தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil Diaspora - a Trans State Nation  -  தமிழ் அகம் - ஓர் உணர்வா, அல்லது இடமா? > Switzerland > Swiss Tamils demonstrate before United Nations, Geneva


Swiss Tamils demonstrate before United Nations, Geneva
ஐ.நா. சபை முன்பாக தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

17 March 2008 (Courtesy: Puthinam)



 


 ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சுவிஸ் வாழ் தமிழர்களால் நேற்று திங்கட்கிழமை மாபெரும் கண்டன ஊர்வலமும், கவனயீர்ப்புப் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா அரசின் பயங்கரவாத நடவடிக்கையால் 06.03.08 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் "மாமனிதர்" கி.சிவநேசனின் படுகொலையைக் கண்டித்தும்

தொடர்ச்சியாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்தும் இக்கவனயீர்ப்புப் போராட்டமும், கண்டன ஊர்வலமும் நடத்தப்பட்டுள்ளன.

நிகழ்வில் முதன்மையாக பிற்பகல் 2:15 மணிக்கு தபால் நிலையப் பூங்காவிலிருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபை முன்றலை பிற்பகல் 3:00 மணிக்குச் சென்றடைந்தது.

ஐநூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட ஊர்வலத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்களைத் தாங்கிய பதாதைகளை ஏந்திச் செல்லப்பட்டன.

ஊர்வலத்தின் போது வீதியால் சென்று கொண்டிருந்த மக்களுக்கு ஊர்வலத்தில் பங்கேற்றோரால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.


l to r: அமெரிக்க சட்டவாளர் கரன் பார்க்கர்,
அனைத்துலக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி அன்டெர்ஸ் பி.ஜோன்சன்

ஐ.நா. முன்றலில் நடைபெற்ற கண்டனக்கூட்ட நிகழ்வினை சுவிஸ் தமிழர் பேரவையின் உப தலைவர் சண். தவராஜா தொகுத்து வழங்கினார்.

எமது இனத்தின் விடுதலையை நெஞ்சிலே சுமந்து வீரச்சாவு அடைந்த மாவீரர்களுக்கும், ஜனநாயக வழிமுறையில் தேர்வு செய்யப்பட்டு எமது நியாயப்பாடுகளை கேட்டமைக்காக படுகொலை செய்யப்பட்ட மாமனிதர்களுக்காகவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் 1 நிமிட அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பொதுச்சுடரினை சுவிசின் சோசலிசக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேர் ஃபிரெடி அல்டர் (Herr Fredi Alder) ஏற்றினார்.


l to r: பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையப் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன்; அனைத்துலக மனிதாபிமான மனித நேய அமைப்பின் தலைவர் வெர்னாகிராப்
(Ms. Verena Graf)



l to r: அனைத்துலக அரச சார்பற்ற மத நிறுவனத்தின் செயலாளர் நாயகம் சார்ள்ஸ் கிரேவ்ஸ்; காஷ்மீர் விடுதலை இயக்க உறுப்பினர் கலாநிதி அகமத்கான்

அமெரிக்காவினைச் சேர்ந்த சட்டவியலாளர் கரன் பார்க்கர்,
சுவிசின் சோசலிசக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேர் ஃபிரெடி அல்டர் (Herr Fredi Alder), பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையப் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன், வெர்னாகிராப் அம்மையார் (Ms. Verena Graf),  காஷ்மீர் விடுதலை இயக்க உறுப்பினர் கலாநிதி அகமத்கான், அனைத்துலக அரச சார்பற்ற மத நிறுவனத்தின் செயலாளர் நாயகம் சார்ள்ஸ் கிரேவ்ஸ் (Dr.Charlesgraves),
திருகோணமலையைச் சேர்ந்த சட்டத்தரணி கா.சிவபாலன் ,
பிரான்சிஸ் அல்பேர்ட் சுரேஸ், ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

அமெரிக்காவினைச் சேர்ந்த சட்டவியலாளர் கரன் பார்க்கர் ஆற்றிய உரையில் கூறியதாவது:

காணாமல் போவதும் படுகொலை செய்யப்படுவதும் சிறிலங்காவில் அதிகரித்திருப்பதாகவும் உலகத்தில் மனித உரிமைகள் மீறப்படும் நாடுகளில் இலங்கை முன்னணி வகிப்பதாகவும் குற்றம் சாட்டும் அனைத்துலகம், ஏன் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சிறிலங்கா அரசை பாதுகாக்கவே வழிசெய்யும்.

தமிழீழம் இலங்கையில் எங்கே இருக்கின்றது என்று கேட்பவர்களுக்கு குண்டுபட்டுச் சீரழிந்து இருக்கும் இடம் எல்லாம் தமிழர்களின் தேசம் என்றார்.

வெர்னாகிராப் அம்மையார் ஆற்றிய உரையில் கூறியதாவது:

தமிழர்களின் பாதுகாப்பு மறுக்கப்பட்டதால் தான் அவர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இன்று சிங்கள பயங்கரவாதத்திலிருந்து தமிழர்களைப் பாதுகாக்கும் சக்தி தமிழீழ விடுதலைப் புலிகளே என்றார்.

கலாநிதி சார்ள்ஸ் கிரேவ்ஸ் ஆற்றிய உரையில் கூறியதாவது:

புத்த தர்மத்தின் பேரால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுதல் கண்டிக்கத்தக்கது. தமிழர்களைக் கொன்று குவிப்பதனையே நோக்கமாகக் கொண்டு செயற்படும் சிங்கள அரசு, தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.

சுவிஸ் சோசலிசக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிறெடி அல்டெர் ஆற்றிய உரையில் கூறியதாவது:

தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்படுவது சிறிலங்காவில் சர்வ சாதாரணமாகி விட்டது. சிவநேசன் உட்பட சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளும் அநியாயமானவை. இவ்வாறான கொலைகள் மற்றும் தமிழர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகின்றது என்றார்.

காஸ்மீர் விடுதலை இயக்க உறுப்பினர் கலாநிதி அகமத்கான் கூறியதாவது:

தமிழர்களும் மனிதர்கள்தான் அவர்கள் தமது உரிமைக்காகப் போராடுவது நியாயமானது. எனவே, அவர்கள் மீதான வன்முறைகள் நிறுத்தப்பட்டு அவர்கள் சுதந்திரமாக வாழும் சூழல் சிறிலங்காவில் ஏற்பட வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றார்.

பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையப் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன், சட்டத்தரணி சிவபாலன் ஆகியோர் ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் சிங்கள அரசின் பிரதிநிதிகள் செய்யும் போலிப்பிரச்சாரங்களை சுட்டிக்காட்டி உரையாற்றினர்.

திரு பிரான்சிஸ் அல்பேர்ட், திருமதி அனோர் அன்னா, சுரேஸ் ஆகியோர் உரையாற்றும் போது தமிழர்கள் இவ்வாறான கவனயீர்ப்பு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதுடன் தமிழர்களின் போராட்டத்தை ஒவ்வொரு சுவிஸ் குடிமக்களுக்கும் எடுத்துக்கூறி தமிழர்களின் போராட்டத்தை அங்கீகரிக்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக்கூறினர்.

நிகழ்வின் "மாமனிதர்" சிவநேசன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலையைக் கண்டித்து மனுவொன்று அனைத்துலக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி அன்டெர்ஸ் பி.ஜோன்சனிடம் கையளிக்கப்பட்டது.

Mail Us Copyright 1998/2007 All Rights Reserved Home