கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan முதலாவது பாகம் - புது வெள்ளம்
அத்தியாயம் 11-20
பதினோறாம்
அத்தியாயம் - திடும்பிரவேசம்
பன்னிரண்டாம்
அத்தியாயம் - நந்தினி
பதின்மூன்றாம்
அத்தியாயம் - வளர்பிறைச் சந்திரன்
பதினான்காம்
அத்தியாயம் - ஆற்றங்கரை முதலை
பதினைந்தாம்
அத்தியாயம் - வானதியின் ஜாலம்
பதினாறாம்
அத்தியாயம் - அருள்மொழிவர்மர்
பதினேழாம்
அத்தியாயம் - குதிரை பாய்ந்தது!
பதினெட்டாம்
அத்தியாயம் - இடும்பன்காரி
பத்தொன்பதாம்
அத்தியாயம் - ரணகள அரண்யம்
இருபதாம்
அத்தியாயம் - "முதற் பகைவன்!"
பதினோறாம் அத்தியாயம் திடும்பிரவேசம்
இந்நாளில் கும்பகோணம் என்ற பெயரால் ஆங்கில அகராதியிலேகூட இடம்
பெற்றிருக்கும் நகரம், நம்முடைய கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு
என்று வழங்கப்பட்டு வந்தது. புண்ணிய ஸ்தல மகிமையையன்றி, 'குடந்தை சோதிடராலும் அது
புகழ்பெற்றிருந்தது. குடந்தைக்குச் சற்றுத் தூரத்தில் தென் மேற்குத் திசையில்
சோழர்களின் இடைக்காலத் தலைநகரமான பழையாறை, வானை அளாவிய அரண்மனை மாடங்களுடனும் ஆலய
கோபுரங்களுடனும் கம்பீரமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.
பழையாறை
அரண்மனைகளில் வசித்த அரச குலத்தினர் அனைவருடைய ஜாதகங்களையும் குடந்தை சோதிடர்
சேகரித்து வைத்திருந்தார். அப்படிச் சேகரித்து வைத்திருந்த ஜாதகங்களைப்
புரட்டித்தான் கொடும்பாளூர் இளவரசி வானதியின் ஜாதகத்தை அவர் கண்டெடுத்தார். சிறிது
நேரம் ஜாதகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு, சோதிடர் வானதியின் முகத்தை
ஏறிட்டுப் பார்த்தார். திரும்ப ஜாதகத்தைப் பார்த்தார். இப்படி மாற்றி மாற்றிப்
பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, வாயைத் திறந்து ஒன்றும் சொல்லுகிற வழியைக்
காணவில்லை.
"என்ன, ஜோசியரே! ஏதாவது சொல்லப் போகிறீரா, இல்லையா?" என்று
குந்தவை தேவி கேட்டாள்.
"தாயே! என்னத்தைச் சொல்வது? எப்படிச் சொல்வது? முன்
ஒரு தடவை தற்செயலாக இந்த ஜாதகத்தை எடுத்துப் பார்த்தேன். என்னாலேயே நம்ப
முடியவில்லை; இப்படியும் இருக்க முடியுமா என்று சந்தேகப்பட்டு வைத்து விட்டேன்.
இப்போது இந்தப் பெண்ணின் திருமுகத்தையும் இந்த ஜாதகத்தையும் சேர்த்துப்
பார்க்கும்போது, திகைக்க வேண்டியிருக்கிறது!"
"திகையும்! திகையும்!
போதுமானவரை திகைத்துவிட்டு பிறகு ஏதாவது குறிப்பாகச் சொல்லும்!"
"இது
மிகவும் அதிர்ஷ்ட ஜாதகம் தாயே! தாங்கள் எதுவும் வித்தியாசமாக நினைத்துக் கொள்ள
மாட்டீர்கள் என்று சொல்கிறேன். தங்களுடைய ஜாதகத்தைக் காட்டிலும் கூட, இது ஒருபடி
மேலானது. இம்மாதிரி அதிர்ஷ்ட ஜாதகத்தை நான் இதுவரை பார்த்ததேயில்லை!"
குந்தவை புன்னகை புரிந்தாள்; வானதியோ வெட்கப்பட்டவளாய், "அக்கா! இந்த
துரதிர்ஷ்டக்காரியைப் போய் இவர் உலகத்திலேயே இல்லாத அதிர்ஷ்டக்காரி என்கிறாரே!
இப்படித்தான் இருக்கும் இவர் சொல்லுவதெல்லாம்!" என்றாள்.
"அம்மா! என்ன
சொன்னீர்கள்? நான் சொல்வது தவறானால் என்னுடைய தொழிலையே விட்டுவிடுகிறேன்" என்றார்
ஜோதிடர்.
"வேண்டாம், ஜோதிடரே! வேண்டாம் அப்படியெல்லாம் செய்துவிடாதீர். ஏதோ
நாலுபேருக்கு நல்ல வார்த்தையாகச் சொல்லிக் கொண்டிரும். ஆனால் வெறுமனே
பொதுப்படையாகச் சொல்கிறீரே தவிர, குறிப்பாக ஒன்றும் சொல்லவில்லையே? அதனாலேதான் இவள்
சந்தேகப்படுகிறாள்!"
"குறிப்பாகச் சொல்ல வேண்டுமா? இதோ சொல்லுகிறேன்! நாலு
மாதத்திற்கு முன்னால் அபசகுனம் மாதிரி தோன்றக் கூடிய ஒரு காரியம் நடந்தது. ஏதோ
ஒன்று தவறி விழுந்தது; ஆனால் அது உண்மையில் அபசகுனம் இல்லை. அதிலிருந்துதான் இந்தக்
கோமகளுக்கு எல்லா அதிர்ஷ்டங்களும் வரப்போகின்றன!"
"வானதி! நான் என்னடி
சொன்னேன்? பார்த்தாயா?" என்றாள் குந்தவை தேவி.
"முன்னாலேயே இவருக்கு
நீங்கள் சொல்லி வைத்திருகிறீர்கள் போலிருக்கிறது!" என்றாள் வானதி.
"பார்த்தீரா சோதிடரே, இந்தப் பெண்ணின் பேச்சை!"
"பேசட்டும் தாயே!
இப்போது எது வேண்டுமானாலும் பேசட்டும்! நாளைக்கு மன்னர் மன்னனை மணந்து கொண்டு..."
"அப்படிச் சொல்லுங்கள். இளம் பெண்களிடம் கலியாணத்தைப் பற்றிப் பேசினால்
அல்லவா அவர்கள் சந்தோஷமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்?..."
"அதைத்தான்
நானும் சொல்ல வருகிறேன், தாயே! திடுதிப்பென்று கலியாணப் பேச்சை எடுக்கக் கூடாது
அல்லவா? எடுத்தால், இந்தக் கிழவனுக்குப் புத்தி கெட்டுவிட்டது" என்று சொல்லி
விடுவார்கள்!"
"இவளுக்குப் புருஷன் எங்கிருந்து வருவான்? எப்போது வருவான்?
அவனுக்கு என்ன அடையாளம்? ஜாதகத்திலிருந்து இதையெல்லாம் சொல்ல முடியுமா, ஜோதிடரே!"
"ஆகா! சொல்ல முடியாமல் என்ன? நன்றாய்ச் சொல்ல முடியும்!" என்று கூறிவிட்டு,
ஜோதிடர் ஜாதகத்தை மறுபடியும் கவனித்துப் பார்த்தார்.
கவனித்துப்
பார்த்தாரோ, அல்லது கவனித்துப் பார்ப்பது போல் அவர் பாசாங்குதான் செய்தாரோ நமக்குத்
தெரியாது.
பிறகு, தலைநிமிர்ந்து நோக்கி, "அம்மணி! இந்த இளவரசிக்குக் கணவன்
வெகு தூரத்திலிருந்து வரவேண்டியதில்லை. சமீபத்தில் உள்ளவன்தான்; ஆயினும் அந்த
வீராதி வீரன் இப்போது இந்நாட்டில் இல்லை. கடல் கடந்து சென்றிருக்கிறான்!" என்றார்
ஜோதிடர்.
இதைக் கேட்டதும் குந்தவை, வானதியைப் பார்த்தாள்.
வானதியின் உள்ளத்தில் பொங்கிய உவகையை அவள் அடக்கிக் கொள்ளப் பார்த்தும்
முடியவில்லை, முகம் காட்டி விட்டது.
"அப்புறம்? அவன் யார்? என்ன குலம்?
தெரிந்துகொள்ள ஏதாவது அடையாளம் உண்டா?"
"நன்றாக உண்டு இந்தப் பெண்ணை மணந்து
கொள்ளும் பாக்கியசாலியின் திருக்கரங்களில் சங்கு சக்கர ரேகை இருக்கும், அம்மா!"
மீண்டும் குந்தவை வானதியைப் பார்த்தாள். வானதியின் முகம் கவிந்து பூமியைப்
பார்த்துக் கொண்டிருந்தது.
"அப்படியானால், இவளுடைய கைகளிலும் ஏதேனும்
அடையாள ரேகை இல்லாமற்போகுமா?" என்றாள் குந்தவைப் பிராட்டி.
"தாயே! இவளுடைய
பாதங்களை எப்போதாவது தாங்கள் பார்த்ததுண்டா?.."
"ஏன் ஜோதிடரே! இது என்ன
வார்த்தை! இவளுடைய காலைப் பிடிக்கும்படி என்னைச் சொல்கிறீரா?"
"இல்லை;
அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை ஆனால் ஒரு காலத்தில் ஆயிரமாயிரம் மன்னர்குலப்
பெண்கள், பட்ட மகிஷிகள், அரசிளங்குமரிகள், ராணிகள், மகாராணிகள், இந்தப்
பெண்ணரசியின் பாதங்களைத் தொடும் பாக்கியத்துக்காகத் தவம் கிடப்பார்கள் தாயே!"
"அக்கா! இந்த கிழவர் என்னைப் பரிகாசம் செய்கிறார். இதற்காகவா என்னை இங்கே
அழைத்து வந்தீர்கள்? எழுந்திருங்கள் போகலாம்!" என்று உண்மையாகவே பொங்கி வந்த
போபத்துடன் கூறினாள் வானதி.
"நீ என்னத்துக்குப் பதறுகிறாயடி, பெண்ணே! அவர்
ஏதாவது சொல்லிக் கொண்டு போகட்டும்..."
"நான் ஏதாவது சொல்லி விடவில்லை;
எல்லாம் இந்த ஜாதகத்தில் குறிப்பிட்டிருப்பதைத்தான் சொல்லுகிறேன். 'பாதத்தாமரை'
என்று ஏதோ கவிகள் உபசாரமாக வர்ணிப்பார்கள். இந்தப் பெண்ணின் உள்ளங்காலைச் சிறிது
காட்டச் சொல்லுங்கள். அதில் செந்தாமரை இதழ்களின் ரேகை கட்டாயம் இருக்கும்."
"போதும்! ஜோதிடரே இவளைப் பற்றி இன்னும் ஏதாவது சொன்னால் என்னைக் கையைப்
பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவாள். இவளுக்கு வாய்க்கப் போகும் கணவனைப்
பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்..."
"ஆகா! சொல்கிறேன்! இவளைக் கைப்பிடிக்கும்
பாக்கியவான் வீராதி வீரனாயிருப்பான்! நூறு நூறு போர்க்களங்களில் முன்னணியில் நின்று
வாகை மாலை சூடுவான். மன்னாதி மன்னனாயிருப்பான்; ஆயிரமாயிரம் அரசர்கள் போற்றச்
சக்கரவர்த்தியின் சிம்மாசனத்தில் பன்னெடுங் காலம் வீற்றிருப்பான்.
"நீர்
சொல்வதை நான் நம்பவில்லை அது எப்படி நடக்க முடியும்?" என்று கேட்ட குந்தவை தேவியின்
முகத்திலே ஆர்வமும் மகிழ்ச்சியும் ஐயமும் கவலையும் கலந்து தாண்டவமாடின.
"நானும் நம்பவில்லை. இவர் எதையோ நினைத்துக் கொண்டு பேசுகிறார். இப்படிச்
சொன்னால் தங்களுக்குச் சந்தோஷமாயிருக்கும் என்று கூறுகிறார்!" என்றாள் வானதி.
"இன்று நீங்கள் நம்பாவிட்டால் பாதகமில்லை; ஒரு காலத்தில் நம்புவீர்கள்
அப்போது இந்த ஏழைச் சோதிடனை மறந்து விடாதீர்கள்.."
"அக்கா! நாம் போகலாமா?"
என்று மறுபடி கேட்டாள் வானதி.
அவளுடைய கரிய விழிகளின் ஓரங்களில் இரு
கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.
"இன்னும் ஒரே ஒரு
விஷயம் சொல்லி விடுகிறேன். அதைக் கேட்டுவிட்டுப் புறப்படுங்கள், இந்த இளவரசியை
மணந்து கொள்ளப் போகும் வீரனுக்கு எத்தனை எத்தனையோ அபாயங்களும், கண்டங்களும்
ஏற்படும்; பகைவர்கள் பலர் உண்டு..."
"ஐயோ!"
"ஆனால் அவ்வளவு
அபாயங்களும் கண்டங்களும் முடிவில் பறந்து போகும்; பகைவர்கள் படுநாசம் அடைவார்கள்.
இந்தத் தேவியை அடையும் நாயகன் எல்லாத் தடைகளையும் மீறி மகோன்னத பதவியை அடைவான்....
இதைவிட முக்கியமான செய்தி ஒன்று உண்டு தாயே! நான் வயதானவன் ஆகையால் உள்ளதை ஒளியாமல்
விட்டுச் சொல்கிறேன். இந்தப் பெண்ணின் வயிற்றை நீங்கள் ஒருநாள் பாருங்கள். அதில்
ஆலிலையின் ரேகைகள் இல்லாவிட்டால் நான் இந்த ஜோதிடத் தொழிலையே விட்டுவிடுகிறேன்..."
"ஆலிலையின் ரேகையில் என்ன விசேஷம் ஜோதிடரே?"
"ஆலிலையின் மேல்
பள்ளிகொண்ட பெருமான் யார் என்பது தெரியாதா? அந்த மகாவிஷ்ணுவின் அம்சத்துடன் இவள்
வயிற்றில் ஒரு பிள்ளை பிறப்பான். இவளுடைய நாயகனுக்காவது பல இடைஞ்சல்கள்,
தடங்கல்கள், அபாயங்கள், கண்டங்கள் எல்லாம் உண்டு. ஆனால் இந்தப் பெண்ணின் வயிற்றில்
அவதரிக்கப் போகும் குமாரனுக்குத் தடங்கல் என்பதே கிடையாது. அவன் நினைத்ததெல்லாம்
கைகூடும்; எடுத்ததெல்லாம் நிறைவேறும், அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும்; அவன் கால்
வைத்த இடமெல்லாம் அவனுடைய ஆட்சிக்கு உள்ளாகும்; அவன் கண்ணால் பார்த்த இடமெல்லாம்
புலிக்கொடி பறக்கும்.தாயே! இவளுடைய குமாரன் நடத்திச் செல்லும் சைன்யங்கள் பொன்னி
நதியின் புது வெள்ளத்தைப் போல் எங்கும் தங்குதடையின்றிச் செல்லும். ஜயலக்ஷ்மி
அவனுக்குக் கைகட்டி நின்று சேவகம் புரிவாள். அவன் பிறந்த நாட்டின் புகழ் மூவுலகமும்
பரவும். அவன் பிறந்த குலத்தின் கீர்த்தி உலகம் உள்ள அளவும் நின்று நிலவும்!..."
இவ்வாறு ஜோதிடர் ஆவேசம் வந்தவர் போல் சொல்லி வந்தபோது குந்தவை தேவி அவருடைய
முகத்தையே பார்த்துக் கொண்டு, அவர் கூறிய வார்த்தைகளை ஒன்றுவிடாமல் விழுங்குபவள்
போல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
"அக்கா!" என்ற தீனமான குரலைக் கேட்டுத்
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
"எனக்கு என்னமோ செய்கிறது!" என்று
மேலும் தீனமாகக் கூறினாள் வானதி;
திடீரென்று மயங்கித் தரையில் சாய்ந்தாள்.
"ஜோசியரே! சீக்கிரம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!" என்று குந்தவை
சொல்லிவிட்டு, வானதியைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டாள்.
சோதிடர்
தண்ணீர் கொண்டு வந்தார்; குந்தவை தண்ணீரை வாங்கி வானதியின் முகத்தில் தௌித்தாள்.
"ஒன்றும் நேராது, அம்மா! கவலைப்படாதீர்கள்..." என்றார் ஜோதிடர்.
"ஒரு கவலையும் இல்லை; இவளுக்கு இது வழக்கம். இந்த மாதிரி இதுவரையில்
ஐந்தாறு தடவை ஆகிவிட்டது! சற்றுப் போனால் கண் விழித்து எழுந்திருப்பாள், எழுந்ததும்
இது பூலோகமா, கைலாசமா என்று கேட்பாள்!" என்றாள் குந்தவை.
பிறகு சிறிது
மெல்லிய குரலில், "ஜோசியரே! முக்கியமாக ஒன்று கேட்பதற்காகவே உங்களிடம் வந்தேன்.நாடு
நகரங்களிலே சில காலமாக ஜனங்கள் ஏதேதோ பேசிக் கொள்கிறார்களாமே? வானத்தில் சில நாளாக
வால் நட்சத்திரம் தோன்றுகிறதே? இதற்கெல்லாம் உண்மையில் ஏதேனும் பொருள் உண்டா?
இராஜ்யத்துக்கு ஏதாவது ஆபத்து உண்டா? மாறுதல் குழப்பம் ஏதேனும் ஏற்படுமா?" என்று
இளையபிராட்டி கேட்டாள்.
"அதை மட்டும் என்னைக் கேட்காதீர்கள், தாயே!
தேசங்கள், இராஜ்யங்கள், இராஜாங்க நிகழ்ச்சிகள் இவற்றுக்கெல்லாம் ஜாதகமும் கிடையாது;
ஜோசியமும் சொல்ல முடியாது. நான் பயின்ற வித்தையில் அதெல்லாம் வரவில்லை. ஞானிகளும்,
ரிஷிகளும், மகான்களும், யோகிகளும் ஒருவேளை ஞான திருஷ்டியில் பார்த்துச் சொல்லலாம்.
இந்த ஏழைக்கு அந்தச் சக்தி கிடையாது. இராஜரீக காரியங்களில் நாள், நட்சத்திரம்,
ஜாதகம், ஜோசியம் எல்லாம் சக்தியற்றுப் போய்விடுகின்றன..."
"ஜோசியரே! மிக
சாமர்த்தியமாகப் பேசுகிறீர்! இராஜாங்கத்துக்கு ஜாதகம் பார்க்க வேண்டாம். ஆனால் என்
தந்தையைப் பற்றியும் சகோதரர்களைப் பற்றியும் பார்த்துச் சொல்லலாம் அல்லவா?
அவர்களுடைய ஜாதகத்தைப் பார்த்தால் இராஜாங்க ஜாதகத்தைப் பார்த்ததுபோல் ஆகிவிடும்
அல்லவா?"
"சாவகாசமாக இன்னொரு நாள் பார்த்துச் சொல்கிறேன், அம்மா! பொதுவாக,
இது குழப்பங்களும் அபாயங்களும் நிறைந்த காலம். எல்லோருமே சிறிது ஜாக்கிரதையாக
இருக்க வேண்டியதுதான்..."
"ஜோசியரே! என் தந்தை, சக்கரவர்த்தி... பழையாறையை
விட்டுத் தஞ்சாவூருக்குப் போனதிலிருந்து எனக்கு ஒரே கவலையாயிருக்கிறது."
"முன்னமே சொன்னேனே, தாயே! மகாராஜாவுக்குப் பெரிய கண்டம் இருக்கிறது. தங்கள்
குடும்பத்துக்கும் பெரிய அபாயங்கள் இருக்கின்றன. துர்க்காதேவியின் அருள்
மகிமையினால் எல்லாம் நிவர்த்தியாகும்."
"அக்கா! நாம் எங்கே இருக்கிறோம்?"
என்று வானதியின் தீனக் குரல் கேட்டது.
குந்தவையின் மடியில் தலை வைத்துப்
படுத்திருந்த வானதி கண்ணிமைகளை வண்டின் சிறகுகளைப்போல் கொட்டி மலர மலர விழித்தாள்.
"கண்மணி! இன்னும் நாம் இந்த பூலோகத்திலேதான் இருக்கிறோம்! சொர்க்க
லோகத்துக்கு அழைத்துப் போக புஷ்பக விமானம் இன்னும் வந்து சேரவில்லை. எழுந்திரு!
நம்முடைய குதிரை பூட்டிய ரதத்திலேயே ஏறிக் கொண்டு அரண்மனைக்குப் போகலாம்!" என்றாள்
குந்தவை.
வானதி எழுந்து உட்கார்ந்து கொண்டு, "நான் மயக்கம் போட்டு
விழுந்துவிட்டேனா?" என்றாள்.
"மயக்கம் போடவில்லை; அக்காவின் மடியில்
படுத்துக் கொஞ்சம் தூங்கிவிட்டாய்! தாலாட்டுப்கூடப் பாடினேன் உன் காதில்
விழவில்லையா?"
"கோபிக்காதீர்கள், அக்கா! என்னை அறியாமலே தலை கிறுகிறுத்து
வந்துவிட்டது."
"கிறுகிறுக்கும், கிறுகிறுக்கும்; இந்த ஜோசியர் எனக்கு
அப்படி ஜோசியம் சொல்லியிருந்தால் எனக்குக் கூடத்தான் கிறுகிறுத்திருக்கும்."
"அதனால் இல்லை, அக்கா! இவர் சொன்னதையெல்லாம் நான் நம்பிவிட்டேனா?"
"நீ நம்பினாயோ, நம்பவில்லையோ? ஆனால் ஜோசியர் பயந்தே போய்விட்டார்! உன்னைப்
போன்ற பயங்கொள்ளியை இனிமேல் எங்கும் அழைத்துப் போகக் கூடாது."
"நான்தான்
சோதிடரிடம் வரவில்லையென்று அப்போதே சொன்னேனே! நீங்கள்தானே..?"
"என்
குற்றந்தான் எழுந்திரு, போகலாம் வாசல் வரையில் நாலு அடி நடக்க முடியுமா?
இல்லாவிட்டால் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டு போக வேணுமா?"
"வேண்டாம்!
வேண்டாம்! நன்றாய் நடக்க முடியும்."
"சற்றுப் பொறுங்கள், தாயே! தேவியின்
பிரசாதம் தருகிறேன், வாங்கிக் கொண்டு போங்கள்" என்று ஜோசியர் சொல்லி விட்டு
ஓலைச்சுவடியைக் கட்டத் தொடங்கினார்.
"ஜோசியரே! எனக்கு என்னவெல்லாமோ
சொன்னீர்கள்; அக்காவுக்கு ஒன்றுமே சொல்லவில்லையே?" என்று வானதி கூறினாள்.
"அம்மா! இளையபிராட்டிக்கு எல்லாம் சொல்லியிருக்கிறேன் புதிதாக என்ன சொல்ல
வேண்டும்?"
"அக்காவை மணந்து கொள்ளப் போகும் வீராதி வீரர்"
"அசகாய
சூரர்" என்று குந்தவை குறுக்கிட்டுச் சொன்னாள்.
"சந்தேகம் என்ன?..மகா
பராக்கிரமசாலியான இராஜகுமாரர்..."
"முப்பத்திரண்டு சாமுத்ரிகா லட்சணமும்
பொருந்தியவர்; புத்தியில் பிரகஸ்பதி; வித்தையில் சரஸ்வதி, அழகிலே மன்மதன்; ஆற்றலில்
அர்ஜுனன்!"
"இளையபிராட்டிக்கு ஏற்ற அந்த ஸுகுமாரரான இராஜகுமாரர்
எங்கிருந்து எப்போது வருவார்?.."
"வருகிறார், தாயே! வருகிறார்! கட்டாயம்
வரப்போகிறார் அதி சீக்கிரத்திலேயே வருவார்."
"எப்படி வருவார்? குதிரை மேல்
வருவாரா? ரதத்தில் ஏறி வருவாரா? யானை மேல் வருவாரா? கால் நடையாக வருவாரா? அல்லது
நேரே ஆகாசத்திலிருந்து கூரையைப் பொத்துக் கொண்டு வந்து குதிப்பாரா!" என்று
குந்தவைதேவி கேலியாகக் கேட்டாள்.
"அக்கா! குதிரை காலடிச் சத்தம்
கேட்கிறது!" என்று வானதி சிறிது பரபரப்புடன் சொன்னாள்.
"ஒருவருக்கும்
கேளாதது உனக்கு மாத்திரம் அதிசயமாய்க் கேட்கும்!"
"இல்லை, வேடிக்கைக்குக்
சொல்லவில்லை இதோ கேளுங்கள்!"
உண்மையாகவே அப்போது வீதியில் குதிரை ஒன்று
விரைந்து வரும் காலடிச் சத்தம் கேட்டது.
"கேட்டால் என்னடி? குடந்தைப்
பட்டணத்தின் வீதிகளில் குதிரை போகாமலா இருக்கும்?" என்றாள் குந்தவை.
"இல்லை; இங்கே வருகிறது மாதிரி தோன்றியது!"
"உனக்கு ஏதாவது
விசித்திரமாகத் தோன்றும் எழுந்திரு, போகலாம்!"
இச்சமயத்தில் அந்த வீட்டின்
வாசலில் ஏதோ குழப்பமான சப்தம் கேட்டது; குரல் ஒலிகளும் கேட்டன.
"இதுதானே
ஜோசியர் வீடு?"
"ஆமாம்; நீ யார்?"
"ஜோசியர் இருக்கிறாரா?"
"உள்ளே போகக் கூடாது?"
"அப்படித்தான் போவேன்!"
"விடமாட்டேன்"
"ஜோசியரைப் பார்க்க வேண்டும்"
"அப்புறம் வா"
"அப்புறம் வர முடியாது; எனக்கு மிக்க அவசரம்!"
"அடே! அடே! நில்!
நில்!"
"சற்று! விலகிப்போ! தடுத்தாயோ கொன்றுவிடுவேன்..."
"ஐயா!
ஐயா! வேண்டாம்! உள்ளே போக வேண்டாம்!"
இத்தகைய குழப்பமான கூச்சல் நெருங்கி
நெருங்கிக் கேட்டது; படார் என்று வாசற் கதவு திறந்தது. அவ்வளவு பிரமாதமான
தடபுடலுடன் ஒரு வாலிபன் உள்ளே திடும்பிரவேசமாக வந்தான். அவனைப் பின்னாலிருந்து
தோள்களைப் பிடித்து இழுக்க ஒருவன் முயன்று கொண்டிருந்தான். வாலிபன் திமிறிக் கொண்டு
வாசற்படியைக் கடந்து உள்ளே வந்தான். வந்த வாலிபன் யார் என்று வாசகர்கள்
ஊகித்திருப்பார்கள் நமது வீரன் வந்தியத்தேவன் தான்!. வீட்டுக்குள்ளே இருந்த மூன்று
பேருடைய கண்களும் ஏக காலத்தில் அவ்வீரனைப் பார்த்தன.
வந்தியத்தேவனும்
உள்ளிருந்தவர்களைப் பார்த்தான். இல்லை; உள்ளேயிருந்தவர்களில் ஒருவரைத் தான்
பார்த்தான். அதுகூட இல்லை; குந்தவை தேவியை அவன் முழுமையாகப் பார்க்கவில்லை.அவளுடைய
பொன் முகத்தை மட்டுமே பார்த்தான். முகத்தையாவது முழுமையும் பார்த்தானோ என்றால்,
அதுவும் இல்லை! வியப்பினால் சிறிது விரிந்திருந்த அவளுடைய பவளச் செவ்வாயின்
இதழ்களைப் பார்த்தான்; கம்பீரமும் வியப்பும் குறும்புச் சிரிப்பும் ததும்பியிருந்த
அவளுடைய அகன்ற கண்களைப் பார்த்தான். கண்ணிமைகளையும் கரிய புருவங்களையும்
பார்த்தான்; குங்குமச் சிவப்பான குழிந்த கன்னங்களைப் பார்த்தான். சங்கையொத்த
வழுவழுப்பான கழுத்தைப் பார்த்தான். இவ்வளவையும் ஒரே சமயத்தில் தனி தனியாகப்
பார்த்தான். தனித்தனியாக அவை அவன் மனத்தில் பதிந்தன.
இதெல்லாம் சில விநாடி
நேரந்தான், உடனே சட்டென்று திரும்பிச் சோதிடருடைய சீடனை நோக்கி, "ஏனப்பா, உள்ளே
பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று நீ சொல்லக் கூடாது? சொல்லியிருந்தால் நான்
இப்படி வந்திருப்பேனா?" என்று கேட்டுக் கொண்டே சீடனை மறுபக்கம் தள்ளிக் கொண்டு
வாசற்படியை மீண்டும் கடந்தான். ஆயினும் வௌியில் போவதற்குள் இன்னும் ஒரு தடவை
குந்தவைதேவியைத் திரும்பிப் பார்த்து விட்டுத்தான் போனான்.
"அடே அப்பா!
புயல் அடித்து ஓய்ந்தது போல் அல்லவா இருக்கிறது?" என்றாள் குந்தவைப் பிராட்டி.
"இன்னும் ஓய்ந்தபாடில்லை; அதோ கேளுங்கள்!" என்றாள் கொடும்பாளூர் இளவரசி.
வாசலில் இன்னமும் வந்தியத்தேவனுக்கும் சோதிடரின் சீடனுக்கும் தர்க்கம்
நடந்து கொண்டிருந்தது.
"ஜோசியரே! இவர் யார்?" என்றாள் குந்தவை.
"தெரியாது, தாயே! யாரோ அசலூர்க்காரர் மாதிரி இருக்கிறது. பெரிய முரட்டுப்
பிள்ளையென்று தோன்றுகிறது."
குந்தவை திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு
கலகலவென்று சிரித்தாள்.
"எதற்காக அக்கா சிரிக்கிறீர்கள்?"
"எதற்காகவா? எனக்கு வரப்போகும் மணாளன் குதிரையில் வரப் போகிறானா, யானையில்
வரப் போகிறானா, அல்லது கூரை வழியாக வந்து குதிக்கப் போகிறானா என்று பேசிக்
கொண்டிருந்தோமே, அதை நினைத்துக் கொண்டு சிரித்தேன்!"
இப்போது வானதிக்கும்
சிரிப்புத் தாங்க முடியாமல் வந்தது. இருவருடைய சிரிப்பும் கலந்து அலை அலையாக
எழுந்தது.வௌியில் எழுந்த சச்சரவுச் சப்தங்கூட இந்த இரு மங்கையரின் சிரிப்பின்
ஒலியில் அடங்கிவிட்டது.
சோதிடர் மௌன சிந்தனையில் ஆழ்ந்தவராய், அரச
குமாரிகள் இருவருக்கும் குங்குமம் கொடுத்தார். பெற்றுக் கொண்டு இருவரும் எழுந்தனர்;
வீட்டுக்கு வௌியில் சென்றனர். சோதிடரும் கூட வந்தார்.
வீட்டு வாசலில்
சிறிது ஒதுங்கி நின்ற வந்தியத்தேவன், பெண்மணிகளைப் பார்த்ததும், "மன்னிக்க
வேண்டும்.உள்ளே பெண்கள் இருக்கிறார்கள் என்று இந்தப் புத்திசாலி சொல்லவில்லை.
ஆகையினால்தான் அப்படி அவசரமாக வந்து விட்டேன். அதற்காக மன்னிக்க வேண்டும்!" என்று
உரத்த குரலில் சொன்னான்.
குந்தவை மலர்ந்த முகத்துடன் குறும்பும் கேலியும்
மிடுக்கும் ததும்பிய கண்களினால் வந்தியத்தேவனை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்தாள். ஒரு
வார்த்தையும் மறுமொழி சொல்லவில்லை. வானதியை ஒரு கையினால் பிடித்து இழுத்துக் கொண்டு
ரதம் நின்ற ஆலமரத்தடியை நோக்கிச் சென்றாள்.
"குடந்தை நகரத்துப் பெண்களுக்கு
மரியாதையே தெரியாது போலிருக்கிறது. ஏதடா ஒரு மனிதன் வலிய வந்து பேசுகிறானே
என்பதற்காகவாவது திரும்பிப் பார்த்து ஒரு வார்த்தை பதில் சொல்லக் கூடாதோ?" என்று
வந்தியத்தேவன் இரைந்து கூறியது அவர்கள் காதில் விழுந்தது.
ரதத்தில்
குதிரையைப் பூட்டிச் சாரதி ஆயத்தமாக நிறுத்தியிருந்தான். இளவரசிகள் இருவரும்
ரதத்தில் ஏறிக் கொண்டதும், ரத சாரதியும் முன்னால் ஏறிக் கொண்டான். ரதம்
அரிசிலாற்றங்கரையை நோக்கி விரைந்து சென்றது. வந்தியத்தேவன் ரதம் மறையும் வரையில்
பார்த்துக் கொண்டு நின்றான்.
பக்க
தலைப்பு
பன்னிரண்டாம் அத்தியாயம் நந்தினி
கொள்ளிட கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த
வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான்
என்பதைச் சொல்ல வேண்டும் அல்லவா?
ஆழ்வார்க்கடியான் படகில் ஏறியதை
ஆட்சேபித்த சைவப் பெரியார், படகு நகரத் தொடங்கியதும், வந்தியத்தேவனைப் பார்த்து,
"தம்பி! உனக்காகப் போனால் போகிறது என்று இவனை ஏறவிட்டேன். ஆனால் ஓடத்தில் இருக்கும்
வரையில் இவன் அந்த எட்டெழுத்துப் பெயரைச் சொல்லவே கூடாது. சொன்னால், இவனை இந்தக்
கொள்ளிடத்தில் பிடித்துத் தள்ளிவிடச் சொல்லுவேன். ஓடக்காரர்கள் என்னுடைய ஆட்கள்!"
என்றார்.
"நம்பி அடிகளே! தங்களுடைய திருச்செவியில் விழுந்ததா?" என்று
வந்தியத்தேவன் கேட்டான்.
"இவர் ஐந்தெழுத்துப் பெயரைச் சொல்லாதிருந்தால்
நானும் எட்டெழுத்துத் திருநாமத்தைச் சொல்லவில்லை!" என்றார் ஆழ்வார்க்கடியான்.
"சாக்ஷாத் சிவபெருமானுடைய பஞ்சாட்சரத் திருமந்திரத்தைச் சொல்லக் கூடாது
என்று இவன் யார் தடை செய்வதற்கு? முடியாது! முடியாது! கற்றுணைப்பூட்டி கடலிற்
பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே!" என்று சைவப் பெரியார் கம்பீர கர்ஜனை
செய்தார்.
"நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னு நாமம்!"
என்று ஆழ்வார்க்கடியான் உரத்த குரலில் பாடத் தொடங்கினான்.
"சிவ சிவ சிவா!"
என்று சைவர் இரண்டு காதிலும் கைவிரலை வைத்து அடைத்துக் கொண்டார்.
ஆழ்வார்க்கடியான் பாட்டை நிறுத்தியதும், சைவர் காதில் வைத்திருந்த விரல்களை
எடுத்தார்.
ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனைப் பார்த்து, "தம்பி!" நீயே அந்த
வீர சைவரைக் கொஞ்சம் கேள். இவர் திருமாலின் பெயரைக் கேட்பதற்கே இவ்வளவு
கஷ்டப்படுகிறாரே? ஸரீரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளின் பாத கமலங்களை
அலம்பி விட்டுத் தான் இந்தக் கொள்ளிட நதி கீழே வருகிறது. பெருமாளின் பாதம்பட்ட
தீர்த்தம் புண்ணிய தீர்த்தம் என்றுதானே சிவபெருமான் திருவானைக் காவலில் அந்தக்
தண்ணீரிலேயே முழுகித் தவம் செய்கிறார்?" என்று சொல்லுவதற்குள்ளே சைவப் பெரியார் மிக
வெகுண்டு ஆழ்வார்க்கடியான் மீது பாய்ந்தார். படகில் ஓரத்தில் இரண்டு பேரும்
கைகலக்கவே, படகு கவிழ்ந்துவிடும் போலிருந்தது. ஓடக்காரர்களும் வந்தியத்தேவனும்
குறுக்கிட்டு அவர்களை விலக்கினார்கள்.
"பக்த சிரோமணிகளே! நீங்கள் இருவரும்
இந்தக் கொள்ளிட வெள்ளத்திலே விழுந்து நேரே மோட்சத்துக்குப் போக ஆசைப்படுவதாகத்
தோன்றுகிறது. ஆனால் எனக்கு இன்னும் இந்த உலகத்தில் செய்யவேண்டிய காரியங்கள்
மிச்சமிருக்கின்றன!" என்றான் வந்தியத்தேவன்.
ஓடக்காரர்களில் ஒருவன்,
"கொள்ளிடத்தில் விழுந்தால் மோட்சத்துக்குப் போவது நிச்சயமோ, என்னமோ தெரியாது! ஆனால்
முதலையின் வயிற்றுக்குள் நிச்சயமாகப் போகலாம்! அதோ பாருங்கள்!" என்றான்.
அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் முதலை ஒன்று பயங்கரமாக வாயைத் திறந்து
கொண்டு காணப்பட்டது.
"எனக்கு முதலையைப் பற்றிச் சிறிதும் அச்சம் இல்லை;
கஜேந்திரனை ரட்சித்த ஆதிமூலமான நாராயண மூர்த்தி எங்கே போய் விட்டார்?" என்றான்
ஆழ்வார்க்கடியான்.
"எங்கே போய்விட்டாரா? பிருந்தாவனத்து கோபிகா ஸ்திரீகளின்
சேலைத் தலைப்பில் ஒருவேளை ஒளிந்து கொண்டிருப்பார்!" என்றார் சைவர்.
"அல்லது
பத்மாசுரனுக்கு வரங்கொடுத்துவிட்டு அலறிப் புடைத்துக் கொண்டு ஓடியது போல் சிவனுக்கு
இன்னொரு சங்கடம் ஏற்பட்டிருக்கலாம்; அந்தச் சங்கடத்திலிருந்து சிவனைக்
காப்பாற்றுவதற்காகத் திருமால் போயிருக்கலாம்" என்றான் நம்பி.
"திரிபுர
சம்ஹாரத்தின் போது விஷ்ணு அடைந்த கர்வபங்கம் இந்த வைஷ்ணவனுக்கு ஞாபகம் இல்லை
போலிருக்கிறது!" என்றார் சைவப் பெரியார்.
"சுவாமிகளே! நீங்கள்
எதற்காகத்தான் இப்படிச் சண்டை போடுகிறீர்களோ, தெரியவில்லை! யாருக்கு எந்தத்
தெய்வத்தின் பேரில் பக்தியோ, அந்தத் தெய்வத்தை வழிபடுவதுதானே?" என்றான்
வந்தியத்தேவன்.
சைவப் பெரியாரும் ஆழ்வார்க்கடியானும் ஏன் அவ்விதம்
சண்டையிட்டார்கள்? வீர நாராயணபுரத்தில் ஏன் இதே மாதிரியான வாதப் போர் நடந்தது
என்பதைப் பற்றி வாசகர்களுக்கு இச்சமயத்தில் சொல்லிவிடுவது உசிதமாயிருக்கும்.
பழந் தமிழ்நாட்டில் ஏறக்குறைய அறுநூறு வருஷ காலம் பௌத்த மதமும் சமண மதமும்
செல்வாக்குப் பெற்றிருந்தன. இந்தச் செல்வாக்கினால் தமிழகம் பல நலங்களை எய்தியது.
சிற்பம், சித்திரம், கவிதை, காவியம் முதலிய கலைகள் தழைத்தோங்கின. பின்னர்,
ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றினார்கள். அமுதொழுகும் தெய்வத் தமிழ்ப்
பாசுரங்களைப் பொழிந்தார்கள். வைஷ்ணவத்தையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்தார்கள்.
இவர்களுடைய பிரசார முறை மிகச் சக்தி வாய்ந்ததாயிருந்தது. சமயப் பிரசாரத்துக்குச்
சிற்பக் கலையுடன் கூட இசைக் கலையையும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆழ்வார்களின்
பாசுரங்களையும் மூவர் தேவாரப் பண்களையும் தேவகானத்தையொத்த இசையில் அமைத்துப் பலர்
பாடத் தொடங்கினார்கள். இந்த இசைப் பாடல்கள் கேட்போர் உள்ளங்களைப் பரவசப்படுத்தி,
பக்தி வெறியை ஊட்டின. ஆழ்வார்களின் பாடல் பெற்ற விஷ்ணு ஸ்தலங்களும் மூவரின் பாடல்
பெற்ற சிவ ஸ்தலங்களும் புதிய சிறப்பையும் புனிதத் தன்மையையும் அடைந்தன. அதற்கு முன்
செங்கல்லாலும் மரத்தினாலும் கட்டப்பட்டிருந்த ஆலயங்கள் புதுப்பித்துக் கற்றளிகளாகக்
கட்டப்பட்டன. இந்தத் திருப்பணியை விஜயாலய சோழன் காலத்திலிருந்து சோழ மன்னர்களும்
மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வெகுவாகச் செய்துவந்தார்கள்.
அதே
சமயத்தில் கேரள நாட்டில் ஒரு விசேஷ சம்பவம் நடந்தது. காலடி என்னுமிடத்தில் ஒரு
மகான் அவதரித்தார். இளம்பிராயத்தில் அவர் உலகைத் துறந்து சந்நியாசி ஆனார்.
வடமொழியிலுள்ள சகல சாஸ்திரங்களையும் படித்துக் கரை கண்டார். வேத உபநிஷதம், பகவத்
கீதை, பிரம்ம சூத்திரம், இவற்றின் அடிப்படையில் அத்வைத வேதாந்தக் கொள்கையின் கொடியை
நாட்டினார். வடமொழியில் பெற்றிருந்த வித்வத்தின் உதவியினால் பாரததேசம் முழுவதும்
திக்விஜயம் செய்து ஆங்காங்கு எட்டு அத்வைத மடங்களை ஸ்தாபனம் செய்தார். இவருடைய
கொள்கையை அவலம்பித்த அத்வைத சந்நியாசிகள் நாடெங்கும் பரவிச் சென்றார்கள்.
இவ்விதம் தமிழ்நாட்டில் நம் கதை நடந்த காலத்தில் அதாவது சுமார் 980
வருஷங்களுக்கு (1950ல் எழுதப்பட்டது) முன்பு, பெரியதொரு சமயக் கொந்தளிப்பு
ஏற்பட்டிருந்தது. இந்தக் கொந்தளிப்பிலிருந்து தீங்கு தரும் அம்சங்கள் சிலவும்
தோன்றிப் பரவின. வீர வைஷ்ணவர்களும் வீர சைவர்களும் ஆங்காங்கு முளைத்தார்கள்.
இவர்கள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சண்டையில் இறங்கினார்கள். இந்த வாதப்
போர்களில் சில சமய அத்வைதிகளும் கலந்து கொண்டார்கள். சமய வாதப் போர்களின் சில சமயம்
அடிதடி சண்டையாகப் பரிணமித்தன. அந்தக் காலத்து சைவ - வைஷ்ணவப் போரை விளக்கும்
அருமையான கதை ஒன்று உண்டு.
ஸரீரங்கத்து வைஷ்ணவர் ஒருவர் திருவானைக்காவல்
ஆலய வௌிச்சுவரின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தார். தலையில் திடீரென்று ஒரு கல்
விழுந்தது; காயமாகி இரத்தமும் கசிந்தது. வைஷ்ணவர் அண்ணாந்து பார்த்தார்,
கோபுரத்தில் ஒரு காக்கை உட்கார்ந்தபடியால் அந்தப் பழைய கோபுரத்தின் கல் இடிந்து
விழுந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். உடனே அவருக்குக் காயமும் வலியும் மறந்து
போய் ஒரே குதூகலம் உண்டாகி விட்டது. "ஸரீரங்கத்து வீர வைஷ்ணவக் காக்காயே!
திருவானைக்காவல் சிவன் கோயிலை நன்றாய் இடித்துத் தள்ளு!" என்றாராம்.
அந்த
நாளில் இத்தகைய சைவ - வைஷ்ணவ வேற்றுமை மனப்பான்மை மிகப் பரவியிருந்தது. இதைத்
தெரிந்து கொள்ளுதல், பின்னால் இந்தக் கதையைத் தொடர்ந்து படிப்பதற்கு மிக்க
அனுகூலமாயிருக்கும்.
ஓடம் அக்கரை சென்றதும், சைவப் பெரியார்
ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "நீ நாசமாய்ப் போவாய்!" என்று கடைசி சாபம் கொடுத்து
விட்டுத் தம் வழியே போனார்.
வந்தியத்தேவனுடன் வந்த கடம்பூர் வீரன்
பக்கத்திலுள்ள திருப்பனந்தாளுக்குச் சென்று குதிரை சம்பாதித்து வருவதாகச் சொல்லிப்
போனான். ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் ஆற்றங்கரையில் அரச மரத்தின் அடியில்
உட்கார்ந்தார்கள். அந்த மரத்தின் விசாலமான அடர்ந்த கிளைகளில் நூற்றுக்கணக்கான
பறவைகள் மதுரமான கலகலத்வனி செய்து கொண்டிருந்தன.
வந்தியத்தேவனும்,
நம்பியும் ஒருவருடைய வாயை ஒருவர் பிடுங்கி ஏதாவது விஷயத்தைக் கிரஹிக்க
விரும்பினார்கள். முதலில் சிறிது நேரம் சுற்றி வளைத்துப் பேசினார்கள்.
"ஏன்
தம்பி! கடம்பூர் மாளிகைக்கு என்னை அழைத்துப் போகாமல் விட்டு விட்டுப் போனாயல்லவா?"
"நான் போவதே பெரிய கஷ்டமாகப் போய்விட்டது நம்பிகளே!"
"அப்படியா?
பின் எப்படித்தான் போனாய்? ஒருவேளை போகவேயில்லையோ?"
"போனேன், போனேன் ஒரு
காரியத்தை உத்தேசித்து விட்டால் பின்வாங்கி விடுவேனோ? வாசற் காவலர்கள்
தடுத்தார்கள்; குதிரையை ஒரு தட்டு தட்டி உள்ளே விட்டேன், தடுத்தவர்கள் அத்தனை
பேரும் உருண்டு தரையில் விழுந்தார்கள். பிறகு அவர்கள் எழுந்து வந்து என்னைச்
சூழ்ந்து கொள்வதற்குள் என் நண்பன் கந்தமாறன் ஓடிவந்து என்னை அழைத்துப் போனான்."
"அப்படித்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன் மிக்க தைரியசாலி நீ. சரி
அப்புறம் என்ன நடந்தது? யார், யார் வந்திருந்தார்கள்?"
"எத்தனையோ
பிரமுகர்கள் வந்திருந்தார்கள், அவர்களுடைய பெயரெல்லாம் எனக்குத் தெரியாது.
பழுவேட்டரையர் வந்திருந்தார்; அவருடைய இளம் மனையாளும் வந்திருந்தாள். அப்பப்பா!
அந்தப் பெண்ணின் அழகை என்னவென்று சொல்வது?.."
"நீ பார்த்தாயா என்ன?"
"ஆமாம், பார்க்காமலா? என் நண்பன் கந்தமாறன் என்னை அந்தப்புரத்துக்கு
அழைத்துச் சென்றான்; அங்கே பார்த்தேன். அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையரின் இளைய
ராணிதான் பிரமாத அழகுடன் விளங்கினாள்! மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த
ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது. அரம்பை, ஊர்வசி, திலோத்தமை,
இந்திராணி, சந்திராணி எல்லோரும் அவளுக்கு அப்புறந்தான்!"
"அடேயப்பா!
ஒரேயடியாக வர்ணிக்கிறாயே? பிறகு என்ன நடந்தது? குரவைக் கூத்து நடந்ததா?"
"நடந்தது, மிகவும் நன்றாயிருந்தது அப்போது உம்மை நினைத்துக் கொண்டேன்."
"எனக்குக் கொடுத்து வைக்கவில்லை அப்புறம் இன்னும் என்ன நடந்தது?"
"வேலனாட்டம் நடந்தது தேவராளனும் தேவராட்டியும் மேடைக்கு வந்து ஆவேசமாக
ஆடினார்கள்."
"சந்நதம் வந்ததா? ஏதாவது வாக்குச் சொன்னார்களா?"
"ஆகா! நினைத்த காரியம் கைகூடும்; மழை பெய்யும்; நிலம் விளையும்"
என்றெல்லாம் சந்நதக்காரன் சொன்னான்.."
"அவ்வளவுதானா?"
"இன்னும் ஏதோ
இராஜாங்க விஷயமாகச் சொன்னான்; நான் அதையொன்றும் கவனிக்கவில்லை."
"அடாடா!
இவ்வளவுதானா? கவனித்திருக்க வேண்டும், தம்பி! நீ இளம்பிள்ளை; நல்ல வீர பராக்கிரமம்
உடையவனாய்த் தோன்றுகிறாய். இராஜாங்க விஷயங்களைப் பற்றி எங்கேயாவது யாராவது பேசினால்
காதில் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும்."
"நீர் சொல்லுவது உண்மை. எனக்குக்
கூட இன்று காலையில் அப்படித்தான் தோன்றியது."
"காலையில் தோன்றுவானேன்?"
"காலையில் கந்தமாறனும் நானும் பேசிக் கொண்டே கொள்ளிடக்கரை வரையில் வந்தோம்.
இராத்திரி நான் படுத்துத் தூங்கிய பிறகு கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்த
விருந்தாளிகள் கூட்டம் போட்டு ஏதேதோ இராஜாங்க விஷயமாகப் பேசினார்களாம்."
"என்ன பேசினார்களாம்?"
"அது எனக்குத் தெரியாது; கந்தமாறன்
ஏடாகூடமாகச் சொன்னானே தவிர, தௌிவாகச் சொல்லவில்லை. ஏதோ ஒரு காரியம் சீக்கிரம்
நடக்கப் போகிறது அப்போது சொல்கிறேன் என்றான். அவன் பேச்சே மர்மமாயிருந்தது, ஏன்
சுவாமிகளே! உங்களுக்கு ஏதாவது தெரியுமா?"
"எதைப் பற்றி?"
"நாடு
நகரமெல்லாம் ஏதேதோ பேசிக் கொள்கிறார்களே? வானத்தில் வால்நட்சத்திரம் காணப்படுகிறது;
இராஜாங்கத்துக்கு ஏதோ ஆபத்து இருக்கிறது; சோழ சிம்மாசனத்தில் மாறுதல் ஏற்படும்;
அப்படி, இப்படி, என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். தொண்டை மண்டலம் வரையில் இந்தப்
பேச்சு எட்டியிருக்கிறது. இன்னும் யார் யாரோ பெரிய கைகள் சேர்ந்து, அடிக்கடி கூடி,
அடுத்த பட்டத்துக்கு யார் என்று யோசித்து வருகிறார்களாம். உங்களுக்கு என்ன
தோன்றுகிறது? அடுத்த பட்டத்துக்கு யார் வரக்கூடும்."
"எனக்கு அதெல்லாம்
தெரியாது, தம்பி! இராஜாங்க காரியங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான்
வைஷ்ணவன்; ஆழ்வார்களின் அடியார்க்கு அடியான்; எனக்குத் தெரிந்த பாசுரங்களைப் பாடிக்
கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறவன்!"
இவ்வாறு ஆழ்வார்க்கடியான் கூறி, "திருக்
கண்டேன் பொன்மேனி கண்டேன்" என்று பாடத் தொடங்கவும், வந்தியத்தேவன் குறுக்கிட்டு,
"உமக்குப் புண்ணியமாய்ப் போகட்டும், நிறுத்தும்!" என்றான்.
"அடடா! தெய்வத்
தமிழ்ப் பாசுரத்தை நிறுத்தச் சொல்கிறாயே?"
"ஆழ்வார்க்கடியான் நம்பிகளே!
எனக்கு ஒரு சந்தேகம் உதித்திருக்கிறது அதைச் சொல்லட்டுமா?"
"நன்றாய்ச்
சொல்லு!"
"தடியைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரமாட்டீரே?"
"உன்னையா?
உன்னை அடிக்க என்னாலே முடியுமா?"
"உம்முடைய வைஷ்ணவம் பக்தி, ஊர்த்தவ
புண்டரம், பாசுரப் பாடல், எல்லாம் வெறும் வேஷம் என்று சந்தேகிக்கிறேன்."
"ஐயையோ! இது என்ன பேச்சு? அபசாரம்! அபசாரம்!"
"அபசாரமும் இல்லை
உபசாரமும் இல்லை. உம்முடைய பெண்ணாசையை மறைப்பதற்காக இந்த மாதிரி வேஷம் போடுகிறீர்.
உம்மை போல் இன்னும் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன். பெண்ணாசைப் பித்துப்
பிடித்து அலைகிறவர்கள். அப்படி என்னதான் பெண்களிடம் காண்கிறீர்களோ, அதுதான்
எனக்குத் தெரியவில்லை. எனக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் வெறுப்பாகவே
இருக்கிறது."
"தம்பி! பெண் பித்துப் பிடித்து அலைகிறவர்கள் சிலர் உண்டு.
ஆனால் அவர்களோடு என்னைச் சேர்க்காதே, நான் வேஷதாரி அல்ல; நீ அவ்விதம் சந்தேகிப்பது
ரொம்பத் தவறு."
"அப்படியானால் பல்லக்கில் வந்த அந்தப் பெண்ணிடம் ஓலை
கொடுக்கும்படி என்னை ஏன் கேட்டீர்? அதிலும் இன்னொரு மனுஷன் மணம் புரிந்து கொண்ட
பெண்ணிடம் மனதைச் செலுத்தலாமா? நீ கடம்பூர் மாளிகைக்கு வரவேண்டும் என்று சொன்னதும்
அவளைப் பார்ப்பதற்குத்தானே? இல்லை என்று சொல்ல வேண்டாம்!"
"இல்லை என்று
சொல்லவில்லை. ஆனால் அதற்கு நீ கூறிய காரணம் தவறு; வேறு தகுந்த காரணம் இருக்கிறது
அது பெரிய கதை."
"குதிரை இன்னும் வரக்காணோம். அந்தக் கதையைத்தான்
சொல்லுங்களேன்! கேட்கலாம்!"
"கதை என்றால், கற்பனைக் கதை அல்ல; உண்மையாக
நடந்த கதை. அதிசய வரலாறு! கேட்டால் திகைத்துப் போவாய்! அவசியம் சொல்லத்தான்
வேண்டுமா?"
"இஷ்டமிருந்தால் சொல்லுங்கள்!"
"ஆம், சொல்லுகிறேன்
கொஞ்சம் எனக்கு அவசரமாய்ப் போக வேண்டும், இருந்தாலும் சொல்லிவிட்டுப் போகிறேன்.
மறுபடியும் உன்னிடம் ஏதாவது உதவி கோரும்படியிருந்தாலும் இருக்கும் அப்போது தட்டாமல்
செய்வாய் அல்லவா?"
"நியாயமாயிருந்தால் செய்வேன். உங்களுக்கு
இஷ்டமில்லாவிட்டால் ஒன்றும் சொல்ல வேண்டாம்."
"இல்லையில்லை! உன்னிடம்
கட்டாயம் சொல்லியே தீரவேண்டும். அந்த இரணியாசுரன் பழுவேட்டரையரின் இளம் மனைவி
இருக்கிறாள், நான் ஓலை கொண்டு போகச் சொன்னேனே, அவள் பெயர் நந்தினி. அவளுடைய கதையை
நீ கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவாய். உலகில் இப்படியும் அக்கிரமம் உண்டா என்று
பொங்குவாய்!" இந்த முன்னுரையுடன் ஆழ்வார்க்கடியான் நந்தினியைப் பற்றி கதையை
ஆரம்பித்தான்.
ஆழ்வார்க்கடியான் பாண்டிய நாட்டில் வைகை நதிக்கரையில் ஒரு
கிராமத்தில் பிறந்தவன். அவனுடைய குடும்பத்தார் பரம பக்தர்களான வைஷ்ணவர்கள். அவனுடைய
தந்தை ஒருநாள் நதிக்கரையில் உள்ள நந்தவனத்துக்குப் போனார். அங்கே ஒரு பெண் குழந்தை
அனாதையாகக் கிடப்பதைக் கண்டார். குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
குழந்தை களையாகவும் அழகாகவும் இருந்தபடியால் குடும்பத்தார் அன்புடன் போற்றிக்
காப்பாற்றினார்கள்.நந்தவனத்தில் அகப்பட்டபடியால் நந்தினி என்று குழந்தைக்குப்
பெயரிட்டார்கள். ஆழ்வார்க்கடியான் அப்பெண்ணைத் தன் தங்கை என்று கருதிப் பாராட்டி
வந்தான்.
நந்தினிக்குப் பிராயம் வளர்ந்து வந்தது போல் பெருமாளிடம்
பக்தியும் வளர்ந்து வந்தது. அவள் மற்றொரு 'ஆண்டாள்' ஆகிப் பக்தர்களையெல்லாம்
ஆட்கொள்ளப் போகிறாள் என்று அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை
ஆழ்வார்க்கடியானுக்கு அதிகமாயிருந்தது. தந்தை இறந்த பிறகு அப்பெண்ணை வளர்க்கும்
பொறுப்பை அவனே ஏற்றுக் கொண்டான். இருவரும் ஊர் ஊராகச் சென்று ஆழ்வார்களின்
பாசுரங்களைப் பாடி வைஷ்ணவத்தைப் பரப்பி வந்தார்கள். நந்தினி துளசிமாலை அணிந்து
பக்திப் பரவசத்துடன் பாசுரம் பாடியதைக் கேட்டவர்கள் மதிமயங்கிப் போனார்கள்.
ஒரு சமயம் ஆழ்வார்க்கடியான் திருவேங்கடத்துக்கு யாத்திரை சென்றான்.
திரும்பி வரக் காலதாமதமாகி விட்டது. அப்போது நந்தினிக்கு ஒரு விபரீதம் நேர்ந்து
விட்டது. பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இறுதிப் பெரும்போர் மதுரைக்கு அருகில்
நடந்தது. பாண்டியர் சேனை சர்வ நாசம் அடைந்தது. வீரபாண்டியன் உடம்பெல்லாம்
காயங்களுடன் போர்க்களத்தில் விழுந்திருந்தான். அவனுடைய அந்தரங்க ஊழியர்கள் சிலர்
அவனைக் கண்டுபிடித்து எடுத்து உயிர் தப்புவிக்க முயன்றார்கள். இரவுக்கிரவே,
நந்தினியின் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார்கள். பாண்டியனுடைய நிலைமையைக் கண்டு
மனமிரங்கி, நந்தினி அவனுக்குப் பணிவிடை செய்தாள். ஆனால் சீக்கிரத்தில் சோழ வீரர்கள்
அதைக் கண்டுபிடித்து விட்டார்கள். நந்தினியின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு
உட்புகுந்து வீரபாண்டியனைக் கொன்றார்கள். அங்கிருந்த நந்தினியின் அழகைக் கண்டு
மோகித்துப் பழுவேட்டரையர் அவளைச் சிறைபிடித்துக் கொண்டு போய் விட்டார்.
இது
மூன்று வருஷத்துக்கு முன்னால் நடந்தது. பிறகு ஆழ்வார்க்கடியான் நந்தினியைப்
பார்க்கவே முடியவில்லை. அன்று முதல் ஒரு தடவையேனும் நந்தினியைத் தனியே சந்தித்துப்
பேசவும் அவள் விரும்பினால் அவளை விடுதலை செய்து கொண்டு போகவும் ஆழ்வார்க்கடியான்
முயன்று கொண்டிருக்கிறான். இதுவரையில் அம்முயற்சியில் வெற்றி பெறவில்லை....
இந்த வரலாற்றைக் கேட்ட வந்தியத்தேவனுடைய உள்ளம் உருகிவிட்டது. கடம்பூர்
மாளிகையில் பல்லக்கில் இருந்தது நந்தினி இல்லை என்றும், இளவரசன் மதுராந்தகன்
என்றும் ஆழ்வார்க்கடியானிடம் சொல்லி விடலாமா என்று ஒருகணம் யோசித்தான். பிறகு, ஏதோ
ஒன்று மனத்தில் தடை செய்தது. ஒருவேளை இந்தக் கதை முழுதும் ஆழ்வார்க்கடியானின்
கற்பனையோ என்று தோன்றியது. ஆகையால் கடம்பூர் மாளிகையில் தான் அறிந்து கொண்ட
இரகசியத்தைச் சொல்லவில்லை. அப்போது சற்றுத் தூரத்தில், கடம்பூர் வீரன் குதிரையுடன்
வந்து கொண்டிருந்தான்.
"தம்பி! எனக்கு நீ உதவி செய்வாயா?" என்று
ஆழ்வார்க்கடியான் கேட்டான்.
"நான் என்ன உதவி செய்ய முடியும்? பழுவேட்டரையர்
இந்தச் சோழப் பேரரசையே ஆட்டுவிக்கும் ஆற்றல் உடையவர். நானோ ஒரு செல்வாக்குமில்லாத
தன்னந் தனி ஆள். என்னால் என்ன செய்ய முடியும்?" என்று வந்தியத்தேவன் ஜாக்கிரதையாவே
பேசினான்.
பிறகு, "நம்பிகளே! இராஜாங்க காரியங்களைப் பற்றி உமக்கு ஒன்றுமே
தெரியாது என்றா சொல்கிறீர்கள்? சுந்தர சோழ மகாராஜாவுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால்,
அடுத்தப் பட்டத்துக்கு உரியவர் யார் என்று உம்மால் சொல்ல முடியாதா?" என்றான்.
இப்படிக் கேட்டு விட்டு, அடியானுடைய முகபாவத்தில் ஏதாவது மாறுதல்
ஏற்படுகிறதா என்று வந்தியத்தேவன் ஆவலுடன் பார்த்தான், லவலேசமும் மாறுதல்
ஏற்படவில்லை.
"அதெல்லாம் எனக்கு என்ன தெரியும், தம்பி! குடந்தை ஜோசியரைக்
கேட்டால் ஒருவேளை சொல்வார்!" என்றான் நம்பி.
"ஓஹோ! குடந்தை ஜோதிடர்
உண்மையிலேயே அவ்வளவு கெட்டிக்காரர்தானா?"
"அசாத்திய கெட்டிக்காரர்!
சோதிடமும் பார்த்துச் சொல்வார்; மனதை அறிந்தும் சொல்வார்; உலக விவகாரங்களை அறிந்து,
அதற்கேற்பவும் ஆரூடம் சொல்லுவார்!"
"அப்படியானால் அவரைப் பார்த்து விட்டுப்
போக வேண்டியதுதான்!" என்று வந்தியத்தேவன் மனத்தில் தீர்மானித்து கொண்டான்.
ஆதிகாலத்திலிருந்து மனிதகுலத்துக்கு வருங்கால நிகழ்ச்சிகளை அறிந்து
கொள்வதில் பிரமை இருந்து வருகிறது. அரசர்களுக்கும் அந்தப் பிரமை உண்டு;
ஆண்டிகளுக்கும் உண்டு. முற்றும் துறந்த முனிவர்களுக்கும் உண்டு; இல்லறத்தில் உள்ள
ஜனங்களுக்கும் உண்டு; அறிவிற் சிறந்த மேதாவிகளுக்கும் உண்டு மூடமதியினர்களுக்கும்
உண்டு. இத்தகைய பிரமை, நாடு நகரங்களைக் கடந்து பல அபாயங்களுக்குத் துணிந்து,
அரசாங்க அந்தரங்கப் பணியை நிறைவேற்றுவதற்காகப் பிரயாணம் செய்து கொண்டிருந்த
நம்முடைய வாலிப வீரனுக்கும் இருந்ததில் ஆச்சரியம் இல்லை அல்லவா?
பக்க
தலைப்பு
பதின்மூன்றாம் அத்தியாயம் வளர்பிறைச் சந்திரன்
இளவரசிகளின் ரதம் கண்ணுக்கு மறைந்த பிறகு, சோதிடர்
வந்தியத்தேவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். தம்முடைய ஆஸ்தான பீடத்தில்
அமர்ந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த அவ்வாலிபனையும் உட்காரச்
சொன்னார்; அவனை ஏற இறங்கப் பார்த்தார்.
"தம்பி! நீ யார்? எங்கே வந்தாய்?"
என்று கேட்டார், வந்தியத்தேவன் சிரித்தான்.
"என்னப்பா, சிரிக்கிறாய்?"
"இல்லை, தாங்கள் இவ்வளவு பிரபலமான ஜோதிடர் என்னை கேள்வி கேட்கிறீர்களே?
நான் யார், எதற்காகத் தங்களிடம் வந்தேன் என்று ஜோதிடத்திலேயே பார்த்துக் கொள்ளக்
கூடாதா?"
"ஓகோ! அதற்கென்ன? பார்த்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கு நானே
ஜோசியம் பார்த்துக் கொண்டால், தட்சிணை யார் கொடுப்பார்கள் என்றுதான் யோசிக்கிறேன்."
வந்தியத்தேவன் புன்னகை செய்து விட்டு, "ஜோதிடரே! இப்போது இங்கே
வந்துவிட்டுப் போனார்களே? அவர்கள் யார்?" என்று கேட்டான்.
"ஓ! அவர்களா? நீ
யாரைப் பற்றிக் கேட்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. தெரியும் தம்பி, தெரியும்! நீ
என் சீடனைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது இங்கே இருந்தார்களே,
அவர்களைப் பற்றித்தான் கேட்கிறாய், இல்லையா? ரதத்தில் ஏறிக் கொண்டு, பின்னால்
புழுதியைக் கிளப்பி விட்டுக் கொண்டு போனார்களே, அவர்களைப் பற்றித்தானே?" என்று
குடந்தை சோதிடர் சுற்றி வளைத்துக் கேட்டார்.
"ஆமாம், ஆமாம்! அவர்களைப்
பற்றித் தான் கேட்டேன்..."
"நன்றாகக் கேள். கேட்க வேண்டாம் என்று யார்
சொன்னது? அவர்கள் இரண்டு பேரும் இரண்டு பெண்மணிகள்!"
"அது எனக்கே தெரிந்து
போய்விட்டது; ஜோதிடரே! நான் குருடன் இல்லை. ஆண்களையும் பெண்களையும் நான்
வித்தியாசம் கண்டு பிடித்து விடுவேன். பெண் வேடம் பூண்ட ஆணாயிருந்தால் கூட எனக்குத்
தெரிந்து போய்விடும்."
"பின்னே என்ன கேட்கிறாய்?.."
"பெண்கள்
என்றால், அவர்கள் இன்னார், இன்ன ஜாதி.."
"ஓகோ! அதையா கேட்கிறாய்? பெண்களில்
பத்மினி, சித்தினி, காந்தர்வி, வித்யாதரி என்பதாக நாலு ஜாதிகள் உண்டு. உனக்குச்
சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் கொஞ்சம் பயிற்சி இருக்கும் போலிருக்கிறது. அந்த
நாலு ஜாதிகளில் இவர்கள் பத்மினி, காந்தர்வி ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்."
"கடவுளே!..."
"ஏன்? அப்பனே!"
"கடவுளை நான் கூப்பிட்டால்,
நீங்கள் 'ஏன்?' என்று கேட்கிறீர்களே?"
"அதில் என்ன பிசகு? கடவுள்
சர்வாந்தர்யாமி என்று நீ கேட்டதில்லையா? பெரியவர்களுடைய சகவாசம் உனக்கு அவ்வளவாகக்
கிடையாது போலிருக்கிறது! எனக்குள்ளே இருப்பவரும் கடவுள் தான்; உனக்குள்ளே
இருப்பவரும் கடவுள் தான். நீ இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாயே அந்த என்
சீடனுக்குள்ளே இருப்பவரும் கடவுள்தான்..."
"போதும், போதும்,
நிறுத்துங்கள்."
"இத்தனை நேரம் பேசச் சொன்னதும் கடவுள்தான்; இப்போது
நிறுத்தச் சொல்வதும் கடவுள்தான்!"
"ஜோதிடரே! இப்போது இங்கேயிருந்து
போனார்களே, அந்தப் பெண்கள் யார், எந்த ஊர், என்ன குலம், என்ன பெயர், என்று
கேட்டேன். சுற்றி வளைக்காமல் மறுமொழி சொன்னால்.."
"சொன்னால் எனக்கு நீ என்ன
தருவாய் அப்பனே!"
"என் வந்தனத்தைத் தருவேன்."
"உன் வந்தனத்தை நீயே
வைத்துக்கொள். ஏதாவது பொன்தானம் கொடுப்பதாயிருந்தால் சொல்லு!"
"பொன்தானம்
கொடுத்தால் நிச்சயமாய்ச் சொல்லுவீர்களா?"
"அதுவும்
சொல்லக்கூடியதாயிருந்தால்தான் சொல்லுவேன்! தம்பி! இதைக் கேள். ஜோதிடன் வீட்டுக்குப்
பலரும் வந்து போவார்கள். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லக் கூடாது. இப்போது
போனவர்களைப் பற்றி உன்னிடம் சொல்ல மாட்டேன். உன்னைப் பற்றி வேறு யாராவது கேட்டால்
அவர்களுக்கும் உன்னைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டேன்."
"ஆகா!
ஆழ்வார்க்கடியான்நம்பி தங்களைப் பற்றிச் சொன்னது முற்றும் உண்மைதான்."
"ஆழ்வார்க்கடியாரா? அவர் யார், அப்படி ஒருவர்?"
"தங்களுக்குத்
தெரியாதா, என்ன? ரொம்பவும் தங்களைத் தெரிந்தவர்போல் பேசினாரே? ஆழ்வார்க்கடியான்
நம்பி என்று கேட்டதேயில்லையா?"
"ஒருவேளை ஆளைத் தெரிந்திருக்கும்; பெயர்
ஞாபகம் இராது கொஞ்சம் அடையாளம் சொல்லு, பார்க்கலாம்!"
"கட்டையாயும்
குட்டையாயும் இருப்பார், முன் குடுமி வைத்திருப்பார். இளந்தொந்தியில் வேட்டியை
இறுக்கிக் கட்டியிருப்பார். சந்தனத்தைக் குழைத்து உடம்பெல்லாம் கீழிருந்து மேலாக
இட்டிருப்பார். சைவர்களைக் கண்டால் சண்டைக்குப் போவார். அத்வைதிகளைக் கண்டால்
தடியைத் தூக்குவார். சற்றுமுன்னால் 'நீயும் கடவுள், நானும் கடவுள்' என்றீர்களே, இதை
ஆழ்வார்க்கடியான் கேட்டிருந்தால் 'கடவுளைக் கடவுள் தாக்குகிறது!' என்று சொல்லித்
தடியினால் அடிக்க வருவார்..."
"தம்பி! நீ சொல்லுவதையெல்லாம் சேர்த்துப்
பார்த்தால் திருமலையப்பனைப் பற்றிச் சொல்லுகிறாய் போலிருக்கிறது.."
"அவருக்கு அப்படி வெவ்வேறு பெயர்கள் உண்டா?"
"ஊருக்கு ஒரு பெயர்
வைத்துக் கொள்வார் அந்த வீர வைஷ்ணவர்."
"ஆளுக்குத் தகுந்த வேஷமும்
போடுவாராக்கும்!"
"ஆகா! சமயத்துக்குத் தகுந்த வேஷமும் போடுவார்."
"சொல்லுவதில் கொஞ்சம் கற்பனையும் பொய்யும் கலந்திருக்குமோ?"
"முக்காலே மூன்றரை வீசம் பொய்யும் கற்பனையும் இருக்கும்; அரை வீசம்
உண்மையும் இருக்கலாம்."
"ரொம்பப் பொல்லாத மனிதர் என்று சொல்லுங்கள்!"
"அப்படியும் சொல்லிவிட முடியாது. நல்லவர்க்கு நல்லவர்; பொல்லாதவர்க்குப்
பொல்லாதவர்."
"அவருடைய பேச்சை நம்பி ஒன்றும் செய்ய முடியாது."
"நம்புவதும் நம்பாததும் அந்தந்தப் பேச்சைப் பொறுத்திருக்கிறது..."
"உதாரணமாக, தங்களிடம் போய்ச் சோதிடம் கேட்டால் நல்லபடி சொல்லுவீர்கள் என்று
அவர் கூறியது..."
"அவர் பேச்சில் அரை வீசம் உண்மையும் இருக்கும் என்றேனே,
அந்த அரை வீசத்தில் அது சேர்ந்தது."
"அப்படியானால் எனக்கு ஏதாவது ஜோதிடம்,
ஆரூடம் சொல்லுங்கள்; நேரமாகிவிட்டது எனக்குப் போகவேண்டும், ஐயா!"
"அப்படி
அவசரமாக எங்கே போக வேண்டும், அப்பனே!"
"அதையும் தாங்கள் ஜோதிடத்தில்
பார்த்துச் சொல்லக் கூடாதா? எங்கே போகவேண்டும், எங்கே போகக் கூடாது, போனால் காரியம்
சித்தியாகுமா என்பதைப் பற்றியெல்லாந்தான் தங்களைக் கேட்க வந்தேன்."
"ஜோதிடம், ஆரூடம் சொல்வதற்கும் ஏதாவது ஆதாரம் வேண்டும், அப்பனே! ஜாதகம்
வேண்டும்; ஜாதகம் இல்லாவிடில், பிறந்தநாள், நட்சத்திரமாவது தெரிய வேண்டும்; அதுவும்
தெரியாவிடில், ஊரும் பேருமாவது சொல்ல வேண்டும்".
"என் பெயர்
வந்தியத்தேவன்!"
"ஆகா! வாணர் குலத்தவனா?"
"ஆமாம்."
"வல்லவரையன் வந்தியத்தேவனா?"
"சாட்சாத் அவனேதான்."
"அப்படிச் சொல்லு, தம்பி! முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? உன் ஜாதகம் கூட
என்னிடம் இருந்ததே! தேடிப் பார்த்தால் கிடைக்கும்."
"ஓஹோ! அது எப்படி?"
"என்னைப் போன்ற ஜோதிடர்களுக்கு வேறு என்ன வேலை. பெரிய வம்சத்தில் பிறந்த
பிள்ளைகள் - பெண்கள் இவர்களுடைய ஜாதகங்களையெல்லாம் சேர்த்து வைத்துக் கொள்வோம்".
"நான் அப்படியொன்றும் பெரிய வம்சத்தில் பிறந்தவன் அல்லவே..."
"நன்றாகச் சொன்னாய்! உன்னுடைய குலம் எப்பேர்ப்பட்ட குலம்! வாணர் குலத்தைப்
பற்றிக் கவிவாணர்கள் எவ்வளவு கவிகளையெல்லாம் பாடியிருக்கிறார்கள்! ஒருவேளை நீ
கேட்டிருக்க மாட்டாய்."
"ஒரு கவிதையைத்தான் சொல்லுங்களேன், கேட்கலாம்."
ஜோதிடர் உடனே பின்வரும் பாடலைச் சொன்னார்:
"வாணன் புகழுரையா வாயுண்டோ மாகதர்கோன்
வாணன் பெயரெழுதா மார்புண்டோ - வாணன்
கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ
அடிதாங்கி நில்லா அரசு!"
ஜோதிடர் இசைப்புலவர் அல்லவென்பது அவர் பாடும்போது வௌியாயிற்று. ஆயினும்
பாடலைப் பண்ணில் அமைத்து மிக விளக்கமாகவும் உருக்கமாகவும் பாடினார்.
"கவி
எப்படியிருக்கிறது?" என்று கேட்டார்.
"கவி காதுக்கு நன்றாகத்தான்
இருக்கிறது. ஆனால் என்னுடைய கொடியை ஏதாவது ஒரு மாட்டின் கொம்பில் நானே கட்டி
விட்டால்தான் உண்டு. அரசமரத்துக் கிளை மேல் ஏறி நின்றால்தான் அரசு என் அடியைத்
தாங்கும்; அதுகூடச் சந்தேகம்தான். கனம் தாங்காமல் கிளை முறிந்து என்னையும் கீழே
தள்ளினாலும் தள்ளும்!" என்றான் வந்தியத்தேவன்.
"இன்றைக்கு உன் நிலைமை
இப்படி; நாளைக்கு எப்படியிருக்கும் என்று யார் கண்டது?" என்றார் ஜோதிடர்.
"தாங்கள் கண்டிருப்பீர்கள் என்று எண்ணியல்லவா வந்தேன்?" என்றான்
வல்லவரையன்.
"நான் என்னத்தைக் கண்டேன், தம்பி! எல்லாரையும் போல் நானும்
அற்ப ஆயுள் படைத்த மனிதன்தானே? ஆனால் கிரகங்களும் நட்சத்திரங்களும் வருங்கால
நிகழ்ச்சிகளைச் சொல்லுகின்றன. அவை சொல்லுவதை நான் சிறிது கண்டறிந்து
கேட்பவர்களுக்குச் சொல்கிறேன், அவ்வளவுதான்!"
"கிரஹங்களும்
நட்சத்திரங்களும் என் விஷயத்தில் என்ன சொல்கின்றன ஜோதிடரே?"
"நீ நாளுக்கு
நாள் உயர்வாய் என்று சொல்லுகின்றன."
"சரியாகப் போச்சு! இப்போதுள்ள உயரமே
அதிகமாயிருக்கிறது. உங்கள் வீட்டில் நுழையும்போது குனிய வேண்டியிருக்கிறது! இன்னும்
உயர்ந்து என்ன செய்வது? இப்படியெல்லாம் பொதுவாகச் சொல்லாமல் குறிப்பாக ஏதாவது
சொல்லுங்கள்."
"நீ ஏதாவது குறிப்பாகக் கேட்டால், நானும் குறிப்பாகச்
சொல்லுவேன்."
"நான் தஞ்சாவூருக்குப் போகிற காரியம் கைகூடுமா? சொல்லுங்கள்."
"நீ தஞ்சாவூருக்கு உன் சொந்தக் காரியமாகப் போகிறதானால் போகிற காரியம்
கைகூடும். இப்போது உனக்கு ஜயக்கிரகங்கள் உச்சமாயிருக்கின்றன. பிறருடைய காரியமாகப்
போவதாயிருந்தால், அந்த மனிதர்களுடைய ஜாதகத்தைப் பார்த்துச் சொல்ல வேண்டும்!"
வந்தியத்தேவன் தலையை ஆட்டிக் கொண்டு மூக்கின் மேல் விரலை வைத்து, "ஜோதிடரே!
தங்களைப் போன்ற சாமர்த்தியசாலியை நான் பார்த்ததேயில்லை!" என்றான்.
"முகஸ்துதி செய்யாதே, தம்பி!" என்றார் ஜோதிடர்.
"இருக்கட்டும்.
கேட்க வேண்டியதைத் தௌிவாகவே கேட்டு விடுகிறேன். தஞ்சாவூரில் சக்கரவர்த்தியைத்
தரிசிக்க விரும்புகிறேன், அது சாத்தியமாகுமா?"
"என்னைவிடப் பெரிய
ஜோதிடர்கள் இருவர் தஞ்சாவூரில் இருக்கிறார்கள் அவர்களைதான் கேட்கவேண்டும்."
"அவர்கள் யார்?"
"பெரிய பழுவேட்டரையர் ஒருவர்; சின்ன பழுவேட்டரையர்
ஒருவர்."
"சக்கரவர்த்தியின் உடல்நிலை மிக மோசமாகியிருப்பதாகச்
சொல்கிறார்களே? அது உண்மையா?"
"யாராவது ஏதாவது சொல்லுவார்கள்! சொல்லுவதற்கு
என்ன? அதையெல்லாம் நம்பாதே! வௌியிலும் சொல்லாதே!"
"சக்கரவர்த்திக்கு ஏதாவது
நேர்ந்துவிட்டால், அடுத்த பட்டம் யாருக்கு என்று சொல்ல முடியுமா?"
"அடுத்த
பட்டம் உனக்குமில்லை; எனக்குமில்லை; நாம் ஏன் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்?"
"அந்த மட்டில் தப்பிப் பிழைத்தோம்!" என்றான் வந்தியத்தேவன்.
"உண்மைதான், தம்பி! பட்டத்துக்குப் பாத்தியதை என்பது சாதாரண விஷயம் அல்ல;
மிக்க அபாயகரமான விஷயம் இல்லையா!"
"ஜோசியரே! தற்சமயம் காஞ்சியில்
இருக்கிறாரே, இளவரசர் ஆதித்த கரிகாலர்."
"இருக்கிறார். அவருடைய
சார்பாகத்தானே நீ வந்திருக்கிறாய்!"
"கடைசியாகக் கண்டு பிடித்து
விட்டீர்கள்; சந்தோஷம் அவருடைய யோகம் எப்படி இருக்கிறது."
"ஜாதகம் கைவசம்
இல்லை, தம்பி! பார்த்துத்தான் சொல்ல வேண்டும்."
"இளவரசர் மதுராந்தகரின்
யோகம் எப்படி?"
"அவருடையது விசித்திரமான ஜாதகம். பெண்களின் ஜாதகத்தை
ஒத்தது. எப்போதும் பிறருடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டிருப்பது..."
"இப்போதுகூடச் சோழ நாட்டில் பெண்ணரசு நடைபெறுவதாகச் சொல்கிறார்களே? அல்லி
ராஜ்யத்தைவிட மோசம் என்கிறார்களே?"
"எங்கே தம்பி அப்படிச்
சொல்லுகிறார்கள்?"
"கொள்ளிடத்துக்கு வடக்கே சொல்லுகிறார்கள்?"
"பெரிய பழுவேட்டரையர் புதியதாக மணம் புரிந்து கொண்ட இளைய ராணியின்
ஆதிக்கத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் போலிருக்கிறது."
"நான் கேள்விப்பட்டது
வேறு."
"என்ன கேள்விப்பட்டாய்?"
"சக்கரவர்த்தியின் திருக்குமாரி
குந்தவைப் பிராட்டிதான் அவ்விதம் பெண்ணரசு செலுத்துவதாகச் சொல்கிறார்கள்!"
ஜோதிடர் சற்றே வந்தியத்தேவன் முகத்தை உற்றுப் பார்த்தார். சற்றுமுன் அந்த
வீட்டிலிருந்து சென்றது குந்தவை தேவி என்று தெரிந்து கொண்டுதான் அவ்விதம்
கேட்கிறானோ என்று முகத்திலிருந்து அறிய முயன்றார். ஆனால் அதற்கு அறிகுறி ஒன்றும்
தெரியவில்லை.
"சுத்தத் தவறு, தம்பி! சுந்தர சோழ சக்கரவர்த்தி தஞ்சையில்
இருக்கிறார், குந்தவைப்பிராட்டி பழையாறையில் இருக்கிறார் மேலும்..."
"மேலும் என்ன? ஏன் நிறுத்தி விட்டீர்கள்?"
"பகலில் பக்கம்
பார்த்துப் பேச வேண்டும்; இரவில் அதுவும் பேசக் கூடாது. ஆனாலும் உன்னிடம் சொன்னால்
பாதகமில்லை. இப்போது சக்கரவர்த்திக்கு அதிகாரம் ஏது? எல்லா அதிகாரங்களையும்
பழுவேட்டரையர்கள் அல்லவா செலுத்துகிறார்கள்!"
இப்படி சொல்லிவிட்டுச்
ஜோதிடர் வந்தியத்தேவனுடைய முகத்தை
|