|
Maha Kavi Subramaniya Bharathy -Thothirap Padalkal
6
சி. சுப்ரமணிய பாரதியார்
- தோத்திரப் பாடல்கள்
6
[eText input: Govardhanan proof/read
version (proof-read Kalyanasundaram) © Project Madurai 1999 Project
Madurai is an open, voluntary, worldwide initiative devoted to
preparation of electronic texts of Tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website
http://www.projectmadurai.org You are welcome to
freely distribute this file, provided this header page is kept
intact. To view the Tamil text
correctly you need to set up the following: i). You need to have
Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS,
TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or
Windows XP). and ii) Use a browser that is capable of handling
UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode
Tamil font chosen as the default font for the UTF-8
char-set/encoding view. The Latha font may be downloaded from
here]
65.
ஆறு துணை
66.
விடுதலை வெண்பா
67.
ஜயம் உண்டு
68.
ஆரிய தரிசனம்
69.
சூரிய தரிசனம்
70.
ஞாயிறு வணக்கம்
71.
ஞான பாநு
72.
சோமதேவன் புகழ்
73.
வெண்ணிலாவே
74.
தீ வளர்த்திடுவோம்!
75.
வேள்வித் தீ
76.
கிளிப்பாட்டு
77.
யேசு
கிறிஸ்து 78.
அல்லா
65. ஆறு துணை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
கணபதி ராயன் - அவனிரு
காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே - விடுதலை
கூடி மகிழ்ந் திடவே. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
சொல்லுக் கடங்காவே - பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள் - பரா சக்தி
வாழி யென்றே துதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
வெற்றி வடிவேலன் - அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்,
சுற்றி நில்லாதே போ! - பகையே!
துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
தாமரைப் பூவினிலே - சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
பாம்புத் தலைமேலே - நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே - குழலிசை
வண்மை புகழ்ந்திடு வோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
செல்வத் திருமகளைத் - திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வ மெல்லாந் தருவாள் - நம தொளி
திக்க னைத்தும் பரவும் ஓம் சக்தி. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

66. விடுதலை வெண்பா
சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து
பக்தியினாற் பாடிப் பலகாலும் - முக்திநிலை
காண்போம், அதனாற் கவலைப் பிணிதீர்ந்து
பூண்போம் அமரப் பொறி.
பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ
வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம் - நெறிகொண்ட
வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை
ஐயமெலாந் தீர்ந்த தறிவு.
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்; - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சீர்மிகுந்த வேல்.
வேலைப் பணிந்தால் விடுதலையாம்! வேல்முருகன்
காலைப் பணிந்தால் கவலைபோம் - மேலறிவு
தன்னாலே தான்பெற்று சக்திசக்தி சக்தியென்று
சொன்னால் அதுவே சுகம்.
சுகத்தினைநான் வேண்டித் தொழுதேன், எப்போதும்
அகத்தினிலே துன்புற் றழுதேன் - யுகத்தினிலோர்
மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி
ஆறுதலைத் தந்தாள் அவள்.

67. ஜயம் உண்டு
ராகம் - காமாஸ் தாளம் - ஆதி
அனுபல்லவி
ஜயமுண்டு பயமில்லை மனமே ! - இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு (ஜய)
அனுபல்லவி
பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. (ஜய)
சரணங்கள்
புயமுண்டு குன்றத்தைப் போலே - சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே,
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை; குலசக்தி
நெறியுண்டு, குறியுண்டு; வெறியுண்டு. (ஜய)
மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ
வலியுண்டு தீமையைப் பேர்க்கும்.
விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு. (ஜய)
அலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி
அருளென்னுந் தோணியி னாலே,
தொலையொட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)

68. ஆரிய தரிசனம்
ஓர் கனவு
ராகம் - ஸ்ரீராகம் தாளம் - ஆதி
கனவென்ன கனவே - என்றன்
கண் துயி லாது நனவினிலே யுற்ற (கன)
கானகங் கண்டேன் - அடர்
கானகங் கண்டேன் - உச்சி
வானகத்தே வட்ட மதியொளி கண்டேன். (கன)
பொற்றிருக் குன்றம் - அங்கொர்
பொற்றிருக் குன்றம் - அதைச்
சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும். (கன)
புத்த தரிசனம்
குன்றத்தின் மீதே - அந்தக்
குன்றத்தின் மீதே - தனி
நின்றதோர் ஆல நெடுமரங் கண்டேன். (கன)
பொன்மரத் தின்கீழ் - அந்தப்
பொன்மரத் தின்கீழ் - வெறுஞ்
சின்மய மானதோர் தேவன் இருந்தனன். (கன)
புத்த பகவன் - எங்கள்
புத்த பகவன் - அவன்
சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். (கன)
காந்தியைப் பார்த்தேன் - அவன்
காந்தியைப் பார்த்தேன் - உபசாந்தியில் மூழ்கத் ததும்பிக் குளித்தனன். (கன)
ஈதுநல் விந்தை! - என்னே!
ஈதுநல் விந்தை! - புத்தன்
சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன். (கன)
பாய்ந்ததங் கொளியே; - பின்னும்
பாய்ந்ததங் கொளியே; - அருள்
தேய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன)
கிருஷ்ணார்ஜுன தரிசனம்
குன்றத்தின் மீதே - அந்தக்
குன்றத்தின் மீதே - தனி
நின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன். (கன)
தேரின்முன் பாகன் - மணித்
தேரின்முன் பாகன் - அவன்
சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன)
ஓமென்ற மொழியும் - அவன்
ஓமென்ற மொழியும் - நீலக்
காமன்றன் உருவுமவ் வீமன்றன் திறலும் (கன)
அருள் பொங்கும் விழியும் - தெய்வ
அருள் பொங்கும் விழியும் - காணில்
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்குந்த் திகிரியும் (கன)
கண்ணனைக் கண்டேன் - எங்கள்
கண்ணனைக் கண்டேன் - மணி
வண்ணனை ஞான மலையினைக் கண்டேன். (கன)
சேனைகள் தோன்றும் - வெள்ளச்
சேனைகள் தோன்றும் - பரி
யானையுந் தேரும் அளவில் தோன்றும். (கன)
கண்ணன்நற் றேரில் - நீலக்
கண்ணன்நற் றேரில் - மிக
எண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன)
விசையன்கொ லிவனே! - வ'றல்
விசையன்கொ லிவனே! - நனி
இசையும் நன்கிசையுமிங் கிவனுக் கிந்நாமம். (விசை)
வீரிய வடிவம்! - என்ன
வீரிய வடிவம்! - இந்த
ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை! (விசை)
பெற்றதன் பேறே - செவி
பெற்றதன் பேறே - அந்தக்
கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன். (பெற்ற)
"வெற்றியை வேண்டேன்; - ஜய
வெற்றியை வேண்டேன்! - உயிர்
அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (பெற்ற)
சுற்றங் கொல்வேனோ? - என்றன்
சுற்றங் கொல்வேனோ? - கிளை
அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ?" (பெற்ற)
மிஞ்சிய அருளால் - மித
மிஞ்சிய அருளால் - அந்த
வெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன)
இம்மொழி கேட்டான் - கண்ணன்
இம்மொழி கேட்டான் - ஐயன்
செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன)
வில்லினை யெடடா! கையிற்
வில்லினை யெடடா - அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா! (வில்லினை)
வாடி நில்லாதே; - மனம்
வாடி நில்லாதே; - வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்லினை)
ஒன்றுள துண்மை - என்றும்
ஒன்றுள துண்மை - அதைக்
கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது (வில்லினை)
துன்பமு மில்லை - கொடுந்
துன்பமு மில்லை - அதில்
இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை. (வில்லினை)
படைகளுந் தீண்டா - அதைப்
படைகளுந் தீண்டா - அனல்
சுடவு மொண்ணாது புனல்நனை யாது. (வில்லினை)
செய்தலுன் கடனே - அறஞ்
செய்தலுன் கடனே - அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே (வில்லினை)

69. சூரிய தரிசனம்
ராகம் - பூபாளம்
சுருதி யின்கண் முனிவரும் பின்னே
தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;
பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!
பானுவே! பொன்செய் பேரொளித் திரளே!
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கட லின்னொலி யோடு
நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
கடுகியோடும் கதிரினம் பாடி
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

70. ஞாயிறு வணக்கம்
கடலின்மீது கதிர்களை வீசிக்
கடுகி வான்மிசை ஏறுதி யையா!
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு
பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்.
உடல் பரந்த கடலுந் தன்னுள்ளே
ஒவ்வொரு நுண்டுளி யும்வழி யாகச்
சுடரும் நின்றன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.
என்ற னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திட செய்குவை யையா!
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
காதல் கொண்டனை போலும் மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.

71. ஞான பாநு
திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல் லறிவு, வீரம்
மருவுபல் கலையின் சோதி வல்லமை யென்ப வெல்லாம்,
வருவது ஞானத் தாலே வையக முழுவதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பாநு.
கவலைகள் சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்,
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்,
நவமுறு ஞான பாநு நண்ணுக; தொலைக பேய்கள்.
அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்,
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே, கூடிவாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம்.
பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும், ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தி னோடும்
நண்ணிடும் ஞானபாநு அதனை நாம் நன்கு போற்றின்.

72. சோமதேவன் புகழ்
ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா!
ஜய ஜய!
சரணம்
நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
வயமிக்க அசு ரரின் மாயையைச் சுட்டாய்,
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
துயர் நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்.
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பய்
உயவேண்டி இருவருளம் ஒன்றுறக் கோப்பாய்;
புயலிருண் டேகு முறி யிருள்வீசி வரல்போற்
பொய்த்திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய் (ஜய)

73. வெண்ணிலாவே
எல்லை யில்லாதோர் வானக் கடலிடை
வெண்ணிலாவே! - விழிக்
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
வெண்ணிலாவே!
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
வெண்ணிலாவே! - நின்றன்
சோதி மயக்கும் வகையது தானென்சொல்
வெண்ணிலாவே!
நல்ல ஒளியின் வகைபல கண்டிலன்
வெண்ணிலாவே! - இந்த
நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்
வெண்ணிலாவே!
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளன்று
வெண்ணிலாவே! - வந்து
கூடியிருக்குது நின்னொளி யோடிங்கு
வெண்ணிலாவே!
மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர்
வெண்ணிலாவே! - அ·து
வயதிற் கவலையின் நோவிற் கெடுவது
வெண்ணிலாவே!
காத லொருத்தி இளைய பிராயத்தள்
வெண்ணிலாவே! - அந்தக்
காமன்றன் வில்லை யிணைத்த புருவத்தள்
வெண்ணிலாவே!
மீதெழும் அன்பின் விலைபுன் னகையினள்
வெண்ணிலாவே! - முத்தம்
வேண்டிமுன் காட்டு முகத்தின் எழிலிங்கு
வெண்ணிலாவே!
சாதல் அழிதல் இலாது நிரந்தரம்
வெண்ணிலாவே! - நின்
தண்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்?
வெண்ணிலாவே!
நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு
வெண்ணிலாவே! - நன்கு
நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன்
வெண்ணிலாவே!
மன்னு பொருள்க ளனைத்திலும் நிற்பவன்
வெண்ணிலாவே! - அந்த
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்
வெண்ணிலாவே!
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி
வெண்ணிலாவே! - இங்கு
தோன்றும் உலகவ ளேயென்று கூறுவர்
வெண்ணிலாவே!
பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும்
வெண்ணிலாவே! - நல்ல
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்
வெண்ணிலாவே!
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
வெண்ணிலாவே! - நினைக்
காதல் செய்வார் நெஞ்சிற் கின்னமு தாகுவை
வெண்ணிலாவே!
சீத மணிநெடு வானக் குளத்திடை
வெண்ணிலாவே! - நீ
தேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை
வெண்ணிலாவே!
மோத வருங்கரு மேகத் திரளினை
வெண்ணிலாவே! - நீ
முத்தி ணொளிதந் தழகுறச் செய்குவை
வெண்ணிலாவே!
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்
வெண்ணிலாவே! - நலஞ்
செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ?
வெண்ணிலாவே!
மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்
வெண்ணிலாவே! - உன்றன்
மேனி யழகு மிகைபடக் காணுது
வெண்ணிலாவே!
நல்லிய லார்யவ னத்தியர் மேனியை
வெண்ணிலாவே! - மூடு
நற்றிரை மேனி நயமிகக் காட்டிடும்
வெண்ணிலாவே!
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும்
வெண்ணிலாவே! - நின்
சோதி வதனம் முழுதும் மறைத்தனை
வெண்ணிலாவே!
புல்லியன் செய்த பிழைபொறுத் தேயருள்
வெண்ணிலாவே! - இருள்
போகிடச் செய்து நினதெழில் காட்டுதி
வெண்ணிலாவே!

74. தீ வளர்த்திடுவோம்!
யாகப் பாட்டு
ராகம் - புன்னாகவராளி
பல்லவி
தீ வளர்த்திடுவோம்! - பெருந்
தீ வளர்த்திடுவோம்!
சரணங்கள்
ஆவியி னுள்ளும் அறிவி னிடையிலும்
அன்பை வளர்த்திடுவோம் - விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம் - களி
ஆவல் வளர்த்திடுவோம் - ஒரு
தேவி மகனைத் திறமைக் கடவுளைச்
செங்கதிர் வானவனை - விண்ணோர் தமைத்
தேனுக் கழைப்பவனைப் - பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)
சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத்
தீமை யழிப்பவனை - நன்மை
சேர்த்துக் கொடுப்பவனை - பல
சீர்க ளுடையவனைப் - புவி
அத்தனை யுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும்
ஆரியர் நாயகனை - உருத்திரன்
அன்புத் திருமகனை - பெருந்திர
ளாகிப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ)
கட்டுகள் போக்கி விடுதலை தந்திடுங்
கண்மணி போன்றவனை - எம்மைக்
காவல் புரிபவனைத் - தொல்லைக்
காட்டை யழிப்பவனைத் - திசை
எட்டும் புகழ்வளர்ந்தோங்கிட - வித்தைகள்
யாவும் பழகிடவே - புவிமிசை
இன்பம் பெருகிடவே - பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம் - வாரீர் (தீ)
நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
நீக்கிக் கொடுப்பவனை - உயிர்
நீளத் தருபவனை - ஒளிர்
நேர்மைப் பெருங்கனலை - நித்தம்
அஞ்ச லெஞ்சே லென்று கூறி எமக்குநல்
ஆண்மை சமைப்பவனைப் - பல்வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப் - பெருந்திரள்
ஆகிப் பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)
அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
அழித்திடும் வானவனைச் - செய்கை
ஆற்றுமதிச் சுடரைத் - தடை
யற்ற பெருந்திறலை - எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும்
ஏற்றதோர் நல்லறமும் - கலந்தொளி
ஏற்றுந் தவக்கனலைப் - பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)
வான கத்தைச்சென்று தீண்டுவன் இங்கென்று
மண்டி யெழுந்தழலைக் - கவி
வாணர்க்கு நல்லமுதைத் - தொழில்
வண்ணந் தெரிந்தவனை - நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
தீம்பழம் யாவினையும் - இங்கேயுண்டு
தேக்கிக் களிப்பவனைப் - பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)
சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்
தேவத் திருமகளிர் - இன்பத்
தேக்கிடுந் தேனிசைகள் - சுவை
தேறிடு நல்லிளமை - நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த
முழுக்குடம் பற்பலவும் - இங்கேதர
முற்பட்டு நிற்பவனைப் - பெருந்திரள்
மொய்த்துப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ)

75. வேள்வித் தீ
ராகம் - நாதநாமக்கிரியை தாளம் - சதுஸ்ர ஏகம்
ரிஷிகள்: எங்கள் வேள்விக் கூடமீதில்
ஏறுதே தீ! தீ! - இந்நேரம்
பங்க முற்றே பேய்க ளோடப்
பாயுதே தீ! தீ! இந்நேரம்.
அசுரர்: தோழரே, நம் ஆவி வேகச்
சூழுதே தீ! தீ! - ஐயோ! நாம்
வாழ வந்த காடு வேக
வந்ததே தீ! தீ! - அம்மாவோ!
ரிஷிகள்: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்
போந்து விட்டானே! - இந்நேரம்
சின்ன மாகிப் பொய் யரக்கர்
சிந்தி வீழ்வாரே! - இந்நேரம்.
அசுரர்: இந்திராதி தேவர் தம்மை
ஏசி வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
வெந்து போக மானிடர்க்கோர்
வேதமுண்டாமோ! - அம்மாவோ!
ரிஷிகள்: வானை நோக்கிக் கைகள் தூக்கி
வளருதே தீ! தீ! - இந்நேரம்,
ஞான மேனி உதய கன்னி
நண்ணி விட்டாளே! - இந்நேரம்
அசுரர்: கோடி நாளாய் இவ்வனத்திற்
கூடி வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
பாடி வேள்வி மாந்தர் செய்யப்
பண்பிழந் தோமே! - அம்மாவோ!
ரிஷிகள்: காட்டில் மேயுங் காளை போன்றான்
காணுவீர் தீ! தீ! - இந்நேரம்
ஓட்டியோட்டிப் பகையை யெல்லாம்
வாட்டு கின்றானே! - இந்நேரம்.
அசுரர்: வலி யிலாதார் மாந்த ரென்று
மகிழ்ந்து வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
கலியை வென்றோர் வேத வுண்மை
கண்டு கொண்டாரே! - அம்மாவோ!
ரிஷிகள்: வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்
வாய்திறந் தானே! - இந்நேரம்
மலியு நெய்யுந் தேனுமுண்டு
மகிழ வந்தானே! - இந்நேரம்.
அசுரர்: உயிரை விட்டும் உணர்வை விட்டும்
ஓடி வந்தோமே - ஐயோ! நாம்
துயிலுடம்பின் மீதிலுந் தீ
தோன்றி விட்டானே! - அம்மாவோ!
ரிஷிகள்: அமரர் தூதன் சமர நாதன்
ஆர்த் தெழுந்தானே! - இந்நேரம்
குமரி மைந்தன் எமது வாழ்விற்
கோயில் கொண்டானே! - இந்நேரம்.
அசுரர்: வருணன் மித்ரன் அர்ய மானும்
மதுவை உண்பாரே - ஐயோ! நாம்
பெருகு தீயின் புகையும் வெப்பும்
பின்னி மாய்வோமே! - அம்மாவோ!
ரிஷிகள்: அமர ரெல்லாம் வந்து நம்முன்
அவிகள் கொண்டாரே! - இந்நேரம்
நமனு மில்லை பகையு மில்லை
நன்மை கண்டோமே! - இந்நேரம்
அசுரர்: பகனு மிங்கே யின்ப மெய்திப்
பாடுகின்றானே - ஐயோ! நாம்
புகையில் வீழ இந்திரன் சீர்
பொங்கல் கண்டீரோ! - அம்மாவோ!
ரிஷிகள்: இளையும் வந்தாள் கவிதை தந்தாள்
இரவி வந்தானே! - இந்நேரம்
விளையுமெங்கள் தீயினாலே
மேன்மையுற்றோமே! - இந்நேரம்
ரிஷிகள்: அன்ன முண்பீரே பாலும் நெய்யும்
அமுது முண்பீரே! - இந்நேரம்
ம'ன்ன' நின்றீர் தேவ ரெங்கள்
வேள்வி கொள்வீரே! - இந்நேரம்
ரிஷிகள்: சோமமுண்டு தேர்வு நல்கும்
ஜோதி பெற்றோமே! - இந்நேரம்
தீமை தீர்ந்தே வாழியின்பஞ்
சேர்த்து விட்டோமே! - இந்நேரம்
ரிஷிகள்: உடலுயிர்மே லுணர்விலுந் தீ
ஓங்கி விட்டானே! - இந்நேரம்
கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி
கை கொடுத்தாரே! - இந்நேரம்
ரிஷிகள்: எங்கும் வேள்வி அமர ரெங்கும்
யாங்கணும் தீ! தீ! - இந்நேரம்
தங்கு மின்பம் அமர வாழ்க்கை
சார்ந்து நின்றோமே! - இந்நேரம்
ரிஷிகள்: வாழ்க தேவர்! - வாழ்க வேள்வி!
மாந்தர் வாழ்வாரே! - இந்நேரம்
வாழ்க வையம்! வாழ்க வேதம்!
வாழ்க தீ! தீ! தீ! - இந்நேரம்

76. கிளிப்பாட்டு
திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே - கிளியே! - மகிழ்வுற் றிருப்போமடி!
வெற்றி செயலுக் குண்டு விதியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும் - கிளியே! - கவலைப் படலாகுமோ?
துன்ப நினைவுகளும் சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியுமடீ! - கிளியே! - அன்புக் கழிவில்லை காண்!
ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண் டுலகில் - கிளியே! - அழிவின்றி வாழ்வோமடீ!
தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால் - கிளியே! நெருங்கித் துயர் வருமோ?

77. யேசு கிறிஸ்து
'ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்.
எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
நேசமாமரியா' மக்த லேநா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்.
தேசத் தீர் இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமை நித்தங் காப்பார்;
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்.
அன்புகாண் மரியா மக்த லேநா
ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து;
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;
பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை;
அன்பெனும் மரியா மக்த லேநா
ஆஹ! சாலப் பெருங்கிளி யி·தே.
உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்
வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்;
பெண்மைகாண் மரியா மக்த லேநா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து,
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லி·து பயின்றிட லாகும்.

78. அல்லா
பல்லவி
அல்லா! அல்லா! அல்லா!
சரணங்கள்
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லாவெளி வானிலே!
நில்லாது சுழன்றோட! நியமஞ் செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி!
(அல்லா, அல்லா, அல்லா!)
கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்
பொல்லாதவராயினும் தவமில் லாதவ ராயினும்
நல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினும்
எல்லோரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச் செய்பவன்
(அல்லா, அல்லா, அல்லா!)
to the beginning
|