நாகரிகத்தில் பிறந்து வளர்ந்தவள். லலிதாவோ பட்டிக்காட்டிலேயே இருந்தவள். அதற்குத் தகுந்தபடி அவர்களுடைய நடை உடை பாவனைகள் அமைந்திருந்தன. சீதாவின் காதுக்கருகில் தொங்கிய சுருட்டை மயிர் ஒன்றே போதும், அவளுடைய முக வசீகரத்தை ஸ்தாபிதம் செய்வதற்கு. அவளுடைய பேசுந் திறமையைப் பற்றியோ கேட்க வேண்டியதில்லை. கலகலவென்று வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருப்பாள். லலிதா ஒருவார்த்தை சொல்லுவதற்குள் சீதா பத்து வார்த்தை சொல்லிவிடுவாள். 'கான்வெண்ட்' பள்ளிக் கூடத்தில் படித்தவளாதலால் பேசிக் கொண்டேயிருக்கும் போது திடிரென்று ஓர் இங்கிலீஷ் பாட்டைப் பாடி லலிதாவைத் திகைக்கப் பண்ணி விடுவாள். இவ்வளவுக்கும் மேலாக லலிதாவைவிடச் சீதா ஒரு வயது அதிகமானவள். ஆகையால் அவளிடம் யௌவனத்தின் சோபை பிரகாசிக்கத் தொடங்கியிருந்தன. இப்படியெல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்து, லலிதாவைக் காட்டிலும் சீதா வசீகரம் பெற்றிருப்பதேன் என்பதாகச் சரஸ்வதி அம்மாளால் நிர்ணயிக்க முடியவில்லை. மொத்தத்தில் தன் புதல்வியைக் காட்டிலும் தன் நாத்தனாரின் மகள் அதிக அழகு பெற்று விளங்குகிறாள் என்பதை மட்டும் அவள் உள்ளம் உணர்ந்தது. இது காரணமாக அந்த அம்மாளின் சுபாவமே மாறிவிட்டது. ராஜம்பேட்டை போஸ்டுமாஸ்டர் பங்காருநாயுடு சரஸ்வதி அம்மாளைப்பற்றிக் கொடுத்த அபிப்பிராயம் ஒரு வருஷத்துக்கு முன்னால் வரையில் உண்மையாயிருந்தது. பம்பாய்க்குப் போய்த் திரும்பியதிலிருந்து சரஸ்வதி அம்மாளின் இயற்கையின் கோபதாபங்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. லலிதாவைச் சிங்காரிப்பதிலும் அழகுபடுத்துவதிலும் முன்னைக் காட்டிலும் லலிதாவுக்குக் கிடைத்த அடிகள், திட்டுகளுக்குக் கணக்கேயில்லை. அதிலும், சீதாவின் பேச்சை லலிதா எடுத்து விட்டால், அன்று வீடு அமர்க்களம்தான்! பலமுறை தலையில் பட்டுப் பட்டென்று குட்டுகள் விழுந்த பிற்பாடும் லலிதாவுக்கு மட்டும் புத்தி வரவேயில்லை. அத்தங்காள் சீதாவைப்பற்றி யாரிடமாவது ஏதாவது பெருமையடித்துக் கொள்ளாவிட்டால் அவளுக்கு அன்றிரவு தூக்கம் வராது; அப்படித் தூங்கினாலும் சொப்பனத்தில் அக்கிரகாரத்துப் பெண்களிடம் தன் பம்பாய் அத்தங்காளைப் பற்றி ஏதாவது சொல்லியே தீருவாள்.
கிட்டாவய்யர் குடும்பம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஆறாம் அத்தியாயம் கிட்டாவய்யர் சாய்மான நாற்காலியிலிருந்து எழுந்த போது கீழே விழுந்த கடிதத்தை எடுத்து நின்ற வாக்கிலேயே அதைப் பிரித்துப் படித்தார். பாதி படிக்கும் போதே, "சீச்சீ! இங்கிலீஷ் படித்தவர்களுக்குப் புத்தியே இருப்பதில்லை. அதிலும் மதராஸில் குடியேறிவிட்டால், அவர்களுக்கு தலைகால் புரிகிறதில்லை சுத்த கர்வம் பிடித்தவர்கள்!" என்றார். சரஸ்வதி அம்மாளுக்கு, 'நீங்கள் இங்கிலீஷ் படிக்காவிட்டால் படித்தவர்களை எதற்காகத் திட்டுகிறீர்கள்?" என்று சொல்லத் தோன்றியது. ஆனாலும் 'மதராஸ்' என்றதும் அவளுடைய நினைவு வேறு பக்கம் திரும்பியது. கடிதத்தின் விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆவலினால் நாவை அடக்கிக் கொண்டாள். கிட்டாவய்யர் கடிதத்தை முழுதும் படித்தபிறகு, "கடிதம் யார் எழுதியிருக்கிறார்கள்? என்ன எழுதியிருக்கிறது?" என்று கேட்டாள். கிட்டாவய்யருக்குத் தன் மனைவி பேரில் ஏற்பட்டிருந்த அற்ப கோபம் இதற்குள் மாறி மதராஸ்காரர்களின்மீது திரும்பியிருந்தது. ஆகையால் சரஸ்வதி அம்மாளின் கேள்விக்கு அவர் பதில் சொன்னார். "பழைய மாம்பலத்தில் இருக்கிறானே, ஒரு பிரகஸ்பதி, அவன் எழுதியிருக்கிறான். அவனுடைய புத்தி உலக்கைக் கொழுந்துதான்!" "ஓகோ! உங்கள் சின்ன மாமா எழுதியிருக்கிறாரா? என்ன எழுதியிருக்கிறார்?" என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள். அவளுடைய குரலில் பரபரப்பு அதிகமாயிருந்தது. கிட்டாவய்யர், "பட்டணத்தில் பத்மாபுரத்தில் ஒரு நல்ல வரன் இருக்கிறது என்று சீமாச்சு சொன்னான் அல்லவா? அதைப் பற்றி விசாரித்து எழுதும்படி சொல்லியிருந்தேன். பிள்ளையின் தாய் தகப்பனாரைப் போய்ப் பார்த்தானாம். அவர்கள் பெண்ணை மதராஸுக்கு அழைத்துக் கொண்டு வந்து காட்ட வேண்டும் என்கிறார்களாம்! மதராஸ்காரர்களுக்கே தலையில் மூளை இராது போலிருக்கிறது. சந்தைக்கு மாட்டைக் கொண்டு போவது போல் பெண்ணை அழைத்துக் கொண்டு போக வேண்டுமாம்! அப்படியாவது அவர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுகிறார்களா? பெண்ணையும் கொடுத்துத் தட்சணையாகப் பணம் கொடுக்க வேண்டுமாம்! அவர்கள்தான் அப்படிப் புத்தியில்லாமல் சொன்னார்கள் என்றால், இவனுக்கு எங்கே புத்தி போயிற்று? 'லலிதாவை இங்கே ஒரு தடவை அழைத்துக் கொண்டு வருவது நலம்' என்று எழுதியிருக்கிறான்! நலமாம் நலம்! நலத்தை ரொம்பக் கண்டுவிட்டான் இவன்!" என்று கிட்டாவய்யர் சரமாரியாகப் பொழிந்தார். "இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு கோபம் வரக்கூடாது. கோபம், பாவம், சண்டாளம் என்று நீங்களே அடிக்கடி சொல்வீர்களே? உங்கள் சின்ன மாமா யோசிக்காமல் எழுதக் கூடியவர் அல்ல. அப்படிக் குழந்தையை அழைத்துக்கொண்டு போனால் அவர்கள் வீட்டுக்கா நேராகப் போகப் போகிறோம்? உங்கள் சின்ன மாமா வீட்டில்தானே போய் இறங்குவோம்? அங்கே வந்து பார்க்கச் சொன்னாலும் போயிற்று! இதற்காக நீங்கள் இவ்வளவு கோபித்துக் கொள்வானேன்?" என்று சரஸ்வதி அம்மாள் கிட்டாவய்யருக்குச் சாந்த உபதேசம் செய்தாள். லலிதாவுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும் என்பதில் சரஸ்வதி அம்மாளுக்கு இருந்த ஆர்வம் சில சமயம் அவளை ரௌத்ராகாரம் கொள்ளச் செய்தது; வேறு சில சமயம் அபாரமான சாந்த குணத்தை மேற்கொள்ளும்படியும் செய்தது. "அதெல்லாம் முடியாத காரியம், கண்ட முட்டாள் பயல்களுக்கு முன்னால் நம்ம லலிதாவை அழைத்துக் கொண்டு காட்டுவதா? அப்படி என்ன இப்போது வந்துவிட்டது? இவன் இல்லாவிட்டால் இன்னும் எத்தனையோ பேர். ஒரு பையன் வந்து பெண்ணைப் பார்ப்பது, அப்புறம் பெண் வேண்டும், வேண்டாம் என்று சொல்வது - இதுவே ஆபாசமான காரியம். பெண்களை அழைத்துக் கொண்டு போய்க் காட்டுவது ரசாபாசமான விஷயம்!..." சரஸ்வதி அம்மாள் குறுக்கிட்டு, "இப்போது என்ன குடி முழுகிவிட்டது? எதற்காகக் கோபித்துக் கொள்கிறீர்கள்? எல்லாவற்றுக்கும் கோடி வீட்டுக்காரரை யோசித்துக்கொண்டு தீர்மானம் செய்தால் போகிறது!" என்றாள். கோடி வீட்டுக்காரர் என்று சரஸ்வதி அம்மாள் குறிப்பட்டது சீமாச்சுவய்யரைத்தான். அவரைக் குறிப்பிட்டவுடனே கிட்டாவய்யரின் கோபம் அடங்கிவிடும் என்று அந்த அம்மாள் நன்கறிந்திருந்தாள். அவள் நினைத்தபடியே ஆயிற்று. கிட்டாவய்யர் அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு வெளிக் கிளம்பினார். மேலக்கோடி வீட்டுத் திண்ணையில் ஏற்கனவே மூன்று பேர் தயாராகக் காத்துக் கொண்டிருந்தார்கள். சீமாச்சுவய்யர் என்கிற சீனிவாச அய்யர் கையில் சீட்டுக்கட்டுடன் உட்கார்ந்திருந்தார். பஞ்சுவய்யரும், அப்பாத்துரை சாஸ்திரிகளும் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் தலைக்கு ஒரு ஏட்டைப் பிரித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தார்கள். கிட்டாவய்யர் வந்ததும் சாஸ்திரிகள் பத்திரிகையிலிருந்து தலையைத் தூக்கி, "ஐயர்வாள்! தெரியுமா சமாசாரம்? பீஹாரிலே பெரிய பூகம்பமாமே?" என்றார். பஞ்சுவய்யர், "அது என்ன அவருக்குத் தெரியுமா என்று கேட்கிறீர்? பூகம்பத்தை உண்டாக்கினதே அவர்தானே! லலிதா தபால் ஆபிஸுக்குப் போனால் பூகம்பா வந்துவிடும் என்று இவர் சம்சாரத்திடம் சொல்லிக்கொண்டேயிருந்தாராம். அடுத்த நிமிஷம் சீமாச்சு 'பீகாரிலே பூகம்பம்' என்று சொல்லிக்கொண்டு உள்ளே சென்றானாம். முனிபுங்கவரின் வாக்கு அந்த க்ஷணமே பலிதமாகி விட்டது!" என்றார். "ஒரு காலத்திலே பிராமணனுடைய வாக்குப் பலித்துக் கொண்டுதான் இருந்தது! இப்போது எல்லாம் தலைகீழாகி விட்டது. நானும்தான் கேட்கிறேன், அந்தப் பெண் குழந்தை தபாலாபீசுக்குப் போகாவிட்டால் என்ன முழுகிப் போகும்? தபாலாபீசுக்குப் போக அய்யர் வீட்டில் ஆள் இல்லையா? தேள் இல்லையா?" என்றார் சாஸ்திரிகள். சீமாச்சு ஐயர் குறுக்கிட்டு, "ஆள் இல்லாவிட்டாலும் தேள் நிறைய இருக்கிறது! சட்! சும்மா இருங்காணும்! லலிதா தபாலாபீசுக்குப் போனதினால் என்ன முழுகிப் போய்விட்டது? அதைத்தான் சொல்லுமே? உலகம் எப்படியெல்லாம் முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்கிறது என்று உமக்குத் தெரியுமா?" என்றார். "நீங்கள் இப்படி முன்னேற்றம், பின்னேற்றம் என்று பேசப்போகத்தான் ஊரிலே பூகம்பம் வருகிறது!" என்றார் சாஸ்திரிகள். "நாம் இங்கே பேசுகிறதற்காகப் பூகம்பம் பீஹாரிலே வருவானேன்?" என்று கேட்டார் பஞ்சுவய்யர். "அந்தப் பூகம்பம் இங்கே வருவதற்கு எத்தன
மந்திராலோசனை